என் மலர்
புதுக்கோட்டை
- மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது.
- 70 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரிமளம் ஒன்றியம் தேக்காட்டூர் ஊராட்சி சிவபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் பளு தூக்கும் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. சீனியர் ஆண்கள், பெண்கள், ஜூனியர் ஆண்கள் போன்ற பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 70 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு உடற்பயிற்சி கூடத்திலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு 2023 ஆண்டிற்கான மாவட்ட சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.
- முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது
- அரசு கலைக்கல்லூரிகளில் அரசு கலைக்கல்லூரிகளில்
புதுக்கோட்டை
தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனை தொடர்ந்து உயர்கல்வி படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடங்கியது. அந்த வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அதன்பின் மதிப்பெண்கள் அடிப்படையில் தர வரிசையில் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மன்னர் கல்லூரி, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி உள்ளிட்ட இடங்களில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்தது.
இந்த நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் என 2 பிரிவுகளில் வகுப்புகள் நடைபெறும்.
பள்ளிப்படிப்பை முடித்த பின் கல்லூரி படிப்பில் காலடி எடுத்து வைக்க மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வருகை தருவார்கள். சீருடை அணிந்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் பல வண்ணங்களில் ஆடை அணிந்து கல்லூரிக்கு மகிழ்ச்சியுடன் வருவார்கள். கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு முன்கூட்டியே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
- மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ெதாழிலாளி இறந்தார்.
- வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை விராலிமலை தாலுகா வானத்திராயன்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் கிருஷ்ணா (வயது 47). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் விராலிமலைக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். விராலிமலை தெப்பக்குளம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேப்பங்குடி அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 39), பாஸ்கர் (31), பொன்னுசாமி (32), ரவி (36) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து போலீசார் ரூ.700-ஐ பறிமுதல் செய்தனர்.
- முந்திரி காட்டில் தூக்கிட்ட நிலையில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.
- கொலையா போலீஸ் விசாரணை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கொத்தம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான முந்திரிக்காட்டில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதனை பார்த்த அப்பகுதியினர் கந்தர்வகோட்டை போலீசிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்படி சப்இஸ்பெக்டர் முத்துகுமர் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இறந்தவர் கொத்தம்பட்டியில் உள்ள தனியார் கோழிபண்ணைக்கு புதிதாக செட் அமைக்கும் பணிக்கு வந்த, கரூர் மாவட்டம குளித்தலை பகுதியை சேர்ந்த பொன்னர் மகன் முருகாந்தம் (வயது 35) என்பது ெதரிய வந்தது. பணி ெசய்வதற்காக வந்த இவர் எதற்காக முந்திரி காட்டில் எதற்காக தூக்கிட்டு கொண்டார். யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா அல்லது குடும்ப பிரச்னை காரணமாக மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவரஞ்சனி தனது மகள்களுடன் பயன்பாடில்லாத கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.
- சிவரஞ்சனி, தஷிகா ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கூத்தினிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40), விவசாயி. இவரது மனைவி சிவரஞ்சனி (28). இவர்களுக்கு நிவேதா (7), தஷிகா (5) மற்றும் ஹரிணி என்ற 4 மாத குழந்தை ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சிவரஞ்சனி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. நிவேதா அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சிவரஞ்சனி தனது 3 மகள்களுடன் கூத்தினிப்பட்டி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பயன்பாடில்லாத கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்கள் 4 பேரும், தண்ணீரில் மூழ்கி உள்ளனர். இதையடுத்து அவர்கள் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிவரஞ்சனி மற்றும் அவரது மகள்கள் தஷிகா, நிவேதா ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிவேதா பரிதாபமாக உயிரிழந்தார். சிவரஞ்சனி, தஷிகா ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கல்குவாரி குட்டையில் இறங்கி 4 மாத குழந்தை ஹரிணியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
- வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்
புதுக்கோட்டை
விராலிமலை தாலுகா கல்குடி கிராமம் வடக்கு கோவில் காட்டுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. விவசாயி. இவரது மகன் கார்த்திகேயன் (வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வடக்கு கோவில்காட்டுப்பட்டியை சேர்ந்த 100 நாள் வேலைக்கு சென்ற பொதுமக்கள் சுடுகாட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் கார்த்திகேயன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை பார்த்துள்ளார். அவர்கள் இதுகுறித்து கருப்பையா குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து கருப்பையா தனது மகன் சாவில் சந்ேதகம் இருப்பதாக கூறி விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணல் கடத்திய டிராக்டர்கள்-பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை
இலுப்பூர் அருகே மகுதுப்பட்டி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிகல்யா மற்றும் போலீசார் மகுதுப்பட்டி இன்னாசியர் கோவில் அருகே சத்தன்குளத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீசார் ஆரோக்கியம்பட்டியை சேர்ந்த அன்பரசன், ராப்பூசல் பகுதியை சேர்ந்த ரமேஷ், அடைக்கண், இளங்கோவன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருட்டு வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டார்.
- டவுன் போலீசார் நடவடிக்கை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை டவுனில் பிருந்தாவனம் முக்கத்தில் அசாருதீன் என்பவரது செல்போன் கடையில் செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் திருட்டு மற்றும் 3 செல்போன் கடைகளில் கொள்ளை முயற்சி தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் அசாருதீன் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்தனர். இதில் ஈடுபட்டது திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த 18 வயது சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
- டி.என்.ஏ.பரிசோதனைக்கு 8 பேர் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
- வேங்கைவயல் விவகாரத்தில்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதல் கட்டமாக 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த கடந்த ஏப்ரல் மாதம் முடிவு செய்ததில் 3 பேர் மட்டும் பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். அவர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
வேங்கைவயல் பகுதியை சோ்ந்த 8 பேர் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வர மறுத்தனர். அவர்கள் தரப்பில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் குற்றவாளிகளை அடையாளம் காண அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க டி.என்.ஏ. பரிசோதனை அவசியம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் புதுக்கோட்டை கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொள்ள ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து டி.என்.ஏ. பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 8 பேரும் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பாக அவர்களது கருத்தை தெரிவிக்க அறிவுறுத்தி, மறுநாள் மதியத்திற்குள் பதில் அளிக்க நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
இதைத்தொடா்ந்து 8 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது அவர்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தனர். ஒவ்வொருவரும் எழுத்து பூர்வமாக தங்களது கருத்தை வக்கீல் மலர்மன்னன் மூலம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். மேலும் எதற்காக மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பது குறித்து தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் நீதிபதி விசாரித்தார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, அரசு தரப்பு வக்கீல் குமார் ஆகியோர் இந்த வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனை முக்கியத்துவம் குறித்தும், இவர்களிடம் மட்டுமில்லாமல் 119-க்கும் மேற்பட்டவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உள்ளதாகவும், இந்த பரிசோதனை மேற்கொள்வதால் இவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள் என்றனர். பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்க போலீசார் முயல்வதாகவும், குடிநீர் தொட்டியில் அசுத்தத்தை கலந்தது யார்? என்பதை போலீசார் கண்டுபிடிக்காமல், அந்த அசுத்தம் யாருடையது என்பதற்காக டி.என்.ஏ. பரிசோதனை நடத்துகின்றனர் எனவும், அதன்மூலம் குற்றம் சாட்ட முயல்வதாகவும், சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிப்பதாக அந்த 8 பேரின் தரப்பில் வக்கீல் வாதத்தை முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை வருகிற 4-ந் தேதிக்கு நீதிபதி ஜெயந்தி தள்ளிவைத்தார். அன்றைய தினம் டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும். டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் ஏற்கனவே வர மறுத்தனர். தற்போது மீண்டும் மறுப்பு தெரிவித்த நிலையில், பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து 4-ந் தேதி தெரிந்துவிடும்.
- தொழிலாளி கொலை வழக்கில் சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை டி.வி.எஸ். சண்முகாநகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 45). ஆக்டிங் டிரைவரான இவர் கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத மாற்றம் செய்துக்கொண்டு மும்தாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வந்தார். தமிழ்செல்வனுக்கு சிறுநாங்குப்பட்டியில் வசிக்கும் ராஜேந்திரன் என்ற அண்ணன் உள்பட மற்றொரு சகோதரரும், சகோதரியும் உள்ளனர். இந்த நிலையில் சிறுநாங்குப்பட்டியில் 23 சென்ட் இடத்தை விற்பது தொடர்பாக ராஜேந்திரனுக்கும், தமிழ்செல்வனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்செல்வன் நேற்று முன்தினம் இரவு டி.வி.எஸ். சண்முகாநகரில் வீட்டு வாசலில் நின்ற போது மர்மநபர்கள் 4 பேர் மோட்டார் சைக்கிளில் திடீரென வந்து, அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தமிழ்செல்வனை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தமிழ்செல்வனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ராஜேந்திரன் மகன் மதிவாணன் மற்றும் 3 பேர் சேர்ந்து தமிழ்செல்வனை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் சொத்து தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து கொலையான தமிழ்செல்வனின் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின் நேற்று அவரது குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகள் 4 பேரை வலைவீசி தேடி வந்தனர்.
மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலையான தமிழ்செல்வனின் அண்ணன் ராஜேந்திரன் மகன் மதிவாணன் (வயது 24), திருக்கோகர்ணத்தை சேர்ந்த ரகுமான் (19), கீழ விழாக்குடியை சேர்ந்த வசந்தகுமார் (24), புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (22), வெங்கடேசன் (27) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சொத்து தகராறு காரணமாக தான் தமிழ்செல்வனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தததாக மதிவாணன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- அறந்தாங்கி அரசு கல்லூரியில் நவீன கழிப்பறைகள் திறக்கபட்டது
- அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர்களுக்கான புதிய நவீன கழிப்பறைகளை சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். தமிழக அரசின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அறந்தாங்கி அருகே பெருநாவளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவறைகள் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தலின்படி ஐடிசி நிறுவனம் சார்பில் 31 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டது. இதனை அமைச்சர் மெய்யநாதன் மாணவியர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், கல்லூரி முதல்வர் பாலமுருகன், ஐடிசி நிறுவன பொது மேலாளர் விஸ்வநாதன், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகர்மன்றத் தலைவர் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






