என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை பஸ் நிலையம் எதிரே குடிபோதையில் சாக்கடையில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே சாந்த நாதபுரம் பிரதான பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்துள்ளது. இதன் அருகிலேயே பாரும் உள்ளதால் மது அருந்தும் குடிமகன்கள் பலர் அங்கிருந்து செல்ல முடியாமல் சாலையில் விழுந்து கிடப்பது வழக்கமான ஒன்று.

    இந்த நிலையில் நேற்று அந்த டாஸ்மாக் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் மது அருந்தியுள்ளார். பின்னர் மது போதை அதிகமானதால் அங்கிருந்து செல்ல முடியாமல் இருந்துள்ளார். பின்னர் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் பக்கம் சென்ற அவர் அதில் தவறி விழுந்துள்ளார்.

    இதனை யாரும் கவனிக்காததால் சிறிது நேரத்தில் பலத்த காயம் அடைந்த அவர் மீள முடியாமல் சாக்கடைக்குள்ளேயே பிணமானார். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து புதுக்கோட்டை நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சாக்கடைக்குள் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர். கைலி மற்றும் நீல நிற கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்த அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. மேலும் அந்த வாலிபர் தனது மார்பில் சத்யா, கார்த்தி என்று பச்சை குத்தியிருந்தார்.

    பிணமாக மீட்கப்பட்ட வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுக்கோட்டையில் மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 45). இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். அங்குள்ள பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் ஜாபர் அலி, வீட்டில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இல்லாத நேரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்ததால், அது பற்றி ஜாபர் அலியின் மகள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாபர்அலியை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    கீரனூர் அருகே காட்டுக்குள் 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணம் கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகேயுள்ள உச்சாணி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான உசிலமரக்காடு உள்ளது. இந்த காட்டில் ஒருவர் தூக்கில் தொங்குவதாக கண்ணங்குடி கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. 

    அவரது புகாரின் பேரில் உடையானிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த், கீரனூர் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராயப்பன் ஆகியோர் சம்பவம் நடந்த காட்டு பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். 

    அங்கு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் தான் அணிந்திருந்த ஊதா நிற வேட்டியால் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கணேஷ் எச்சரித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகளில் விற்கப்படும் உலர்ந்த பழங்கள் மற்றும் முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை விற்பனை செய்யும் போது பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். அதனை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியம்.

    மேலும் பொதுமக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் தயாரிக்கப்படும் மற்றும் கடைகளில் விற்கப்படும் உலர்ந்த திராட்சை பழங்கள், முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை விற்பனை செய்யும் வணிகர்கள் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி பொட்டலமிட்ட உணவுப்பொருட்களின் மீது உணவு குறிப்புசீட்டு ஒட்டப்பட வேண்டும்.

    தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம், பதிவு எண்ணை பொட்டலத்தின் மீது குறிக்க வேண்டும். மேலும் உணவு கலப்படம் மற்றும் தரங்கள் குறித்து 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். எனவே கடைகளில் விற்பனை செய்யப்படும் பொட்டலங்களின் மீது தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதிகள் குறிப்பிடாத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டையில் வாகன உதிரி பாக விற்பனை நிறுவனத்தில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மோட்டார் உதிரி பாக பொருட்கள் எரிந்து நாசமானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் கைகாட்டியை சேர்ந்தவர் மைதீன். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இந்தநிலையில் நள்ளிரவு 1 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் கடையில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து நிறுவன உரிமையாளர் மைதீனுக்கும், வடகாடு, கீரமங்கலம் தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    இருப்பினும் தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மோட்டார் உதிரி பாக பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை அருகே பல்வேறு பரிசுகளை வென்று மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுத்து வந்த ஜல்லிக்கட்டு காளை இறந்த சம்பவம் கிராமத்தையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தொடங்கியதில் இருந்து தற்போது வரை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

    தமிழகத்திலேயே அதிக அளவிலான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான். அரசின் சட்ட விதிகளின்படி நடந்து வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வீரமிகு, பயிற்சி பெற்ற ஏராளமான காளைகள் பங்கேற்று வருகின்றன. அதே போல் மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் பழனியாண்டி என்பவரின் காளை பங்கேற்று பிடிபடாமல் பல்வேறு பரிசுகளை பெற்று வந்தது. குறிப்பாக விராலிமலை, ராப்பூசல், திருநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று பிடிபடாமல் சைக்கிள், பீரோ, தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் என பல பரிசுகளை பெற்றது.

    இந்த காளையை வாடி வாசலில் அவிழ்த்து விடும் போது பல வீரர்கள் தங்களால் இந்த காளை அடக்க முடியுமா? என்ற கேள்விதான் முன்னோக்கி நிற்கும். அந்த அளவிற்கு காளையின் திமில்கள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த காளைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து காளையின் உரிமையாளர் தேவையான மருத்துவம் பார்த்து சிகிச்சை அளித்து வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி காளை இறந்தது.

    உடல்நலக்குறைவால் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி.

    இதையடுத்து கிராமத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சத்தியமங்கலம் கிராமத்தில் திரண்டனர். மேலும் பெண்கள் சுற்றி நின்று ஒப்பாரி வைத்து அழுதனர். இதனை பார்த்தவர்கள் மிகுந்த சோகமடைந்தனர்.

    அனைவரும் மாலையுடன் வந்து இறந்த காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றது. வேனில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர். காளையின் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    முன்னதாக அந்த பகுதியை சேர்ந்த மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி சீருடையுடன் வந்து இறந்த காளைக்கு அஞ்சலி செலுத்தினர். பட்டாசு வெடித்தும் மேளதாளத்துடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மனித உயிர்களுக்கு இணையாக கருதப்பட்ட காளை இறந்தது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. #Jallikattu
    கோட்டைப்பட்டினம் கடற்கரையில் முதியவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளம் அருகே கடற்கரையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக கடலோர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையிலான போலீசார் மற்றும் கிராமநிர்வாக அதிகாரி சண்முகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவர் யார்? என விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் விசாரணையில், இறந்து கிடந்த முதியவர் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ஓனாங்குடியை சேர்ந்த கணேசன்(வயது 73) என்றும், அவர் கோட்டைப்பட்டினம் தர்காவிற்கு வந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் இது குறித்து அவர் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கடலில் குளிக்கும்போது மூழ்கி இறந்தாரா? அல்லது வேறெதுவும் காரணமாக என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    முதியவர் ஒருவர் கடற்கரையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    புதுக்கோட்டை மாவட்ட விசை படகு மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை இதுவரை வழங்கப்படாததால் அவர்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    தற்போது அவர்கள் தங்களின் படகுகளை கரையில் நிறுத்தி அதில் உள்ள பழுதுகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தில் அரசு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்த நிவாரண தொகை புதுக்கோட்டை மாவட்ட விசை படகு மீனவர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    மீன்பிடி தடைக்காலத்தில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு படகுகளை கடன் வாங்கி தான் சரி செய்யும் நிலை உள்ளது. தடைக்காலம் தொடங்கி கிட்டதட்ட 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை.

    நாகை மாவட்டத்தில் விசைபடகை கரையில் ஏற்றி பழுதுகளை சரி செய்வதற்கு அரசுடமை வங்கி மூலம் ரூ.5 லட்சம் கடன் உதவி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கும் வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்க வேண்டும்.

    மேலும் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    அன்னவாசல் அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வயலோகத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. திருவிழா நாட்களில், ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி செயலாளர், ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று வயலோகம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவிற்கு வந்த உறவினர்களுக்கு சமைக்க தண்ணீர் இல்லாமல் கடும் அவதி அடைந்தனர்.

    இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் குழாயில் காலி குடங்களை வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போதிய குடிநீர் இருந்தும் வினியோகம் செய்யாத குடிநீர் தொட்டி இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இது குறித்து அன்னவாசல் வட்டார வளர்ச்சி அதிகாரி நாகராஜனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட ஊழியர்களை அனுப்பி உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப் பதாக உறுதி அளித்தார். இதையடுத்து சில மணி நேரத்தில் வயலோகம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், குடிநீர் தொட்டி இயக்குனர் இதேபோல பலமுறை சரிவர பணி செய்யாமலும், சொந்த காரணங்களுக்காக சில குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும் தெரிய வந்தது. இதனால் குடிநீர் தொட்டி இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அதிகாரி உறுதி அளித்து உள்ளார் எனக் கூறினார். 
    பூங்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடியில் அறம் வளர்த்த அம்மன் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடந்த திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக நடந்த முன்னேற்பாடு பணிகளை நேற்று முன்தினம் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கினர். இதைத்தொடர்ந்து நேற்று காலையில் அறம் வளர்த்த அம்மன் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆறுமுகம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடங்கியது.

    முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 810 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அவிழ்த்து விடப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன. சீறிபாய்ந்து சென்ற காளைகளை சுமார் 220 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு அடக்கினார்கள்.

    இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியது. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். இதில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 10 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    ஜல்லிக்கட்டில் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பணம், வெள்ளி நாணயம், சைக்கிள், சேர் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை பூங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன் முன்னிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    புதுக்கோட்டை அருகே அரசு பஸ்- பைக் மோதியதில் தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி பத்மா (45). இவர்கள் இருவரும் கறம்பக்குடியில் இன்று காலை நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மொபட்டில் சென்றனர். சுப்பிரமணியன் மொபட்டை ஓட்ட, பத்மா பின்னால் அமர்ந்திருந்தார்.

    இந்த நிலையில் கறம்பக்குடி அருகே சடையன்தெரு பகுதியில் செல்லும் போது அந்த வழியாக கறம்பக்குடியில் இருந்து கந்தர்வக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சும், மொபட்டும் நேருக்கு நேர் மோதின. இதில் சுப்பிரமணியன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பத்மா காயமடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை பொதுமக்கள் மீட்டு கறம்பக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பத்மா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இந்த விபத்து குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகை சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சுப்பிரமணியன்-பத்மா தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் தாய்-தந்தையின் உடல்களை பார்த்து கதறி அழுதது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  

    கந்தர்வக்கோட்டையில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் மின் நிறுத்தத்தால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கந்தர்வக்கோட்டை:

    தமிழகத்தில் தற்போது வெயில் கடுமையாக உள்ளது. இதனால் இரவில் வெப்பம் அதிகரித்து மக்கள் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் மின்விசிறி, ஏ.சியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 

    இந்நிலையில் கந்தர்வக்கோட்டை பகுதியில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் திடீரென மின் தடை ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மின்சாரம் வந்து விடும் என பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் மின்சாரம் வரவில்லை. இதனால் அவதி அடைந்த பொதுமக்கள் இது குறித்து தகவல்அறிய மின்சார வாரிய அலுவலகத்திற்கு போன் செய்தனர்.

    ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று இரவு சுமார் 1.30 மணியளவில் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் கந்தர்வக்கோட்டை பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது. தஞ்சை செல்லும் வாகனங்களும், புதுக்கோட்டை செல்லும் வாகனங்களும் நீண்டவரிசையில் காத்திருந்தன. 

    இது குறித்துதகவல் அறிந்ததும் கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். பொதுமக்கள் உடனடியாக மின்சாரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று கூறினர். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் போனில் பேசினார். அப்போது அவர்கள் புதுக்கோட்டை சிப்காட்டில் டிரான்ஸ்பார்மர் பழுதாகி விட்டது. ஊழியர்கள் சரி செய்து கொண்டு இருக்கிறார்கள். உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினர். 

    இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். நள்ளிரவு 1.30 மணிக்கும் ஆரம்பித்த சாலை மறியல் போராட்டம்  3.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு தான் மின்சாரம் வந்தது. இந்த திடீர் மின் தடையால் குழந்தைகள், முதியவர்கள், பொது மக்கள் அவதிபட்டனர்.

    கந்தர்வக்கோட்டையில் நள்ளிரவில் நடந்த இந்த திடீர்சாலை மறியல் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×