என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுக்கோட்டையில் அடிக்கல் நாட்டுகிறார்.
    புதுக்கோட்டை:
     
    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

    ரூ.6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படுவதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்பட உள்ளது.

    இந்த விழாவிற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், க.பாஸ்கரன், எஸ்.வளர்மதி மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.
    தெட்சிணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை நடைபெற உள்ளது.
    திருவரங்குளம்:

    திருவரங்குளம் அருகே உள்ள தெட்சிணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.இதில் கண்குறைபாடு உடையவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    கீரனூர் கள்ளத்தெருவைச் சேர்ந்தவர் சத்யா (வயது 45). சம்பவத்தன்று இவர் நேற்று முன்தினம் மதியம் கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சத்யாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது, மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கியதால் ஒருவன் பிடிபட்டான். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவனை பிடித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவன் திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 44) என தெரியவந்தது. இதனைடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். அவன் மீது திருட்டு சம்பந்தமாக 75 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தப்பி ஓடிய மற்றொருவனை தேடி வருகின்றனர்.
    போதை ஊசி விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மச்சுவாடி பகுதியில் போதை ஊசியை விற்பனைக்காக வைத்திருந்த அஜித் குமார் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    புதுக்கோட்டை கோவிலில் பிச்சைக்காரர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சாந்தநாதசுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அற நிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோவிலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி விட்டு செல்கின்றனர்.

    கோவில் அருகே உள்ள பல்லவன்குளத்தில் அமாவாசையன்று பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். கோவில் முன்பும், பல்லவன் குளம் அருகிலும் ஆதரவற்ற முதியவர்கள் அமர்ந்திருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பிச்சை எடுத்து வருகின்றனர்.

    பக்தர்கள் செய்யும் பண உதவி மூலம் முதியவர்கள் உணவு மற்றும் தங்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து வருகின்றனர். கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தையும் சாப்பிட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் அக்கோவிலில் உள்ள புரோகிதரிடம் உதவியாளராக பணியாற்றும் பெண் ஒருவர், கோவில் முன்பும், பல்லவன்குளம் அருகிலும் பிச்சை எடுக்கும் முதியவர்களிடம், பிச்சை எடுக்க வேண்டுமென்றால் ரூ.1000 லஞ்சம் தரவேண்டும் என்றும்,இல்லையென்றால் பிச்சை எடுக்கவிடமாட்டேன் என்று மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    அவருக்கு பயந்து ஆதரவற்ற முதியவர் ஒருவர் அந்த பெண்ணுக்கு ரூ.1000 கொடுத்து விட்டு பிச்சை எடுத்து வந்துள்ளார். தொடர்ந்து பிச்சைக்காரர்களிடம் லஞ்சம் என்று மிரட்டவே, இதுகுறித்து அறிந்த பக்தர்கள் சிலர் புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் பிச்சைக்காரர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரை எச்சரித்து அனுப்பினர். இந்தசம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குஜராத் வாலிபருக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    குஜராத் மாநிலம், அம்பிகா பார்க் பகுதியை சேர்ந்தவர் டானிஷ் பட்டேல் (வயது 34). இவர் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள ஒடுக்கூர் கிராமத்தில் உள்ள கல் குவாரியில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்தார்.

    இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி அந்த பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டு வாய்பேச முடியாத 17 வயது சிறுவனை டானிஷ் பட்டேல் கடத்தி சென்று அருகே உள்ள காட்டு பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், மயங்கிய சிறுவன் ஆஸ்பத்திரியில் 18 நாட்கள் சிகிச்சை பலனின்றி இறந்தான்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் டானிஷ் பட்டேலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, நீதிபதி, டானிஷ் பட்டேலிடம், உன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் உண்மை என தெரிகிறது. ஆகவே, தாங்கள் (டானிஷ் பட்டேல்) குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது என்று கூறினார்.

    அதனைத்தொடர்ந்து நீதிபதி சத்யா, டானிஷ் பட்டேலுக்கு 3 மரண தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பின் விவரம் வருமாறு:-

    பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திருத்தப்பட்ட சட்டம் (போக்சோ) 2019-ன் கீழ் சிறுவனுக்கு காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக பிரிவு 5 (ஐ)-ன்படி மரண தண்டனையும், அந்த சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்பதால் பிரிவு 5 (கே)-ன் படி மரண தண்டனையும், மரணத்தை ஏற்படுத்தியதற்காக பிரிவு 5 (ஜே)(4)-ன்படி மரண தண்டனையும், கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 2 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.

    மேலும், சிறுவனை கடத்திய குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 2 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரண தொகையாக ஏற்கனவே ரூ.6 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிறுவனின் குடும்பத்தினருக்கு மேலும் ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
    புதுக்கோட்டை அருகே சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த டேனிஷ் படேல் என்ற நபர் கடந்த 2019-ம் ஆண்டு மனநலம் குன்றிய சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்தார்.

    இது தொடர்பாக போலீசார் டேனிஷ் படேல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு இன்று புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நீதிபதி சத்யா தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனநலம் குன்றிய சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் டேனீஷ் படேலுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.  

    குஜராத் மாநிலத்தை சேர்ந்த டேனிஷ் படேல் என்பவருக்கு 3 பிரிவுகளின் கீழ் மரண தண்டனையும் ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்க நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.
    பணம் வைத்து சூதாடிய 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    மண்டையூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் நேற்று மாலை பிடாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஓனாங்குளம் என்ற இடத்தில் முள்ளிப்பட்டியை சேர்ந்த துரைராஜ் (வயது 36), ரமேஷ் (30), பூரணி (41), முத்துக்கருப்பன் (40) உள்பட 12 பேர் பணம் வைத்து சூதாடினர். இதனையடுத்து போலீசார், அந்த 12 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டு மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால், போலியோவால் கை, கால்கள் செயலிழந்த மகளை, தினமும் திறந்தவெளிக்குச் சென்று வர தாய் பெரும் போராட்டத்தை சந்தித்து வருகிறார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வலங்கொண்டான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள். இவருடைய மகள் பாக்கியம். போலியோவால் பாதிக்கப்பட்டு இடது கையும், இரண்டு கால்களும் முடங்கி விட்டது. தன் வலது கையைத் தரையில் ஊன்றி தவழ்ந்துகொண்டே ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு சென்று வருகிறார்.

    இயற்கை உபாதை காரணங்களுக்காக, தினமும் பாக்கியத்தை இடுப்பில் தூக்கி வைத்து, திறந்தவெளிக்கு அவரது தாய் காளியம்மாள் கூட்டிச்சென்று வந்தார். தற்போது வயது முதிர்வால் மகளை தூக்கி சுமக்க முடியாமல் தவித்து வந்தார். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தினமும் திறந்தவெளிக்குச் சென்று வர பெரும் போராட்டத்தை சந்தித்து வந்தார்.

    பாக்கியத்துக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, காளியம்மாளுக்குத் தன் மகளின் எதிர்காலம் குறித்த பயமும் ஏற்பட்டது. கணவரை இழந்த காளியம்மாள், மாற்றுத்திறனாளி மகளை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற கவலையில் இருந்தார்.

    பாக்கியம்


    இதுபற்றி காளியம்மாள் கூறுகையில், பிறந்த ஒரு சில நாட்களிலேயே என் மகள் போலியோவால் பாதிக்கப்பட்டார். நடக்க கூட முடியாமல் தற்போது முடங்கியுள்ளார். மற்ற குழந்தைகளை போல் எனது மகளை என்னால் படிக்க வைக்க முடியவில்லை. அதிலும் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் அருகில் காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று வருகிறேன்.

    நான் கூலி வேலைக்கு சென்றுதான் மகளை வளர்த்து வருகிறேன். அதிலும் பாக்கியத்துக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு விடுகிறது. கணவர் இருந்தவரை நன்றாக பார்த்துக்கொண்டார். அவரது இறப்பு எனது வாழ்க்கையில் சொல்ல முடியாத துயரத்தை ஏற்படுத்திவிட்டது.

    ஒரு சிலரின் உதவியால் வீட்டின் முன்பு சிறியதாக ஒரு டீக்கடை வைத்தேன். கூலி வேலைக்குப் போயிட்டு வந்து தினமும் 5 லிட்டர் பால் வாங்கி, டீ போட்டு விற்பனை செய்தேன். தற்போது கூலி வேலைக்கும் செல்ல முடியவில்லை. ஒரு நாளைக்கு 2 லிட்டர் பால் கூட விற்பனையாகவில்லை.

    என்னால் மகளை தூக்க முடியாததால் அவரே தவழ்ந்து அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்று வருகிறார். முடியாத சூழ்நிலையில் உறவினர்கள் வந்து உதவி செய்கிறார்கள். அவரது நிலையை பார்த்து தினமும் கண்கலங்கினேன். எப்படியாவது வீட்டில் ஒரு கழிப்பறை கட்டிவிட வேண்டும் என்று போராடினேன் என்றார்.

    காளியம்மாள் மற்றும் மாற்றுத்திறனாளியான பாக்கியம் ஆகியோரது நிலை குறித்த அறிந்த புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உடனடியாக அதிகாரிகளை அனுப்பி அவர்களின் நலன் சார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி முதல்கட்டமாக பாக்கியத்துக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.

    விரைவில் கழிப்பறை கட்டித்தரவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் காளியம்மாள், பாக்கியத்தின் வாழ்வாதாரத்தை காக்க தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் அவர்களின் வீடு தேடிச்சென்று தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். அத்துடன் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


    விராலிமலை அருகே காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு வருகிற 21-ந்தேதி காலை 10 மணி அளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவுத் திட்டம் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டமாகும். இந்த திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 2-ம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை 118.45 கி.மீ. முதல் 228.145 கி.மீ. வரையும் (109.695 கி.மீ.), 3-ம் கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை 228.145 கி.மீ. முதல் 262.19 கி.மீ. வரையும் (34.045 கி.மீ.) செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கி.மீ. தூரம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.

    கரூர் மாவட்டத்தில் 47.235 கி.மீ. தூரமும், திருச்சி மாவட்டத்தில் 18.891 கி.மீ. தூரமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 52.324 கி.மீ. தூரமும் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தினால் மேற்கண்ட 3 மாவட்டங்களிலும் உள்ள 18 ஆயிரத்து566 எக்டேர் நிலங்கள் பாசன வசதி மேம்படும்.

    காவிரி-தெற்கு வெள்ளாறு வரையிலான இத்திட்டத்திற்கு இரு கட்டங்களுக்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 4.10 கி.மீ. தூரத்திற்கும், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 54.965 கி.மீ. முதல் 60.05 கி.மீ. வரையும் அதாவது திருச்சி மாவட்டத்தில் 1.83 கி.மீ. நீளமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3.525 கி.மீ. நீளத்திற்கும் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி வருகிற 21-ந்தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

    இது தொடர்பாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஏற்கனவே ரூ.14 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு செய்து பட்ஜெட்டில் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலமெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து இதற்கான பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்திற்கான டெண்டர் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூரில் வரலாற்று சிறப்பு மிக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வருகை தந்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த விழாவிற்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 1 லட்சம் பேர் வரவேற்பு அளிக்க உள்ளார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு தலைமுறைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இவ்விழாவில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ஆசிரியர் வீட்டில் 5 பவுன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    அரிமளம்:

    அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி செட்டி தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 62). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். திருவிழா சமயங்களில் மட்டும் கே.புதுப்பட்டியில் உள்ள வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் இவருடைய 60-ம் கல்யாண தினத்தை முன்னிட்டு கே. புதுப்பட்டி கிராமத்துக்கு வந்தார். பின்னர் அவர் இளையான்குடியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது, வீட்டின் கதவு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3½ லட்சம் ஆகும்.

    இது குறித்து கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தடயவியல் நிபுணர்கள் மர்ம ஆசாமிகளின் விரல் ரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
    அறந்தாங்கி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மனைவி சிவந்தி (வயது 40). சம்பவத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். சிவந்தி மட்டும் தனியாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வேதனை தாங்காமல் அவர் தனது உடலில்மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×