என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • குரும்பலூரில் மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 30-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் யானை, சிம்மம், ரிஷப வாகனங்களில் அம்மன் வீதியுலா வந்தார். நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், அக்னி மிதித்தல், பொங்கல் வழிபாடு நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் குரும்பலூர், பாளையம், ஈச்சம்பட்டி, கே.புதூர், மேட்டாங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் பிரதான நான்கு வீதிகளின் வழியே இழுத்து வரப்பட்டு நேற்று மாலை நிலையை அடைந்தது. அதனைத்தொடர்ந்து பிராய்சித்த வழிபாடு நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை குரும்பலூர் பேரூராட்சி பொதுமக்கள் மற்றும் கிராம கரைக்காரர்கள் செய்திருந்தனர். இன்று (புதன்கிழமை) மஞ்சள் நீராடுதல், விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

    • தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அசல் ஆவணங்களை பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக கூறியதின் பேரில் அருள் மற்றும் கீர்த்தனா ஆகியோர் அங்கிருந்து சென்றனர்

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கல்லூரை சேர்ந்தவர் அருள் (வயது 36). இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள தனியார் நிதி நிறுவன வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், அருள் தனது வீட்டு கடனை அசல் மற்றும் வட்டியுடன் முழுவதுமாக கடந்த மாதம் செலுத்திவிட்டு தனது அசல் ஆவணங்களை கேட்டுள்ளார். ஆனால், நிதி நிறுவன வங்கி மேலாளர் உள்ளிட்டோர் அசல் ஆவணங்களை வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.

    இதனால் மன உளைச்சல் அடைந்த அருள், தனது மனைவி கீர்த்தனாவுடன் (30) சம்பந்தப்பட்ட நிதி நிறுவன வங்கி முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்கு பெட்ரோலுடன் வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அசல் ஆவணங்களை பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக கூறியதின் பேரில் அருள் மற்றும் கீர்த்தனா ஆகியோர் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மங்களமேடு உட்கோட்டத்தில் மகளிர் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டது.
    • மகளிர் போலீஸ் நிலையத்தை டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது ஏ.டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) சங்கர் உடனிருந்தார். பெரம்பலூரில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன் (தலைமையிடம்), வேலுமணி (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சீராளன் (மங்களமேடு உட்கோட்டம்), பழனிச்சாமி (பெரம்பலூர் உட்கோட்டம்) மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      பெரம்பலூர் :

      பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் பெரம்பலூர் தாலுகா வடக்குமாதவி கிராமத்தில் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. தலைமை தாங்குகிறார். இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், குன்னம் தாலுகா பரவாய் (கிழக்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகா திம்மூர் கிராமத்தில், உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

      • அரியலூர்-பெரம்பலூர் சாலையில் குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
      • சாலையில் குப்பைகளை எரிப்பதை தடை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

      பெரம்பலூர்:

      அரியலூர்-பெரம்பலூர் சாலையின் மத்தியில் குன்னம் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகள் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு தினமும் மாலை எரியூட்டப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் புகையால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுவதோடு இதனை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.

      மேலும் மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு சேர்த்து கொட்டி எரிப்பதனால் மக்கும் குப்பைகளும் வீணாகிறது. நிலமும், காற்றும் மாசடைகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி குப்பைகளை முறையாக பெற்று மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதோடு மக்காத குப்பைகளை முறையாக கையாள குன்னம் ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர்-பெரம்பலூர் சாலையில் குப்பைகளை எரிப்பதை தடை செய்ய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

      • மதுபான பாரில் திரைப்பட இயக்குனர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்
      • 3 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

      பெரம்பலூர்,

      திரைப்பட இயக்குனர் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை அண்ணா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் என்ற அப்துல் ரஹ்மான் (வயது 40). இயக்குனரான இவர் மறைந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணனை வைத்து தமிழ் தேசம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் பிரபல ரவுடியான இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

      இந்நிலையில் நேற்று அப்துல் ரஹ்மான் தனது பிறந்த நாள், திருமண நாளை பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் ஒரு தனியார் ஓட்டலில் உள்ள மதுபான பாரில், தன்னுடைய நண்பர்களான பெரம்பலூர் அன்பு நகரை சேர்ந்த தியாகராஜ் (43), 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டாடினார்.

      அப்போது பாருக்கு மோட்டார் சைக்கிளில் 3 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் பாருக்குள் அதிரடியாக புகுந்து மது அருந்தி கொண்டிருந்த அப்துல் ரஹ்மானை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அப்துல் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனைக்கண்ட அப்துல் ரஹ்மானின் நண்பர்கள் மற்றும் பாரில் மது அருந்தி கொண்டிருந்த சக மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து பார் ஊழியர்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். போலீஸ் மோப்ப நாய் பைரவா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

      இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரஹ்மான் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தனியார் ஓட்டல் பாரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, அப்துல் ரஹ்மானுடன் சேர்ந்து மது அருந்திய நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூரில் பட்டப்பகலில் தனியார் மதுபான பாரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      • பெரம்பலூரில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
      • கூட்டமைப்பு தலைவரை கைது செய்ய கோரி கோஷம் எழுப்பப்பட்டது

      பெரம்பலூர்,

      பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு மற்றும் கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி டெல்லியில் மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மல்யுத்த கூட்டமைப்பு தலைவரை பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்யக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

      • சாராயம் தயாரிக்க வயலில் ஊறல் போட்ட விவசாயி கைது செய்யப்பட்டு உள்ளார்
      • 30 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார் அங்கேயே தரையில் கொட்டி அழித்தனர்

      பெரம்பலூர்,

      பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது குன்னம் தாலுகா, புதுவேட்டக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது 59) தனது வயலில் சாராயம் தயாரிக்க ஊறல் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செல்வராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 30 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார், அதனை அதே இடத்தில் தரையில் ஊற்றி அழித்தனர்.

      • பெரம்பலூரில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
      • ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு

      பெரம்பலூர்,

      பெரம்பலூரில் உள்ள கிறிஸ்டியன் கல்விக்குழுமத்தினர், நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத பெரம்பலூரை உருவாக்குவது, பிளாஸ்டிக் பைகள்-பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து பிரச்சார இயக்கத்தை நேற்று நடத்தினர். நிகழ்ச்சிக்கு கிறிஸ்டியன் கல்விக்குழுமத்தின் தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசுகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை வெகுவாக குறைத்து அடுத்த தலைமுறையினருக்கு தூய்மையான சுற்றுச்சூழல் அமையும் வகையிலான புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நமது தலையாய கடமை என்று தெரிவித்தார்.இந்தநிகழ்ச்சியில் கிறிஸ்டியன் கல்விக்குழும செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். இதில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராதா, நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர், கல்வியியல் பயிலும் மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு மூலிகை தாவரம்-மரக்கன்றுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழிப்புணர்வு ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி, பாலக்கரை ரவுண்டானா வரை நடந்தது.

      • குழந்தை திருமணத்துக்கு உடன்படும் பெற்றோர்களுக்கு தண்டனை என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்
      • இது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது

      பெரம்பலூர்,

      பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் ஆகியவற்றின் சார்பில் கவுல்பாளையம் கிராம மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் உறுப்பினர் மேகலா ஆகியோர் இணைந்து கவுல்பாளையம் கிராம மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

      அப்போது அவர்கள், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம், இலவச தொலைபேசி எண்கள் 181, 112 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், முதியோர் உதவி எண்கள் 14567, சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினா். மேலும் பெற்றோர்கள் அனைவரும் தங்களது பெண் குழந்தைகளுக்கு திருமண வயது நிரம்பாமல் திருமண ஏற்பாடு செய்வது குழந்தை திருமணம் என்றும், அத்தகைய செயலுக்கு உடன்படும் பெற்றோர்களும் குற்றம் புரிந்தவராகவே கருதப்பட்டு, அவர்களுக்கும் சட்டத்தின் அடிப்படையில் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் ெதரிவித்ததோடு, குழந்தை திருமணம் குறித்து விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

      அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி குழந்தைகளை தனியாக நீர் நிலைகளில் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டாம். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினா். பின்னர் அவர்கள் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

      • பெரம்பலூரில் குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
      • போக்குவரத்து பாதிப்பு

      பெரம்பலூர், 

      பெரம்பலூர் நகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட புறநகர் பகுதியான துறைமங்கலம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திடீரென்று காலிக்குடங்களுடன் துறைமங்கலம் மூன்று ரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள தாளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் சரி செய்து விடுவார்கள். அதன்பிறகு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படும். தற்போது அதற்கு மாற்றாக வாகனம் மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்தப்பகுதிக்கு வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

      பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரி சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது

      பெரம்பலூர்,

      பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரி சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜான்அசோக் வரதராஜன், கல்லூரி முதல்வர் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல்துறை ஏ.டி.எஸ்.பி.மதியழகன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணி பாலக்கரை வழியாக சென்று புது பஸ்ஸ்டாண்டில் முடிவடைந்தது. இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராமதாஸ், நிர்வாக அலுவலர் ஜெயசீலன், அலுவலக மேலாளர் திருநாவுக்கரசு மற்றும் 300-க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

      ×