என் மலர்
நீலகிரி
தமிழக - கேரள எல்லையையொட்டி குமுளி சோதனைசாவடி அமைந்துள்ளது. இங்கு கேரள போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கம்பத்தில் இருந்து கேரள மாநிலம் குமுளி நோக்கி ஒரு சொகுசு கார் சென்றது. இந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
காருக்குள் சூட்கேஸ் ஒன்று இருந்தது. அதனை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதில் 500 ரூபாய் கட்டுகளாக ரூ.50 லட்சம் இருந்தது. இதையடுத்து காரில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், கம்பம் என்.கே.பி. தெருவை சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் (வயது 33) என்று தெரியவந்தது. அவர், ஏலக்காய் தோட்டம் வாங்குவதற்காக பணத்தை எடுத்து சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து பணத்துக்கான ஆவணங்களை போலீசார் கேட்டனர். ஆனால் அவர் ஆவணங்களை காட்டவில்லை. இதனால் ரூ.50 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவை கைது செய்தனர்.
பின்னர் பீர்மேடு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பீர்மேடு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து கேரள போலீசார், வருமானவரித்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கம்பம், குமுளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த குளிருடன் பனிப்பொழிவும் சேர்ந்து கொட்டியதால் மக்கள் வெகுவாக சிரமம் அடைந்தனர். இருப்பினும், நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக பனி பொழிவு முற்றிலும் குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் இந்த மாத தொடக்கம் முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. மழை நின்றும் மீண்டும் உறைபனி கொட்ட தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்கள் லேசான நீர்பனிப்பொழிவு கொட்டி வந்த நிலையில் தற்போது மீண்டும் உறை பனி பொழிவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆங்காங்கே சாலையோரங்களில் உள்ள புல் வெளிகளில் உறைபனி படர்ந்து கிடக்கிறது.
மேலும் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் உள்ள புல் தரைகள், செடிகள் மீதும் உறைபனி படர்ந்துள்ளது. தொடர் உறைபனி காரணமாக பூங்காக்களில் உள்ள செடிகள் கருகவும் வாய்ப்புள்ளது.
இதுதவிர ஊட்டியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றன. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவட்டர் அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உறைபனி பொழிவு தீவிரமடைந்துள்ள நிலையில், புல்வெளிகள் மற்றும் செடி கொடிகள் கருகி வருகின்றன. இதனால் காட்டு தீ ஏற்பட்டால் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடி வனப்பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஒரு காட்டு யானை வெளியே வந்தது. பின்னர் அந்த யானை ஆச்சக்கரை பகுதி வழியாக மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் புகுந்தது.
இது குறித்து தகவலறிந்த சிங்காரா வனச்சரகர் காந்தன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காட்டு யானை பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து மா மரக்கிளையை முறித்து தின்றது.
அப்போது அங்கு நின்ற நாய்கள் காட்டு யானையை பார்த்து குரைத்தது. இதனால் கோபம் அடைந்த காட்டு யானை ஒரு வீட்டில் வைத்திருந்த வளர்ப்பு நாய் கூண்டை துதிக்கையால் தட்டி விட்டது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து வனத்துறையினரும் காட்டு யானையை துரத்தினார்கள்.
அப்போது சாலையில் சென்ற காட்டு யானை, ஓரத்தில் நிறுத்தி இருந்த ஒரு ஜீப்பை தாக்க முயன்றது. உடனே வனத்துறையினர் சத்தம் போட்டபடி அந்த யானையை துரத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த காட்டு யானை திரும்பி வந்து வனத்துறையினரை தாக்க முயன்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே சுதாரித்துக்கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பித்ததால், அந்த இடத்தில் இருந்து சென்ற காட்டு யானை மசினகுடி வனத்துறை சோதனை சாவடி வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.
குன்னூர் அருகே உள்ள முத்தநாடு என்ற பகுதியில் 5 காட்டு யானைகள் நுழைந்தன. அவைகள் அங்கு இருந்த ரேசன் கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமையை எடுத்து சாப்பிட்டதுடன் கீழே போட்டு சேதப்படுத்தியது. அத்துடன் அந்த பகுதிஉள்ள வீட்டின் கதவுகளையும் உடைக்க முயற்சி செய்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. எனவே இந்த காட்டு யானைகளை கண்காணித்து துரத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே வனத்துறையின் சூழல் மேம்பாட்டு குழுவின் மூலம் பைன்பாரஸ்ட் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உயரமாக வளர்ந்து காணப்படும் பைன் மரங்கள் மற்றும் கீழ்ப்பகுதியில் காமராஜ் சாகர் அணையின் எழில் மிகுந்த அழகை கண்டு ரசிக்கலாம்.
கடந்த ஆண்டு மழையால் சேறும், சகதியுமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் வழுக்கி விழும் அபாயம் இருந்தது. தொடர்ந்து கற்களை கொண்டு நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு 8 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
ஊரடங்கு நேரத்தில் சூழல் மேம்பாட்டு குழுவினர் கடந்த பருவமழை காலங்களில் கீழே விழுந்த மரங்களை அப்படியே விடாமல், துண்டு, துண்டாக வெட்டி இருக்கைகளாக வடிவமைத்து உள்ளனர். இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதில் அமர்ந்து ஓய்வெடுக்க வசதியாக உள்ளது.
மேலும் மரத்தால் ஆன இருக்கைகள் சாயும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். அத்துடன் அங்கு சுற்றுலா பயணிகள் நீண்ட நாட்களுக்கு பின்னர் குதிரை சவாரி செய்து வருகின்றனர்.
பைன் பாரஸ்ட் சுற்றுலா மையத்தில் நுழைவு கட்டணம் ரூ.10 ஆக இருந்தது. தற்போது அது ரூ.20 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் சூட்டிங்மட்டம் பகுதிக்கு செல்ல நுழைவு கட்டணம் ரூ.20 ஆகவும், வீடியோ கேமரா பயன்படுத்த ரூ.1000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அரசுதேயிலைதோட்டம் பகுதியை சேர்ந்த கூடலூர்ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்ஆனந்தராஜ் (வயது49), அவருடையமகன் பிரசாந்த் (21) ஆகியோரை கடந்த 13-ந்தேதிகாட்டு யானை தாக்கி கொன்றது. இதனால் அந்தகாட்டு யானையை பிடிக்க தோட்டதொழிலாளர்கள், அனைத்துகட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் மயக்க ஊசியுடன் அந்த யானை அங்கிருந்து தப்பி மாயமானது.. இந்த நிலையில் தொடர்ந்து அந்த யானையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஆனால் அந்த யானை மாயாவி போல் வனத்துறையினர் கண்ணில் சிக்காமல் மறைந்து கொண்டு தப்பி வருகிறது.
இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக தேடுதல் வேட்டை நடந்தது. கூடலூர் உதவிவனபாதுகாவலர் விஜயன், வனச்சரகர்கள் சின்னதம்பி, மனோகரன், கணேசன் மற்றும்வனத்துறையினரும் தேடுதல்பணியில் ஈடுப்பட்டனர். ஆளில்லாத குட்டி விமானங்கள் மூலமும் தேடினர். பொது மக்களிடமும் தகவல் சேகரித்தனர். இருப்பினும் அந்த யானை வனத்துறையினர் கண்ணில்சிக்க வில்லை. இந்த நிலையில் அந்த யானை கேரளாவிற்கு தப்பி செல்ல வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் கோட்டமலை கண்ணம்பள்ளி உள்பட யானை சென்று வரும் வழிதடங்களில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
மேலும் கால்நடை டாக்டர்கள் மனோகரன், ராஜேஷ்குமார், சுகுமார் பிரகாஷ் ஆகியோரும் யானையை தேடி தேடிவருகின்றனர். இதேபோல் சேரம்பாடிவனத்துறையினர்மலப்புரம்மாவட்டம் நிலம்பூர் உயர்அதிகாரிகளை சந்தித்து யானை குறித்துவிசாரணை நடத்தினர். அப்போது இந்த யானை கடந்த நவம்பர் மாதம் கும்பல பாறை ஆற்றுப்பகுதியில் முகாமிட்டது தெரியவந்தது. இதுபந்தலூர் அருகில் உள்ளதால் தொடர்ந்து பந்தலூர் வந்து தாக்கி செல்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, மாயாவிபோல் சுற்றிவரும் இந்த யானை சங்கர் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது யானை கேரளாவில் இருக்கலாம் என்கிற சந்தேகம் உள்ளதால், அதனை பிடிக்க புது வியூகம் அமைக்கப்பட்டுள்ளது என்றனர். இதற்கிடையே கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர் தீ்ன் மற்றும் வனத்துறையினர், யானைதாக்கி உயிரிழந்த தந்தை, மகன் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
ஊட்டி:
வடகிழக்கு பருவமழை நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இரவில் நீர் பனியுடன் கடுங்குளிர் வாட்டியது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை காணப்படுகிறது.
ஊட்டியில் இருந்து கோத்தகிரி, மஞ்சூர், குன்னூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் மேக மூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதேபோன்று கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகளிலும் கடும் மேக மூட்டம் காணப்படுகிறது. இதனால், வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் திணறினர். குறிப்பாக, சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன.
குளிர் அதிகமாக காணப்படுவதால், சுற்றுலா தலங்களில் குறைந்தளவே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர். இதனால், ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களில் மிக குறைந்த சுற்றுலா பயணிகளே காணப்பட்டனர். கடுங்குளிரால் வேலைக்கு செல்லும் மக்கள் அவதிப்பட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்த ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் தாபா காயம் அடைந்தார். மேலும் அங்கிருந்த சில ஆவணங்கள் திருடு போனதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் சேலம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார். வழக்கில் தொடர்புடைய சயான், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், வாளையார் மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தீன் ஜாய், சம்சீர்அலி, பிஜின் குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை ஊட்டி நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை விசாரித்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஊட்டி நீதிமன்றத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நீதிபதி வடமலை வழக்கை வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் தொடர்ந்து விசாரித்து வந்தார். இதுவரை 103 சாட்சிகளில் 41 பேரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில் கொடநாடு வழக்கை விசாரித்து வந்த முதன்மை நீதிபதி வடமலை நேற்று திடீரென மதுரை நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டி நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு பதிலாக கோவை மாவட்ட கூடுதல் நீதிபதி சஞ்சய் பாபா, நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 21-ந் தேதி பதவியேற்க உள்ளார்.






