search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surveillance cameras"

    • போலீஸ் உதவி கமிஷனர் பார்த்திபன் பேட்டி
    • வீடுகளில் திருட்டு ஏற்பட்டால் உடனே போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டுகோள்

    குனியமுத்தூர்,

    கோவை மாநகரில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்துவது குறித்து மாநகர போலீஸ் உதவி கமிஷனர் பார்த்திபன் கூறியதாவது:-

    வீட்டின் வாசலில் இரும்பு கதவு அமைத்து வெளியே செல்லும்போது பூட்டிவிட்டு செல்கிறோம். அப்போது வீட்டு வாசலில் தொங்கும் பூட்டு திருடர்களின் கண்களை உருத்துகிறது. எனவே அவர்கள் வீட்டில் ஆள் இல்லை என்பதை எளிதாக அறிந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்து விடுகின்றனர். எனவே உள்தாழ்ப்பாள் மூலம் கதவை பூட்டிவிட்டு செல்லும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் வீட்டில் ஆள் உள்ளனரா? இல்லையா? என்று தெரியாத நிலை ஏற்படும். இதனால் பெரும்பாலான திருட்டுகள் தவிர்க்கப்படும்.

    எனவே புதிதாக வீடு கட்டுபவர்கள் மேற்கண்ட முறையை பயன்படுத்தினால் நல்லது. ஏற்கனவே பூட்டு தொங்கும் முறையை பயன்படுத்துபவர்கள் கூட, இந்த நிலைக்கு மாறினால் தங்களின் உடைமைகளை பாதுகாக்க இயலும். ஒரு இழப்பு ஏற்பட்ட பிறகு கூச்சலிட்டு அழுது பயனில்லை. அதற்கு முன்பாகவே வருமுன் காப்போம் அடிப்படையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளின் வாசலில் சி.சி.டி.வி கேமரா அமைக்க வேண்டும். அப்படி செய்தால் திருட்டு சம்பவங்களை பெரியளவில் தவிர்த்து விடலாம்.எத்தனையோ இடங்களில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் திருட்டு போகிறது. அங்கு சி.சி.டி.வி கேமரா பொருத்தினால் அத்தகைய திருட்டு சம்பவங்களை தவிர்த்து விடலாம். அப்படியே திருட்டு ஏற்பட்டால் கூட குற்றவாளிகளை எளிதில் பிடித்து விடலாம்.

    குடியிருப்பு பகுதிக்குள் சம்பந்தமில்லாத நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் ஏதாவது பிரச்சினை அல்லது திருட்டு ஏற்பட்டால், உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    பிறருக்கு ஏற்படும் துன்பம் நமக்கு என்று எண்ணி செயல்பட வேண்டும். அப்படியாக ஒவ்வொருவரும் செயல்பட்டால் திருட்டு மட்டுமின்றி குற்ற சம்பவங்களையும் எளிதில் தடுத்து விடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    • நமக்கு நாமே திட்டத்தில் ரூ.12 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
    • வியாபாரிகள் சங்கத்தின் மூலம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் நன்கொடை திரட்டி வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக தினமும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில், திருட்டு, உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால், அங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் புறக்காவல் நிலையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க பல்லடம் காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தில் ரூ.12 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நிதி உதவுமாறு பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத்திடம், நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வியாபாரிகள் சங்கத்தின் மூலம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் நன்கொடை திரட்டி வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் கண்காணிப்பு கேமராக்களுடன் அமைக்கப்பட்டது. அதனை கடந்த 20- ந்தேதி திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களுக்கு நன்கொடை வழங்கிய வியாபாரிகளை கவுரவிக்கும் விழா பல்லடம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    சங்கத் தலைவர் ஆனந்தா செல்வராஜ் தலைமை வகித்தார். சங்கப் பொருளாளர் கானியப்பா பரமசிவம், துணைத் தலைவர் பானு பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் விமல் பழனிச்சாமி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கண்காணிப்பு கேமரா அமைக்க உதவிய நன்கொடைகையாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தப்பட்டது. 

    • முதல்கட்டமாக 1336 இடங்களில் 4008 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
    • கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் நேரடியாக நேரலையில் பார்க்கும் வசதியும் உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகரில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். இருப்பினும் செயின் பறிப்பு, பாலியல் சீண்டல் உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபடுவோர் அடிக்கடி கைவரிசை காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு கேமராக்களே பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன.

    இந்த நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நிர்பயா பாதுகாப்பு மற்றும் சென்னை மாநகர பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைத்தார். சென்னை மாநகர் முழுவதும் 1750 முக்கிய இடங்களில் 5250 கேமராக்களை நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக 1336 இடங்களில் 4008 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இந்த கேமராக்கள் மூலமாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என்பது கட்டுப்பாட்டு அறையின் சிறப்பம்சமாகும்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக புதிய தொழில் நுட்பத்தின்படி கேமராக்கள் கண்காணிக்கப்படுவதால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் யாரும் தப்ப முடியாது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவீன கேமராக்கள் குற்ற செயல்களை பகுப்பாய்வு செய்து எச்சரிக்கை தகவல்களையும் உடனுக்குடன் அளிப்பதால் போலீசார் விரைந்து செயல்பட முடியும் என்பது இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக உள்ளது.

    செயின் பறிப்பு, பெண்களை கிண்டல் செய்து பாலியல் சீண்டலில் ஈடுபடுதல், கடத்தல் சம்பவங்கள், பொருட்களை சூறையாடுதல், வாகன திருட்டு உள்ளிட்ட அனைத்து குற்றசெயல்களில் ஈடுபடுவோரையும் கண்டுபிடிப்பதற்கு வசதியாக கேமரா காட்சிகளை ஆய்வு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கேமராவில் பதிவாகும் அவசர காட்சிகளை கூட செயற்கை தொழில்நுட்ப மென்பொருள் உதவியுடன் ஆய்வு செய்யமுடியும் என்பதும் கூடுதல் சிறப்பம்சமாகும்.

    இப்படி கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைத்து தேவைப்படும்போது பார்ப்பதற்கும் வசதி உள்ளது. அதே நேரத்தில் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் நேரடியாக நேரலையில் பார்க்கும் வசதியும் உள்ளது. இந்த காட்சிகளை சென்னை மாநகரில் உள்ள 6 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள் ஆகியோர் தங்களது அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இப்படி பெண்களின் பாதுகாப்பை முதன்மையாக கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு திட்டத்தால் போலீசார் தங்களது பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களில் கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
    • மொத்தம் 21 மனுக்கள் பெறப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் மோகன் கொடுத்த மனுவில்,வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தில் புவனேஸ்வரி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவிலின் பூட்டை உடைத்து தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது, அவற்றையும் சேதப்படுத்தியும், திருடிச் சென்று விட்டனர்.

    இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வாலாஜா போலீசார் தீவிர விசாரணை நடத்தியோ, தனிப்படை அமைத்தோ திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்து கோவிலுக்கு சொந்தமான பொருட்களை மீட்க வில்லை.

    எனவே இனி வரும் காலங்களில் கோவிலில் திருட்டு சம்பவத்தை தடுக்க வேண்டும். கோவிலைச் சுற்றி உயர்கோபுரங்கள் அமைத்து அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வாலாஜா போலீஸ் நிலையத்திலிருந்து நேரடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இது தவிர பொதுமக்களிடமிருந்து மொத்தம் 21 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பசுமாடு ஒன்றினை சிறுத்தை தாக்கி இழுத்துச்சென்றுள்ளது.
    • கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வனத்துறையினர் நடவடிக்கை

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானை,காட்டு மாடு, மான்,சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவுக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

    காரமடையை அடுத்துள்ள முத்துக்கல்லூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(45). விவசாயியான இவர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பசு மாடுகளை வளர்த்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை தான் வளர்த்து வரும் மாடுகளை முத்துக்கல்லூர் பகுதியை ஒட்டியுள்ள தோகை மலை அடிவாரப்பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச்சென்றுள்ளார்.

    அப்போது,அங்கு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பசுமாடு ஒன்றினை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து பதுங்கி இருந்த சிறுத்தை தாக்கி இழுத்துச்சென்றுள்ளது. மாட்டின் அலறல் சத்தம் கேட்ட கோவிந்தராஜ் மாட்டினை சிறுத்தை தூக்கி சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதனையடுத்து அவர் காரமடை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.விரைந்து வந்த வனத்துறையினர் உதவியுடன் அங்கு சென்று பார்த்த போது அங்குள்ள புதர் பகுதியில் பசுமாடு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

    இதனையடுத்து உயிரிழந்த பசுமாட்டினை வனத்துறையினர் ஆய்வு செய்தபோது சிறுத்தை தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்,காலடித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டும் அது சிறுத்தைதான் என வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காரமடை வனச்சரகர் திவ்யா கூறுகையில் முத்துக்கல்லூர் பகுதியில் பசு மாட்டினை அடித்துக்கொன்றது குறித்து காலடித்தடங்கள் மற்றும் நகக்கீறல்கள் உள்ளிட்டவற்றை வைத்து அது சிறுத்தை தான் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.

    கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பெயரில் விவசாயி கோவிந்தராஜின் பட்டா நிலம்,இரவு நேரங்களில் மாடுகளை அடைக்கும் பட்டி சாலை, வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறும் இடம் என 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், நடமாட்டம் தெரிய வந்தவுடன் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் கூண்டு வைத்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

    • அதிக குற்ற செயல்கள் நடப்பதாக புகார்
    • சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    பாணாவரம் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டுசம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமாா் 6 பைக்குகள் திருடப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட வர்களிடமே சி.சி.டி.வி. கேமரா பதிவை கேட்பதாக கூறப்படுகின்றது.

    பாணாவரத்தில் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களை முறையாக பராமரிக்காததால் பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. பல சி.சி.டி.வி. கேமராக்கள் காட்சி பொருளாகமட்டுமே காட்சியளிக்கின்றன.

    தமிழக அரசால் பொது இடங்களிலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இதனால் பல குற்றச்செயல்களுக்கு மூன்றாவது கண்ணாடியாக இருந்து வரும் சி.சி.டி.வி. கேமராக்கள் பார்வைக்காக மட்டுமே சில இடங்களில் உள்ளதால் குற்ற செயல்கள் ஈடுபடுபவர்கள் எந்த ஒரு தயக்கம் பயமும் இன்றி தனது கைவரிசை காட்டுகின்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாக அலுவலர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் குற்ற செயல்களை தடுக்க செயல்படாமல் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை செயல்பட வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நல்லிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புறக்காவல் நிலையத்தை ஐ.ஜி. சுதாகர் திறந்து வைத்தார்.
    • மாவட்டம் முழுவதும் 6627 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், ஆயுதப்படை மைதா–னத்திலும் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அங்குள்ள போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் பள்ளிபாளையத்தில் கூட்டுக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    நல்லிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புறக்காவல் நிலையத்தை ஐ.ஜி. சுதாகர் திறந்து வைத்து நிருபர்களிடம் கூறியதாவது,

    நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்கள் வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு 35 கொலை சம்ப–வங்கள் நிகழ்ந்த நிலையில் நடப்பாண்டில் 27 ஆக குறைந்து உள்ளது. மேற்கு மண்டலத்தில் தான் போக்சோ சட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. விபத்துகளும் குறைவாகவே உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நிருபர்களிடம் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை குறைக்கும் வகையிலும், குற்றவாளிகள் நடமாட்–டத்தை கண்கா–ணிக்கவும் நாமக்கல் நகரில் 283 கண்காணிப்பு கேமராக்கள், வாகன பதிவுகளை கண்டறியும் 6 அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் 6627 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் நகரில் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் அதனை சரி செய்ய போலீசார் நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:- பல்லடம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளன. குறிப்பாக பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளது. இதனால் குற்றசம்பவங்கள், விபத்துகளை ஏற்படுத்தி விட்டுச் செல்லும் வாகனங்களை கண்டறிய முடியாத நிலை உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், கண்காணிப்பு கேமராக்களின் உதவியால் பல்வேறு இடங்களை போலீசார் கண்காணிக்கலாம். எனவே உடனடி நடவடிக்கை எடுத்து பழுதாகி உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அனைத்து வீடுகளுக்கும் இரண்டு வண்ணங்களில் குப்பை கூடைகள் வழங்கப்பட்டது.
    • விலை மதிப்புமிக்க பொருட்களையும், நகைகளையும் வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டும்.

    சிறுமுகை,

    காரமடை நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு சிவன் புறம் குடியிருப்போர் மக்கள் நல சங்கத்தின் ஆண்டு கூட்டம் வார்டு உறுப்பினர் குரு பிரசாத் தலைமையில் தநடந்தது.

    நிகழ்ச்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியாக தரம் பிரித்து துப்புரவு பணியாளர்கள் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அனைத்து வீடுகளுக்கும் இரண்டு வண்ணங்களில் குப்பை கூடைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், ஆணையர் பால்ராஜ், சுகாதார ஆய்வாளர் வீரபாகு, காரமடை காவல் ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காரமடை இன்ஸ்பெக்டர் குமார் பேசியதாவது:-

    பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்களது விலை மதிப்புமிக்க பொருட்களையும், நகைகளையும் வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில், தெருமுனைகளில் காமிராக்களை பொருத்தி வெளி நபர் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். காரமடை நகராட்சி முழுவதும் 300 காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிள் மோகம் அதிகரித்துள்ளது. இவர்கள் அதிவேகத்தில் செல்வதால் வாகன விபத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மேலும் இளைஞர்களிடம் போதை போன்ற பழக்கங்களும், விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்துவதும் அவர்களை குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கிறது.

    இளம்பெண்கள் மிகவும் கவனத்துடன் பிற மனிதர்களிடம் பழக வேண்டும், அவர்களுக்கு பெற்றோர்கள் வழங்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது. மேலும் பெண்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும்போது 181 எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.

    மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக யாராவது கூறினால் அவர்களிடம் வங்கி கணக்கு சம்பந்தமான எந்த தகவலையும் சொல்லக்கூடாது. மேலும் யாராவது வங்கி கணக்கு எண்ணை வாங்கி மோசடி செய்ய நேரிட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு போன் செய்து வங்கி கணக்கை உடனடியாக நிறுத்தி வைத்து விடலாம். இதனால் பணம் பறிபோவதை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த 4,685 கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டுள்ளது,
    • மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் வாகன விபத்துக்கள் போன்றவற்றை குறைத்து கட்டுப்படுத்து வதற்கு ஏதுவாக அமையும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கவும் , குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை அடையாளம் காணவும் மாவட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஏற்பாட்டின் பேரில் கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பரிந்துரையின்பேரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்த நிதி வழங்க வேண்டும் என விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ1 கோடியே 30 லட்சம் பெறப்பட்டு அந்த நிதியில் இருந்து 520 கண்காணிப்பு காமிராக்கள்பொருத்தப்பட்டுள்ளது.

    கடலுார் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 297 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது . இதில் தனியார் நிறுவனங்கள் , வியாபார சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் மாவட்டத்தில் 3868 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது . கடலூர் பகுதியில் 885, சிதம்பரம் 1040, புவனகிரி 144, நெய்வேலி 589, சேத்தியாத்தோப்பு 445 , காட்டுமன்னார்கோவில் 166, குறிஞ்சிப்பாடி 83, விருத்தாச்சலம் 521 , பண்ருட்டி 487 , திட்டக்குடி 247 மற்றும் வேப்பூர் 78 என மொத்தம் 4685 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகிறது . இதன் மூலம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் வாகன விபத்துக்கள் போன்றவற்றை குறைத்து கட்டுப்படுத்து வதற்கு ஏதுவாக அமையும்.

    • ஊட்டி ஹில் மௌண்ட் பகுதியில் 2 பசு மாடுகளை வனவிலங்கு தாக்கியதில் படுகாயம் அடைந்தது.
    • வனவிலங்குகளை கண்காணிக்கவும், பொதுமக்களின் நலன்கருதியும் இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் மார்லி மந்து ஏரி பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்ட அந்த பகுதி மக்கள் அவர்களுடைய செல்போனில் வீடியோ எடுத்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

    அந்த தகவலின் அடிப்படையில் ஊட்டி வடக்கு வனச்சரக உட்கோட்டம் வனச்சரகர்கள் மார்லி மந்துஅணை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட்டனர்

    அதனைத் தொடர்ந்து ஊட்டி ரோஸ் மௌண்ட் அருகில் ஹில் மௌண்ட் பகுதியில் நேற்று இரண்டு பசு மாடுகளை வனவிலங்கு தாக்கியதில் படுகாயம் அடைந்தது.

    அதனை கண்டறியும் விதமாக ஊட்டி வடக்கு வனச்சரக உட்கோட்டம் வனச்சரகர் ரமேஷ் தலைமையில் இன்று 02 கண்காணிப்பு கேமராக்களை அந்தப் பகுதியில் பொருத்தினர்...

    மேலும் வனவிலங்குகளை கண்காணிக்கவும், பொதுமக்களின் நலன் கருதியும் இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது .வனவிலங்குகள் அந்த பகுதியில் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டரியவும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதுகுறித்து வனச்சரகர் தெரிவிக்கையில் மார்லி மந்து பகுதியில் தினமும் கண்காணிப்பு பணியில் வனத்துறை ஈடுபட்டு வருவதாகவும் கால்நடைகளை அணைப்பகுதியில் மேய்க்க வேண்டாம் என கேட்டு கொண்டார்

    • கொள்ளை, வழிப்பறி திருட்டு சம்பவங்களை தடுக்கவும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கிராம பகுதிகளில் ஒவ்வொரு தெருவிற்கும் நுழைவு வாயில் முன்பு கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்.

    நெகமம்:

    நெகமம் பகுதியில் கொள்ளை, வழிப்பறி திருட்டு சம்பவங்களை தடுக்கவும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அடிக்கடி வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிபவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் குற்றச்சம்பவங்களை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காண்காணித்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது நெகமத்தில் நான்கு ரோடு சந்திப்பு, வடசித்தூர், நெகமம் போலீஸ் நிலையம் உள்பட 15- க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    மேலும் காட்டம்பட்டி பிரிவு அருகே நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.இந்த கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    திருப்பூர்- பொள்ளாச்சி மெயின் ரோடு, உடுமலை - திருப்பூர் ரோட்டில் நாளுக்கு நாள் அதிகளவில் வாகனங்கள் சென்று வருவதால் இந்த மெயின் ரோட்டில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் இரு சக்கர வாகனத்தில் 3 பேர், 4 பேர் பயணம் செய்வது போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து நெகமம் போலீசார் ஒருவர் கூறியதாவது:-காவல் துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் நெகமம் மற்றும் வடசித்தூர் பகுதியில் 15- க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    மேலும் கூடுதலாக ஆண்டிபாளையம், செட்டியக்காபாளையம், செங்குட்டைப்பாளையம், பனப்பட்டி, மெட்டுவாவி, கக்கடவு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கிராம பகுதிகளில் ஒவ்வொரு தெருவிற்கும் நுழைவு வாயில் முன்பு கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும். இதை அப்பகுதி மக்கள் முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யும் போது கிராமங்களில் திருட்டு சம்பவங்கள், தடுக்க ஏதுவாக இருக்கும். இதை கிராம பகுதி மக்கள் விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×