என் மலர்
செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் கடும் உறை பனி- செடிகள் கருகும் அபாயம்
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த குளிருடன் பனிப்பொழிவும் சேர்ந்து கொட்டியதால் மக்கள் வெகுவாக சிரமம் அடைந்தனர். இருப்பினும், நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக பனி பொழிவு முற்றிலும் குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் இந்த மாத தொடக்கம் முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. மழை நின்றும் மீண்டும் உறைபனி கொட்ட தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்கள் லேசான நீர்பனிப்பொழிவு கொட்டி வந்த நிலையில் தற்போது மீண்டும் உறை பனி பொழிவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆங்காங்கே சாலையோரங்களில் உள்ள புல் வெளிகளில் உறைபனி படர்ந்து கிடக்கிறது.
மேலும் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் உள்ள புல் தரைகள், செடிகள் மீதும் உறைபனி படர்ந்துள்ளது. தொடர் உறைபனி காரணமாக பூங்காக்களில் உள்ள செடிகள் கருகவும் வாய்ப்புள்ளது.
இதுதவிர ஊட்டியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றன. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவட்டர் அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உறைபனி பொழிவு தீவிரமடைந்துள்ள நிலையில், புல்வெளிகள் மற்றும் செடி கொடிகள் கருகி வருகின்றன. இதனால் காட்டு தீ ஏற்பட்டால் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.






