என் மலர்
நீலகிரி
- குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு.
- கடும் குளிரால் வீட்டை விட்டு வெளியே செல்லவே மக்கள் தயக்கம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டி, பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திலும் தொடரும் கடும் உறைபனி தாக்கத்தால், 'குட்டி காஷ்மீர்' போல் காட்சியளிக்கிறது.
ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், காந்தல், தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் வரை சரிந்து, கடும் குளிர் நிலவுகிறது.
அதிகாலை நேரங்களில் புல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் முழுவதும் வெண்மையாக உறைந்த பனிப்படலத்தால் மூடப்பட்டு, சுற்றுப்புறம் முழுவதும் கண்கவர் காட்சியாக மாறியுள்ளது.
தொடர்ந்து நிலவும் கடும் குளிர் காரணமாக, பொதுமக்கள் வெளியே செல்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக முதியோர், குழந்தைகள் மற்றும் தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் விவசாயிகளும் அதிகாலையில் ஏற்படும் உறைபனி காரணமாக பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறு, பிப்ரவரி மாதம் தொடங்கிய பின்னும் குறையாத உறைபனி தாக்கம் காரணமாக, ஊட்டியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- நீலகிரியில் ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்த அளவே உள்ளது.
- தற்போது ஊட்டியில் ரோஜா மற்றும் கொய்மலர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
ஊட்டி:
உலகெங்கும் வருகிற 14-ந் தேதி காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் அதிகரித்த பின்பு இந்தியாவிலும் காதலர் தினத்தை இளசுகள் வெகு விமரிசையாக கொண்டாட தொடங்கியுள்ளனர்.
காதலர்கள் பலரும் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக மலைம மாவட்டமான நீலகிரியில் குவிந்து வருகிறார்கள். அங்குள்ள விடுதிகளில் தற்போது முன்பதிவுகளும் தொடங்கி விட்டது.
அவ்வாறு வரும் காதலர்கள் காதலர் தினத்தன்று தங்களது காதலிகளுக்கு தங்களது காதலிகளுக்கு வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம்.
அத்துடன் பல்வேறு விதமான ரோஜா மலர்கள், கொய்மலர்களையும் தங்களது காதலிகளுக்கு பரிசாக வழங்கி தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது ஊட்டியில் ரோஜா மற்றும் கொய்மலர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
நீலகிரியில் ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்த அளவே உள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு ரோஜா மலர்கள் கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேசமயம் கொய்மலர்கள் நீலகிரியிலேயே தாராளமாக கிடைக்கிறது. இதனால் அதனை வாங்கி பலரும் பரிசாக கொடுக்க தொடங்கி விட்டனர். வருகிற 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போதே மலர்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது.
சாதாரணமாக ஒரு ரோஜா மலர் ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வருகிற 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரூ.20 முதல் ரூ.50 வரைக்கும் விற்பனையாக வாய்ப்புள்ளது. அதேபோன்று கொய்மலர்களான லில்லியம், ஜெர்பரா, ஆந்தூரியம் உள்பட பல்வேறு கொய்மலர்களுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கொய்மலர் விவசாயிகளுக்கு தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது. இன்னும் 4 நாட்களே உள்ளதால் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் பரிசு பொருட்களுடன் காத்திருக்கும் ஏராளமான காதல் ஜோடிகளை காண முடியும்.
- புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.
- பல்வேறு தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் குன்னூர், மஞ்சூர் பகுதிகளில் உறைபனி தொடங்கியது. அதனை தொடர்ந்து ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் உறைபனி காணப்பட்டது.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக உறைபனி காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் அவலாஞ்சி, தலைகுந்தா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமான உறைபனி காணப்பட்டது. தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இதனால் அங்கு கடும் குளிரும் நிலவியது.
இன்றும் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி காணப்பட்டது. உறைபனியால் ஊட்டி குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.
இதுதவிர சாலையோரப் புல்வெளிகள், வீடுகளின் மேற்கூரைகள், வாகனங்களின் கண்ணாடிகள், தோட்டப் பயிர்கள் அனைத்தும் உறைபனியால் மூடப்பட்டு காணப்பட்டன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று 3.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், இன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்சமாக 5.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
கடும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் காய்கறி அறுவடை, தேயிலை தோட்டப் பணிகள், பால் சேகரிப்பு, கட்டுமான வேலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.
மேலும், உறைபனி காரணமாக சில இடங்களில் பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களின் இலைகள் கருகி உள்ளதாகவும், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
- மத்திய மந்திரி எல்.முருகன் உடனடியாக பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.
- கல்லூரியில் சேர்ந்து மீண்டும் டி.பார்ம் படிப்பை தொடங்கி உள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியை சேர்ந்த ஆலு குறும்பா பழங்குடி ஓவியர் கிருஷ்ணனுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவித்து பெருமைப்படுத்தியது.
இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதனால் அவரது மனைவி சுசீலா மேட்டுப்பாளையம் பாக்கு தோப்பில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணன்-சுசீலா தம்பதியின் மூத்த மகள் வாசுகி, தந்தை இறப்புக்கு பிறகு கல்வி கட்டணம் செலுத்த வழியின்றி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இதுகுறித்த செய்தி பத்திரிகையில் வெளியானது.
இதுகுறித்து தகவலறிந்த மத்திய மந்திரி எல்.முருகன் உடனடியாக பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். மேலும் வாசுகி மீண்டும் கல்லூரியில் படிப்பை தொடர நடவடிக்கை மேற்கொள்ளும்படி நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீருவிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கலெக்டர் அறிவுரையின்பேரில் நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து வாசுகி ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி அவர் நேற்று கல்லூரியில் சேர்ந்து மீண்டும் டி.பார்ம் படிப்பை தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து வாசுகியின் தாயார் சுசீலா கூறியதாவது:-
"எனது மகள் படிக்க நடவடிக்கை எடுக்க உதவிய பத்திரிகைகள், மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. எனது மகள் முழுமையாக படிக்க அனைத்து உதவிகளையும் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. அவர்களின் கல்விக்கான உதவி மற்றும் நாங்கள் குடியிருக்க அரசு சார்பில் கோத்தகிரியில் ஒரு வீடும் கட்டி கொடுத்தால் மிகுந்த உதவியாக இருக்கும்" என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் பெயரை மாற்றி மத்திய அரசு தவறு செய்துள்ளது.
ஊட்டி:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான நிவேத் ஆல்வா ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சி பணிகள் மேற்கொள்வது குறித்தும், வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கான அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களையும் சந்தித்து ஆலோசனை கேட்பதற்காக வந்துள்ளேன்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் பெயரை மாற்றி மத்திய அரசு தவறு செய்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சட்டத்தை மாற்றுவது குறித்து பாராளுமன்றத்தில் எந்த ஒரு தகவலும் அளிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து அதனை மாற்றியது தவறு.
வருகிற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் எந்த கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்பதை காங்கிரஸ் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் கேபினட் பொறுப்பு வகிக்கும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு 3-வது வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்ததன் மூலம் மத்திய அரசு எப்படி எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மற்ற தலைவர்களுக்கு மரியாதை கொடுக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று செய்வது மத்திய அரசின் தவறான செயல்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- மாலை நேரம் என்பதால் தண்டவாளத்தில் விழுந்த மரம் மற்றும் மண்சரிவை அகற்றுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டது.
குன்னூர்:
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த மலை ரெயில் அடர்ந்த வனங்களுக்கு நடுவே பயணிப்பதால் இதில் பயணிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுவர்கள்.
கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மலை ரெயில் வந்து கொண்டிருந்தது. அதில் 191 பயணிகள் இருந்தனர்.
மலை ரெயில் கல்லாறு-ஹல்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே பல்வேறு இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்தது. மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அடர்லி ரெயில் நிலையத்தில் இருந்து 191 பயணிகளுடன் மலை ரெயில் குன்னூருக்கு புறப்பட்டு சென்றது. அங்கு சென்றதும் பயணிகள் அனைவரும் பஸ்கள் மூலமாக மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாலை நேரம் என்பதால் தண்டவாளத்தில் விழுந்த மரம் மற்றும் மண்சரிவை அகற்றுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள சீரமைப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதன் காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- சாலைகளே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியதால், சாலைகளில் வந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
- ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் இந்த பனி மூடிய இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டார பகுதிகள், தலைக்குந்தா மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு மற்றும் உறைபனி காணப்பட்டது.
அதிகாலை முதலே அடர்த்தியான பனி மூட்டம் சூழ்ந்ததால், வீடுகள், தோட்டங்கள், புல்வெளிகள் அனைத்தும் வெள்ளைத் திரை போர்த்தியது போல் காட்சியளித்தன.
தலைக்குந்தா, எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான பகுதிகளில் உறை பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் புல்வெளிகள், தேயிலை தோட்டங்கள், வாகனங்கள் மற்றும் கூரைகளின் மேல் உறைபனி படர்ந்து அந்த பகுதியே வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.
கடும் பனிப்பொழிவால் காலை நேரத்தில் கடும் குளிரும் காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
சாலைகளே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியதால், சாலைகளில் வந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
பொங்கல் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் இந்த பனி மூடிய இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.
- ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் உறவினர் இல்லங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்றும் பொழுதை போக்குவது வழக்கம்.
பொங்கல் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இன்று காணும் பொங்கல் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலை பூங்கா போன்றவற்றை பார்வையிட்டனர்.
மேலும் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய பல்வேறு வகையான பூக்களையும் கண்டு ரசித்ததோடு அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
அங்குள்ள புல்வெளி மைதானத்தில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.
இதேபோன்று ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் உள்ள நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, பைக்கார படகு இல்லம், பைக்கார நீர்வீழ்ச்சி, ஊட்டி படகு இல்லம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து காணும் பொங்கலை தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாநகரில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். அவர்கள் அங்குள்ள 23 வகையான தோட்டங்கள், செயற்கை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களையும் கண்டு ரசித்தனர். அத்துடன் அதன்முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
செம்மொழி பூங்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவில் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகமாக விளையாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
பொள்ளாச்சி ஆழியார் அணை, ஆழியார் அணை பூங்காவிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்ததோடு, அதன் அருகே உள்ள பூங்காவில் குழந்தைகளுடன் உற்சாக விளையாடி விடுமுறையை கழித்தனர்.
இதேபோன்று கோவை குற்றாலம், குரங்கு நீர்வீழ்ச்சி, வால்பாறை, டாப்சிலிப் யானைகள் முகாம், கோவை மாநகரில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்கா, உக்கடம் பெரிய குளம், சிறுவர் பூங்கா, வாலாங்குளம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குவிந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.
காணும் பொங்கலையொட்டி கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்
- எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இன்று நீலகிரி மாவட்டம் வந்துள்ளார். கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அவர் கூடலூர் வந்துள்ளார். கூடலூர் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ராகுல்காந்தி கூடலூரில் உள்ள புனித தாமஸ் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று பொங்கல் வைத்தார். அப்போது ராகுல் காந்தி தோடர் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தார்
இதையடுத்து மாணவர்களிடம் உரையாடுற்ற ராகுல் காந்தி, "கல்வி தனியார்மயமாகக்கூடாது. மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். ஆண்களைவிட பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்; ஐ.டி. துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது
எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். ஆண்களைவிட பெண்கள் மிகவும் திறமையானவர்கள், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள்; பெண்கள் இன்னும் பலதுறைகளில் பங்களிப்பை வழங்க வேண்டும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆனால் தற்போது ஆள்பவர்களால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது" என்று தெரிவித்தார்.
ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு பள்ளி மைதானம் முதல் செயிண்ட் தாமஸ் பள்ளி மைதானம் வரை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கூடலூர் நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி எம்.பி., மீண்டும் மைசூர் புறப்பட்டுச் செல்கிறார்.
- கூடலூர் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- புனித தாமஸ் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இன்று நீலகிரி மாவட்டம் வந்துள்ளார். கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அவர் கூடலூர் வந்துள்ளார். கூடலூர் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ராகுல்காந்தி கூடலூரில் உள்ள புனித தாமஸ் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று பொங்கல் வைத்தார். அப்போது ராகுல் காந்தி தோடர் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தார்
ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு பள்ளி மைதானம் முதல் செயிண்ட் தாமஸ் பள்ளி மைதானம் வரை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கூடலூர் நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி எம்.பி., மீண்டும் மைசூர் புறப்பட்டுச் செல்கிறார்.
- கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ராகுல் காந்தி கூடலூர் வருகிறார்.
- ராகுல்காந்தி கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.
ஊட்டி:
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இன்று நீலகிரி மாவட்டம் வருகிறார். கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மாலை 3 மணிக்கு அவர் கூடலூர் வருகிறார்.
தனி ஹெலிகாப்டரில் வரும் அவர் கூடலூர் தேவர்சோலையில் உள்ள மைதானத்தில் வந்து இறங்குகிறார். அங்கு அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இதேபோல அங்குள்ள சுங்கம்பகுதியிலும் காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து ராகுல்காந்தி கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் மத்தியில் உரையாற்றுகிறார். அங்கு நடைபெறும் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து பொங்கல் வைத்து அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரசார் மட்டுமல்லாது ஆ.ராசா எம்.பி., பொன்ஜெயசீலன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர். ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு பள்ளி மைதானம் முதல் செயிண்ட் தாமஸ் பள்ளி மைதானம் வரை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு வருகிறார்கள். கூடலூர் நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி எம்.பி., மீண்டும் மைசூர் புறப்பட்டுச் செல்கிறார்.
ராகுல் வருகையால் நீலகிரி மாவட்ட காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பு தலைவர் கிரீஸ் சோடங்கர், செயலாளர் சூரஜ் ஹெக்டே மற்றும் மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் நீலகிரியில் முகாமிட்டுள்ளனர்.
- 2 கி.மீ தூரத்திற்கு நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
- ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
ஊட்டி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வருகிற 13-ந் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகிறார்.
கூடலூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி எம்.பி. பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் அன்றைய தினம் டெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கூடலூர்-மைசூர் சாலையில் மார்தோமா நகர் பகுதியில் உள்ள மைதானத்திற்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலமாக விழா நடைபெறும் பள்ளிக்கு சென்று பொன் விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கிருந்து கேரள மாநிலம் திருச்சூர் புறப்பட்டு செல்கிறார்.
கூடலூருக்கு வருகை தரும் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மார்தோமா நகர் மைதானம் முதல் விழா நடைபெற உள்ள பள்ளி வரையிலும் 2 கி.மீ தூரத்திற்கு நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் அகில இந்திய உறுப்பினரும், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளருமான கோசி பேபி தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.






