என் மலர்
கிருஷ்ணகிரி
தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அமராவதி (வயது 44). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் ஆசிரியை அமராவதி கடந்த சில நாட்களுக்கு முன் புது காரை வாங்கினார். இதனால் ஒரு டிரைவரை வேலைக்கு அமர்த்தி, தினமும் தருமபுரியில் இருந்து, புதுகாரில் போச்சம்பள்ளிக்கு ஆசிரியை அமராவதி சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து ஆசிரியை அமராவதி வெளியே வந்தார். அப்போது கார் டிரைவர் கடைக்கு சென்று விட்டார்.
இதனால் டிரைவர் வரும்வரை ஆசிரியை அமராவதி, காரை ஓட்டி பழகலாம் என்று எண்ணினார். அதன்படி புது காரில் டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை இயக்கினார்.
அப்போது காரை கிளம்பிய போது திடீரென அவர் பிரேக்குக்கு பதிலாக கிளட்சை மிதித்து விட்டார். இதில் சீறிபாய்ந்த கார், வேகமாக பள்ளி கட்டிடத்தின் மீது மோதியது. இதில் ஆசிரியை அமராவதி, பலத்த காயம் அடைந்தார்.
உடனே அவரை சக ஆசிரியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஆசிரியை அமராவதி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விபத்தில் பலியான ஆசிரியை அமராவதிக்கு சக்திவேல் என்ற கணவரும், 12 வயதில் இரட்டை மகன்களும் உள்ளனர். சக்திவேல் கும்பகோணத்தில் டி.ஆர்.ஓ.வாக பணியாற்றி வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, கல்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 17 பெண்கள் சுற்றுலாவாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று வேனில் வந்தனர். கல்பெருபாக்கம் பகுதி சேர்ந்த சுசிந்திரன் (வயது 27) என்பவர் வேனை ஓட்டினார்.
நேற்று மாலை ஒகேனக்கல்லில் குளித்து விட்டு புதுச்சேரி நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தருமபுரி ஊத்தங்கரை செல்லும் நெடுஞ்சாலையில் போச்சம்பள்ளி அருகே உள்ள மாவத்தூர் கூட்டுச் சாலை பகுதியில் வந்த போது சாலையின் குறுக்கே வாத்து கூட்டம் நடந்தது. இதனால் வேன் டிரைவர் பிரேக் போட்டார்.
இதில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த வேன் சாலையில் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் தமிழ் பாரதி (24), அமுதா (40), வினிதா (24), அமலா (35), ஐஸ்வர்யா (18), அலமேலு (32), செவ்வந்தி (23), சுஜாதா (34), டிரைவர் சுசேந்திரன் (27) ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து போச்சம்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சீனிவாசன் என்பவருக்கு மர்மநபர் ஒருவர் போன் மூலம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அவர் ஒசூர் ஏ.எஸ்.பி.யிடம் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளார்.
ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 55) இவர் பா.ஜ.க.வில் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளராக பதவியில் உள்ளார்.
இவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் அவரிடம் ஆபாச வார்த்தைகளால் திட்டி படுகொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.
ஓசூரில் இதுவரை நடந்த கொலைகளை விட மிகவும் பயங்கரமான முறையில் கொலை செய்து விடுயவதாக மிரட்டியதால் சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சமடைந்தனர்.
இதையடுத்து அவர், பாஜ.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினருடன் ஓசூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என புகார் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏ.எஸ்.பி. தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






