என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகி்றது.
    • மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையுங்கள்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உடலியக்க குறைபாடுடைய நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள் (ஆக்சிலரி/எல்போ கிரட்சஸ்) போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காலிப்பர்கள், விபத்தினாலோ அல்லது நோயாலோ கை மற்றும் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களும், 18 முதல் 60 வயது வரை உள்ள தையல் பயிற்சி முடித்து தையல் சான்று பெற்றுள்ள உடலியக்க குறைபாடுடையோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம், 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தையல் பயிற்சி முடித்த தாய்மார்களுக்கு தையல் எந்திரம், மூளை மூடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளும், நடக்க முடியாத மூளை மூடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு ரொலேட்டர் எனப்படும் நடைப்பயிற்சி சாதனங்களும், காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக்கருவிகள், பார்வையற்றோருக்கான ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்கள் மற்றும் பிரெய்லி கைக்கடிகாரங்கள், 9-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் கல்வி பயிலும் பார்வை குறைபாடுடைய மாணவ-மாணவியர்களுக்கு சிறிய எழுத்துகளை பெரிதாக்கி காட்டக்கூடிய உருப்பெருக்கி, இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு மற்றும் டெட், டி.என்.பி.எஸ்.சி. போன்ற போட்டித்தேர்வுகளுக்கு பயிலும் பார்வை குறைபாடுடையோருக்கு பிரெய்லி எழுத்துக்களை மின்னனு முறையில் வாசிக்கும் கருவி பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான திறன்பேசி சாதனங்கள் போன்ற உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் இலவசமாக வழங்கப்பட்டு வருகி்றது.

    மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி உபகரணங்கள் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும் மருத்துவர் சான்று உட்பட), ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையுங்கள். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 044-29998040-இல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறப்பு பூஜையுடன் பந்தக்கால் நடப்பட்டது
    • கருடசேவை ஜூன் 2-ந் தேதி நடக்கிறது.

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவிருமான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக வைகாசி பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    30 அடி உயர பந்தக்காலுக்கு மஞ்சள், குங்குமம் மாவிலை தோரணம் கட்டி கோவில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க கற்பூர ஆரத்தி காட்டி பந்தக்கால் கள் நட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை தொடங்கி வைத்தனர்.

    பிரம்மோற்சவ விழா வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய உற்சவங்களான கருடசேவை உற்சவம் ஜூன் மாதம் 2-ந் தேதியும், திருத்தேர் உற்சவம் ஜூன் மாதம் 6-ந் தேதியும், தீர்த்தவாரி உற்சவம் ஜூன் மாதம் 8-ந் தேதியும் என 10 நாள் உற்சவம் காலை, மாலை என இரு வேளையும் நடைபெறுகிறது.

    உற்சவத்தில் காலை, மாலை என இரு வேளை களிலும் அம்ச வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யாளி வாகனம், சந்திர பிரபை, சூரிய பிரபை, தங்க பல்லக்கு, தங்க சப்பரம், யானை வாகனம் உன்ளிட்ட வாகனங்களில் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் காஞ்சீபுரம் ராஜ வீதிகளில் வீதி உலா வர உள்ளார்.

    • மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அம்மன் ஆலய கிழக்கு கோபுர வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • எஸ். எஸ். ஆர். சத்யா ஏற்பாட்டில் தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து 501 தேங்காய் உடைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    அ. தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் மாநகரில் காஞ்சி பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் குமரகோட்டம் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,

    இதனை தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அம்மன் ஆலய கிழக்கு கோபுர வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் அருகே அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் வள்ளி நாயகம் ஆகியோர் ஏற்பாட் டில் வழக்க றுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாவட்ட பொருளாளர் வள்ளி நாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் ஏற்பாட்டில் பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. எஸ். எஸ். ஆர். சத்யா ஏற்பாட்டில் தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து 501 தேங்காய் உடைக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    இரவு 8மணிக்கு கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன் ஏற்பாட்டில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தங்கத் தேர் பவனி நடைபெற்றது.

    இதில் அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட அவை தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி.சேகர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.ஆர்.மணி வண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, அத்திவாக்கம் ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன், பகுதி செயலாளர் என். பி. ஸ்டாலின், பாலாஜி, கோல்ட் ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் படுநல்லி தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் பல்வேறு திட்டங்களும் கொண்டு வரப்பட்டன.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் திருட்டுத்தனமாக விற்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி, தடையை மீறி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை விற்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் பல்வேறு திட்டங்களும் கொண்டு வரப்பட்டன. அதில் முக்கியமானது மஞ்சப்பை திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பை போன்ற துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக பெரும்பாலானோர் மஞ்சப் பைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மஞ்சப்பை பயன்படுத்தபவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில்களில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தானியங்கி மஞ்சப்பை எந்திரத்தை மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி திறந்து வைத்து அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கினார்.

    தற்பொழுது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் நெகிழியை பயன்படுத்தாதவாறு மஞ்சப்பையை பயன்படுத்தும் விதமாக மக்கள் அதிகம் கூடும் இடமான மார்க்கெட் பகுதிகளில் மேலும் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் நிறுவப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ், அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன்பாரதி, அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெகநாதன் கலந்து கொண்டனர்.

    • குன்றத்தூர் வட்டத்தில் மே 16 முதல் 19 வரை மற்றும் மே 23, 24 ஆகிய 6 நாட்கள் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
    • மே 16 முதல் முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள தீர்வாய நிகழ்ச்சியை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1432-ம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் நடத்திடவும், கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும் கீழ்கண்டவாறு வருவாய் தீர்வாய அலுவலர்களை நியமனம் செய்து மாவட்ட கலெக்டரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் வருகிற 16, 17, 18, 19, 23,24 ஆகிய 6 நாட்கள் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 16, 17, 18,19, 23 ஆகிய 5 நாட்கள் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    உத்திரமேரூர் வட்டத்தில் வருகிற 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை, மே 23 முதல் 26 வரை ஆகிய 8 நாட்கள் காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.

    குன்றத்தூர் வட்டத்தில் மே 16 முதல் 19 வரை மற்றும் மே 23, 24 ஆகிய 6 நாட்கள் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    வாலாஜாபாத் வட்டத்தில் வருகிற 16 -ந்தேதி முதல் 19-ந்தேதி வரை மற்றும் மே 23-ந்தேதி ஆகிய 5 நாட்கள் காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    முன்னதாகவே, சம்பந்தப்பட்டதாசில்தாரிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

    அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது, வருவாய் தீர்வாய மனு என குறிப்பிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகவும் முன்கூட்டியே கள ஆய்வு ஏதும் தேவைப்படின் அதனை மேற்கொண்டு, வருவாய் தீர்வாய அலுவலருக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே, மே 16 முதல் முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள தீர்வாய நிகழ்ச்சியை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டாலும் அதன் எல்லைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
    • கடந்த 10 ஆண்டுகளில் மழைப்பொழிவு, வெள்ளம், நிலத்தடி நீர் தன்மை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

    ரூ.20 ஆயிரம் கோடி செலவில் சுமார் 4700 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் இந்த திட்டத்தை கைவிடக்கோரி ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் நீர் நிலைத் தன்மை குறித்து அறிய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதைத் தெடர்ந்து பரந்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் மழைப்பொழிவு, நிலத்தடி நீர், பருவமழையின் போது வெள்ளம் மற்றும் புவியியல் நிலைத்தன்மை பற்றிய விரிவான ஆய்வறிக்கையை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) நீர்வளத்துறையிடம் கேட்டு வந்தது. இதனை 6 மாதத்தில் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    எனவே பரந்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் நீர்நிலை தன்மை தொடர்பாக விரைவில் ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டாலும் அதன் எல்லைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நீர்நிலைத்தன்மை குறித்து ஆய்வறிக்கையை நீர்வளத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இது 6 மாதத்தில் முடிவடையும். கடந்த 10 ஆண்டுகளில் மழைப்பொழிவு, வெள்ளம், நிலத்தடி நீர் தன்மை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    புதிய விமானநிலைய திட்டத்திற்கான பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க டிட்கோ விரைவில் ஒரு ஆலோசகரை நியமிக்கும் என்றார்.

    • கடந்த மார்ச் மாத இறுதியில் பாலாற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து ஏப்ரல் மாதத்தில் பாலாறு வறண்டது.
    • பாலாற்றில் நீர் வரத்தால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் காஞ்சிபுரம் பாலாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் பாலாற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து ஏப்ரல் மாதத்தில் பாலாறு வறண்டது.

    கடந்த சில நாட்களாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் பாலாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மீண்டும் பாலாற்றில் நீர் வரத்து தொடங்கி உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • சமையல் பொறுப்பாளர் பணியானது முற்றிலும் தற்காலிகமானது.
    • ஆரோக்கியமான சமையலை சுகாதாரமான முறையில் செய்வது குறித்து முறையாக வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் (விரிவாக்கம்) கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

    இதனை தொடர்ந்து, அனைத்து ஊரக, பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராகவும் மற்றும் அதேப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோராகவும் உள்ள 3 பெண்கள் சமையல் பொறுப்பாளராக முதன்மை குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேற்படி சமையல் பொறுப்பாளர் பணியானது முற்றிலும் தற்காலிகமானது. மேலும் அவர்களது குழந்தைகள் 5-ம் வகுப்பை தாண்டியவுடன் சமையல் பொறுப்பாளர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.

    எனவே மேற்படி சமையல் பொறுப்பாளர் தேர்வு செய்யப்படுவதில் தகுதியற்ற நபர்கள் என எவரேனும் கண்டறியப்பட்டாலோ, கையூட்டு பெறுவதாக புகார் ஏதேனும் பெறப்பட்டாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    மேலும் முதன்மை குழு மூலமாக தேர்வு செய்யப்பட்ட சமையல் பொறுப்பாளர் அனைவருக்கும், ஆரோக்கியமான சமையலை சுகாதாரமான முறையில் செய்வது குறித்து முறையாக வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்படும்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் முதற் கட்டமாக 1.6.2023 அன்றும், 2-ம் கட்டமாக 15.6.2023 அன்றும் செயல் படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் துரை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்றவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு, மேட்டுகாலனி பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 54). கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு ஓரிக்கை மிலிட்டரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் துரை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் உயிரிழந்த துரை உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்றவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தேர்வு எழுத வந்தவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தேர்வு மைய இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு சென்றனர்.
    • கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து இரும்பு கேட்டை உடைத்து புகுந்ததாக தேர்வு எழுத வந்த 6 பெண்கள் உள்பட மொத்தம் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நேற்று காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

    காலை மற்றும் மாலை என இருவேளைகளில் நடைபெற்ற இந்த தேர்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மதியம் தொடங்கிய தேர்வுக்கு சிலர் தாமதமாக வந்தனர். ஆனால் தேர்வு மைய இரும்பு கேட் மூடப்பட்டு இருந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தேர்வு எழுத வந்தவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தேர்வு மைய இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் தேர்வு மைய கேட் உடைக்கப்பட்டது தொடர்பாக தனியார் கல்லூரி நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து இரும்பு கேட்டை உடைத்து புகுந்ததாக தேர்வு எழுத வந்த 6 பெண்கள் உள்பட மொத்தம் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது 147, 448,427 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    • இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
    • துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.39 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 745 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    ஆனால் அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் இருவரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.55 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள 1,042 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்களது உடைமைகளிலும் எதுவும் இல்லாததால் இருவரையும் தனிஅறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.37 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    மேலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.39 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 745 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த 2 பேரின் உள்ளாடைக்குள் இருந்து ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 293 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களாக சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 பெண்கள் உள்பட 7 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 53 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 780 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 649 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 22 லட்சம் கடன் உதவிகளை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் வழங்கினார்.
    • கூடுதல் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மருந்தகங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 602 கூட்டுறவு நியாய விலை கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.

    இதனால் பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக கியூ ஆர் கோடை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதற்கு வர வேற்பு உள்ளது.

    இதை தொடர்ந்து 649 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 22 லட்சம் கடன் உதவிகளை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முருகன், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×