என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • பெங்களூருவை சேர்ந்தவர் 13 வயது பள்ளி மாணவர் ஸ்ரேயாஸ் ஹரிஷ்.
    • இவர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் எம்ஆர்எப் எம்எம்எஸ்சி எப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்றில் பெங்களூரைச் சேர்ந்த பைக்கர் ஷ்ரேயாஸ் ஹரிஷ் பங்கேற்றார்.

    பந்தயத்தில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கியதில், அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்றது. இதனால், அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    கடந்த மே மாதம் மினிஜிபி இந்தியா பட்டத்தை வென்ற ஷ்ரேயாஸ், ஸ்பெயினில் நடந்த மினிஜிபி பந்தயங்களில் பங்கேற்று, இரண்டு பந்தயங்களிலும் முறையே 5-வது மற்றும் 4-வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மோகன் தனது மனைவியுடன் கன்னியாகுமரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மகள் திருமணத்திற்கான பத்திரிகை வைப்பதற்காக சென்றார்.
    • திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    சோமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ராயப்பா நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 57). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார். இளைய மகள் விஜிதா (27) சென்னை கிண்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அதற்கான ஏற்படுகளை மோகன் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மோகன் தனது மனைவியுடன் கன்னியாகுமரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மகள் திருமணத்திற்கான பத்திரிகை வைப்பதற்காக சென்றார். விஜிதா நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விஜிதா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க வைர நகைகளை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் சோமங்கலம் போலீசில் புகார் அளித்தார். திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இந்த திருட்டு சம்பவம் வரதராஜபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவரை மது பழக்கத்தில் இருந்து மீட்க நிகிதா பல்வேறு முயற்சி மற்றும் அறிவுரை கூறியும் எதுவும் நடக்கவில்லை.
    • தாஸ் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால் நிகிதா மனவேதனையில் இருந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது27). இவர் அதே பகுதியை சேர்ந்த நிகிதா(26) என்பவரை கடந்த 6 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

    தாசுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. அவர் தினமும் வீட்டிற்கு மதுகுடித்து வந்து ரகளையில் ஈடுபட்டு வந்தார். குழந்தை தொடர்பாகவும் நிகிதாவிடம் வாக்குவாதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கணவரை மது பழக்கத்தில் இருந்து மீட்க நிகிதா பல்வேறு முயற்சி மற்றும் அறிவுரை கூறியும் எதுவும் நடக்கவில்லை. தாஸ் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால் நிகிதா மனவேதனையில் இருந்தார்.

    சம்பவத்தன்றும் தாஸ் மதுகுடித்து வீட்டுக்கு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நிகிதா கணவர் கண்முன்பே தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் உடல் கருகினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாஸ் காதல் மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவரும் உடல் கருகி துடித்தார். அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தாஸ் மற்றும் அவரது மனைவி நிகிதா ஆகிய 2 பேரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நிகிதா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் தாசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாலிபரின் குடிப்பழக்கத்தால் அவரது குடும்பமே சிதைந்து போனது.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஏரிக்கரை செல்லும் சாலையில் காளிதாசன் வெட்டுக்காயத்துடன் இறந்து கிடந்தார்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் காளிதாசன்(வயது40). இவர் பல்லாவரத்தில தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை குன்றத்தூர் அடுத்த ஜெயம் நகர் ஏரிக்கரை செல்லும் சாலையில் காளிதாசன் வெட்டுக்காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது தலையில் கல்லால் தாக்கியதற்கான பலத்த காயமும், முகத்தில் காயங்களும் இருந்தது.

    எனவே மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு உடலை இங்கு கொண்டு வந்து போட்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பல்லாவரத்தில் இருந்து காளிதாசன் எதற்காக இங்கு வந்தார்? கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மண்டலத்தின் மூலம் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம்:

    அரசு பஸ்களில் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறப்பு பஸ்களை கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் பயணம் அதிகமாக உள்ளது.

    அதே போல புறநகரங்களில் இருந்தும் சென்னைக்கு மக்கள் அதிகளவில் பயணிக்கிறார்கள். அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மண்டலத்தின் மூலம் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடுக்கு 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, விழுப்புரத்திற்கு 40 சிறப்பு பஸ்களும் கோயம்பேட்டில் இருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 சிறப்பு பஸ்களும் மொத்தம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

    • குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு பத்திரப்பதிவு செய்ய 200 டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும்.
    • அலுவலகம் முன்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது.

    குன்றத்தூர்:

    குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட குன்றத்தூர், மலையம்பாக்கம், நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லசேரி, கோவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுடைய நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தை நாடுவது வழக்கம், வழக்கமாக குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு பத்திரப்பதிவு செய்ய 200 டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும்.

    அதில் அதிகபட்சமாக 100 முதல் 120 வரை பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம்.

    நிலம் வாங்குபவர்கள் ஆடிப்பெருக்கன்று பத்திரப்பதிவு செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று காலை முதலே அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர். அலுவலகம் முன்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது.

    நேற்று ஒரு நாள் மட்டும் பத்திரப்பதிவு செய்ய 214 டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டிருந்தது. அதில் 160 பேர் பத்திரப்பதிவு செய்தனர்.

    • நகைக்கடை உரிமையாளர் விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்தார்.
    • காயத்ரியிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் தெரு பகுதியில் நகைக்கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு வந்த டிப்-டாப் உடை அணிந்த இளம்பெண் நகை வாங்குவது போல் நடித்து ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி இரண்டு தங்க செயின்களை திருடி தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடையில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளம்பெண் நகை வாங்குவது போல் நடித்து நகையை சுருட்டி செல்வது பதிவாகி இருந்தது.

    விசாரணையில் அவர், வாலாஜாபாத் அருகே உள்ள புளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி (26) என்பது தெரிந்தது. அவரை காஞ்சி போலீசார் கைது செய்தது விசாரித்தனர். அப்போது கடனை அடைக்க நகை திருட்டில் ஈடுபட்டதாக அவர் கூறி உள்ளார்.

    கைதான காயத்ரி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது குடும்பத்தினருக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் வாங்கிய கடனை எப்படியாவது திருப்பி செலுத்தி விட வேண்டும் என நினைத்து, நகைக்கடையில் தங்க செயின்களை திருடினேன். ஆனால் கண்காணிப்பு காமிராவில் பதிவானதால் சிக்கிக்கொண்டேன் என்று கூறி உள்ளார்.

    காயத்ரியிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரி செய்ய வேண்டும்.
    • மின் கம்பங்கள் மாற்றப்பட வேண்டும், சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்க்க வாரம் ஒரு நாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 217 மனுக்கள் பெறப்பட்டன. இதில் முக்கியமாக சாலை வசதிகள், இடுகாடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டு மனைப் பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும்.

    குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரி செய்ய வேண்டும், மின் கம்பங்கள் மாற்றப்பட வேண்டும், சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    இதில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்களும், ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், கல்வித்துறை சார்பில் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 4 பள்ளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு பரிசளிப்பு தொகைக்கான காசோலையும், கூட்டுறவுத் துறை சார்பில் 5 மகளிர் குழுக்களுக்கு ரூ.70.06 லட்சம் மதிப்பீட்டில் கடன்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.07 கோடியில் வங்கி கடன் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • இந்திய வேளாண் அமைச்சகத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக பதிவு செய்யப்படாத ஒரு போலி நிறுவனம் ஆகும்.
    • போலியான விளம்பரங்களை நம்பி பசல் பீமா உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம் என்னும் ஆட்சேர்ப்பு நிறுவனம் பயிர் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்காக பசல் பீமா உதவியாளர்களை ஆட் சேர்ப்பு செய்வதாக போலியாக விளம்பரம் செய்து, ஆந்திர மாநிலத்தில் 829 பசல் பீமா உதவியாளர் பணியிடங்களுக்கு அழைப்பு விடுத்து விண்ணப்ப கட்டணமாக ரூ.250/- வசூலித்து உள்ளது தெரிய வருகிறது. இந்த நிறுவனம் இந்திய வேளாண் அமைச்சகத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக பதிவு செய்யப்படாத ஒரு போலி நிறுவனம் ஆகும்.

    எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எவரும் பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக வெளியிடப்படும் போலியான விளம்பரங்களை நம்பி பசல் பீமா உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • இதே போல் டீ கப்பை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.
    • உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த போது மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.

    உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். பெற்றோர் விரைந்து சென்று அந்த மாணவரை உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதலில் அவருக்கு சீராக சுவாசிக்க ஏதுவாக ஆக்சிஜன் நாசி மாஸ்க் பொருத்தும்படி பரிந்துரைத்துள்ளார்கள்.

    உடனே வார்டில் அந்த மாணவரை அனுமதித்து மாஸ்க் பொருத்த முடிவு செய்துள்ளார்கள். இந்த மாஸ்கை பொருத்துவவதன் மூலம் சிலிண்டரில் இருந்து வரும் ஆக்சிஜனை சுவாசித்து இன்னொரு துவாரத்தின் வழியாக கார்பன்டை ஆக்சைடை வெளியேற்ற முடியும்.

    இந்த மாஸ்கை பொருத்தும் போது அதில் உள்ள எலாஸ்டிக் கயிறை தலையின் பின்பக்கம் மாட்டி விடுவார்கள். இதனால் மூக்கு மட்டும் வாய் பகுதியை விட்டு நகராமல் அப்படியே இருக்கும்.

    ஆனால் இந்த மாணவருக்கு மாஸ்க் இல்லாததால் டீ கப்பில் துவாரம் போட்டு அதை ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் டியூபுடன் இணைத்து அதை மாணவர் கையில் கொடுத்து மூக்கில் வைத்து பிடித்து கொள்ளும்படி கூறியிருக்கிறார்கள். அந்த மாணவரும் அப்படியே பிடித்து சிரமப்பட்டு சமாளித்துள்ளார்.

    இதை பார்த்த நோயாளி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். வீடியோ எடுத்தவர் கூறும்போது, இதே போல் டீ கப்பை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த வாரமும் ஒருவருக்கு பொருத்தி இருந்ததை பார்த்தாக கூறி உள்ளார். மாஸ்க்குக்கு பதில் டீ கப்பை பயன்படுத்தியது ஏன்? மாஸ்க் இல்லையா? என்பதற்கு மருத்துவர்கள் எந்த பதிலும் கூறவில்லை.

    ஒரு பக்கம் இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவசரத்துக்கு சமயோசிதமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்களை பாராட்டுவதை தவிர வழியில்லை.

    இந்த விவகாரம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார். 

    • குன்றத்தூரில் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
    • பக்தர் தங்கத்தாலான 3 அடி உயரம் கொண்ட தங்க சேவல் கொடியை முருக பெருமானுக்கு காணிக்கையாக வழங்கினார்.

    குன்றத்தூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் குன்றத்தூரை சேர்ந்த முருக பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்து வேண்டி உள்ளார். வேண்டுதல் நிறைவேறினால் தங்கத்தால் சேவல் கொடியை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டியிருந்தார். வேண்டுதல் நிறைவேறிய நிலையில் தான் சொன்னபடி ரூ.65 லட்சத்தில் 1 கிலோ 400 கிராம் எடை கொண்ட தங்கத்தாலான 3 அடி உயரம் கொண்ட தங்க சேவல் கொடியை முருக பெருமானுக்கு காணிக்கையாக வழங்கினார்.

    இதனை குன்றத்தூர் முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் பெற்றுக்கொண்டார். அவருடன் முருகன் கோவில் அறங்காவலர்கள் குணசேகர், ஜெயக்குமார் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் கோவில் செயல் அலுவலர் கன்னியா உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    தற்போது காணிக்கையாக வழங்கப்பட்ட இந்த தங்க சேவல் கொடியை தினமும் முருகபெருமான் சன்னதியில் வைத்து பூஜை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • மர்ம கும்பல் துரையை பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
    • முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ரெயில்வே சாலை கந்தன் பூங்கா அங்கன்வாடி மையப் பகுதியில் வசித்து வந்தவர் துரை(வயது62). இவர் சாலை ஓரங்களில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து சாலையோரம் வாழ்ந்து வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை அப்பகுதியில் துரை அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சிவகாஞ்சி போலீசுக்கு தகவல்தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து துரையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அருகில் ரத்த கரையும், பீர்பாட்டில் உடைந்தும் கிடந்தது. மர்ம கும்பல் துரையை பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது. மேலும் அங்கு உணவு பொட்டலமும் சிதறி கிடந்தது. துரை பழைய பொருட்களை விற்று பணம் வைத்து இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த போதை கும்பல் பணம் பறிக்கும் முயற்சியில் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×