குடிப்பழக்கத்தால் குடும்பம் சிதைந்தது- கணவர் கண்முன் காதல் மனைவி தீக்குளித்து தற்கொலை

கணவரை மது பழக்கத்தில் இருந்து மீட்க நிகிதா பல்வேறு முயற்சி மற்றும் அறிவுரை கூறியும் எதுவும் நடக்கவில்லை. தாஸ் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால் நிகிதா மனவேதனையில் இருந்தார்.
குடிப்பழக்கத்தால் குடும்பம் சிதைந்தது- கணவர் கண்முன் காதல் மனைவி தீக்குளித்து தற்கொலை
Published on

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது27). இவர் அதே பகுதியை சேர்ந்த நிகிதா(26) என்பவரை கடந்த 6 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

தாசுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. அவர் தினமும் வீட்டிற்கு மதுகுடித்து வந்து ரகளையில் ஈடுபட்டு வந்தார். குழந்தை தொடர்பாகவும் நிகிதாவிடம் வாக்குவாதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கணவரை மது பழக்கத்தில் இருந்து மீட்க நிகிதா பல்வேறு முயற்சி மற்றும் அறிவுரை கூறியும் எதுவும் நடக்கவில்லை. தாஸ் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால் நிகிதா மனவேதனையில் இருந்தார்.

சம்பவத்தன்றும் தாஸ் மதுகுடித்து வீட்டுக்கு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நிகிதா கணவர் கண்முன்பே தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் உடல் கருகினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாஸ் காதல் மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவரும் உடல் கருகி துடித்தார். அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தாஸ் மற்றும் அவரது மனைவி நிகிதா ஆகிய 2 பேரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நிகிதா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் தாசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாலிபரின் குடிப்பழக்கத்தால் அவரது குடும்பமே சிதைந்து போனது.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com