என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மதுராந்தகம் ஏரி நிரம்பி வழிவதால் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினரும் வருவாய்த்துறையினரும் தண்டோரா மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தின் மிக பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி 23.3 அடி உயரம் கொண்டது. 696 மில்லியன் கனஅடி கொள்ளளவை கொண்ட இந்த ஏரி 2 ஆயிரத்து 411 ஏக்கர் பரப்பளவு உடையது. ஏரியில் 110 தானியங்கி கதவுகள் உள்ளன. ஏரியில் வினாடிக்கு 237 அடி கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

    மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏரி நிரம்பி வழிவதாலும், மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும் கிளியாற்று கரையோரம் உள்ள கிராமங்களான கத்திரி சேரி. விழுதமங்கலம், முள்ளி, முன்னூத்தி குப்பம், வளர்பிறை, வீராணம், குன்னம்,தச்சூர், குன்னத்தூர், தோட்டநாவல், மேட்டு காலனி, கே.கே. புதூர், பூண்டி நகர், ஈசூர், மலைப்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்ளை சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறையினரும் வருவாய்த்துறையினரும் தண்டோரா மூலம் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும் ஏரிக்கரையில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குமார் கூறுகையில்:-

    ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஏரியை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உணவு வழங்கி குறைகளை கேட்டறிந்தார்.
    சோழிங்கநல்லூர்:

    நிவர் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக தமிழகத்தின் பல இடங்கள் பாதிக்கப்பட்டன. சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. செம்மஞ்சேரி ஜவஹர் நகர், எழில் முகநகர் மற்றும் சுனாமி குடியிருப்பில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு குடியிருந்த மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். சுனாமி குடியிருப்பு வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவானது.

    இதையடுத்து நேற்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். மேலும் அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். செம்மஞ்சேரி பகுதியில் மழை நீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க தே.மு.தி.க. சார்பில் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார். அப்போது தென்சென்னை மாவட்ட செயலாளர் பிரபாகரன் உடன் இருந்தார்.
    பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் அணைக்கட்டுக்கு தொடர்ந்து மழைநீர் வந்து கொண்டிருப்பதால் நிரம்பி வழிகிறது.
    பொன்னேரி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி மலையில் உள்ள கருனேத் நகரில் ஆரணியாறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு ஆந்திராவில் 65 கிலோ மீட்டரும் தமிழகத்தில் சுருட்டப்பள்ளி கிராமத்தின் வழியாக ஆரணி, பொன்னேரி, லட்சுமிபுரம், ரெட்டிபாளையம், தத்தைமஞ்சி வழியாக சென்று ஆண்டார்மடம் கிராமத்தில் இரு கிளைகளாக பிரிந்து பழவேற்காடு ஏரியில் கலக்கிறது. மேலும் ஆரணியாறு தமிழகத்தில் 763 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதில் 174 ஏரிகளை நிரப்பும் திறன் கொண்டதாக விளங்கி 4 அணைக்கட்டுகள் மூலம் மழை நீர் தேக்கி வைக்கப்படும்.

    கடந்த ஒரு சில நாட்களாக பெய்து வரும் மழையால் பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டில் நீர் நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம் அணைக் கட்டுக்கு சென்று கொண்டிருக்கிறது.

    இது குறித்து பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் முருகன் கூறுகையில்:-

    லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருபுறமும் உள்ள மதகுகள் சீரமைக்கப்பட்டதால் மழை நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இடதுபுற மதகு வழியாக செல்லும் நீர் மடிமைகண்டிகை, ஆசானபுதூர், மெதூர், வஞ்சிவாக்கம் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் வலது புற மதகு வழியாக செல்லும் நீர் ஆலாடு, தேவதானம், காணியம்பாக்கம், வேளூர், காட்டூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்புகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது உதவி பொறியாளர் ஜெயகுரு உடன் இருந்தார்.
    துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு ரூ.90 லட்சம் தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில், பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த திருச்சியை சேர்ந்த நாசர் அலி சிராஜுதீன் (வயது 36), பாபு பதுஷா (20), சென்னையை சேர்ந்த முகமது கடாபி (49) ஆகிய 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில், 3 பேரும் அணிந்து இருந்த உள்ளாடைகளில் ரகசிய அறை அமைத்து, தங்கத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடமும் இருந்து ரூ.90 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 780 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரத்தில் கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஓரிக்கை இந்திரா நகரை சேர்ந்தவர் இளவரசன் (வயது 45). இவர் சொந்தமாக லாரி வாங்கி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவருத்தத்தில் இருந்த இளவரசன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டின் மாடியில் படுக்க சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் இளவரசன் வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது, இளவரசன் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    3 பேர் சுட்டுக்கொல்லப் பட்ட வழக்கில், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கொடுத்ததாக ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பூர்: 

    சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவன அதிபர் தலில் சந்த்(வயது 74), அவருடைய மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல்குமார்(40) ஆகியோர் கடந்த 11-ந் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பாக ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், அவருடைய நண்பர்களான விஜய்உத்தம், ரவீந்திரநாத்கர் ஆகிய 3 பேரை ஏற்கனவே தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரர் விலாஸ், கூட்டாளி ராஜீவ்ஷிண்டே ஆகியோர் டெல்லி ஆக்ராவில் கைது செய்யப்பட்டு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையில் கைதான கைலாஷ், விஜய் உத்தம், ரவீந்திரநாத்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அப்போது கைலாஷ், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை தனது நண்பரான ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்து இருந்தார்.

    இதையடுத்து தனிப்படை போலீசார், ஜெய்ப்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ராஜீவ் துப்பேர் (58) என்பவரை சென்னை யானைக்கவுனி போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரித்தனர். தனது மனைவியின் பெயரில் இருந்த காரை, கைலாசுக்கு முறையாக விற்பனை செய்தேன். அந்த காரில் தனது துப்பாக்கி இருந்தது. தானாக துப்பாக்கியை அவரிடம் கொடுக்கவில்லை. அந்த துப்பாக்கிக்கு முறையாக உரிமம் பெற்று உள்ளதாகவும் கூறினார்.

    ஆனால் கைலாஷ், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியதால், விமானப்படை அதிகாரி தனது துப்பாக்கியை பாதுகாப்புக்கு தனக்கு கொடுத்ததாகவும், அத்துடன் துப்பாக்கியால் சுடுவதற்கும் தனக்கு பயிற்சி கொடுத்ததாகவும் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

    முன்னுக்குப்பின் முரணான இந்த தகவல்களால் தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், முறையான உரிமம் வைத்திருக்கும் துப்பாக்கியை சட்டவிரோதமாக நண்பருக்கு கொடுத்ததாக கூறி ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ராஜீவ் துப்பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுகவினர் காஞ்சீபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காஞ்சீபுரம் காந்தி ரோடு தேரடி பகுதியில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. நகர இளைஞரணி சார்பில் இளைஞரணி அமைப்பாளர் அர்ஜுன், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் திரளான தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    உத்திரமேரூரில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மணி தலைமையில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பி.வி.நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருடைய மனைவி ரமணி (வயது 72). இவர், மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு ராம்பிரபு (32) என்ற மகனும், பிரியா என்ற மகளும் உள்ளனர்.

    தட்சிணாமூர்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ரமணி, திருமணம் ஆகாத தனது மகன் ராம்பிரபுவுடன் வசித்து வந்தார்.

    சாப்ட்வேர் என்ஜினீயரான ராம்பிரபு, சென்னையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஓராண்டுக்கு முன்பு ராம்பிரபு, தென் அமெரிக்காவில் பணியாற்றினார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன்பிறகு சென்னை திரும்பி வந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். வேளச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் இருதயத்தில் இருந்த கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ராம்பிரபு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரமணி, தனது மகன் இறந்த துக்கம் தாங்காமல் வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்த ரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பழவந்தாங்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    காஞ்சிபுரத்தில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த உடற்கல்வி ஆசிரியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ரெட்டிபேட்டை தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவர் காஞ்சீபுரத்தை அடுத்த ஒரு பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. 

    இதில் மனமுடைந்த பாஸ்கர் வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த பாஸ்கருக்கு மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இதுகுறித்து உயிரிழந்த பாஸ்கரின் தந்தை தேவராஜன் சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அருண் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    தலை தீபாவளி கொண்டாடிவிட்டு சென்னை வந்த 2 நாளில், வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
    ஆலந்தூர்:

    சென்னை மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கம் ராம்நகர் 11-வது தெருவில் வசித்து வந்தவர் வேங்கை ராஜன் (வயது 27). இவரது சொந்த ஊர் மதுரை தெப்பக்குளம் ஆகும். இவர், ஆஸ்பத்திரிக்கு தேவையான உபகரணங்களை தயாரித்து வினியோகம் செய்யும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருடன் மதுரையைச் சேர்ந்த நண்பர்கள் 13 பேர் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். வேங்கைராஜனுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. மனைவியுடன் தலை தீபாவளியை கொண்டாடிவிட்டு மதுரையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.

    நேற்று அதிகாலை தன்னுடன் தங்கியிருக்கும் அருண் என்ற நண்பர் கதவை தட்டினார். இதனால் தூக்க கலக்கத்தில் வெளியே வந்த வேங்கைராஜன் கதவை திறந்து விட்டார். அதன்பிறகு காலையில் மற்றொரு நண்பரான குமரேசன், ஊரில் இருந்து திரும்பி வந்தார்.

    அப்போது வீட்டின் அருகில் உள்ள காலி மைதானத்தில் வேங்கை ராஜன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மடிப்பாக்கம் போலீசார், வேங்கை ராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில், தூக்க கலக்கத்தில் வந்து கதவை திறந்த வேங்கை ராஜன், வீட்டின் 2-வது மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தது தெரிந்தது. இதுபற்றி மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆன்லைன் சூதாட்டத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை பல்வேறு மக்கள் தங்களது வாழ்க்கையின் வளர்ச்சி பாதைக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.

    ஆனால் சிலரது அதீத ஆசையால் திரைப்படங்களைப் பார்த்து உடனடியாக பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

    இதன் விளைவாக பல்வேறு தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டால் அமைதியாக இருக்கிறார்கள் என்ற நோக்கத்தில் கொடுக்கிறார்கள். அவர்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பதில்லை. காஞ்சீபுரம் போலீஸ் துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் ஆன்லைன் சூதாட்டங்களை தவிர்க்கவேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஒரகடம் அருகே பெய்து வரும் தொடர் மழையால் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் வல்லக்கோட்டை எறையூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த எறையூர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தேவனேரி ஏரி உள்ளது. அந்த பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்த ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் எறையூர் பகுதியில் இருந்து வல்லக்கோட்டை பகுதிக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

    மேலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர். பொதுப் பணித்துறை அதிகாரிகள் தேவனேரி ஏரி பகுதியில் கரைகள் பலமாக உள்ளனவா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×