search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் சூதாட்டம்"

    • தமிழ்நாடு மீண்டும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறி விட்டது.
    • ஆன்லைன் சூதாட்டங்களில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டுமானால் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த மனைவியும், 5 வயது குழந்தையும் ஆதரவற்றவர்களாகி நிற்கின்றனர்.

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டங்கள் எந்தத் தடையும் இல்லாமல் தொடருகின்றன. இடையில் சில காலம் ஆன்லைன் சூதாட்ட அரக்கனிடமிருந்து தப்பியிருந்த இளைஞர்கள் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி முதலில் பணத்தையும், பின்னர் விலைமதிப்பற்ற உயிரையும் இழந்து வருகின்றனர்.

    ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை. ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு நான்கு மாதங்களாகியும், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் இன்னும் ஆன்லைன் ரம்மிக்கு அரசால் தடை பெற முடியவில்லை. அதனால் தமிழ்நாடு மீண்டும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறி விட்டது.

    ஆன்லைன் சூதாட்டங்களில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டுமானால் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

    தற்கொலை செய்து கொண்ட இளைஞர் மாம்பட்டி கண்ணனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாயை கொன்று, அவரது உடலை யமுனை ஆற்றின் கரையில் அப்புறப்படுத்த முயன்றுள்ளார் ஹிமான்சு
    • ஹிமான்சுவினுடைய தாயின் உடலை யமுனை ஆற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்தனர்.

    உத்தர பிரதேச மாநிலம் படேக்பூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் ₹4 லட்சம் வரை கடன் வாங்கிய ஹிமான்சு என்ற நபர், காப்பீடு பணம் கிடைக்கும் என்பதால் தாயைக் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

    ஹிமான்சு என்ற நபர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். குறிப்பாக அவர், ஸுபி (Zupee) என்ற செயலியில் சூதாட்டம் விளையாடி தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளார். இதன் விளைவாக நண்பர்களிடம் அவர் 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதன்பின் நண்பர்கள், இவரிடம் கடன் தொகையை திருப்பி தரும்படி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், அவரது தந்தை பக்கத்தில் உள்ள அனுமான் கோயிலில் வழிபாடு நடத்த சென்றிருந்த நேரத்தில், தாயை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலை யமுனை ஆற்றின் கரையில் அப்புறப்படுத்த முயன்றுள்ளார் ஹிமான்சு.

    இது தொடர்பாக ஹிமான்சுவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம், "தனது உறவினர் வீட்டில் நகை திருடிய ஹிமான்சு, அதன் மூலம் தனது பெற்றோருக்கு ₹50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வாங்கியதாகவும், அதனை பெறுவதற்காக தாயை கொலை செய்து அவரது உடலை யமுனை ஆற்றில் வீசியதாகவும்" அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி 21-ம் தேதி ஹிமான்சுவினுடைய தாயின் உடலை யமுனை ஆற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்தனர். 

    • நான் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் எனக்கு கடன் தொல்லை ஏற்பட்டது.
    • பரமத்திவேலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் குச்சிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (70).

    இவர் மோகனூர் சர்க்கரை ஆலையில் காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நல்லம்மாள் (என்கிற) சின்னபிள்ளை (65).

    இவர்களுக்கு கீதா, கோமதி, யமுனா என்ற 3 மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் சண்முகமும் அவரது மனைவி நல்லம்மாளும் குச்சிக்காடு தோட்டத்தில் தனியாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 11-ந் தேதி நள்ளிரவு சண்முகத்தின் வீட்டிற்கு முன்பு இருந்த மரத்தில் ஏறிய மர்மநபர் வீட்டின் மாடியில் குதித்து அங்கிருந்த படிகட்டு வழியாக வீட்டினுள் நுழைந்தார்.

    அப்போது அங்கு தூங்கிக்கொண்டு இருந்த நல்லம்மாள் மற்றும் அவரது கணவர் சண்முகம் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி கடப்பாரையால் தாக்கினார். பின்னர் அந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்த பூட்டை எடுத்து வெளிக்கதவை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது வீட்டின் வெளிக்கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர்.

    அப்போது வீட்டிற்குள் தம்பதியினர் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு இறந்து கிடந்த நல்லம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகத்தை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் இரட்டை கொலை, கொள்ளை வழக்கு பதிவு செய்தனர்.

    இதனிடையே நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் 2 ஏ.டி.எஸ்.பி மற்றும் 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று சந்தேகத்தின்பேரில் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் ஜனார்த்தனன் (32) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வரும் ஜனார்த்தனன் கடந்த அக்டோபர் மாதம் 11-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியினரை தாக்கி கொலை செய்துவிட்டு நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் எனக்கு கடன் தொல்லை ஏற்பட்டது. இதனால் எனது பண தேவைக்காக குச்சிக்காட்டு பகுதியில் தனியாக வசிக்கும் வயதான தம்பதி வீட்டில் திருட திட்டமிட்டேன்.

    அதன்படி அக்டோபர் 11-ந் தேதி நள்ளிரவில் சண்முகத்தின் வீட்டில் திருட முயன்றபோது நல்லம்மாள் திடீரென விழித்து என்னை பார்த்துவிட்டார். நல்லம்மாளுக்கு ஏற்கனவே என்னை நன்றாக அடையாளம் தெரியும்.

    இதனால் என்னை காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற பயத்திலேயே அவரை அங்கிருந்த கடப்பாரையால் தாக்கினேன். அவரது சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரது கணவர் சண்முகத்தையும் கடப்பாரையால் தாக்கிவிட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை திருடினேன்.

    பின்னர் கத்தி மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கடப்பாரை, சுத்தி ஆகியவற்றை அருகில் இருந்த கிணற்றில் தூக்கி போட்டுவிட்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து நேற்று பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஜனார்த்தனை ஆஜர்படுத்திய போலீசார் நீதிபதியின் உத்தரவின் பேரில் 15 நாள் நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    முன்னதாக கொலை நடந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற போலீசாரிடம் கொலை நடந்த விதம் குறித்து ஜனார்த்தனன் நடித்து காண்பித்தார். கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட 3 ஆயுதங்களையும் அருகில் இருந்த கிணற்றில் போலீசார் தேடி வருகின்றனர்.

    வயதான தம்பதி இரட்டை கொலை, கொள்ளை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரரே ஈடுபட்ட சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும ஏற்படுத்தி உள்ளது.

    • ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் தற்கொலை.
    • வட்டிக்கு பணம் வாங்கியும் நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்தில் மனைவி, மகன், மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்ட ஆயுதப்படை காவலர்.

    தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர் நரேஷ், சித்தபேட்டை ஆட்சியரின் மெய்க்காவலராக பணியாற்றி வந்தவர்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான நரேஷ் தனது மொத்த சம்பளத்தையும் பல மாதங்களாக சூதாட்டத்தில் இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இழந்த பணத்தை பிடிக்கலாம் என்ற ஆர்வத்தில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி நரேஷ் சூதாடியுள்ளார்

    வட்டிக்கு பணம் வாங்கியும் நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.

    இந்நிலையில், மன விரக்தியில் இருந்து வந்த நரேஷ் மனைவி குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே வங்கி பணம் ரூ.42 லட்சம் மோசடி செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சுரேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக மதுரை மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சுரேஷ் தான் வேலை பார்க்கும் வங்கியிலேயே தனது மனைவி மற்றும் சகோதரி பெயரில் போலியான நகைகளை அடகு வைத்துள்ளார். மேலும் அதன் மூலம் ரூ.8 லட்சத்து 91 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இந்த உண்மை வங்கியில் நடைபெற்ற தணிக்கை பணியின் போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    அதேபோல் ஏ.டி.எம். எந்திரங்களில் வங்கி சார்பில் வைக்க வேண்டிய ரூ.39 லட்சத்து 19 ஆயிரத்தையும் தனது மனைவி மற்றும் சகோதரியின் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.

    அவ்வாறு கிடைத்த பணத்தை கொண்டு சுரேஷ், ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுரேஷ் மீதும் அவருக்கு உதவியதாக லட்சுமணன், சியர்ல தினா சுமதி ஆகிய 3 பேர் மீதும் கிளை மேலாளர் பெருகினியன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் சுரேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே வங்கி பணம் ரூ.42 லட்சம் மோசடி செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எங்களைப் பொறுத்தவரை ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது.
    • பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவதில்லை.

    புதுக்கோட்டை:

    ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமசோதா நிறைவேற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அதில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது. ஆனால், திறமை சார்ந்த ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதேநேரம், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லும். மேலும் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகியவற்றை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆன்லைன் தடைச்சட்டத்திற்கு அரசாங்கம் சட்டம் ஏற்றுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவாக சொல்லி உள்ளது. ஆனால் தமிழ்நாடு கவர்னர் அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.

    நாங்கள் அவரிடம் எங்களுக்கு உரிமை உள்ளது என்பதை எடுத்துக் கூறியிருந்தோம். இந்நிலையில் இன்று நீதிமன்றம் நாங்கள் கூறியதைப் போல் அரசு சட்டம் ஏற்றுவதற்கு உரிமை உள்ளது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

    இணைய வழி சூதாட்டம் ஒழுங்குமுறை படுத்துதல் தடை செய்தல் என்பதுதான் அந்த சட்டத்திற்கு பெயர். ஒழுங்குமுறைபடுத்துவது என்பது எந்தெந்த விளையாட்டுகளை எப்படி ஒழுங்குமுறைபடுத்த வேண்டும் அதற்கான குழுக்கள் அமைக்க வேண்டும் அந்த குழுக்களுக்கு மனுக்கள் போட்டு பரிசீலினை செய்து ஒழுங்குமுறைப்படுத்தி அந்த இணைய வழி விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும் என்பது முதலாவது கட்டம்.

    இரண்டாவது கட்டம் ரம்மி மற்றும் போகர். இந்த 2 விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும். ஏனென்றால் அதில் பெரும்பாலான மக்கள் பணத்தை இழந்து தற்கொலைக்கு ஆளாகிறார்கள். அதனால் போகர், ரம்மி இரண்டையும் தடை செய்ய வேண்டும் என்பதற்காக தனி பட்டியலில் அதை தந்துள்ளோம்.

    எங்களைப் பொறுத்தவரை ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. ரம்மி என்பது திறமைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் ரம்மியில் திறமைக்கு வாய்ப்பில்லை. அது ஒரு ப்ரோக்ராம். விளையாட்டை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி அமைக்கலாம் அது திறமை அடிப்படையில் வராது. அதனால் அதனை தடை செய்ய வேண்டும் என்பது எங்களின் கருத்து.

    ஆனால் நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்றவாறு அந்த வாதத்தை முன்வைக்கவில்லையோ என்று நாங்கள் நினைக்கிறோமே தவிர தீர்ப்பை பற்றி எதுவும் சொல்ல முடியாது, எங்களது வழக்கறிஞர்கள் வாதத்தை சிறப்பாக முன் வைத்திருந்தாலும் கூட நீதிபதி அந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அவரை திருப்திபடுத்தும் வகையிலும் கருத்துக்களை எடுத்து வைக்கவில்லையோ என்ற எண்ணுவதைப் போல ஒரு தோற்றம்தான் வருகிறது தவிர வேறு எதுவும் கிடையாது. தீர்ப்புகளைப் பற்றி விமர்சிக்கும் உரிமை எனக்கு கிடையாது.

    இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்டத்துறை பரிசீலனை செய்யும். மேல்முறையீடு தேவை என்று சொன்னால் அதன்படி மேல்முறையீடு செய்வோம். சட்டத்துறை அரசு வழக்கறிஞர்களுடைய கருத்துக்களைப் பெற்று அடுத்த நடவடிக்கை தொடரும்.

    முறைப்படுத்துவது சட்டத்திலே உள்ளது கமிட்டி அமைக்கின்றோம் அந்த விளையாட்டுகளை ஒழுங்குமுறை படுத்துகின்றோம். சட்டப்படி ஒழுங்குமுறை படுத்துகின்ற விளையாட்டுகளை முறைப்படுத்தி நடத்தப்படும். ரம்மிக்கும் போகருக்கும் வயது வரம்பு கால வரம்பு எல்லாம் நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி எந்த அளவுக்கு பரிசீலனை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பரிசீலனை செய்து எந்த அடிப்படையில் அவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அதனை நாங்கள் செய்வோம்.

    அரசியலில் பா.ஜ.க. கூறும் கருத்துக்களை எல்லாம் தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை, இந்த சமய அறநிலையத்துறை என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயிலுடைய சொத்துக்களை பாதுகாப்பதற்கும் அதை நிர்வகிக்க அறக்கட்டளை நியமிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பையே எடுத்து விடுவோம் என்று சொன்னார்கள் என்றால் எந்த அடிப்படையில் அவர்கள் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.

    எங்களை பொறுத்தவரை பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அதனால் இந்து சமய அறநிலையத் துறையை அவர்கள் எடுக்கப் போவதுமில்லை. அவர்கள் போற போக்கில் எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு பா.ஜ.க.விற்கு உரிமை உண்டு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் அவர்கள் கூறலாம். சுதந்திர நாட்டில் கருத்து சொல்ல உரிமை உண்டு.

    அண்ணாமலை தன்னை பற்றி பிறர் பேச வேண்டும் என்பதற்காக விமர்சனங்களை அவர் முன் வைக்கின்றார். தன்னை பிரபலப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தவிர வேறு ஏதும் இல்லை.

    ஒருத்தர் மீது பழியை சொல்லிவிட்டு போனால் அவர்கள் அதற்கு பதில் கூறுவார்கள் அதன் மூலம் தனக்கு விளம்பரம் கிடைக்கும் தன்னுடைய எஜமானர்களை திருப்திபடுத்த முடியும் என்று அண்ணாமலை எண்ணுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இணையவழி சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஏப்ரல் 10-ந் தேதி ஒப்புதல் அளித்தார்.
    • மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை ஒழுங்குபடுத்துதல் சட்டம் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை கடந்த மார்ச் 6-ந் தேதி தமிழக அரசுக்கு கவர்னர் திருப்பி அனுப்பினார். கடந்த மார்ச் 23-ந் தேதி சட்டப்பேரவையில் மசோதா மீண்டும் நிறை வேற்றப்பட்டு மறுநாளே கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இணையவழி சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஏப்ரல் 10-ந் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.

    இந்த சட்டத்தின்படி இணைய விளையாட்டில் ஈடுபடுவோருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5,000 அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இணைய வழி விளையாட்டுக்காக விளம்பரம் செய்வோருக்கு ஓராண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

    இதுபோன்ற விளையாட்டுகளை அளிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இவர்கள் மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    • தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது.
    • இதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்தன.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி, ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்தன.

    இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு, அதிர்ஷ்டம் அடிப்படையிலான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்தது செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.

    மேலும், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    • கணேசன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
    • ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் வரை பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கோவிந்தபாடியை சேர்ந்தவர் கணேசன் (49). இவருக்கு சிவகாமி (45) என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். கணேசன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் ஓசூரில் இருந்து பஸ் மூலம் மேட்டூர் வந்த கணேசன் சொந்த கிராமத்தில் உறவினர்களை சந்தித்து விட்டு நீர்தேக்க பகுதியான பண்ணவாடி காவிரி ஆற்றுக்கு நேற்று மாலை வந்தார். பின்னர் திடீரென காவிரி ஆற்றில் குதித்து விட்டார். இதனைக் கண்ட மீனவர்கள் உடனடியாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் கணேசனை தேடினர். நள்ளிரவு ஒரு மணி அளவில் கணேசன் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவிரி கரையில் இருந்த கணேசனின் உடைமைகளை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அதில் கணேசன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

    அந்த கடிதத்தில், ராஜேஷ் கண்ணா என்பவருக்கு ரூ.8 லட்சம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டும். கடனை அடைக்க ஓசூரில் உள்ள வீட்டை விற்பனை செய்து விடலாம் என மனைவியிடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் இறந்தவுடன் நான் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து வரும் பணத்தை கடன் வாங்கியவர்களிடம் தரவேண்டும். எனது வேலையை என்னுடைய 2-வது மகளுக்கு வழங்க வேண்டும் என எழுதி வைத்திருந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் கணேசன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கணேசனின் உறவினர்கள் கூறுகையில், ஆன்லைன் சூதாட்டத்தில் மோகம் கொண்ட கணேசன் வீட்டில் இருந்த தங்க நகைகளை விற்றும், உறவினர்களிடம் பணத்தை கடன் வாங்கியும் விளையாடினார். ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.30 லட்சம் வரை இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் வீட்டை விற்று கடனை அடைக்கலாம் என மனைவி சிவகாமியிடம் யோசனை தெரிவித்தார். இதற்கு மனைவி சம்மதம் தெரிவிக்காததால் கடனை கட்ட முடியாமல் மன உளைச்சலில் காவிரி ஆற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்தனர்.

    ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் வரை பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி மக்களவையில் பேசினார்.
    • மக்களவை நேற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

    மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் பேசினார். அமளிக்கு இடையே வன திருத்த சட்ட மசோதா, டெல்லி நிர்வாக மசோதா உள்பட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான இரு மசோதாக்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்பின், ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான இரு மசோதாக்களுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகள் மக்களவையைப் புறக்கணித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு பாதிப்பில்லாத வகையில் மசோதாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும்.
    • ஆன்லைனில் விளையாடுபவர்கள் தாங்கள் வென்ற முழு தொகையையும் தாங்களே எடுத்து கொள்ள முடியாது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழ்நாடு அரசாங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் விவரங்கள்:

    இந்த விளையாட்டு பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு. ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். இந்த விளையாட்டை வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர். விளையாடுவோரின் சுய அறிவிப்பு எப்படி சரி பார்க்கப்படுகிறது என இந்த நிறுவனங்கள் விளக்குவதில்லை. மேலும் விளையாடுபவர்கள் தாங்கள் வென்ற முழு தொகையையும் தாங்களே எடுத்து கொள்ள முடியாது. ஒரு பகுதியை ஆன்லைன் நிறுவனங்கள் எடுத்து கொள்ளும். நேரடியாக விளையாடும்போது முழு பணமும் கையில் கிடைக்கும். இவ்வாறு அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வழக்கில் அரசாங்கத்தின் சார்பாக அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரமும், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் ஆஜராகிறார்கள்.

    இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இம்மாதம் 14ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

    • ஆன்லைன் சூதாட்டக் கணக்கைத் திறப்பதற்காக தொழிலதிபருக்கு வாட்ஸ்அப்பில் இணைப்பைக் கொடுத்துள்ளார்.
    • தொழிலதிபர் சைபர் போலீசில் புகார் செய்தார்.

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆன்லைன் சூதாட்டம் மூலம் 58 கோடி ரூபாயை இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பா போலீசார் நடத்திய விசாரணையில், நான்கு கிலோ தங்க பிஸ்கட்களுடன் ரூ. 14 கோடி ரொக்கம் நேற்று மீட்கப்பட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    குற்றம் சாட்டப்பட்ட நபர் சோந்து நவ்ரதன் ஜெயின் என்கிற அனந்த் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, நாக்பூரிலிருந்து 160 கிமீ தொலைவில் உள்ள கோண்டியா நகரில் உள்ள ஆனந்தின் இல்லத்திற்கு போலீசார் விரைந்தனர். ஆனால் அதற்குள் ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். குற்றம்சாட்டப்பட்ட நபர் துபாய்க்கு தப்பிச் சென்றுவிட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுகுறிதது நாக்பூர் போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறுகையில்,"ஆன்லைன் சூதாட்டத்தை லாபம் ஈட்டும் வழியாக பயன்படுத்துவதற்காக தொழிலதிபரை ஆனந்த் முதலில் நம்பவைத்துள்ளார். ஆரம்பத்தில் தயங்கிய தொழிலதிபர், இறுதியில் ஆனந்தின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து, ஹவாலா வியாபாரி மூலம் ரூ. 8 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார்.

    பின்னர், ஆன்லைன் சூதாட்டக் கணக்கைத் திறப்பதற்காக தொழிலதிபருக்கு வாட்ஸ்அப்பில் இணைப்பைக் கொடுத்துள்ளார். தொழிலதிபர் கணக்கில் ரூ. 8 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதைக் காண்பித்தார். பின்னர், அவர் சூதாட்டத் தொடங்கினார்.

    ஆரம்ப வெற்றிக்குப் பிறகு, தொழிலதிபரின் அதிர்ஷ்டம் கடுமையான சரிவைச் சந்தித்தது. ஏனெனில் அவர் ரூ. 5 கோடியை வென்றபோது ரூ.58 கோடியை இழந்தார்.

    தொழிலதிபர் பணத்தை இழந்ததால் சந்தேகமடைந்து தனது பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் ஆனந்த் பணத்தை திரும்பி வழங்க மறுத்துள்ளார்.

    பின்னர், தொழிலதிபர் சைபர் போலீசில் புகார் செய்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் கோண்டியாவில் உள்ள ஆனந்தின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையின் விளைவாக ரூ. 14 கோடி ரொக்கம் மற்றும் நான்கு கிலோ தங்க பிஸ்கட்கள் உட்பட கணிசமான அளவு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×