என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஈஞ்சம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி கடந்த 31-ந்தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றபடி, மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் அந்தரத்தில் இருக்கும் வகையில் தூக்கியபடி சாகசம் செய்த காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பயணம் செய்தது, சென்னை தரமணி எம்.ஜி.ஆர். நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த விஜயன் (வயது 28) என்பது தெரியவந்தது. விஜயனை போலீசார் கைது செய்தனர். அவருடைய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
    புத்தாண்டை கொண்டாட சென்றபோது தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த முட்டுக்காடு கரிகட்டுகுப்பம் சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 21). மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருடைய நண்பர் நரேஷ் (25). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக முட்டுக்காட்டில் இருந்து சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், 2 பேரையும் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம் அடைந்த நரேஷ், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரத்தில் 4-ந்தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் துணைமின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள பாலியர்மேடு, திருகாலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், கே.வி.வேளியூர் துணை மின் நிலையங்களைச் சேர்ந்த கிராமங்களிலும் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும். இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.

    பெங்களூர், திருவனந்தபுரம், புவனேஸ்வர், கோவை உள்ளிட்ட 13 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து கனமழை கொட்டிதீர்த்தது. இதன் காரணமாக அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.

    இதனால் விமான பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் சரியான நேரத்திற்கு விமான நிலையம் வர முடியவில்லை. பயணிகள் மட்டுமின்றி விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான பொறியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் சரியான நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

    நேற்று இரவு 7 மணிமுதல் இன்று அதிகாலை 1.30 மணி வரை 20 விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றது.

    சென்னையில் இருந்து இலங்கை செல்லும் 4 விமானங்கள், துபாய், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய 7 சர்வதேச விமானங்களும், டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், புவனேஸ்வர், கோவை உள்ளிட்ட 13 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஆனால் சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் வந்தன.
    கல்பாக்கம் அருகே இளம்பெண் வாலிபர் பிணம் அருகருகில் கிடந்ததால் காதல் ஜோடியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்றின் காரைத்திட்டு பகுதியில் உடல் அழுகிய நிலையில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் இறந்து கிடந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சதுரங்கப்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருக்கழுகுன்றம் தீயணைப்பு படையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உடல்கள் இரண்டும் அருகருகில் கிடந்ததால் காதல் ஜோடியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீபத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்று நட திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கீழ்கதிர்ப்பூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மரக்கன்று நட்டு இதனை தொடங்கி வைத்தார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாபெரும் மரம் வளர்ப்பு மூலம் ஊரக பகுதிகளில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக் கூடிய வகையில் பசுமை பகுதியினை மேம்படுத்தும் நோக்கிலும், பழம்தரும் மரங்கள், தீவனம் சார்ந்த மரங்கள் மற்றும் பொருளாதார அடிப்படையில் பயன் தரும் மரங்கள் ஆகியவற்றை நட திட்டமிடப்பட்டது.

    அதன்படி ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்று நட திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கீழ்கதிர்ப்பூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மரக்கன்று நட்டு இதனை தொடங்கி வைத்தார்.

    காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 23 ஆயிரத்து 210 மரக்கன்றுகளும், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 20 ஆயிரத்து 26 மரக்கன்றுகளும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒனறியத்திற்குட்பட்ட பகுதிகளில் 15 ஆயிரத்து 493 மரக்கன்றுகளும், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பகுதிகளில் 10 ஆயிரத்து 797 மரக்கன்றுகளும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகிளில் 30 ஆயிரத்து 240 மரக்கன்றுகளும் நடப்பட்டது.

    இதில் நாவல் 20 ஆயிரத்து 430, புளியன் 15 ஆயிரத்து 250, வேம்பு 8 ஆயிரத்து 680, பூவரசன் 8 ஆயிரத்து 560, நெல்லி 6 ஆயிரத்து 140, புங்கன் 6 ஆயிரத்து 100, கொய்யா 3 ஆயிரத்து 500, பொன்னாரை 3 ஆயிரம், இலுப்பை 2 ஆயிரத்து 160, மாதுளை 2 ஆயிரத்து 90, குலமோகர் 1,580, நொச்சி 1,250, காட்டுவா 1,100, பாதாம் 1,090, வாகை 1,010, பலா 1000, தகரை 1,000 எண்ணிக்கையில் நடப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சியில் எழிலரசன் எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    காஞ்சிபுரம் அருகே 22 டன் ரேஷன் அரிசி சிக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த சிறுகாவேரிபாக்கம் சுப்புரத்தினம் நகர் பகுதியில் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது 2 மினி லாரிகளில் இருந்து ஒரு சரக்கு லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டிருப்பதை பார்வையிட்டார்.

    அதிகாரி வருவதை கண்டதும் டிரைவர்கள் அங்கிருந்து மினிலாரியில் தப்பிச்சென்று வி்ட்டனர்.

    அங்கு நின்றுகொண்டிருந்த லாரியை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி என்பதும் வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

    இதனையடுத்து 2 லாரிகளை பறிமுதல் செய்த குடிமை பொருள் குற்ற புலனாய்வு போலீசார் தப்பிச்சென்ற லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சீதனம்சேரி அருகே சாலவாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 50 கிலோ அரிசி மூட்டைகள் 50 இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் இருந்த 2 பேரிடம் இது குறித்து விசாரித்தபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.

    மினி லாரியில் இருந்தவர்கள் காஞ்சீபுரம் வணிகர் தெருவை சேர்ந்த முஜாகிம் (வயது28), வடிவேல் (29) என்பது தெரியவந்தது அவர்களை கைது செய்த போலீசார் லாரியையும் அரிசி மூட்டையையும் குடிமையியல் குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    டி.ஆர்.ஐ. அதிகாரிகள் சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதோடு டி.ஆர்.ஐ. மற்றும் சுங்கத்துறையினா இணைந்து சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமான பயணிகளை, குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளை சோதனை செய்தனர், மும்பையை சேர்ந்த 35 வயது ஆண் பயணிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரண்பாடாக தகவல் அளித்தார்.

    அவர் ஆப்பிரிக்கா நாடான காங்கோவிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்திருந்தது தெரியவந்தது.

    அந்த பயணியை தனி அறையில் வைத்து சோதனை செய்தனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 3 பாலிதீன் கவர்களை எடுத்து பிரித்து பார்த்தனர்.

    அதனுள் பட்டை தீட்டப்படாத வைரக் கற்கள் 717.95 கேரட் இருந்ததை கண்டுப்பிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.10.88 லட்சம் ஆகும்.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம் அரசு அதிகாரி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உறவினர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாமல்லன் நகர் அருகே உள்ள மாருதி நகரில் வசித்து வருபவர் மேகநாதன். இவர் உள்ளாட்சி நிதித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 23-ந்தேதி இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் 80 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளை நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் கொள்ளையில் ஈடுபட்டது காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் பகுதியை சேர்ந்த உறவினரான சந்தான கிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள், சாலவாக்கத்தை சேர்ந்த கவுதம், சிவக்குமார் என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 44 பவுன் நகை, 31 கிராம் வெள்ளி, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டில் பதுக்கிய 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி உள்ள வெள்ளாளர் தெருவில் ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கள் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து அங்கு சென்ற வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தனி வருவாய் அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் அந்த பகுதியில் ஒரு வீட்டின் பின்புறத்தில் சென்றனர் அப்போது அங்கே நின்று கொண்டிருந்த 4 பேர் அதிகாரிகள் வருவதை அறிந்து தப்பி ஓடிவிட்டனர்

    அங்கு சோதனை செய்த போது பிறகு 2 டன் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைப்பட்டு இருந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

    ரே‌ஷன் அரிசி பதுக்கல் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் அருகே குண்டர் சட்டத்தில் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் மணிமங்கலம் மற்றும் ஒரகடம் போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களான குன்றத்தூர் தாலுகா, நாட்டரசன்பட்டு கிராமத்தை சேர்ந்த வாசு என்ற வாசுதேவன் (வயது 21), பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வசந்த் என்ற ஷார்ப் வசந்த் (21), வட்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (23) ஆகியோர் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால், குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்ற மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி 3 பேரை ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    உத்திரமேரூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சிறுதாமூர் கிராமத்தில் தனியார் கல்குவாரி செயல்படுகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று காலை 11 மணியளவில் மதுராந்தகத்தை அடுத்த வேடவாக்கம் கிராமத்தை சேர்ந்த நந்தகோபால் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டர் மூலம் அங்கு துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் சிறுதாமூர் கிராமத்தை சேர்ந்த அம்புரோஸ் (வயது 48) என்பவர் வேலை செய்துகொண்டிருந்தார்.

    திடீரென டிராக்டர் 10 அடி உயரத்தில் இருந்து தலை குப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் இருந்த அம்புரோஸ், நந்தகோபால் இருவரும் டிராக்டரின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அங்கு இருந்தவர்கள் அம்புரோசை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நந்தகோபால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயவேல் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ×