என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    நந்தம்பாக்கம் அருகே குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
    பூந்தமல்லி:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுடர்விழி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து ஆத்திரம் அடைந்த கண்ணன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கினார். இதை பார்த்த அவரது மனைவி சுடர்விழி தூக்குப்போட்டு கொண்டார். மகன் மற்றும் மகளின் அலறல் சத்தம் கேட்ட வீட்டில் இருந்த உறவினர்கள் வந்து பார்த்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுடர்விழி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இது குறித்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்க்க ஆன்ராய்டு போன் மூலம் பார்கோர்டு ஸ்கேன் செய்து ஆன்-லைனில் மட்டுமே டிக்கட் வழங்கும் முறையை தொல்லியல் துறையினர் இன்று முதல் நடைமுறைபடுத்தி உள்ளனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று பார்க்க வெளிநாட்டவருக்கு ரூ.600, உள்நாட்டவருக்கு ரூ.40 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா 2-வது அலையின்போது தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நுழைவு சீட்டுகள் ஆன்-லைனில் மட்டுமே வழங்கப்பட்டது.

    இதனால் ஆன்டிராய்டு போன் இல்லாதவர்களும், கிராமத்து சுற்றுலா பயணிகளும் டிக்கெட் எடுப்பதில் சிரமப்பட்டு வந்தனர். கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று குறையத் தொடங்கியது. ஆன்-லைன் டிக்கெட் நிறுத்தப்பட்டு கவுன்டரில் பணம் செலுத்தி டிக்கெட் வழங்கப்பட்டது.

    தற்போது ஒமைக்ரான், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மீண்டும் தொல்லியல்துறை இன்று முதல் புராதன சின்னங்களை பார்க்க ஆன்ராய்டு போன் மூலம் பார்கோர்டு ஸ்கேன் செய்து ஆன்-லைனில் மட்டுமே டிக்கட் வழங்கும் முறையை தொல்லியல் துறையினர் நடைமுறைபடுத்தி உள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே மது பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    திருவள்ளூர் மாவட்டம் திருமலையில் உள்ள மதுபான கிடங்கில் இருந்து மதுபாட்டில்களை லாரியில் ஏற்றி கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வினியோகம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. லாரி ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரிக்கரை அருகே சென்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரியின் பின்னால் அமர்ந்திருந்த மார்த்தாண்டம் என்ற வாலிபர் லாரியின் அடியில் சிக்கினார். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்க தொடர்ந்து போராடினர். முடியாததால் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரங்களை வரவழைத்து லாரி அடியில் சிக்கி உயிருக்கு போராடிய மார்த்தாண்டத்தை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் சாலையில் உடைந்து மது ஆறாக ஓடியது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5,898 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூச போடப்பட உள்ளது என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட அரசு முடிவு செய்து உள்ளது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு நாளை (10-ந் தேதி) முதல் செலுத்தப்பட இருக்கிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5,898 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூச போடப்பட உள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாளை (திங்கட்கிழமை) முதல் மேலும் ஒரு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி முன்கள மற்றும் சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 5898 பேர் உள்ளனர்.

    2-ம் தவணை தடுப்பூசி (கோவாக்சின் அல்லது கோவிட்ஷீல்டு) செலுத்திய மேற்கண்ட பயனாளிகள் 39 நாட்களுக்கு பிறகு இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம். எனவே நாளை நடைபெறும் முன்கள சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கான முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி பரிந்துரைக்கப்பட பயனாளிகசெலுத்தி கொண்டு கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோயிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை, பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கட்டுப்பாட்டு அறையை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கொரோனா தொடர்புடைய சந்தேகங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற தொலைப்பேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொடர்பான பொதுமக்களின் புகார்களை கண்காணிக்கும் எண் 044-27237107, 044-27237207, வீட்டில் தனிமைப்படுத்துபவர்களை கண்காணிக்கும் எண் 044-27237784, மருத்துவ ஆலோசனை வழங்கும் எண் 044-27237785, வாட்ஸ் ஆப் எண் 9345440662 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விழுப்புரத்தில் இருந்து சென்னை தாம்பரம் வரை வந்த பயணிகள் ரெயில் சக்கரம் முற்றிலும் இயங்காமல் பழுது காரணமாக நிறுத்தப்பட்டது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் விழுப்புரத்தில் இருந்து சென்னை தாம்பரம் வரை வந்த பயணிகள் ரெயில் சக்கரம் முற்றிலும் இயங்காமல் பழுது காரணமாக நிறுத்தப்பட்டது.

    இதனால் இன்று காலை தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தன. அதன் பின்னால் சென்னை நோக்கி வந்த நிஜாமுதீன் விரைவு ரெயிலில் பயணிகள் அனைவரும் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

    பழுதாகி நின்ற விழுப்புரம் பயணிகள் ரெயில் சக்கரத்தை சரி செய்யும் பணியில் ரெயில்வே துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பயணிகள் செக்-இன் நடைமுறையை இடையூறு இல்லாமலும், குறுக்கீடுகள் இல்லாமலும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பயணிகளுக்கு செக்-இன் நடைமுறையை பயணிகள் விரைவாக மேற்கொள்ள வசதியாக காமன் யூஸ் செல்ப் சர்வீஸ் என்ற புதிய திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. அதற்காக 8 புதிய எந்திரங்கள் சென்னை உள் நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையத்தின் உள்நாடு, சர்வதேச முனையங்களில் பயணிகள் புறப்பாடு பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. இதன்படி விமானங்களில் செல்ல வரும் பயணிகள், அவர்களின் போர்டிங் பாஸ்களை பெறும் போது, உடமைகளின் மேல் ஒட்டக்கூடிய “டேக்“ என்ற ஸ்டிக்கர்களை, விமானநிலையத்தில் உள்ள தானியங்கி எந்திரங்களில் பயணிகள் பெற்று அவர்களின் உடமைகளில் அவர்களே ஒட்டிக்கொள்ளலாம்.

    இதனால் பயணிகள் செக்-இன் கவுண்டரில் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும் பயணிகளின் நேரமும் சேமிக்கப்படும்.தங்களுடைய உடமைகளில், அந்தந்த பயணிகளே நேரடியாக ஸ்டிக்கரை ஒட்டுவதால், கவுண்டரில் தவறுதலாக மாற்றி ஒட்டுவது போன்றவைகள் தவிர்க்கப்படும்.

    பயணிகளின் உடமைகளில் சுயமாக பயணிகளே ஸ்டிக்கரை ஒட்டி, உடமைகளை விமானத்திற்கு அனுப்பும், பயணிகளின் பயண அனுபவத்தை அதிகரிக்கும் வகையிலான இந்த புதிய திட்டம் சென்னை விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையம் நவீனமயமாகி, செயல்பாட்டிற்கு வரும் போது, பயணிகள் தங்கள் உடமைகளில் அவர்களே ஸ்டிக்கா ஒட்டும் வசதி, முழுமையாக அமலுக்கு வரும். இதற்காக சென்னை உள்நாடு முனையம், சர்வதேச முனையம் ஆகியவற்றில் தலா 4 எந்திரங்கள் வீதம், 8 எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன.

    இந்த எந்திரங்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கைகள் அதிகரிப்பை பொறுத்து இந்த எந்திரங்கள் மேலும் அதிகரிக்கப்படும்.

    இதனால் பயணிகள் செக்-இன் நடைமுறையை இடையூறு இல்லாமலும், குறுக்கீடுகள் இல்லாமலும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 218 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 பேரூராட்சிகளில் 69 வாக்கு சாவடிகளும், குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளில் 97 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி 384 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 218 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 பேரூராட்சிகளில் 69 வாக்கு சாவடிகளும், குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளில் 97 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குசாவடிகளுக்கு தேவையான மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளுக்கு முதல் சீரற்ற மயமாக்கல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியால் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் நாராயணன், பேரூராட்சி உதவி இயக்குனர் வில்லியம் ஜெசுதாஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ராமாபுரம் அருகே புது மாப்பிள்ளை திடீர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    ராமாபுரம் ராயலா நகர் 1-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாலாஜி (28). சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு 9 மணி அளவில் டி.வி பார்த்து கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது திடீரென வாந்தி எடுத்த பாலாஜி மயங்கி கீழே விழுந்தார். அவரது மனைவி சுஜிதா மற்றும் பெற்றோர் பாலாஜியை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாலாஜிக்கு 4 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

     

    கொரோனா - ஒமைக்ரான் நோய் தொற்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை ‘வார்ரூம்’ பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா-ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

    மேலும் கொரோனா - ஒமைக்ரான் நோய் தொற்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை ‘வார்ரூம்’ பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்டுப்பாட்டு அறையில் அனைத்து துறை அலுவலர்களும் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். கொரோனா தொடர்புடைய சந்தேகங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்கு பொதுமக்கள் புகார்களை கண்காணிக்கும் எண்:- 044-27237107, 044-27237207, வீட்டில் தனிமைப்படுத்துபவர்களை கண்காணிக்கும் எண்:- 044- 2723 7784, மருத்துவ ஆலோசனை வழங்கும் எண்: 044-2723 7785, வாட்ஸ்- அப் எண்:- 9345440662 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் தயாரித்த போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் முதல் இடத்தை பிடித்தது.
    காஞ்சிபுரம்:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இன்றைய இளைய தலைமுறையினர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு சமூக அக்கறையுடன் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்பட போட்டியை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு இடையே ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த நிலையில் இப்போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் ‘மவுனம் கலைவோம்’ என்ற தலைப்பில் தயாரித்த குறும்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தில் போதைபொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

    4 நிமிடங்கள் 47 வினாடிகள் ஓடும் இந்த குறும்படத்தில், ‘போதை ஊசி விற்பனை கும்பலை பார்த்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் செல்லும் நபர், தன்னுடைய மகனே போதை ஊசிக்கு அடிமையாகி இருப்பதை கண்டு மனம் கதறுவது, கஞ்சா வாங்குவதற்காக கஞ்சா போதையில் 2 வாலிபர்கள் பெண்ணிடம் செயின் வழிப்பறியில் ஈடுபடும்போது, அந்த பெண் தலையில் அடிபட்டு உயிரிழப்பது, அபின் போதை பொருளை பயன்படுத்தும் 2 இளைஞர்கள் மாணவிகளை கடத்தி செல்வது போன்று தத்ரூபமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது ஒவ்வொரு மனிதனுக்குள் ஒரு மிருகத்தை உருவாக்குகிறது. இதுதான் பல குற்றங்களுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு போதைப்பொருள் முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே போதை பொருள்கள் விற்பனை தெரிந்திருந்தும் அமைதியாக இருந்தால், அவர்களும் துணை போவதாகத்தான் அர்த்தம். இப்போதும் அமைதியாக இருந்தால் நம் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் செய்யும் துரோகம் ஆகும்.

    எனவே போதைப்பொருட்களுக்கு எதிரான யுத்தத்தில் தமிழக போலீஸ்துறையை நண்பனாக ஏற்றுக்கொண்டு ஒத்துழைத்தால் தமிழகத்தில் போதையால் ஏற்படும் குற்றங்களை தடுக்கலாம் என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் படத்தில் உள்ளன.

    போதைப்பொருள் நுண்ணறிவு குற்றப்புலனாய்வு பிரிவின் 94984 10581 என்ற ‘ வாட்ஸ்-அப்’ எண்ணில் யார் போதை பொருட்களை பயன்படுத்தினார்கள்?, எங்கே கைப்பற்றினார்கள்? எப்போது விற்பனை செய்தார்கள்? என்ற தகவலை கொடுக்கலாம்.

    தகவல் கொடுப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும். நீங்கள் புகார் அனுப்பும் அதிகாரியாலே, உங்களுடைய பெயரையோ, போன் எண்ணையோ கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு பாதுகாப்பாக இந்த எண் உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே யாரும் பயப்படவோ, தயங்கவோ தேவையில்லை. அரசாங்கம் என்றைக்கும் உங்களுக்கு துணையாக நிற்கும். போதைப்பொருட்கள் விற்பனைக்கு எதிரான யுத்தத்தில் நாம் அனைவரும் கண்ணுக்கு தெரியாத போர் வீரர்கள்தான். எனவே இந்த போரை உடனடியாக தொடங்குவோம் என்று விழிப்புணர்வு தகவல்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் தயாரித்துள்ள இந்த குறும்படம் இளைய சமுதாயத்துக்கு பாடமாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
    காஞ்சிபுரம் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஞ்சிபுரம்:

    அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அருகே உள்ள சிறுகளத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி.

    இவர் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியில் வாகனங்களுக்கு வாட்டர்சர்வீஸ் நிறுவனம் நடத்த திட்டமிட்டு இருந்தார். இதற்காக இடமும் பார்த்து இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் வாட்டர் சர்வீசுக்காக தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்காக நேற்று இரவு சுந்தரமூர்த்தி பொன்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் தனது புதிய காரில் ஓரிக்கை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் அவர்கள் சென்னைக்கு சென்று பொருட்களை வாங்க திட்டமிட்டு இருந்தனர். இன்று அதிகாலை அவர்கள் ஓரிக்கையைச் சேர்ந்த டிரைவர் சரவணன் என்பவருடன் சென்னை நோக்கி காரில் புறப்பட்டு சென்றனர்.

    மானாமதி அருகே காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் வந்தபோது எதிரே மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்கள் சென்ற வேன் மீது பயங்கரமாக கார் மோதியது.

    இதில் வேன் முன் பகுதிக்குள் கார் சொருகிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் இருந்த சுந்தரமூர்த்தி, செல்வம், சரவணன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் வேனில் இருந்த பக்தர்கள் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    ஜே.சி.பி. எந்திரம் தகவல் அறிந்ததும் பெருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கார், வேனுக்குள் செருகி இருந்ததால் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம் கொண்டுவரப்பட்டு கார் அப்புறப்படுத்தப்பட்டது.

    மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அதிகாலை ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×