என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    வளசரவாக்கத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 33 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை வளசரவாக்கம் வேலன் நகர் 7வது தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (45) தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் இவரது மனைவி ரம்யா.

    தினேஷ்குமார் கடந்த வாரம் பணி நிமித்தமாக ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து ரம்யா வீட்டை பூட்டிவிட்டு ஆழ்வார் பேட்டையில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் தினேஷ்குமார் வீட்டிற்கு வந்த வேலைக்கார பெண் அம்சா வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி ரம்யாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரம்யா விரைந்து வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 33 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் கொள்ளையர்கள் சுருட்டி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    கோயில்களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப்படுவதுடன், பொதுமக்களும் தாம் அறிந்த தமிழ்மொழி மூலம் அர்ச்சனை செய்யப்படுவதை கேட்டு அகமகிழ்வார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டம் முதல்- அமைச்சரால் 03.08.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் உள்ள 47 முதுநிலை கோயில்களில், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கோயில்களில் “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டு, அதில் கோயில்களில், தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண், ஆகிய விவரங்கள் பத்தர்களுக்கு தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சங்க காலத்தில் பன்னிரு ஆழ்வார்களும், அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழ் மொழியிலேயே இறை வனைப் பாடிப்பரவினர். எனவே தாய் மொழியில் அர்ச்சனை செய்வதை ஊக்குவிக்கவும், அர்ச்சகர்கள் சொல்வதை பக்தர்கள் புரிந்து கொள்வதற்காகவும் போற்றி நூல்கள் உறுதுணையாக இருக்கும் என்பதாலும் தமிழில் போற்றி புத்தகங்கள் அச்சிடப்பட்டு கோயில்களுக்கு வழங்கப்படஉள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் கோயில்களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப்படுவதுடன், பொதுமக்களும் தாம் அறிந்த தமிழ்மொழி மூலம் அர்ச்சனை செய்யப்படுவதை கேட்டு அகமகிழ்வார்கள். எனவே அடுத்தக்கட்டமாக 536 கோயில்களில் “அன்னை தமிழில் அர்ச்சனை” செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் நகர் தேவராஜ சுவாமி கோயிலில் “அன்னைத் தமிழில் அர்ச்சனை” திட்டமானது செவ்வனே நடைமுறைப்படுத்தப்பட்டு பக்தர்களின் பேராதரவைப் பெற்று, அனைத்து பக்தர்களும், இறைவனின் திருப்புகழை அறியும் வண்ணம், பக்தி தமிழை மென்மேலும் வளர்த்திடும் சீரிய நோக்குடன் இத்திட்டமானது சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

    இதனால் கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும், இறைவனுக்கு, தங்களது தாய் மொழியாம் தமிழ் மொழியில், அர்ச்சனை செய்யப்படுவதை காது குளிரக் கேட்டு, அதன் பொருள் அறிந்து, மெய் மறந்து வழிபடுகின்றனர், இதனால் இத்திட்டம் பெறும் வரவேற்பைப் பெற்று, வெற்றித்திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீஸ்போல் நடித்து கூகுள்பே மூலம் பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் லூட்புர் ரகுமான். இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே காரணித்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார்.

    இவர் பணிமுடிந்து தான் தங்கி உள்ள இடத்திற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தாங்கள் போலீஸ்காரர்கள் என லூட்புர் ரகுமானிடம் கூறி மிரட்டி அவரை விசாரணைக்காக வலுக்கட்டாயமாக தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்

    சிறிது தூரம் சென்றதும் அவரை இறக்கிவிட்ட வாலிபர்கள் ‘கூகுள்பே’ மூலம் தங்களது வங்கி கணக்குக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பும்படி கூறி பறித்துக் கொண்டனர். பின்னர் லூட்புர் ரகுமானை அங்கேயே இறக்கி விட்டு மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து ஓரகடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் போலீஸ் போல் நடித்து பணம் பறிப்பில் ஈடுபட்டது வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த சரவணன், காரணித்தாங்கள் சதீஷ்குமார் என்பது தெரிந்தது.

    அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். புகார் தெரிவித்த சில மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்து தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பாராட்டினார்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது30). இவருடைய மனைவி ரஞ்சிதா (28). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2ஆண்டுகள் ஆகின்றன.இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

    ரஞ்சித் குமார் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். கும்மிடிப்பூண்டி பகுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக ரஞ்சித் குமார் ரஞ்சிதாவிடம் போனில் தொடர்பு கொண்டு பேசாததால் ரஞ்சிதா மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கும்மிடிப்பூண்டியில் வேலை செய்யும் ரஞ்சித்குமார் இரண்டு நாட்களுக்கு பின்பு ரஞ்சிதாவுக்கு தொடர்ந்து போன்செய்தும் ரஞ்சிதா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரஞ்சித் குமார் பக்கத்து வீட்டில் குடியிருப்பவருக்கு போன் செய்து ரஞ்சிதா போனை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

    பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரஞ்சிதா வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரஞ்சிதா புடவையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் பிணமாக காணப்பட்டார்.

    போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரஞ்சித்குமாருக்கும், ரஞ்சிதாவுக்கும் திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.

    ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, முன்னதாக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார்.
    காஞ்சிபுரம்:

    பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோவிலில் , சித்ரா பௌர்ணமி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆந்திரா மாநில அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அதிகாலையிலேயே குவிந்த மக்கள் நீண்ட வரிசையில் நின்று நெய்தீபம் ஏற்றி ஸ்ரீகர்ணகி சமேத ஸ்ரீசித்திர குப்தரை வணங்கினர்.

    தென்னிந்தியாவிலேயே, சித்ரகுப்தருக்கென்று தனி ஆலயம் காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமியன்று இக்கோவில் திருவிழா சிறப்பாக நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  சித்ரகுப்தரை  மனமுறுகி தரிசனம் செய்வர்

    அந்தவகையில் இந்த ஆண்டும், சித்ரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி ஸ்ரீகர்ணகி சமேத ஸ்ரீசித்திர குப்தருக்கு அதிகாலை சிறப்பு ஹோமம், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பிறகு வண்ண வண்ண மலர் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.

    பிறகு கோவில் அர்ச்சகர்கள் சுவாமிக்கு கற்பூரம் தீபாராதனைகள் காண்பித்தனர். அப்போது திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தனர்.

    சித்ரகுப்தர் கோவிலுக்கு அதிகாலையிலேயே, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா,  கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை புரிந்து  நீண்ட வரிசையில் நின்று நெய்தீபம் ஏற்றி ஸ்ரீகர்ணகி சமேத ஸ்ரீசித்திர குப்தரை வணங்கிவிட்டு சென்றனர்.

    அமைச்சர் ரோஜா:

    ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா ஆந்திரா மாநிலத்தில் இருந்து கார் மூலம் இன்று காலை காஞ்சீபுரம் வருகை புரிந்தார். 

    சித்ரா பௌர்ணமியையோட்டி

    சித்ரகுப்தர் கோவிலுக்கு சென்ற அவர் சித்ரகுப்தரை மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தார். நடிகை ரோஜாவிற்கு அர்ச்சகர் மாலை அணிவித்து கோவில் பிரசாரத்தை வழங்கினர்.

    வீ.வள்ளிநாயகம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கழக பொருளாளர் வக்கீல் வீ. வள்ளிநாயகம் ஏற்பாட்டின் பேரில்,  லட்சக்கணக்கான பக்தர்களுக்கு, சாம்பார் சாதம், அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அப்போது நடிகை ரோஜா பங்கேற்று வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    பிறகு நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது :

    சித்ரா பௌர்ணமியையொட்டி 

    இன்று சித்ரகுப்தர் கோவிலுக்கு வந்திருந்தேன், சித்ரகுப்தரை  நன்றாக சுவாமி தரிசனம் செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    இந்த அன்னதானம் நிகழ்ச்சியில், மாவட்ட கழக பொருளாளர் வீ.வள்ளிநாயகம் அவரது துணைவியார் சுசீலாவள்ளிநாயகம் ஆகியோர் குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள்.இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம்,  பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி, காஞ்சீபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் குட்டி என்கிற சண்முகானந்தம், அஉள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காமாட்சி அம்மன் கோவில்:

    ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, முன்னதாக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். கருவறையில் உள்ள காமாட்சியம்மனை மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் குங்குமம் பிரசாதங்களை வழங்கினார்கள்.

    பாதுகாப்பு:

    காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா ஆந்திரா மாநிலத்தில் இருந்து கார் மூலம் இன்று காலை காஞ்சிபுரம் வருகை புரிந்தார். 

    சித்ரா பௌர்ணமியையோட்டி சித்ரகுப்தர் கோவிலுக்கு சென்ற அவர் சித்ரகுப்தரை மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தார். நடிகை ரோஜாவிற்கு அர்ச்சகர் மாலை அணிவித்து கோவில் பிரசாரத்தை வழங்கினர்.

    வீ.வள்ளிநாயகம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கழக பொருளாளர் வக்கீல் வீ. வள்ளிநாயகம் ஏற்பாட்டின் பேரில்,  லட்சக்கணக்கான பக்தர்களுக்கு, சாம்பார் சாதம், அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அப்போது நடிகை ரோஜா பங்கேற்று வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    பிறகு நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது :

    சித்ரா பௌர்ணமியையொட்டி இன்று சித்ரகுப்தர் கோவிலுக்கு வந்திருந்தேன், சித்ரகுப்தரை  நன்றாக சுவாமி தரிசனம் செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    இந்த அன்னதானம் நிகழ்ச்சியில், மாவட்ட கழக பொருளாளர் வீ.வள்ளிநாயகம் அவரது துணைவியார் சுசீலாவள்ளிநாயகம் ஆகியோர் குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள்.இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம்,  பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி, காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் குட்டி என்கிற சண்முகானந்தம், அஉள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காமாட்சி அம்மன் கோவில்:

    ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, முன்னதாக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். கருவறையில் உள்ள காமாட்சியம்மனை மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் குங்குமம் பிரசாதங்களை வழங்கினார்கள்.

    பாதுகாப்பு:

    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    யார் மீதாவது புகார் வந்தால் அவர்கள் கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் புதிய கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, பொதுக்குழு கூட்டம் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரங்கில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி பேசினார்.

    பா.ம.க. நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், நேர்மையுடன் இருக்க வேண்டும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள் கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள், யார் மீதாவது புகார் வந்தால் அவர்கள் கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ள கருத்து, இந்தியை கற்றுக்கொண்டால் ஒற்றுமைக்கு உதவும் என தெரிவித்துள்ளார். அதற்கு நேர் எதிரான விளைவு தான் வரும்.

    இந்தி திணிப்பு கூடாது, இந்தி தேசிய மொழி கிடையாது. அது வெறும் அலுவல் மொழிதான். அது போல தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் உள்ளது. 2-வது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளது.

    அதே நேரத்தில் மும்மொழி கொள்கை என சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை தான் உள்ளது. உத்தரபிரதேசத்தில் மும்மொழி கொள்கை வைத்திருக்கிறார்களா? இந்தியும், ஆங்கிலமும் மட்டும்தான் வைத்திருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் தமிழை கற்றுக்கொடுப்பார்களா?

    முதலில் பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் தவிர கூடுதலாக வேறு ஒரு மொழியை கற்றுக்கொடுக்க சொல்லுங்கள். எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. அது ஒற்றுமைக்கு உதவாது வேற்றுமையை தான் வளர்க்கும்.

    இதைத்தான் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பார்த்தார்கள். அந்த நிலை வரக்கூடாது. மொழி என்பது வெறும் மொழி கிடையாது. அதில் நமது கலாச்சாரம் பண்பாடு எல்லாம் அடங்கி இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவம் இருக்கிறது.

    தனித்துவத்தில் மொழி என்பது முதலாவது இடத்தில் இருக்கிறது. அதிலே எந்த மொழியையும் யாரிடமும் திணிக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காஞ்சிபுரம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி தாமரைக்குளம் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 45). கொத்தனார். இவரது மனைவி வளர்மதி. குடும்பத்தகராறு காரணமாக கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில், மனமுடைந்த ஜெகதீசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு பாலுசெட்டி சத்திரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த அவரது மனைவி வளர்மதி பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர் லாரி மோதி பெண் போலீஸ்-குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாராக வேலை பார்த்து வந்தவர் உமாதேவி. இவரது கணவர் ராஜா. இவர்களது 1½ வயது குழந்தை தர்‌ஷன்.

    இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டிசத்திரம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து பெங்களூர் மார்க்கமாக கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த கண்டெய்னர் லாரி தறிகெட்டு ஓடத் தொடங்கியது. முன்னால் சென்று கொண்டிருந்த 2 சொகுசு கார்களை கண்டெய்னர் லாரி இடித்து தள்ளியது.

    பின்னர் பெண் போலீஸ் உமாதேவி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும் கண்டெய்னர் லாரி மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் பெண் போலீஸ் உமாதேவி, குழந்தை தர்‌ஷன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்தில் உமாதேவியின் கணவர் ராஜா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், கூடுதல் டி.எஸ்.பி. ஜெயராமன், டி.எஸ்.பி. ஜூலியஸ் சீசர் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம் 20.06.2020 அன்று காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

    காஞ்சிபுரம், ஏப்.13-

    காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளரும் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மண்டலத்திலுள்ள (காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அடங்கியது) கூட்டுறவு நிறுவனங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 126 விற்பனையாளர் மற்றும் 64 கட்டுநர் பணியிடங்களுக்கும் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மண்டலம் மூலம் கடந்த 20.06.2020 தேதியில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 10.12.2020 முதல் 24.12.2020 வரையில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 25.08.2021 அன்று நடந்த கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின் போது கூட்டுறவுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகள் ஆகியவற்றினை செயல்படுத்தும் விதமாக 2020ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம் 20.06.2020 அன்று காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    அசோக்நகரில் கடையில் விளம்பர போர்டு வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள மோட்டார் பம்ப் நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 37). வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஊழியர் ஜெயச்சந்திரன் என்பவருடன் சேர்ந்து நேற்று மாலை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ஆண்டாள் நகரில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையின் மேல் பகுதியில் விளம்பர போர்டு வைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக விளம்பர போர்டு சரிந்து விழுந்து மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கேபிள் மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தினேசும், ஜெயச்சந்திரனும் தூக்கி வீசப்பட்டனர். உடல் கருகிய டிரைவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயத்துடன் ஜெயச்சந்திரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (84) இவரது மனைவி தனலட்சுமி (70). கடந்த 7-ந் தேதி அதிகாலை தனலட்சுமி வெந்நீர் வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார் .அப்போது கியாஸ் கசிந்து இருந்ததால் திடீரென சிலிண்டர் வெடித்தது.

    இதில் தனலட்சுமி மீது தீப்பற்றியது அவரை காப்பாற்ற சென்ற பாலசுப்பிரமணி மீதும் தீ பரவியது. தீயில் கருகிய இருவரும்கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தனலட்சுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஆலந்தூர்:

    கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, ‘வந்தே பாரத்’ மற்றும் ‘ஏர் பபுள்’ திட்டத்தில் மட்டும் இயங்கி வந்தது.

    இந்நிலையில் தற்போது நோய் பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் தளர்த்தி உள்ளது. இதையடுத்து வெளிநாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது.

    கொரோன கட்டுபாடு தளர்வுகளால் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவையில் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    சென்னையில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவை மூலம் பயணிகளின் எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரத்து 441 ஆக உயர்ந்து உள்ளது. விமான சேவையும் 9 ஆயிரத்து 66 ஆக அதிகரித்து உள்ளன.

    கடந்த ஜனவரி மாதத்தில் விமான சேவை 7ஆயிரத்து 751 ஆகவும் பயணிகள் எண்ணிக்கை 8 லட்சத்து 42 ஆயிரத்து 703 ஆகவும் இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் விமான சேவை 6 ஆயிரத்து 496 ஆகவும் பயணிகள் எண்ணிக்கை 9 லட்சத்து 14 ஆயிரத்து 793ஆகவும் இருந்தது.

    பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளுக்கு பின்னர் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விமானத்தின் எரிபொருளின் விலை உயர்ந்ததால், டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது. அப்படி இருந்தும் கோடைகாலம் என்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    வர்த்தக ரீதியாக செல்வோர் எண்ணிக்கை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இதனால் டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர் ஆகிய மெட்ரோ நகரங்களுக்கு பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதேபோல் மற்ற நகரங்களுக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

    வெளிநாட்டு விமான சேவையை பொருத்தவரை கோடை விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாவுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், எமிரேட்ஸ், ஏர் பிரான்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் விமான சேவைகளை தொடங்கியிருக்கிறது. இனி வரும் நாட்களில் அந்த நிறுவனங்களின் சேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×