என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு பேசும் போதுது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் மையங்கள் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தினார். இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்போம் சங்க தலைவர் மரம் மாசிலாமணி பேசும்போது, நேரடி கொள்முதல் மையங்களுக்கு நெல்லை பாதுகாக்க தார்பாய்களை கூடுதலாக கொடுக்க வேண்டும்.
தொழிலாளர் குறையை சரி செய்ய வேண்டும். நேரடி நெல்கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை தீயணைப்புத் துறை உதவியுடன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் ஆர்த்தி பேசியதாவது: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடனை செலுத்தினால் அவர்களது 7 சதவீத வட்டியை மத்திய அரசு 3 சதவீதமும், மாநில அரசு 4 சதவீதமும் மானியமாக அளிக்க உள்ளனர.
இதனால் வட்டி இல்லாமல் கடனை திருப்பி செலுத்தலாம். பயிர் சாகுபடி, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றுக்கு கிசான் அட்டைகளை பயன்படுத்தி இந்த கடன் தொகையை பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் வேளான் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுனர்கள், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று வேளாண்மை தொடர்பான கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் நேற்று உள்நாட்டு விமானங்கள் புறப்பாடு கால தாமதமானது.காலையில் இருந்து மதியம் வரைக்கும் சுமாா் 20 க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.
ஒவ்வொரு விமானமும் 15 நிமிடத்திலிருந்து 30 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டு சென்றது.சில விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றது.சனி, ஞாயிறு வார இறுதி்நாட்கள் என்பதாலும், ரம்ஜான் பண்டிகை வருகிற செவ்வாய்கிழமை வருவதாலும், வெளியூா் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இதனால் வழக்கத்தை விட நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் பணியில் குறைவாகவே இருந்தாகவும், அவா்கள் பொறுமையாக பணியாற்றுவதால், பாதுகாப்பு சோதனை நடந்து முடிவதில் தாமதம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
அதனால் பயணிகள் விமானங்களில் தாமதமாக சென்று ஏறுவதால், விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
மேலும் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் கம்ப்யூட்டர் இயந்திரம் சரிவர இயங்காததால், பயணிகள் போா்டிங் பாஸ்கள் வாங்குவதில் தாமதமானது.
இதே போன்று பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில், பயணிகள் பாதுகாப்பு சோதனைக்கு, கூடுதல் பாதுகாப்பு கவுண்டா்கள் ஏற்படுத்தி, கூடுதலாக பாதுகாப்பு வீரா்களை பணியமா்த்த வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனா்.
மேலும் சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி கம்ப்யூட்டர் வேகம் குறைந்து பயணிகள் பாதிக்கப்படுவது தொடா்ச்சியாக நடந்து வருகிறது. அதற்கு விமானநிலைய நிா்வாகம் நிரந்தர தீா்வை ஏற்படுத்த வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனா்.
புறப்பாடு விமானங்கள் தாமதமானாலும், வருகை விமானங்கள் அனைத்தும் குறிப்பிட்ட நேரங்களில் சரியாக வந்து சோ்ந்தன.
அதேபோல் இன்றும் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று போல் இல்லாமல் பயணிகள் துரிதமாக செல்ல தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
போரூர்:
ஆவடி ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (19) பட்டதாரி வாலிபர்.
இவர் நேற்று இரவு 9மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த நரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பறக்கும் சாலை அமைக்கும் பணிக்காக போடப்பட்டுள்ள பில்லர் மீது வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நரேஷ்குமார் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, சாலிகிராமம் நாவலர் மெயின் ரோட்டில் கடந்த 23ந் தேதி நள்ளிரவு 12மணி அளவில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த வாலிபர் ஒருவர் திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த வாலிபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது பற்றி விபரம் ஏதும் தெரியவில்லை.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்று வட்டார மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையதில் இருந்து ஆயகொளத்தூர், திருவள்ளூர், சுங்குவார் சத்திரம், மணிமங்கலம், படப்பை உள்ளிட்ட இடங்களுக்கு மாணவ, மாணவிகள் பஸ்சில் சென்று வருகின்றனர். இந்தநிலையில் வழக்கம் போல் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் இருந்து தொடுகாடு, செங்காடு வழியாக திருவள்ளூர் நோக்கி அரசு பஸ் சென்றது. அதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.
அப்போது பள்ளி மாணவர்கள் பலர் பஸ் படியில் தொங்கியபடி வந்தனர். இதை பஸ் டிரைவர் சேது, கண்டக்டர் அமிர்தலிங்கம் ஆகியோர் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஆயகொளத்தூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும் படியில் தொங்கிய படி பயணம் செய்த மாணவர்கள் சிலர் கோபத்தில் டிரைவர் சேது, கண்டக்டர் அமிர்தலிங்கம் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை தேடி வருகிறார்.
தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு தேர்த்திருவிழா நடைபெற்றது. அப்போது சுமார் 20 அடி உயரத்திற்கு மின் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த தேரை பொதுமக்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
அப்போது ஒரு இடத்தில் தேரை திருப்பியபோது அருகே சென்ற மின்கம்பியில் தேர் தட்டி உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து தேர் தீப்பிடித்து எரிந்தது.
மேலும் மின்சாரம் தாக்கியதில் அதே கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரதாப், மோகன், அன்பழகன் மற்றும் அவரது மகன் ராகவன் உட்பட மொத்தம் 11 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தேர்த்திருவிழாவில் பலியான 11 பேரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ராஜகோபுரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது.
இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மேலாளர் மற்றும் காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகியான ந.சுந்தரேச ஐயர் கூறியதாவது:
தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின்போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட வார்த்தைகள் இல்லை.
இந்த விபத்தில் பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாணைப்படி காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடையவும் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் ஆர்த்தியின் உத்தரவுபடி சேட்டுவை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு ரவுடிகளையும், அவர்களது கூட்டாளிகளையும் கண்காணிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் மற்றும் அவர்கள் நடமாடும் இடங்களிலும் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய போலீசார் தினமும் ரோந்து செல்லும் வகையில், நன்கு பயிற்சி பெற்ற திறம்பட செயல்பட கூடிய போலீசார் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு ரோந்து வாகனங்கள் வழங்கும் விழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. காஞ்சி சரக காவல்துறை துணைத்தலைவர் எம்.சத்திய பிரியா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் ரோந்து பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த காவேரிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரியா(வயது22). இவர் கடந்த 23-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரேசாபுரம் அருகே முட்புதரில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் விபசார புரோக்கர்களுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பிரியாவின் கணவரான நவீன்குமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கள்ளக்காதலியான கல்பனாவுடன் சேர்ந்து மனைவி பிரியாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு உடலை ஸ்ரீபெரும்புதூர் அருகே வீசி சென்றதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து நவீன்குமார், அவரின் கள்ளக்காதலி கல்பனா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. போலீசில் நவீன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது:-
எனக்கும் பிரியாவுக்கும் பிறந்த குழந்தை இறந்து விட்டது. இதன் பின்னர் பிரியா தடம்மாறி சென்றார். அவர் விபசார புரோக்கர்களுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டார். இது எனக்கு பிடிக்கவில்லை.
இதற்கிடையே எனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த கல்பனாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம்.
எனினும் பிரியா விபச்சார தொழிலில் ஈடுபடுவது பிடிக்காததால் அவளை பலமுறை கண்டித்தேன். ஆனால் அவள் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டார்.
மேலும் என்னையும், கல்பனாவையும், இணைத்து பலரிடம் அவதூறாக பேசி வந்தார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக கல்பனா மற்றும் சகோதரனை போலீசில் பிரியா பிடித்துக் கொடுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் பிரியவை தீர்த்துகட்ட முடிவு செய்தேன். இதுபற்றி கல்பனாவிடம் கூறியபோது அவரும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து சம்பவத்தன்று பிரியாவிடம் பேச வேண்டும் என்று அழைத்தேன். அவளும் வர சம்மதித்தாள். அவளை சின்ன காஞ்சிபுரம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள வாடகை வீட்டிற்கு அழைத்து சென்றோம். அங்கு பிரியாவுக்கு மது குடிக்க கொடுத்தோம்.
மதுகுடித்த போதையில் பிரியா இருந்தார். உடனே நானும், கல்பனாவும் சேர்ந்து பிரியாவின் கழுத்தை இறுக்கியும், வாயில் துணியை திணித்தும் கொலை செய்தோம். அவள் இறந்து விட்டதை உறுதி செய்த பின்னர் போலீசில் சிக்காமல் இருக்க உடலை அங்கிருந்து வேறு இடத்துக்கு கொண்டு சென்று வீச திட்டமிட்டோம்.
நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் பிரியாவின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றோம். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரேசாபுரம் அருகே முட்புதரில் வீசிவிட்டு தப்பி சென்று விட்டோம். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
கொலை நடந்த இடத்தில் இருந்து பிரியாவின் உடல் வீசப்பட்ட தெரேசாபுரம் பகுதி சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வளவு தூரம் உடலை போலீசுக்கு தெரியாமல் நவீனும் கல்பனாவும் கொண்டு வந்து வீசி உள்ளனர்.
கொலைக்கு வேறுஏதேனும் காரணம் உள்ளதா? அவர்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று கைதான 2 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ஆலந்தூர்:
ராமநாதபுரத்தை சோந்த மீனவர்கள் பாலு, ரங்கதுரை, தரங்கம்பாடியை சேர்ந்த பாலுமணி, காரைக்காலைச் சேர்ந்த திலீபன் ஆகிய 4 பேர் கடந்த மார்ச் மாதம் இந்திய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையால் இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள் பாலு உள்பட 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை 4.30 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.
மும்பையை சேர்ந்தவர் பூஜாநட்வர் (27) ஐ.டி ஊழியரான இவர் நங்கநல்லூர் பி.வி நகர், 13-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தோழியுடன் தங்கி உள்ளார்.
இதே குடியிருப்பில் வசித்து வரும் பவன் என்பவர் பூஜாநட்வரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பவனை கைது செய்தனர். அவர் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் உதவியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம், வேதாசலம் நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் விஜய். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி பிளஸ்-2 படித்து வந்தார். விஜய் சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த விஜய் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






