என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு முன்னால் உள்ள கார் பார்கிங் பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதை பார்த்த விமான பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசாா் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். அவர் முகத்தில், கையில் பலத்த காயம் இருந்தது.
அவரை சோதனையிட்ட போது அவருடைய பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டில் சபரி கணேஷ் (வயது 26) கள்ளக்குறிச்சி என்ற முகவரி இருந்தது.
இவர் வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்த, விமான பயணியா?அல்லது வெளிநாடு செல்பவர்கள் யாரையாவது வழியனுப்ப வந்தாரா? என்பது தெரியவில்லை. இதை அடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவர் எப்படி உயிரிழந்தாா் என்பது மர்மமாக இருக்கிறது. இவா் கொலை செய்யப்பட்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விமானநிலைய வளாகத்திற்குள் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் போலீசாா் ஆய்வு செய்கின்றனர்.
சென்னை விமானநிலையத்தில் மா்மமான முறையில் வாலிபா் ஒருவா் உயிரிழந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே சென்னை விமான நிலைய கார் பார்க்கிங்கில் டீ விற்பனை போட்டியில் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆலந்தூர்:
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டு விமானங்கள் ரத்து ஆகின.
அதில் முக்கியமானது சர்வதேச அளவில் பிரபலமான சுற்றுலாத் தளமான ரீ யூனியன் என்ற குட்டி தீவிவான செயிண்ட் டெனிஸ் என்ற இடத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஏா்ஆஸ்ட்ரல் விமானம். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சென்னை வந்துவிட்டு, மறுநாள் சனிக்கிழமை மீண்டும் செயிண்ட் டெனிஸ் புறப்பட்டு செல்லும்.
இந்த குட்டி தீவில் மொத்த மக்கள் தொகையே 1.5 லட்சம் தான். ஆனால் இது சர்வதேச அளவில் பிரபலமான சுற்றுலாத் தளம். இங்கு புகழ்பெற்ற கோவில்கள், மியூசியம், மற்றும் கோடை வாசஸ்தளங்கள் இருப்பதால், பல்வேறு நாடுகளை சோ்ந்த சுற்றுலா பயணிகள் பெருமளவு இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக இது வா்த்தக தளமாகவும் உள்ளது.
அங்கு உள்ளவா்களில் கணிசமாக தென்இந்தியா்கள், தமிழ்நாட்டை சோ்ந்தவா்களும் உள்ளனா்.
எனவே சென்னைக்கு இயக்கப்பட்ட இந்த வாராந்திர விமான சேவைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல், 26 மாதங்களாக இந்த விமான சேவை ரத்தாகி இருந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருமளவு குறைந்து இயல்புநிலை திரும்பியதால் மீண்டும் இந்த விமான சேவையை ஏா் ஆஸ்ட்ரல் விமான நிறுவனம் தொடங்கியது. இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் அதற்கு அனுமதி அளித்தது.
அதன் பேரில் 26 மாதங்களுக்கு பின்பு, முதல் விமானம் நேற்று இரவு 7 மணிக்கு 47 பயணிகள், 6 விமான ஊழியா்களுடன் செயிண்ட் டெனிஸ்சிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானம் சென்னையில் தரையிறங்கி ஓடுபாதையில் ஓடத்தொடங்கியதும், ஓடுபாதையின் இரண்டு பகுதியிலும், 2 தீயணைப்பு வண்டிகள் நின்று தண்ணீரை பீச்சி அடித்து, “வாட்டர் சல்யூட்”கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதேபோல் விமானத்தில் வந்த பயணிகளையும் சென்னை விமானநிலைய அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனா்.
26 மாதங்களுக்கு பின்பு இந்த விமானம் மீண்டும் இயங்க தொடங்கியது, சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்த விமானம் வழக்கம் போல், இன்று காலை 7.10 மணி அளவில் மீண்டும் சென்னையில் இருந்து ரீ யூனியன் தீவில் உள்ள செயிண்ட் டெனிஸ்க்கு 62 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்த விமான சேவை இனிமேல் வழக்கம்போல் வாராந்திர விமான சேவையாக தொடா்ந்து இயங்கும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் கூறினா்.
ஆலந்தூர்:
மலேசிய நாட்டைச் சேர்ந்தவர் மஹதரன் (வயது 51). இவர் சர்வதேச போதை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இவா் கா்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருந்து, போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு வந்தார். கா்நாடகா மாநிலத்தின் மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார், மஹதரனை கைது செய்ய தீவிரமாக தேடினா். ஆனால் அவா் வெளிநாடுகளில் தொடா்ந்து தலைமறைவாக இருந்துகொண்டு, போதை கடத்தலில் ஈடுபட்டாா்.
கடந்த 2019ம் ஆண்டு மஹதரனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனா்.
இந்த நிலையில் மலேசியாவில் இருந்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட், ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா். அந்த விமானத்தில் மஹதரனும் சென்னை வந்தாா். அவருடைய பாஸ்போா்ட்டை சோதனை செய்த அதிகாரிகள், இவா் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும், தேடப்படும் கடத்தல் குற்றவாளி என்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் பெங்களூரில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனா். இதையடுத்து பெங்களூர் போலீசாா் சென்னை விமானநிலையத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
போரூர்:
போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது27).ஆம்னி பஸ் டிரைவர். இவர் நேற்று மாலை வானகரம் பஸ் நிறுத்தம் அருகே ஆம்னி பஸ்சை நிறுத்தி விட்டு மோட்டார் எந்திரம் மூலம் பஸ்சை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு கணேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் காரணமாக செய்யாற்றில் சுமார் 15ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் செய்யாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
இதன் காரணமாக காஞ்சிபுரம் அருகே உள்ள வெங்கச்சேரியில் செய்யாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. தரைப்பாலம் இல்லாததால் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியங்கள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வெங்கச்சேரியில் புதிதாக மேம்பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
மாற்றுப்பாதை சரியாக அமைக்கப்படாமல் மணல் மேடாகவும், பல இடங்களில் பள்ளங்களாகவும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு காட்சி அளிக்கிறது.
காஞ்சிபுரம், உத்திரமேரூர் சென்று வரும் இருசக்கர வாகனங்கள், கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அவ்வழியாக மெதுவாக ஊர்ந்து தடுமாறி செல்கின்றன. மேலும் பள்ளத்தில் கனரக வாகனங்கள் அவ்வப்போது சிக்கியும் வருகிறது.
எனவே தற்போது வாகனங்கள் செல்லும் மாற்றுப்பாதையில் தற்காலிகமாக சீரான சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம், அம்பேத்கார் நகரில் வசித்து வந்தவர் சாரங்கபாணி (வயது75). வந்தவாசியை சேர்ந்த இவர் வயது மூப்பு காரணமாகவும், உடல்நிலை சரி இல்லாததாலும் மகன் வீட்டில் தங்கி இருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக சாரங்க பாணிக்கும், அவருடைய மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் வீட்டின் மாடிப்படிக்கட்டின் கீழ் உள்ள கழிவுநீர் குழாயில் சாரங்கபாணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன், ஆதம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாரங்கபாணி, தன்னுடைய மகன் துன்புறுத்துவதாக ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாரங்கபாணி தற்கொலை செய்து உள்ளார்.
இது தொடர்பாக அவரது மகனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகாவேரிப்பாக்கம் நியாயவிலை கடை, நுகர்பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கு, கீழம்பி நியாய விலை கடை, தாமல் நெல் கொள்முதல் நிலையம், விஷார் நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை அமைச்சர் சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 4000 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாலாஜாபாத் வட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 10 நபர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள். தரமான பொருட்களை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படுவதை ஆய்வு செய்ய கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் அலுவலர் ஆகியோரை கொண்ட ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது.
இக்குழுவினர் ஆய்வு செய்த பின்னர் நியாய விலைக் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படும். மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நுகர்பொருள் வாணிப கழகத்தில் அனுப்பப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
தரமான அரிசியினை நியாய விலை கடைகளுக்கு அனுப்பிடும் பணியினை மாவட்ட வழங்கல் அலுவலர் முழு பொறுப்பாக இருந்து செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன்.
286 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளை ரூ.96 கோடி செலவில் புனரமைப்பு செய்யப்படும். சிறுகாவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள சேமிப்பு கிடங்கினை ரூ.2.5 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து நியாய விலைக் கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். 800 முதல் 3000 வரை குடும்ப அட்டை கடைகளை கொண்ட நியாய விலை கடைகளை பிரித்து புதிய கடைகள் உருவாக்கப்படும். 6976 வாடகை கட்டிடங்களில் இயங்கும் நியாயவிலைக் கடைகளை சொந்த கட்டிடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 500 மெட்ரிக் டன் நவீன அரிசி ஆலை அமைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 169 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்பட்ட நெல் மூட்டைகள் உடனடியாக அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது உணவுத்துறை வழங்கல் மற்றும் நுகர்வோர் ஆணையாளர் ராஜாராமன், கலெக்டர் ஆர்த்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். நிர்வாக இயக்குநர் பிரபாகர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் லட்சுமி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல இயக்குநர் சத்தியவதி உடன் இருந்தனர்.
காஞ்சிபுரம்:
கோடை வெயில் தொடங்கி அதிக அளவு வெப்பத்தால் மக்கள் தவித்து வருகிறார்கள். காஞ்சிபுரத்தில் 111 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தியது
இதனால் குழந்தைகள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் இடி, மன்னலுடன் யாரும் எதிர்பாராத வகையில் கன மழை பெய்தது. பின்னர் சுமார் ஒரு மணி நேரம் விட்டு விட்டு சாரல் மழை நீடித்தது. இதேபோல் தாமல், பாலுசெட்டி சத்திரம், கீழ் அம்பி, சிறுகாவேரிபாக்கம், வெள்ளைகேட் பகுதியில் மழை பெய்தது.
நள்ளிரவில் பெய்த திடீர் மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர். எனினும் இன்று காலை முதல் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வண்டலூர்:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று மீனம்பாக்கம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 17 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதேபோல் விலங்குகளும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. வண்டலூர் பூங்காவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குள், பறவைகள், பாம்புகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வரும் வெயிலுக்கு இந்த விலங்குகளும் தப்பவில்லை. இதைத்தொடர்ந்து பூங்காவில் வெப்பத்தில் இருந்து விலங்குகள், பறவைகளை காக்க சிறப்பு ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அவற்றின் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
சிறுத்தைகள், புலிகள் மீது அவ்வப்போது டியூப் மூலம் தண்ணீரை ஊழியர்கள் தெளித்து வருகின்றனர். பறவைகளின் கூண்டு மேற்பகுதியில் முழுமையாக கோணிப்பைகளால் மூடி உள்ளனர். அதன் மீது குளிர்ச்சிக்காக தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இதனால் பறவைகள் வெப்பத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் விலங்குகள் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காண்டாமிருகம், நீர்யானை, வரிக்குதிரை போன்ற விலங்குகளின் பராமரிப்பு இடங்களிலும் அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
யானைகள் அங்கு அமைக்கப்பட்டு உள்ள ஷவரில் உல்லாச குளியல் போடுகின்றன. இதேபோல் கரடிகள் குரங்குகளுக்கு பழவகைகள், இளநீர் உள்ளிட்டவை அதிகமாக உணவாக வழங்கப்படுகிறது.
பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் நடைபாதைகளில் தண்ணீர் தெளிக்க ஆங்காங்கே மழைச்சாரல் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.






