என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • முன்பதிவு இல்லாத பெட்டியின் சீட்டில் 2 வயது பெண் குழந்தை ஒன்று தூங்கி கொண்டிருந்தது.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கோவை:

    சென்னையில் இருந்து கோவைக்கு சம்பவத்தன்று இரவு கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

    ரெயிலில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், ஊழியர்கள் ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியின் சீட்டில் 2 வயது பெண் குழந்தை ஒன்று தூங்கி கொண்டிருந்தது.

    இதை பார்த்ததும் ரெயில் பணியாளர்கள் அதிர்ச்சியாகினர். உடனடியாக இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் கஜேந்திரன், ரம்யா ஆகியோர் அங்கு சென்று பார்த்தனர்.

    அங்கு குழந்தை தூங்கி கொண்டிருந்தது. அந்த குழந்தையை போலீசார் மீட்டனர்.

    அந்த குழந்தையை ரெயிலில் அழைத்து வந்தது யார்? அதனுடைய தாய் யார்? என்பது தெரியவில்லை.

    இதையடுத்து போலீசார் குழந்தையை குழந்தைகள் நல அலுவலர் மூலம் கிணத்துக்கடவு பகுதியில் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    அந்த குழந்தையை ரெயிலில் பயணித்த பயணி மறந்து போய் விட்டு சென்றாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • சிறுமுகை வனத்துறையினர் கடந்த 18-ந் தேதி குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி அங்கிருந்த 15 அடி நீள முதலையை பிடித்தனர்.
    • வலையின் அருகே ராட்சத முதலை இருப்பதை பார்த்ததும் அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓடினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் நீர்வழி குட்டை ஒன்று உள்ளது.

    வடவள்ளி, தாளத்துறை, கோபி ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வந்து பட்டக்காரனூர் கிராமத்தின் வழியாக பவானி ஆற்றினை சென்றடையும் இந்த குட்டையில் கடந்தாண்டு பெய்த கன மழையால் தற்போது வரை தண்ணீர் தேங்கி உள்ளது.

    கடந்த 8 மாதங்களாக இந்த குட்டையில் 10 அடி அளவுக்கு ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் அதில் முதலை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுமுகை வனத்துறையினர் கடந்த 18-ந் தேதி குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி அங்கிருந்த 15 அடி நீள முதலையை பிடித்தனர்.

    அதன்பின் குட்டையில் இருந்த முதலையை வனத்துறை பிடித்து சென்ற பின் அங்கிருந்த மீன்களை மக்கள் பிடித்து சென்றனர். குடியிருப்புகளுக்கு நடுவே சூழ்ந்து இருந்த தண்ணீரிலும் மீன்களை பிடித்து சென்றனர்.

    இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், மீன் பிடிப்பதற்காக குட்டை பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு வலை போட்டு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வலையின் அருகே ராட்சத முதலை இருப்பதை பார்த்ததும் அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓடினர்.

    சில நாட்களுக்கு முன்பு தான் வனத்துறையினர் முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் தண்ணீரை வெளியேற்றினர். தற்போது ஊற்று நீரால் குட்டை நிரம்பி வருகிறது. இந்த நிலையில் இந்த குட்டையில் மீண்டும் முதலை நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஏற்கனவே இங்கிருந்த 2 முதலைகளில் ஒன்றை வனத்துறை பிடித்து சென்ற நிலையில் ஒரு வாரத்திற்குள்ளே மீண்டும் ஒரு முதலை வந்திருப்பது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மாநாட்டுக்கு ஏற்பாடு பணிகளை நிர்வாகிகள் தொடங்கி உள்ளனர்.
    • மாநாடு மிக சிறப்பாக வெற்றி மாநாடாக நடைபெறும்.

    கோவை:

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த இக்கட்சியின் கொடி அறிமுக விழாவின் போது, கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து முதல் மாநில மாநாட்டில் அறிவிப்பதாக நடிகர் விஜய் தெரிவித்தார்.

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதையடுத்து மாநாட்டுக்கு ஏற்பாடு பணிகளை த.வெ.க நிர்வாகிகள் தொடங்கி உள்ளனர்.


    இந்த நிலையில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கோவை, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் மாநில மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் பரபரப்பான வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழக வெற்றிக்கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைமையின் சார்பில் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    அந்த சுவரொட்டியில் த.வெ.க தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் படம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் அதில் விதியை மாற்றுவோம் விக்கிரவாண்டியில் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

    கோவையில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளை மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பார்த்துச் செல்கின்றனர்.

    திருச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஒட்டியுள்ள சுவரொட்டியில் மூன்றெழுத்தின் (ஈ.வே.ரா., அண்ணா, எம்.ஜி.ஆர்.,) அடுத்த அரசியல் வாரிசே. 2024-ல் எழுச்சி மாநாடு, 2026-ல் தமிழ்நாடு என்ற வாசனங்கள் இடம் பிடித்துள்ளது.

    கோவை, திருச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஒட்டியுள்ள இந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இதற்கிடையே மாநாடு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி நடத்தப்படும் என்று எங்கள் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    இதற்காக மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்ட விவரம் குறித்து காவல் துறையிடம் மனு அளித்துள்ளோம். அதில் காவல் துறையினர் கூறிய நிபந்தனைகளை கடைபிடிப்பது குறித்து நாங்கள் உரிய விளக்கம் அளித்துள்ளோம்.

    இம்மாநாடு மிக சிறப்பாக வெற்றி மாநாடாக நடைபெறும். மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் விவரம் உள்ளிட்ட எந்தவொரு தகவலாக இருந்தாலும் அதனை எங்கள் கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார். மாநாடு திட்டமிட்டபடி அக்டோபர் 27-ந் தேதி நிச்சயம் நடைபெறும். மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் ஒரு வாரத்திற்குள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரவுடி தாக்கியதில் காயம் அடைந்த ஏட்டு ராஜ்குமார் கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ரவுடி ஆல்வின் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சிகள் வழக்குகள் உள்பட மொத்தம் 13 வழக்குகள் உள்ளது.

    கோவை:

    கோவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந் தேதி பிரபல ரவுடியான சத்தியாபாண்டி என்பவரை ஒரு கும்பல் ஓடஓட விரட்டி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் ராஜா, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அடுத்த வாத்தியார் விளையை சேர்ந்த பிரபல ரவுடியான ஆல்வின் உள்பட 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் ஜெயிலில் இருந்த ஆல்வின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்தார். ஜாமினில் வெளியில் வந்த பின்னர் அவர் கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்தார்.

    இதுதொடர்பான வழக்கு கோவை ஜே.எம்.3 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆல்வினை நேரில் ஆஜராகுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் நீண்ட காலமாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

    இதையடுத்து ரவுடி ஆல்வினை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ரவுடி ஆல்வினை பிடிக்க ரேஸ்கோர்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஏட்டுகள் சந்திரசேகர், ராஜ்குமார், சசி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர், ரவுடி ஆல்வினை பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இந்த நிலையில் ரவுடி ஆல்வின் கோவை கொடிசியா மைதான பகுதியில் பதுங்கி இருப்பதாக இன்று அதிகாலை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர், ரவுடி ஆல்வின் இருக்கும் இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரை போலீசார் தங்களிடம் சரண் அடையுமாறு தெரிவித்தனர்.

    போலீசார் தன்னை சுற்றி வளைத்ததை அறிந்ததும் ரவுடி ஆல்வின் அங்கிருந்து தப்ப முயன்றார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தன் அருகே வந்தால் உங்களை கத்தியால் வெட்டி விடுவேன் என மிரட்டினார்.

    அப்போது ஏட்டு ராஜ்குமார், ரவுடி ஆல்வினின் அருகே சென்று அவரை பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி தான் வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரரை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அப்படியே தரையில் விழுந்தார்.

    ரவுடி ஆல்வின் அங்கிருந்து ஓட முயன்றார். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், பாதுகாப்புக்காக, தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரவுடி ஆல்வினின் கால் முட்டிகளில் சுட்டார். இதில் அவரது 2 கால் முட்டிகளிலும் குண்டு பாய்ந்து, ரத்தம் வெளியேறியது. வலியால் அலறி துடித்த ரவுடி ஆல்வின், ஓட முடியாமல் அங்கேயே தரையில் விழுந்தார்.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து காலில் குண்டுகள் பாய்ந்து காயம் அடைந்த ரவுடி ஆல்வினை காரில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு காலில் பாய்ந்த குண்டுகளை அகற்றி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    சிகிச்சை முடிந்து, குணமாகியதும், அவரிடம் விசாரணை நடத்துவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ரவுடி தாக்கியதில் காயம் அடைந்த ஏட்டு ராஜ்குமார் கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    இதற்கிடையே ரவுடி சுட்டுபிடிக்கப்பட்ட கொடிசியா மைதான பகுதியில் துணை கமிஷனர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்த ரவுடி ஆல்வின் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சிகள் வழக்குகள் உள்பட மொத்தம் 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோவையில் பிரபல ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • காகத்தை அழைத்துச்சென்று தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள நிழல் பகுதியில் விட்டனர்.
    • காகத்தை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் வெள்ளத்துரைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இதன் அருகே டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) ஒன்றும் உள்ளது. சம்பவத்தன்று மின்மாற்றியின் மீது காகம் ஒன்று அமர்ந்திருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக காகத்தின் மீது மின்சாரம் தாக்கியது. இதில் காகம் சாலையில் தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தது.

    இதனை தீயணைப்பு நிலையத்தில் பணியில் இருந்த வெள்ளத்துறை என்ற தீயணைப்பு வீரர் பார்த்தார். உடனடியாக ஓடி சென்று அவர், காகத்தை தூக்கி பரிசோதித்து பார்த்தார்.

    அப்போது காகம் இதயத்துடிப்பு இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காகத்திற்கு மீண்டும் இதயத்துடிப்பை வரவைப்பதற்காக, தீயணைப்பு வீரர் வெள்ளத்துரை சி.பி.ஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை செய்தார்.

    பின்னர், காகத்தின் வாயில் காற்றை ஊதினார். இதில் சிறிது நேரத்தில் காக்கை உயிர் பிழைத்தது. தொடர்ந்து, அந்த காகத்தை அழைத்துச்சென்று தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள நிழல் பகுதியில் விட்டனர்.

    சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிய அந்த காகம் அங்கிருந்து பறந்து சென்றது. மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த காகத்தை தீயணைப்பு வீரர் ஒருவர், சி.பி.ஆர்.சிகிச்சை செய்து காப்பாற்றிய சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பொதுமக்கள் பலரும், காகத்தை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் வெள்ளத்துரைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • மருதாசல அடிகளார் மடம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
    • வக்பு வாரிய திருத்த மசோதாவை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.

    கோவை:

    சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கோவையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளாரை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சந்தித்து கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-


    பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் மடம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும், ஜமாத்தின் ஒருமித்த கருத்தும் இந்த வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உள்ளது.

    மத நல்லிணக்கத்துக்கு வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேலையில் மத்திய அரசு இந்த சட்டம் மூலம் ஒற்றுமையில் வேற்றுமையை காண வேண்டும் என்ற நிலையே உருவாகி உள்ளது. இது கவலை அளிக்கிறது.


    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உரிய நேரத்தில் உள்ளாட்சித்துறையையும், துணை முதல்-அமைச்சர் பதவியையும் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார். அதேபோல அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் உரிய நேரத்தில் துணை முதல்-அமைச்சர் பதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கிறிஸ்தவ பாதிரியார்கள், அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் மதுக்கரை தாலுகா பகுதியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசிப்பதாகவும், கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசிப்பதாகவும் தெரிவித்த அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு கல்லறை அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

    • சாந்தி படுத்திருந்த அறைக்குள் பாம்பு புகுந்தது. உடனே பூனை, பாம்பை எதிர்த்து போராடியது.
    • பூனையை பார்த்து பாம்பு சீற வர, பூனை அதனை தடுக்க முயன்றது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ரோடு நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சாந்தி (வயது 58). இவர்களது மகன் சந்தோஷ், பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    ரவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். சாந்தி தனது மகனுடன் வசித்து வந்தார். மகன் வேலைக்கு சென்ற பிறகு சாந்தி வீட்டில் தனியாக இருப்பார். இதனால் நேரம் போக வேண்டும் என்பதற்காக வீட்டில் ஒரு பூனையை வளர்த்து வந்தார். பூனைக்கு உணவு வைப்பது, அதனுடன் கொஞ்சுவது என அவர் நேரத்தை செலவிட்டு வந்தார்.

    இந்தநிலையில் இரவில் சாந்தி ஒரு அறையிலும், அவரது மகன் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவர்களது வீட்டுக்குள் புகுந்தது. அந்த பாம்பை பார்த்ததும் அதனை வீட்டுக்குள் வர விடாமல் பூனை தடுத்தது. ஆனால் பாம்பு தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்தது.

    சாந்தி படுத்திருந்த அறைக்குள் பாம்பு புகுந்தது. உடனே பூனை, பாம்பை எதிர்த்து போராடியது. பூனையை பார்த்து பாம்பு சீற வர, பூனை அதனை தடுக்க முயன்றது. இதனால் பூனைக்கும், பாம்புக்கும் மோதல் ஆனது. ஒருகட்டத்தில் பூனையின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    வீட்டில் படுத்திருந்த சாந்தியை பாம்பு கடித்தது. இதனால் சாந்தி சத்தம் போட்டு அலறினார். சத்தம் கேட்டு அவரது மகன் ஓடி வந்து பார்த்தார். அப்போது சாந்தியை கடித்த பாம்பு அங்கிருந்து வெளியேறிச் சென்றது. உடனடியாக சாந்தியை மீட்ட அவரது மகன் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்தார். இதுகுறித்து சாந்தியின் மகன் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே பூனை கடித்ததில் பாம்பும் பலியானது.

    • தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவு.
    • தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரஸ் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து கேரளாவையொட்டி தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவக்குழுவினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அரசு உத்தரவிட்டு உள்ளது.


    இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடை அருகே கேரள எல்லையையொட்டி அமைந்து உள்ள கோபனாரி, முள்ளி ஆகிய சோதனைச்சாவடிகளில் வட்டார மருத்துவ அதிகாரி சுதாகர் மேற்பார்வையில் டாக்டர் பிரவீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஹேமலதா மற்றும் 2 நர்சுகள், ஒரு மருந்தாளுர் உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் குழுவினர் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வரும் நபர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பும் உறுதியாகி உள்ளது. இதனால் சோதனையை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நிபா வைரஸ் காய்ச்சல் வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்கு பரவும் தன்மை உடையது. அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், கழிவுகள் மற்றும் அவை விட்டு செல்லும் பழங்களை தின்பதாலும் பாதிப்பு உருவாகும்.

    மேலும் வவ்வால்கள் மூலம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் நோய் பரவி மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு அதிகம். இந்த வகை காய்ச்சல் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தால் அவருக்கும் நோய் பரவ வாய்ப்பு உண்டு.

    தமிழகத்தில் தற்போது வரை நிபா வைரசால் பாதிப்பு ஏதுமில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவையொட்டி அமைந்து உள்ள காரமடை முள்ளி, கோபனாரி சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினர் கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

    மேலும் காய்ச்சல் பாதித்தவரின் பெயர், தொடர்பு எண் பெறப்பட்டு அவர்களை தினமும் தொடர்பு கொண்டு காய்ச்சல் உள்ளதா, அல்லது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனரா என்ற விவரங்கள் பெறப்படுகிறது. இதுவும் தவிர அவர்கள் சென்ற பகுதிகளிலும் சுகாதார மேற்பார்வையாளர் மூலம் ஆய்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை ஒன்று தென்பட்டது.
    • வனத்துறையினர் குட்டைக்குள் இறங்கி சகதிக்குள் கிடந்த முதலையை லாவகமாக பிடித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அன்னூர் அடுத்த பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது பட்டக்காரனூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை ஒன்று தென்பட்டது.

    இதனை அந்த பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஊர் மக்கள் அளித்த தகவலின் பேரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் குட்டையில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு ஆழத்தில் பதுங்கிய முதலையை பிடிப்பதென தீர்மானிக்கப்பட்டது. அதன்ஒருபகுதியாக குட்டையில் உள்ள தண்ணீரை 2 மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி தொடங்கியது.

    சுமார் 30 மணிநேரத்துக்கு பிறகு குட்டையில் இருந்த தண்ணீர் முழுமையாக வற்ற தொடங்கியது. அப்போது வற்றிய குட்டையின் ஆழத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் முதலை பதுங்கி கிடப்பது தெரியவந்தது.


    தொடர்ந்து வனத்துறையினர் குட்டைக்குள் இறங்கி சகதிக்குள் கிடந்த முதலையை லாவகமாக பிடித்தனர். பின்னர் தப்பிவிடாத அளவுக்கு கயிறுகள் மூலம் பிணைக்கப்பட்டன. தொடர்ந்து குட்டைக்குள் கிடந்த முதலையை தோளில் தூக்கியபடி வனத்துறையினர் கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அந்த முதலை பவானிசாகர் அணையில் ஆழமான பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது. முதலை உயிருடன் பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முதலையை பிடிக்க போராடிய வனத்துறையினருக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில் இங்கு 2 முதலைகள் இருப்பதாக தகவலின்பேரில் தேடுதல் வேட்டை நடத்தினோம். ஆனால் அங்கு ஒரு முதலை மட்டுமே பிடிபட்டது. அந்த முதலை அணைப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது என்றனர்.

    • ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற திருமாவளவனின் முழக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
    • திமுக கூட்டணியில் தான் விசிக உள்ளதாக திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ள மது ஒழிப்பு மாநாடும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகுகிறதா என்று கேள்வி எழுந்தது. ஆனால் திமுக கூட்டணியில் தான் விசிக உள்ளதாக திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.

    இன்று கோவை விமான நிலையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வந்தபோது, தொண்டர்கள் அவரை வரவேற்கும்விதமாக, "வருங்கால முதல்வர் அண்ணன் திருமாவளவன்" என கோஷமிட்டனர். இந்த கோஷம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    • உடலில் விஷம் கலந்ததால் உடலுறுப்புகள் செயல் இழந்து விட்டதாகவும், உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்தனர்.
    • உயிரிழந்த நாய்க்கு மாலை அணிவித்தும், வீட்டில் விளக்கு ஏற்றிவைத்தும் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்வேல். காய்கறி வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    அருள்வேல் தனது வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ஆண் நாய்க்குட்டி ஷேடோ ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்தார். இந்த நாய் பின்னாளில் அவரது குடும்பத்தில் ஒருவராகவே மாறி விட்டது.

    இந்த நிலையில் ஷேடோ நேற்று வீட்டில் இருந்து வெளியே வந்தது. அப்போது தெருவில் சுற்றி திரிந்த நாய்கள் கடித்து குதறின. இதில் ஷேடோவுக்கு படுகாயம் ஏற்பட்டது.

    தொடர்ந்து அருள்வேல் குடும்பத்தினர் நாயை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நாயை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் உடலில் விஷம் கலந்ததால் உடலுறுப்புகள் செயல் இழந்து விட்டதாகவும், உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்தனர்.

    தொடர்ந்து அருள்வேல் குடும்பத்தினர் கண்ணீருடன் ஷேடோ நாயை வீட்டுக்கு கொண்டுவந்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.

    வாழ்வில் பிரிக்க முடியாத பிணைப்பாக மாறிய ஷேடோ நாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அதன் மேல் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், வீட்டில் ஒருவர் மரணித்தால் என்ன ஈம காரியங்கள் செய்வோமோ அதேபோல இறுதி சடங்குகள் செய்வதென அருள்வேல் குடும்பத்தினர் முடிவுசெய்தனர்.

    தொடர்ந்து உயிரிழந்த நாய்க்கு மாலை அணிவித்தும், வீட்டில் விளக்கு ஏற்றிவைத்தும் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

    பின்னர் இன்று காலை அந்த நாய் அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்குள்ள சுடுகாட்டில் வளர்ப்பு நாய் ஷேடோ அடக்கம் செய்யப்பட்டது. 

    • இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள் மட்டுமல்ல விஸ்வகர்மா தினமும் ஆகும்.
    • திருமாவளவன், அக்டோபர் 2 மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும்.

    கோவை:

    பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா பங்கேற்றார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தேர்தலின்போதே முதல் 100 நாட்களுக்கு பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. அரசு நிறைவேற்றும். ஆகவே நீங்கள் இந்த அரசை பற்றி எடை போட 100 நாட்கள் போதுமானதாக இருக்கும் என பிரதமர் மோடி கூறி இருந்தார். ஏறக்குறைய இந்த 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன. அதில் உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.3 லட்சம் கோடிக்கான திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    தமிழக பா.ஜ.க.வில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. எங்களுக்கு 31 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதனை 1 கோடியாக உயர்த்த உள்ளோம். கிராமப்புறங்களில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் ஆர்வத்துடன் பாரதிய ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள்.

    மத்திய மந்திரி நிதின்கட்கரி, சென்னை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணியை நேரடியாக பார்வையிட வந்திருந்தார். மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைக்காக எவ்வளவு கோடி ஆனாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறது. ஆனால் நிலம் கையகப்படுத்தி கொடுப்பதில் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கையப்படுத்திக் கொடுக்கவில்லை. இதனால் நினைத்த வேகத்தில் பணியை செய்ய முடியவில்லை என தெரிவித்து இருந்தார். ரெயில்வே மந்திரியும் இதேபோல கருத்தை தெரிவித்து உள்ளார்.

    இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள் மட்டுமல்ல விஸ்வகர்மா தினமும் ஆகும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் என்பது தங்கம், வெள்ளி, மர வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல கட்டிட தொழிலாளர், சைக்கிள் பழுதுபார்ப்பவர் என மொத்தம் 21 தொழில் செய்வோருக்கு பயிற்சி அளித்து உபகரணங்கள், நிதி உதவி செய்யும் திட்டமாகும். இந்த திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழக அரசு திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பவர்கள் இந்த திட்டத்தில் சாதி வந்து விடும். அதனால் இந்த திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறுகிறார்கள். பல லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறும் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நான் கோரிக்கையாக வைக்கிறேன்.

    நேற்று திருமாவளவன், முதலமைச்சரை நேரில் சந்தித்துள்ளார். திருமாவளவன், அக்டோபர் 2 மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும். அதனை எதிர்பார்க்கிறோம் என சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் சொல்லவில்லை. இதனால் அக்டோபர் 2 மாநாடே மக்களை ஏமாற்றுகிற செயல். இன்று மாநில அரசு 500 கடைகளை மூடி உள்ளது என கூறி உள்ளது. ஆனால் 1000 கிளப்களை திறந்துள்ளீர்கள். இது எல்லாவிதத்திலும் மக்களை முழுமையாக ஏமாற்றும் மோசடி அணுகுமுறை ஆகும்.

    தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமே. அதற்கு சமீபத்திய உதாரணம் பீகார் மாநிலம் ஆகும். பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    பாரதிய ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. சேருமா என்றால் அதற்கு நான் பதில் அளிக்க முடியாது. எங்கள் கூட்டணியில் இப்போது பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை உள்ளன. கூட்டணியில் அ.தி.மு.க.வை சேர்ப்பதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார் என்றால் அது பற்றி எனக்கு தெரியாது. புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பற்றி கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும்.

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்னை பற்றி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற தகுதி இல்லாதவர். நான் காலாவாதியாகிவிட்டேன் என கூறியிருக்கிறார். அவர் என்னைவிட 15 வயது மூத்தவர். எனக்கு 67 வயது ஆகிறது. அவர் மகன் இறந்ததால் தற்போது சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார். அவர் இதுபோன்று பேசினால் அரசியலில் இருந்து காலாவதியாகி விடுவார். ராகுல்காந்தி பற்றிய நான் தெரிவித்த கருத்துக்காக கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். நான் உண்மையை தான் பேசி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×