என் மலர்
கோயம்புத்தூர்
- நடிகர் சத்யராஜின் சகோதரியான அபராஜிதா பண்ணை வீட்டில் யானைகள் தண்ணீரை குடித்து விட்டு செல்வது வழக்கம்.
- இறந்தது ஒரு வயதுடைய காட்டு யானை என்பதும், இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது.
கவுண்டம்பாளையம்,
கோவை பாலமலை அருகே நாயக்கன்பாளையம் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் நடிகர் சத்யராஜின் சகோதரியான அபராஜிதாவுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு வெளியே ஒரு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது.
வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் அவ்வப்போது இங்கு வந்து தண்ணீரை குடித்து விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இந்த கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த காவலாளி நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார்.
அப்போது தொட்டிக்குள் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான காவலாளி, சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர் செல்வராஜ், தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தொட்டிக்குள் கிடந்த குட்டி யானையை பார்த்தனர்.
அப்போது தொட்டிக்குள் கிடந்த யானை ஒரு வயதுடைய காட்டு யானை என்பதும், இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது. காட்டு யானைகளுடன் தண்ணீர் குடிக்க வந்த போது தவறி தொட்டிக்குள் விழுந்து இறந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மண்டல உதவி பாதுகாவலர் செந்தில்குமார், உள்ளிட்ட வன அலுவலர்கள், மருத்துவர் சுகுமார் விரைந்து வந்தனர்.
தொடர்ந்து இறந்த குட்டி யானையின் உடலை தொட்டியில் இருந்து வெளியே எடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக அந்த தொட்டி உடைக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து குட்டி யானை உடற்கூராய்வு செய்யப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே இன்று அதிகாலை நேரத்தில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி பண்ணை வீட்டுக்கு வந்தன. அந்த யானைகள் இறந்த குட்டி யானையை தேடி வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த யானைகள் வீட்டுக்குள் நுழையாதவாறு வனத்துறையினர் தடுத்து பட்டாசு வெடித்து, அந்த யானைகளை வனத்திற்குள் விரட்டினர்.
இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில் பண்ணை வீட்டுக்கு வெளியே தண்ணீர் தொட்டி உள்ளதால் யானைகள் அடிக்கடி இங்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
அவ்வாறு வந்த ஒரு குட்டி யானை தான் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளது. அந்த குட்டி யானையை தேடி நேற்று 11-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. அந்த யானைகளும் இந்த தண்ணீர் தொட்டியில் நீர் அருந்துவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளன என்றனர்.
- ரெங்லால் மீனா கடந்த ஒரு வாரமாக தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- 2 நாட்கள் ஆகியும் வீட்டின் கதவு திறக்காமல் இருந்தது.
கோவை,
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரெங்லால் மீனா (25). இவர் சோமனூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் பராமரிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இவர் கடந்த ஒரு வாரமாக தலைவலியால் அவதிப்பட்டு போத்தனூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் இவர் வீட்டிற்க்கு அருகில் உள்ள கடையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் 2 நாட்கள் ஆகியும் வீட்டின் கதவு திறக்காமல் இருந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கரும்மத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுரேஷ்குமாரின் செல்போனை வாலிபர் திருடினார்.
- சுரேஷ்குமார் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு மது வாங்குவதற்காக டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியது. அப்போது ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது43) என்பவரும் அங்கு மது வாங்குவதற்காக டாஸ்மாக் கடையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுரேஷ்குமாரின் செல்போனை திருடி விட்டு தப்பித்து ஓடி விட்டார். இதுகுறித்து சுரேஷ்குமார் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் ராயபுரம் பகுதியை சேர்ந்த தீப்ஸ்வர் என்ற பிரில் (31) என்பவர் தெரியவந்தது. அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதன் அடிப்படையில் வழக்குகள் விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கேசவமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்றார்.
- அரை பவுன் தங்க கம்மல் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை மாயமாகி இருந்தது.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை காந்தி நகரை சேர்ந்தவர் கேசவமுருகன் (வயது60). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இணை செயலாளராக உள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்றார். பின்னர் நேற்று இரவு மீண்டும் அவர் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு வீட்டில் பீரோவில் இருந்த அரை பவுன் தங்க கம்மல் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை மாயமாகி இருந்தது.
இவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர், வீட்டிற்குள் புகுந்து நகை பணத்தை திருடியது தெரியவந்தது.
கேசவமுருகன் இதுகுறித்து வால்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக போலீசார் வீட்டில் சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் பார்வையிட்டு, விசாரித்து வருகின்றனர்.
- குழந்தை திடீரென கால் இடறி சாலையில் விழுந்து விட்டது.
- பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி சத்தியபிரியா(வயது22).
இவர்களுக்கு 2½ வயதில் சுபிக்ஷா என்ற மகள் இருந்தார். சம்பவத்தன்று, சத்தியபிரியா தனது மகளுடன் அருகே உள்ள கடைக்கு சென்றார்.
பின்னர் மகளை தூக்கி கொண்டு நடந்து வந்தார். அப்போது குழந்தை தன்னை இறக்கி விடுமாறும், தான் நடந்து வருவதாகவும் கூறியது. இருப்பினும் தாய் இறக்கி விட மறுத்தார்.
ஆனால் குழந்தை தொடர்ந்து அடம்பிடித்ததால் சத்தியபிரியா மகளை இறக்கி விட்டார். குழந்தை நடந்து சென்று கொண்டிருந்தது. வீட்டின் அருகே வந்த போது குழந்தை திடீரென கால் இடறி சாலையில் விழுந்து விட்டது.
இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியான சத்தியபிரியா குழந்தையை தூக்கி கொண்டு அருகே இருந்த கிளினிக்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு குழந்தை பார்த்த டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து பெற்றோர் குழந்தையை அழைத்துக் ெகாண்டு, சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைகேட்டதும் பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கு இருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று திமுக அரசு கனவு காண்பதாக அண்ணாமலை கூறி உள்ளார்.
கோவை:
கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் மாநில பா.ஜ.க தொழில்துறை பிரிவு துணைத் தலைவராக உள்ளார்.
இவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து கோவை கணபதி புதூரை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சமூக வலைதளத்தில் செல்வகுமார் பதிவிட்டு வரும் கருத்துக்கள் இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக புகாரில் கூறப்பட்டு இருந்தது.
புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பதற்றத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பா.ஜ.க நிர்வாகி செல்வக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பாலாஜி உத்தம ராமசாமி கூறும்போது, நாளை மறுநாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடும் நேரத்தில் அச்சுறுத்தல் காரணமாக பா.ஜ.க நிர்வாகியை கைது செய்துள்ளனர். இதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்றார்.
கோவையில் பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:-
தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வக்குமாரை கைது செய்துள்ள திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வதன் மூலம், ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று கனவு காண்கிறது திமுக அரசு. இதற்கெல்லாம் அஞ்சுபவர்களில்லை தமிழக பாஜக தொண்டர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலகாலேஸ்வரர் கோவில் குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது.
- இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
கோவை கோவில்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது. இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற 22-ந்தேதி குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் அருண் பிரசாத் பிரகாஷ் கூறியதாவது:-
குரு பகவான் வருகிற 22-ந் தேதி இரவு 11.26 மணிக்கு மேல் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். குரு பெயர்ச்சியையொட்டி இரவு 9 மணிக்கு சிறப்பு யாக பூஜை தொடங்கப்பட்டு பூஜைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு குருபகவானுக்கு சிறப்பு கலச அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையுடன் இரவு 11.26 மணிக்கு குரு மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையுடன் குரு பெயர்ச்சி விழா தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. குரு பெயர்ச்சியையொட்டி மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யலாம். விழாவில் ரூ.400 செலுத்தி பக்தர்கள் பங்கு பெறலாம்.விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் மற்றும் லட்சார்ச்சனை பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் அருண் பிரகாஷ், தக்கார் வெற்றிச்செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு சிறு அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தப்பட்டு இரு மாநிலங்களுக்கிடையே பயணிக்கும் கொரோனா நோயாளிகளின் விவரங்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
கோவை:
கேரளாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதையடுத்து அங்கிருந்து கோவைக்கு வருபவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால், முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள அரசு விதித்துள்ளது.
கேரளாவில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் பொதுமக்களை கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- கேரளாவில் இருந்து நோய்த்தொற்று அறிகுறிகளுடன் வருபவர்களின் விவரங்களைச் சேகரிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு சிறு அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தப்பட்டு இரு மாநிலங்களுக்கிடையே பயணிக்கும் கொரோனா நோயாளிகளின் விவரங்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் கேரளாவில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க முடிகிறது என்றனர்.
இதற்கிடையே நேற்று கோவை மாவட்டத்தில் மட்டும் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிணத்துக்கடவு தாலுகா சூலக்கல் பகுதியில் உள்ள தனியார் இரும்பு கம்பி உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் 53 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல வரதனூர், செங்குட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, சோழனூர் பகுதியில் தலா ஒருவர் என 4 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கிணத்துக்கடவு பகுதியில் மட்டும் ஒரே நாளில் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு தடுப்பு நடவடிக்ககைள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
- சிறுமியையும் அவரது தந்தையையும் தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
- இதயைடுத்து சிறுமியின் தாய் காரமடை போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சத்யா (வயது 32). இவர்களது வீட்டின் அருகே முருகேசன் (20) என்பவர் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று சத்யாவின் 12 வயது மகள் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த முருகேசன், சிறுமியிடம் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என கேட்டு தகராறு செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார். அவரது தாய் முருகேசனை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தகாத வார்த்தைகளால் பேசி சத்யாவை தாக்கினார். பின்னர் சிறுமியையும் அவரது தந்தையையும் தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து சிறுமியின் தாய் காரமடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
- உக்கடம் பஸ் நிலையம் வரும்போது 2 வாலிபர்கள் குடிபோதையில் பஸ்சில் ஏறினர்.
- போத்தனூர் போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் துரைமுருகன் புகார் செய்தார்.
குனியமுத்தூர்,
கோவை கிணத்துக்கடவு அருகே நாலாட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன் (23) இவர் காந்திபுரம் -வெள்ளலூர் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று காந்திபுரத்தில் இருந்து வெள்ளலூருக்கு பஸ் புறப்பட்டது. அப்போது உக்கடம் பஸ் நிலையம் வரும்போது இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் பஸ்சில் ஏறினர்.
பஸ்சில் ஏறியது முதல் இருவரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசிக்கொண்டு பிறருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். துரைமுருகன் அதை கண்டிக்கும் போது, அவரை இருவரும் சேர்ந்து மிரட்டினர். பஸ் பயணம் செய்பவர்களிடமும் தகாத வார்த்தைகளால் இருவரும் பேசி வந்தனர். போத்தனூர் ஜி.டி.டேங்க் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது இருவரும் எல்லை மீறி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி டிரைவர் பஸ்சை திருப்பி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தார். போலீஸ் நிலையத்திற்குள் பஸ் செல்வதை கண்டதும் ,ஒரு வாலிபர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். இன்னொருவரும் இறங்க முயற்சிக்கும் போது பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் துரைமுருகன் புகார் செய்தார்.
போலீஸார் அந்த நபரிடம் விசாரணை செய்தபோது, அவர் சுந்தராபுரம் சில்வர் ஜூப்ளி விதியை சேர்ந்த ராகுல் (18)என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய பிரசாந்த் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பயணிகளுடன் பஸ் ஒன்று, போலீஸ் நிலையத்துக்குள் வந்து நின்ற சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
- விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.
- முதல் குற்றத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகராட்சியில் திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மனித கழிவுகள், கழிவுநீர் மற்றும் பிறக்கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை தடுக்க பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் வினோத் கூறியதாவது:-
மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டு செல்லத்தக்க வாகன உரிமம், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.
இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மனித கழிவுகள், கழிவுநீரை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. உரிய உரிமம் பெற்றவர்கள் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி நேரம், வழி ஆகியவற்றை பின்பற்றி குறிப்பிடப்பட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.
உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன் அந்த கருவி செயல்படுவதையும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவை அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும்.
உரிமத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் முதல் குற்றத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம். 2-வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம். தொடர் குற்றங்களை செய்தால் உரிமத்தை இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்வதுடன் குறிப்பிட்ட கருவி அல்லது உபகரணங்கள் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் அல்லது பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை உள்ளது.இதேபோல மேட்டுப்பாளையம் நகராட்சியில் அகற்றப்படும் கழிவுகளை நகராட்சி நிர்வாகம் அறிவிக்கப்படும் இடங்களில் மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும். கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பதிவு செய்யாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் குற்றவியல் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மணிகண்டன் குடிேபாதையில் காவியாஞ்சலி வயிற்றில் மிதித்தார்.
- போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மதுக்கரை அருகே உள்ள முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி காவியாஞ்சலி (21). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரிஸ்வந் (3) என்ற மகன் உள்ளார்.
இந்தநிலையில் காவியாஞ்சலி 3 மாத கர்ப்பமாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வேலைக்கு சென்று விட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதன் காரணமாக கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தனது மனைவி கர்ப்பிணி என்று கூட பாராமல் அவரது வயிற்றில் மிதித்தார். இதில் வலி தாங்க முடியாமல் காவியாஞ்சலி சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்டு செட்டிப்பாளையம் அவ்வை நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருந்த காவியாஞ்சலிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது காவியாஞ்சலிக்கு கரு கலைந்தது தெரிய வந்தது.
இது குறித்து அவர் தனது கரு கலைந்ததற்கு காரணமான தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






