search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தவறி விழுந்து 2½ வயது பெண் குழந்தை பலி
    X

    கோவையில் தவறி விழுந்து 2½ வயது பெண் குழந்தை பலி

    • குழந்தை திடீரென கால் இடறி சாலையில் விழுந்து விட்டது.
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி சத்தியபிரியா(வயது22).

    இவர்களுக்கு 2½ வயதில் சுபிக்ஷா என்ற மகள் இருந்தார். சம்பவத்தன்று, சத்தியபிரியா தனது மகளுடன் அருகே உள்ள கடைக்கு சென்றார்.

    பின்னர் மகளை தூக்கி கொண்டு நடந்து வந்தார். அப்போது குழந்தை தன்னை இறக்கி விடுமாறும், தான் நடந்து வருவதாகவும் கூறியது. இருப்பினும் தாய் இறக்கி விட மறுத்தார்.

    ஆனால் குழந்தை தொடர்ந்து அடம்பிடித்ததால் சத்தியபிரியா மகளை இறக்கி விட்டார். குழந்தை நடந்து சென்று கொண்டிருந்தது. வீட்டின் அருகே வந்த போது குழந்தை திடீரென கால் இடறி சாலையில் விழுந்து விட்டது.

    இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியான சத்தியபிரியா குழந்தையை தூக்கி கொண்டு அருகே இருந்த கிளினிக்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு குழந்தை பார்த்த டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து பெற்றோர் குழந்தையை அழைத்துக் ெகாண்டு, சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைகேட்டதும் பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கு இருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×