என் மலர்
கோயம்புத்தூர்
- கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு ரெயில் மற்றும் பஸ்களில் மாறி மாறி பயணம் செய்து கடத்தி வந்தது தெரியவந்தது.
- போலீசார் மூர்த்தியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள 9½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அரூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அரூர் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம்படி ஒரு நபர் கையில் பையுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
அதில் தேனி மாவட்டம் தேவராம் சவுடம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மூர்த்தி (வயது53) என்பவர் பையில் 9½ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவர் இந்த கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு ரெயில் மற்றும் பஸ்களில் மாறி மாறி பயணம் செய்து கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் மூர்த்தியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள 9½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
- தூண்களின் மேல் ஏறி விளம்பர பேனர் பொருத்தும் பணியில் சேலத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
- கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது.
கோவை:
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 60 அடி உயரத்திற்கு இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் பேனர் பொருத்தும் பணி நடைபெற்றது.
இந்த தூண்களின் மேல் ஏறி விளம்பர பேனர் பொருத்தும் பணியில் சேலத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது வீசிய பலத்த காற்று காரணமாக அந்த இரும்பு தூண்கள் வளைந்து, சிறிது நேரத்தில் உடைந்து தரையில் விழுந்தது. இதில் இரும்பு தூண்களில் ஏறி வேலை பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்களும் சிக்கினர். இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த குமார், சேகர், குணசேகரன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவை மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுவது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது. ஊராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து முறைப்படி அனுமதி பெற வேண்டும்.
மேலும், விளம்பர பேனர்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு வழிகாட்டல் நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும், போலீசாரின் பரிந்துரையின்படியும் அனுமதி பெற வேண்டும்.
கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் இணைந்து தனி குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டம் தெக்கலூர் - நீலம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருமத்தம்பட்டி பகுதியில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இன்றி விளம்பர பலகை அமைக்கும்போது, இரும்பு கம்பம் சரிந்து விழுந்து சேலத்தை சேர்ந்த 3 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக, அனுமதியின்றி விளம்பர பலகை அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளர் மீதும், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் மீதும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.
- விளம்பர பலகை அமைக்க எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
கருமத்தம்பட்டி:
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில் இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடந்தது. இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டன. அதில் பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கான ஒப்பந்த பணியை சேலத்தை சேர்ந்த பாலாஜி, பழனிசாமி ஆகியோர் எடுத்து செய்து வந்தனர்.
அதில் பாலாஜியின் மேலாளர் அருண்குமார் மேற்பார்வையில் 7 தொழிலாளர்கள் இரும்பு தூண்களில் ஏறி விளம்பர பேனரை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இரும்புத்தூண் 60 அடி உயரமாக இருந்தபோதிலும் அதில் பாதுகாப்பு ஏற்பாடு ஏதும் செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென்று காற்று வீசியதால், இரும்பு கம்பிகள் உடைந்து விழுந்தன. இதனால் அந்த கம்பிகள் மீது நின்று வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்களும் அந்த இரும்பு தூண்களுடன் கீழே விழுந்தனர். இதில் அவர்கள் மீது இரும்பு தூண்கள் விழுந்து அமுக்கியது.இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்த சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்முருகன் (வயது 38), குமார் (52), குணசேகரன் (52) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், விளம்பர பலகை அமைக்க எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அனுமதி இன்றி பேனர் அமைத்தல், பாதுகாப்பு உபகரணங்கள் அமைக்காதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலாஜி, பழனிசாமி, அருண்குமார் மற்றும் நில உரிமையாளர் ராமசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் ஒப்பந்ததாரர் பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரரின் மேலாளர் அருண்குமாரை (27) போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பாலாஜி, நில உரிமையாளர் ராமசாமி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.மேலும் அந்த இடத்தில் விளம்பர பேனர் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதால், அதை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரும்பு தூண்கள், விளம்பர பலகை அனைத்தும் அங்கிருந்து அகற்றப்பட்டது.
- கோவை மாநகரில் 26 வார்டுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது.
- வரும் நாட்களில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
கோவை:
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாக குறைந்துள்ளதால் வருகிற நாட்களில் மாநகரில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகரில் 26 வார்டுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது.
49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
மார்ச்சில் அணையின் நீர்மட்டம் 6 அடியாக சரிந்தது. அதை தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் வந்தது.
தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் கடந்த வாரத்தில் 3.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று நிலவரப்படி 2.85 அடியாக குறைந்தது.
இதனால் குடிநீருக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு 4.50 கோடி லிட்டரில் இருந்து 3.60 கோடி லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
ஜூன் இறுதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தொடங்கி விட்டால் அணையின் நீர்மட்டம் உயரும்.
பின்னர் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும்.
மாநகரில் சிறுவாணி நீர் வினியோகிக்கும் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கடந்தாண்டை போல பில்லூர் குடிநீர் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- முதலீடு செய்து, தொகை திரும்பப் பெறாமல் சுமார் 700 பேர் உள்ளனர்.
கோவை,
கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் இயங்கி வந்த சீனிவாசப்பெருமாள் பைனான்ஸ் கார்பரேசன்ஸ் மற்றும் ரங்கே கவுடர் வீதியில் இயங்கி வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பண்ட்ஸ் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, தொகை திரும்பப் பெறாமல் சுமார் 700 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதலீட்டாளர்களுக்கு டான்பிட் சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் முதலீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. எனவே முதலீட்டாளர்கள் தங்களது தொகையினை பெறுவதற்கு டெபாசிட் ரசீது, ஆதார்,வாக்காளர் அட்டை, புகைப்படம், வங்கி புத்தகத்தின் முதல்பக்கம் ஆகியவற்றின் நகல் ஆவணங்களை கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி.யிடம் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- இம்ரான்கான் தனது கள்ளக்காதலியை சந்தித்து அழைத்து செல்வதற்காக கோவை வந்தார்.
- உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் இம்ரான்கான்(வயது26). கூலி தொழிலாளி.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு அவரது நண்பர் ஒருவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்தனர்.
இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையில், இம்ரான்கானின் கள்ளக்காதலி மட்டும் குடும்பத்தினரை பிரிந்து கோவைக்கு தனியாக வந்தார்.
அவர் உக்கடம் பகுதியில் வீடு எடுத்து தங்கியதாக தெரிகிறது. இதற்கிடையே தனது கள்ளக்காதலியை மறக்க முடியாமல் இம்ரான்கான் தவித்து வந்தார்.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இம்ரான்கான் தனது கள்ளக்காதலியை சந்தித்து அழைத்து செல்வதற்காக கோவை வந்தார்.
பின்னர் அவரை நேரில் சந்தித்து தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவர் வர மறுத்து விட்டார். இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இம்ரான்கான் மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார்.
இதனையறிந்த அவரது தந்தை முகமத் ஹரூன் தனது மகனை அழைத்து செல்ல கோவை வந்தார்.
பின்னர் இருவரும் உக்கடம் பஸ் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து சிங்காநல்லூர் சென்று மதுரை செல்வதற்காக புறப்பட்டனர்.
அப்போது உக்கடம் பஸ் நிலையத்தில் வைத்து இம்ரான்கான் அவரது தந்தைக்கு தெரியாமல் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.
பின்னர் இருவரும் பஸ்சில் ஏறி மதுரைக்கு சென்றனர். மதுரை அருகே செல்லும் போது, இம்ரான்கான் விஷம் குடித்த விவரத்தை தனது தந்தையிடம் கூறினார்.
இதை கேட்டு அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். அவர் உடனே பஸ்சை நிறுத்தி மகனை பேரையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த திருமணம் மூலம் குறைவில்லா சந்தான பாக்கியமும், கன்னிகா தானம் செய்த பலனும் கிடைக்கும்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த தோடு, மொய் பணமும் எழுதினர்.
கோவை,
மரங்களின் ராஜா என்று அழைக்கப்படும் அரச மரத்தை சிவ பெருமானாகவும், மரங்களின் ராணியான வேப்பமரத்தை அம்பாளாகவும், பக்தர்கள் பாவித்து, அரச, வேம்பு மரத்திற்கு திருக்கல்யாணம் செய்து வைத்து வருகின்றனர்.
அப்படி செய்வதன் மூலம் குறைவில்லா சந்தான பாக்கியமும், கன்னிகா தானம் செய்த பலனும் கிடைக்கும். அத்துடன் மாதம் மும்மாரி மழை பெய்யும். பெண்களுக்கு ஏற்படும் மாங்கல்ய தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
இப்பலன் அனைவருக்கும் சென்று சேர கோவை நேரு நகர் மேற்கு பகுதியில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர் கோவிலில் அரச, வேம்பு திருக்கல்யாண நிகழ்ச்சியும், ஐம்பொன் விக்ரக பிரதிஷ்டையும் நேற்று நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள அரச வேம்பு மரத்தின் முன் வேள்விச்சாலை அமைத்து, வேதமந்திரங்கள் முழங்க மங்கல பொருட்கள் சமர்பித்து மஞ்சள் நாணை சிவாச்சாரியார்கள், பொதுமக்கள் அனைவரும் வேப்பமரத்திற்கு அணிவித்தனர். வேப்பமரத்தில் அணிவித்த மலர் மாலைகளை, அரசமரத்திற்கு மாற்றி அணிவித்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த தோடு, மொய் பணமும் எழுதினர்.
- கல்லூரி மாணவி அருகே இருந்த பாறையை பிடித்து உயிர் தப்பினார்.
- வால்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கோவை:
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சாஹர் (வயது21). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், இருகூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர்.
கடந்த 29-ந் தேதி காதலர்கள் 2 பேரும் வால்பாறை அருகே சோலையாறு எஸ்டேட்டில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு நீர்வீழ்ச்சியின் அருகே காதலர்கள் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாஹர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சியான காதலி, காதலனை காப்பாற்ற முயன்றபோது, அவரும் தண்ணீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டார்.
இதில் கல்லூரி மாணவி அருகே இருந்த பாறையை பிடித்து உயிர் தப்பினார். ஆனால் சாஹர் நீர்வீழ்ச்சி தடாகத்தில் உள்ள சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து வால்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, கல்லூரி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு இன்று கல்லூரி மாணவர் சாஹரின் உடல் பிணமாக மீட்கப்பட்டுள்ளது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
- பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவில் புனரமைப்பு பணி நடந்தது.
- கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கால்கோள் விழாவுடன் தொடங்கியது.
வடவள்ளி,
கோவை மருதமலை சாலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. மிகவும் தொன்மையான இந்த கோவில் குமரன் குட்டை கருப்பராயன் என்று அழைக்கப்படுவது உண்டு.
மருதமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் முதலில் கருப்பராயனை வழங்கி சென்று வந்தனர். காலப்போக்கில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதன் மூலம் கோவில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.
மேலும் பக்தர்கள் வழிபட முடியாத அளவிற்கு பல்கலைகழக மதில் சுவர் எழுப்பப்பட்டது. இதையடுத்து மக்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து கோவிலை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவில் புனரமைப்பு பணி நடந்தது.
தற்போது பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கால்கோள் விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து முதல் கால யாக பூஜை, கணபதி ஹோமம், நவ வேள்வியும் நடந்தது. தொடர்ந்து 2-வது கால யாகம், கருப்பராயன் வேள்வியும், கருவறை உயிர் பூப்பு பூசை, கருப்பராயன் திருமேனி நிலை நிறுத்துதல் நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. 12 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து கருப்பராயன் சுவாமிக்கு நன்னீராட்டு மற்றும் அலங்காரம்நடந்தது. கோவை மாவட்டத்தில் முதல்முறையாக கருப்பராயன் கோவில் குடமுழுக்கு விழாவை பெண்கள் புனித நீர் ஊற்றி செய்து வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது. இதை பல்கலைக்கழக ஊழியர்கள் பலரும் வரவேற்று உள்ளனர்.
- ஆட்டு இறைச்சியை கம்பியிலிருந்து எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது.
- பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பெரிய மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி அங்காளஈஸ்வரி. இவர்களது மகன் பால்பாண்டி (வயது 16). அந்த அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
அங்காளஈஸ்வரி ரங்கசாமி என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். தோட் டத்தில் உள்ள ஆடு இறந்து போனது. இதனையடுத்து ரங்கசாமி ஆட்டை அங்காள ஈஸ்வரியிடம் கொடுத்து அவர் ஆட்டை உப்பு கண்டம் போட்டு வீட்டில் உள்ள கம்பியில் காய வைத்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வம், அவரது மகன் பால்பாண்டி ஆகியோர் கம்பியில் காய வைக்கப்பட்டு இருந்த ஆட்டு இறைச்சியை எடுத்தனர். அப்போது திடீரென 2 பேரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உயிருக்கு போராடிய செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டுமே மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
- மலை மீது பக்தர்கள் வீசிச்சென்ற பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. அங்கிருந்து 6 மலைகளை தாண்டி 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.
அடர்ந்த வனப்பகுதியான வெள்ளியங்கிரி மலையில் மழை காலத்தில் அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்படும். எனவே மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டுமே மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவிலில் இருந்து மலை மீது ஏறிச் செல்ல தொடங்கும் இடத்தில் உள்ள கேட் மூடப்பட்டது. அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதில் பதிவாகும் காட்சிகளை வனத்துறை உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி பக்தர்கள் மலை ஏறி செல்வதை தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வெள்ளியங்கிரி மலையில் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். தற்போது மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலை மீது பக்தர்கள் வீசிச்சென்ற பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் வெள்ளியங்கிரி மலையில் சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறிவிடும். திடீரென்று மழை, சூறாவளி காற்று வீசும். வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். அது நேரத்தில் பக்தர்கள் சென்றால் போதிய பாதுகாப்பு இருக்காது.
எனவே தான் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை. அதை மீறி பக்தர்கள் யாரும் மலையேறி செல்ல வேண்டாம். அதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி மலையேறும் பக்தர்கள் மீது வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர்.
- பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.
கோவை:
கோவை பெரியக்கடை வீதியை சேர்ந்தவர் ஜவகர் சுப்பிரமணியம். புளி வியாபாரி. சமூக ஆர்வலரான இவர் குளங்கள் தூர்வாருதல், மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ஜவகர் சுப்பிரமணியம் அவரது மூத்த மகள் சுவர்ண பிரபாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் போது அதில் திருமண நிகழ்ச்சிக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பணமோ, பொருளோ தர வேண்டாம். அதற்கு மாற்றாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்களை பரிசாக வழங்குங்கள் என அச்சடித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
கடந்த புதன்கிழமை மாலை ராம்நகரில் உள்ள மண்டபத்தில் ஜவகர் சுப்பிரமணியத்தின் மகள் சுவர்ண பிரபா- விக்ரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மண்டபத்தில் புத்தகம் பெறுவதற்கு என தனியாக அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர். மேலும் பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.
இந்த புத்தகங்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பாட புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், தேர்வுகள் எதிர்கொள்ளும் வகையிலான புத்தகங்கள், கவிதை, இலக்கணம் தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த புத்தகங்களை ஜவகர் சுப்பிரமணியம் கலெக்டரின் அனுமதி பெற்று ஆனைகட்டி, வால்பாறை உள்ளிட்ட மலைவாழ் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்போவதாக தெரிவித்து உள்ளார்.






