search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறுவாணி அணை நீர்மட்டம் 2.85 அடியாக சரிவு
    X

    சிறுவாணி அணை

    சிறுவாணி அணை நீர்மட்டம் 2.85 அடியாக சரிவு

    • கோவை மாநகரில் 26 வார்டுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது.
    • வரும் நாட்களில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

    கோவை:

    சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாக குறைந்துள்ளதால் வருகிற நாட்களில் மாநகரில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் 26 வார்டுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது.

    49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.

    பிப்ரவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.

    மார்ச்சில் அணையின் நீர்மட்டம் 6 அடியாக சரிந்தது. அதை தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் வந்தது.

    தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் கடந்த வாரத்தில் 3.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று நிலவரப்படி 2.85 அடியாக குறைந்தது.

    இதனால் குடிநீருக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு 4.50 கோடி லிட்டரில் இருந்து 3.60 கோடி லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜூன் இறுதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தொடங்கி விட்டால் அணையின் நீர்மட்டம் உயரும்.

    பின்னர் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும்.

    மாநகரில் சிறுவாணி நீர் வினியோகிக்கும் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கடந்தாண்டை போல பில்லூர் குடிநீர் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×