என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    மறைமலை நகரில் இரும்பு கடையில் சிக்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பாவேந்தர் சாலையை சேர்ந்தவர் வீரா (வயது 37). இவர் அதே பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது கடையின் ஷட்டரை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீராவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடைக்கு விரைந்து வந்த வீரா திருடனை கையும் களவுமாக பிடித்து மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் திருடனை விசாரித்தபோது அவன் சென்னை கொத்தவால்சாவடி பகுதியை சேர்ந்த முருகன் (வயது 58) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 50 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 275 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,538 பேர் உயிரிழந்துள்ளனர். 602 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 818 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,265 பேர் உயிரிழந்துள்ளனர்.
    அச்சரப்பாக்கம் அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 58). டிராக்டர் டிரைவர். இவர் சென்னை செம்பியத்தில் இருந்து நேற்று இரவு புதிதாக வாங்கப்பட்ட டிராக்டர் ஒன்றை ஓட்டிக் கொண்டு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அச்சரப்பாக்கம் அருகே உள்ள அரப்பேடு, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணியளவில் டிராக்டர் வந்து கொண்டு இருந்தது.

    அப்போது பின்னால் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் டிராக்டர் நொறுங்கி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பஸ்சின் முன் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டு முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து பலியான ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கிருந்த மீன்கள் கடலுக்குள் சென்றதால் மீன்கள் சிக்கவில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    மாமல்லபுரம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையோர பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கடல் மீன்கள் அனைத்தும் வெள்ளத்தால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது.

    இதனால் தற்போது பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் வலையில் உணவுக்கு பயன்படாத சிறிய வகை மீன்கள் மட்டுமே பிடிபடுகிறது.

    இந்த மீன்களை விற்கவும், பயன்படுத்தவும் முடியாததால் மீனவர்கள் அதனை சாலையோரத்தில் குவியலாக கொட்டிவிட்டு செல்கிறார்கள். நெத்திலி மீனை மட்டும் வீட்டிற்கு எடுத்து செல்கிறார்கள்.

    இதனால் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வலை வீசி மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் போதிய வருமானம் இல்லாததால் தவிக்கிறார்கள். பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கிருந்த மீன்கள் கடலுக்குள் சென்றதால் மீன்கள் சிக்கவில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக வாகனங்கள் அனைத்தும் சுங்க கட்டணம் செலுத்தாமல் அனுமதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானதும் மீண்டும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    செங்கல்பட்டு:

    திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை கார் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அதில் சென்னையை சேர்ந்த 3 பேர் பயணம் செய்தனர்.

    அதிகாலை 6 மணி அளவில் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே உள்ள புலிப்பாக்கம் பாலத்தில் கார் வந்து கொண்டு இருந்தது.

    அப்போது கார் மீது லாரி உரசியதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் புலிப்பாக்கம் பாலத்தில் மோதி நின்றது.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் காரில் இருந்த வர்கள் லேசான காயத்துடன் தப்பினர். காரை உடனடியாக இயக்க முடியாததால் கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்துக்குள்ளான கார் அப்புறப்படுத்தப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி வந்தன.

    இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக வாகனங்கள் அனைத்தும் சுங்க கட்டணம் செலுத்தாமல் அனுமதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானதும் மீண்டும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    மாமல்லபுரம் நாட்டிய விழா ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களான வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட சிற்பங்களை காண ஆண்டு இறுதியில் அதிக அளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். அப்படி வரும் வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள ஓட்டல், தங்கும் விடுதிகளில் தங்கி, பல்லவர் கால சிற்பங்களை சுற்றி பார்க்கின்றனர்.

    மேலும் அவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பாரம்பரிய கலைகளை கண்டு ரசிக்க ஆர்வம் காட்டுவது வழக்ககமாக உள்ளது. மேலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரவும், அவர்களை உற்சாகபடுத்தவும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் மத்திய சுற்றுலாத் துறை போன்ற இரு துறைகளும் இணைந்து, 1992-ம் ஆண்டில் இருந்து டிசம்பர், ஜனவரி மாதங்களில் நாட்டிய விழாவை கோலாகலமாக நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டிய விழா நடத்தப்படவில்லை.

    ஆரம்ப கால கட்டத்தில், அர்ச்சுனன் தபசு சிற்பம் முன் நடத்தப்பட்டு வந்தது. பின்னர், 2012-ம் ஆண்டு முதல், கடற்கரை கோவில் நுழைவு வாயில் இடது பகுதியில் உள்ள பசுமையான புல்வெளி பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இடம், தற்போது மாவட்ட திட்ட குழுமம் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது, அந்த இடம் பசுமையான புல்வெளி பகுதியாக மேம்படுத்தி தொல்லியல் துறை நிர்வாகம் பராமரித்து வருகிறது. மேலும், நாட்டிய விழா நடத்த சுற்றுலாத்துறை நிர்வாகம் ஆண்டுதோறும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்று நடத்தி வருகிறது. அதே போல், இந்த ஆண்டும் சுற்றுலாத்துறை சார்பில் தொல்லியல் துறையிடம் அனுமதி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நடத்த அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் போன்ற இரு இடங்களில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதே போல் சுற்றுலா திட்ட மேம்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், தொல்லியல் துறை துணை என்ஜினீயர் ஜீலானி பாஷா, மாமல்லபுரம் தொல்லியல் அலுவலர் சரவணன், காஞ்சீபுரம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மாமல்லபுரம் கிராம நிர்வாக அதிகாரி நரேஷ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    நாட்டிய விழா நடத்துவது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் கேட்டபோது, அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் போன்ற இரு இடங்களில் ஆய்வு செய்துள்ளோம். இரு இடங்களில் எந்த இடத்தில் நடத்தலாம் என சுற்றுலாத்துறையிடம் கலந்தாலோசித்து இந்த வார இறுதியில் தொடங்கும் தேதி மற்றும் நடக்கும் இடம் தெரிவிக்கப்படும் என்றார்.
    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டு மீனவர் பரிதாபமாக இறந்தார்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தேவனேரி மீனவர் பகுதியை சோந்தவர் பரதன் (வயது 32). இவர், மீனவர். நேற்று முன்தினம் ஒரு வேலை விஷயமாக தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கல்பாக்கம் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    மாமல்லபுரம் புறவழிச்சாலை வழியாக அதிவேகத்தில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயம் அடைந்த பரதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீசார் பரதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னை தரமணி தந்தை பெரியார் நகர் புத்தர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜய நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பணி முடித்துவிட்டு அதிகாலை 2 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் தரமணி 100 அடி சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள தனியார் ஏ.டி.எம். அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

    இதில், தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம் அருகே திருட்டு ஆடுகளை வாங்கி இறைச்சி வியாபாரம் செய்து வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் கடந்த மாதம் 24-ந்தேதி ஆடுகளை திருட முயன்ற திரூப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கத்தை சேர்ந்த உமேஷ், வினித் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின்படி திருட்டு ஆடுகளை இறைச்சி வியாபாரத்துக்கு வாங்கும் முள்ளிப்பாக்கத்தை சேர்ந்த சிதியோன், திருக்கழுகுன்றத்தை சேர்ந்த ஆதம் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் 30க்கும் மேற்பட்ட திருட்டு ஆடுகளை வாங்கி இறைச்சி வியாபாரம் செய்தது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் பார்வைநேரம் 5 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது. இந்த புராதன சின்னங்களை கண்டுகளிக்க தொல்லியல் துறை உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடம் ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளிடம் ரூ.700-ம் பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கிறது. இந்தநிலையில் கொரோனா தொற்று தடுப்பு கருதி கடந்த ஆண்டு 9 மாதங்கள், இந்த ஆண்டு 2 மாதங்கள் என மாமல்லபுரம் புராதன சின்னங்கள் மூடப்பட்டன.

    இந்தநிலையில் தமிழக அரசு ஊரடங்கு தளர்வை அறிவித்ததை தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளுடன் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

    தற்போது பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கூடுதல் நேரம் திறந்து பார்வையாளர் நேரத்தை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மத்திய தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை குறித்து பரிசீலித்த தொல்லியல்துறை நிர்வாகம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புராதன சின்னங்களை பார்க்க அனுமதி அளித்துள்ளது.

    நேற்று முதல் இந்த கூடுதல் நேரம் திறப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. பார்வை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு சுற்றுலா பயணிகள் வரவற்பு தெரிவித்துள்ளனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 61 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 84 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 915 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,534 பேர் உயிரிழந்துள்ளனர். 635 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 74 ஆயிரத்து 210 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,265 பேர் உயிரிழந்துள்ளனர். 220 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 54 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 54 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 856 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,534 பேர் உயிரிழந்துள்ளனர். 632 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 74 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,265 பேர் உயிரிழந்துள்ளனர். 213 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    சிங்கப்பெருமாள் கோவில் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செங்குன்றம் சத்யசாய் நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 40). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் மொபட்டில் செங்குன்றம் சாலையில் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சேட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×