என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 2 பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
    • டாக்டரை சரமாரியாக தாக்கி, கிளினிக்கையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த அம்பகரத்துாரில் டாக்டர் ஞானமணி (வயது 35) மற்றும் தனியார் லேப் உரிமையாளர் பஷீர் (36) ஆகியோர் இணைந்து கிளினிக் வைத்து நடத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 2 பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதில் டாக்டர் ஞானமணி அம்பகரத்துார் பகுதியிலேயே தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இதனால் இவர்களுக்கு இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பஷீர் உள்ளிட்ட 31 பேர் ஞானமணி கிளினிக்கில் புகுந்து டாக்டரை சரமாரியாக தாக்கி, கிளினிக்கையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த டாக்டர் ஞானமணி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில், அம்பகரத்துார் போலீசார் 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காரைக்கால் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக நிரவி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காரைக்காலை அடுத்த நிரவி ஹேவெய்ஸ் நகரில், தடை செய்யப்பட்ட போதை புதையிலை பொருள்க ளான குட்கா, ஹான்ஸ், கூல்லிப் மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக நிரவி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், ஹேவெய்ஸ் நகரில் ரவி (வயது47) என்பவரது வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வீட்டில் மறைத்து வைத்திருந்த, ரூ.60 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ், கூலிப் போன்ற போதை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரவியிடம் நடத்திய விசாரணையில், காரைக்கால் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (27), நிரவி கீர்த்திகா நகரை சேர்ந்த சூர்யா (26) ஆகிய 3 பேரை கைது செய்து, காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கயிற்றால் தூக்கு மாட்டி கணவரின் உடலை தொங்க விட்டு தற்கொலை நாடகமாடி உள்ளார்.
    • தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி, எழிலரசியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகு என்கிற லோகநாதன் (வயது 52). கட்டிட தொழிலாளி .

    இவரது மனைவி எழிலரசி (48). இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. எனவே எழிலரசி தனது உறவினர் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி லோகநாதன், தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து அவரது மனைவி எழிலரசி அளித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார், தற்கொலை பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் லோகநாதன் சாவு குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையை புதுவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் போலீசாரிடம் வழங்கினர். அந்த அறிக்கையில், லோகநாதன் கொலை செய்யப்பட்டதற்கு முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்யா எழிலரசியிடம் விசாரித்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கணவரை கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது.

    குழந்தை இல்லாத விரக்தியில் மதுபழக்கத்துக்கு அடிமையான லோகநாதன், தினமும் மதுகுடித்துவிட்டு வந்து எழிலரசியை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.

    சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த லோகநாதன், வழக்கம்போல் மனைவியிடம் தகராறு செய்து அவரை அடிக்க பாய்ந்துள்ளார்.

    இதை தடுக்க முயன்ற எழிலரசி, கணவரின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் அவர் மூச்சுதிணறி அங்கேயே இறந்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த எழிலரசி, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். இந்த விஷயம் போலீசுக்கு தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று நினைத்தார். பின்னர் கயிற்றால் தூக்கு மாட்டி கணவரின் உடலை தொங்க விட்டு தற்கொலை நாடகமாடி உள்ளார்.

    போலீசார் லோகநாதன் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி, எழிலரசியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்களை ஏற்றுவதற்காக சென்னையில் இருந்து ஒரு கப்பல் புதுச்சேரி வந்தது.
    • திடீரென நீர்மட்டம் குறைந்ததால் எதிர்பாராத விதமாக கப்பல் தரை தட்டி நின்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்களை ஏற்றுவதற்காக நேற்று சென்னையில் இருந்து ஒரு கப்பல் புதுச்சேரி வந்தது. துறைமுக முகத்துவார பகுதியில் இருந்து துறைமுகத்தின் உள்ளே இழுவை படகுகள் மூலமாக சரக்கு கப்பல் இழுத்துச்செல்லப்பட்டது. அப்போது திடீரென நீர்மட்டம் குறைந்ததால் எதிர்பாராத விதமாக கப்பல் தரை தட்டி நின்றது.

    எனவே கப்பலை துறைமுகத்திற்கு இழுத்துச்செல்லும் பணி நிறுத்தப்பட்டது. நீர்மட்டம் உயர்ந்த பின்னர் கப்பலை துறைமுகத்திற்குள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

    • போலி பி.எட். சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
    • துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ளது.

    ஏனாம் பிராந்திய அரசு பணிகளில் ஆந்திர மாநில பல்கலைக்கழக கல்லூரியில் படித்தவர்கள் உள்ளனர். அரசு துறை பணிகளில் உள்ளவர்கள் போலியாக பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்திருப்பதாக புகார்கள் வந்தது.

    இதுதொடர்பாக அவ்வப்போது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஏனாம் அரசு பள்ளியில் பணியாற்றிய சமூக அறிவியல் ஆசிரியர் முகமதுயாகூப் போலி பி.எட். சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இவர் 2000-ம் ஆண்டு பி.எட். படித்ததாக சான்றிழ் அளித்துள்ளார். ஆனால் அவர் படித்த கல்லூரியில் 2003-ல் தான் பி.எட். படிப்பு தொடங்கியது என தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஏனாம் கல்வித்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்துள்ளது.

    இதனிடையே ஏனாம் தொடக்கப் பள்ளியில் 2023-ம் முதல் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் தனலட்சுமி, வெங்கடலட்சுமி, சந்தோஷி ஆகியோர் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காததால் கோர்ட்டு உத்தரவின்படி பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழகத்தின் கோவையில் கோவிலை தகர்க்க சதி நடந்தது.
    • புதுவையின் பிராந்தியமான கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள மாகீ பிராந்தியத்திலும் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில்குமரன் கடந்த 26-ந் தேதி வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இவர் புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். வில்லியனூர் கண்ணகி பள்ளி அருகே டீ கடையில் நின்றிருந்தபோது ஒரு கும்பல் 2 நாட்டு வெடிகுண்டை வீசி தலையில் அரிவளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த படுகொலை தொடர்பாக ரவுடி நித்தியானந்தம் உட்பட 7 பேர் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை வில்லியனூர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகளை கோர்க்காடு பகுதியில் உள்ள காலிமனையில் இருந்து போலீசார் மீட்டனர்.

    சரணடைந்தவர்களிடம் விசாரணை முடிந்து இன்று மீண்டும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா பிரமுகர் கொலை குறித்து என்.ஐ.ஏ. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் விசாரணையில் இறங்கி உள்ளனர். பெங்களூருவில் இருந்து 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் புதுவைக்கு வந்தனர். புதுவையில் போலீஸ் காவலில் இருந்த நித்தியானந்தம் உட்பட 7 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    பின்னர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கிருந்து வெடிகுண்டு துகள்களையும் கைப்பற்றினர். புதுவை போலீசாரிடமும் விளக்கம் கேட்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளையும் பார்வையிட்டனர்.

    இன்றும் அவர்கள் 2-வது நாளாக தொடர் விசாரணை நடத்துகின்றனர். தேசிய புலனாய்வு முகாமை தானாகவே முன்வந்து பா.ஜனதா பிரமுகர் கொலையை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஏனெனில் தமிழகம், கேரளா மாநிலங்களில் சமீபகாலமாக தொடர்ந்து பா.ஜனதா நிர்வாகிகள், இந்து அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொலைகள் அரங்கேறி வருகிறது.

    இந்து அமைப்பினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது.

    தமிழகத்தின் கோவையில் கோவிலை தகர்க்க சதி நடந்தது. இந்த சதி செயல் தொடர்புடையவர்களை என்.ஐ.ஏ. அமைப்பினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவையின் பிராந்தியமான கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள மாகீ பிராந்தியத்திலும் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடந்துள்ளது. இதனால் பா.ஜனதா பிரமுகர் செந்தில்குமரன் கொலையில் பயங்கரவாத இயக்கத்தினருக்கு தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகளா? என்ற கேள்வி எழுந்ததின் அடிப்படையிலேயே அவர்களை தனித்தனியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் புதுவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த வாரம் வாடகை வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து கொண்டு, மாரிமுத்து தம்பதியினர் இளைய மகன் வீட்டிற்கு சென்றனர்.
    • புகாரின் அடிப்படையில் கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த கோட்டகுப்பம் அருகே மாத்தூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (69) விவசாயி. இவரது முதல் மனைவி இறந்த நிலையில், மனைவியின் தங்கையான லட்சுமியை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    முதல் மனைவிக்கு கோவிந்தராஜ் (42) வெங்கடேஷ் (40) ஆகிய 2 மகன்களும், 2-வது மனைவிக்கு சங்கரி (35) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு 2 மகன்கள் மற்றும் மகளுக்கு தனது விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்து எழுதி வைத்தார். இதில் மாரிமுத்து வசித்த வந்த வீட்டை, இளைய மகன் வெங்கடேசுக்கு சேர்த்து எழுதி கொடுத்தார்.

    பின்னர் 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட வெங்கடேஷ் 2017-ம் ஆண்டு வயதான பெற்றோர் இருவரையும் அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறிய வயதான தம்பதியினர் தங்கள் வீட்டை மீட்டுத்தரக் கோரி விழுப்புரம் கோட்டாசியர் மற்றும் போலீசாரிடம் முறையிட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய கோட்டாட்சியர், வயதான தம்பதியினரை தாங்கள் சாகும் வரை இளைய மகன் வெங்கடேஷ் தன்னுடைய வீட்டில் வைத்து பராமரிக்கவும், மகன் மற்றும் மகள் சேர்ந்து மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து கடந்த வாரம் வாடகை வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து கொண்டு, மாரிமுத்து தம்பதியினர் இளைய மகன் வீட்டிற்கு சென்றனர்.

    அப்போது வெங்கடேஷ் இவர்களை வீட்டிற்குள் வரவிடாமல், வீட்டை பூட்டிக்கொண்டு வயதான தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்து தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் செய்வதறியாமல் தவித்து வரும் வயதான தம்பதியினர், கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீட்டின் வெளியே கட்டில், பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்களுடன் காத்து கிடக்கின்றனர்.

    இது தொடர்பாக அவர்கள் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    இந்த விவகாரத்தில் கோட்டாட்சியர் தலையிட்டு உத்தரவிட்டதால் போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளனர்.

    • தாமரைச்செல்வி (வயது32). இவர் கேன்சர் நோய்க்காக, புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • தாமரைச்செல்வி தனது கைப்பையில் சிறிய அளவிலான மணி பர்சில் ரூ.23 ஆயிரம் பணம், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வெள்ளை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி (வயது32). இவர் கேன்சர் நோய்க்காக, புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மார்ச் 31-ந்தேதி, தனது தந்தை சிங்காரவேலு உதவியுடன், புதுச்சேரி சென்று சிகிச்சை பெற்று இரவு காரைக்காலுக்கு பஸ்சில் திரும்பினார். புதுச்சேரியிலிருந்து நேரடி பஸ் கிடைக்காததால், சிதம்பரம் வந்து அங்கிருந்து காரைக்காலுக்கு தனியார் பஸ்ஸில் வந்தார். தாமரைச்செல்வி தனது கைப்பையில் சிறிய அளவிலான மணி பர்சில் ரூ.23 ஆயிரம் பணம், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    பஸ்சில் அவர் அருகில், 4 ஆண்கள் அமர்ந்து, பேச்சு கொடுத்தவாறு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாலை காரைக்காலுக்கு பஸ் வந்த போது. கைப்பையை இருந்த மணி பர்சை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பஸ்சில் பல இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் தாமரைச்செல்வி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி அண்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
    • ஜிப்மர் கொண்டு வந்துள்ள புதிய கட்டணம் முறை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மரில் புதிய மேம்பட்ட உயர் மதிப்பு சிகிச்சைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத, மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் வசூலிக்கப்படுகிறது. இத்தொகை நிறுவன வருவாய் கணக்கில் துறைகள் வரவு வைக்கப்பட வேண்டும்.

    நோயாளியின் பராமரிப்பின் நலனுக்காக, மேம்பட்ட சோதனையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த மேம்பட்ட சிகிச்சைகள் விலை உயர்ந்தவை என்பதால், பயனாளிகளிடம் இருந்து ஓரளவு வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்த சேவைகளை நிலையான முறையில் வழங்க முடியும். இதில் அடிப்படை பரிசோதனை சேவைகள் இலவசமாக தரப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்திருந்தது.

    ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி அண்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். பலருக்கு ஆயுஷ்மான்பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் இல்லை. ஜிப்மர் கொண்டு வந்துள்ள புதிய கட்டணம் முறை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.

    குறிப்பாக புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த ஏழை நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கு புதுவையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுவை சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட எம்.எல்.ஏ.க்கள் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்நிலையில் ஜிப்மர் நிர்வாகம் கொண்டுவந்துள்ள சிகிச்சைக்கு கட்டண முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில தி.மு.க. சார்பில் ஜிப்மர் நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார்.

    ஜிப்மரில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், ஏழை-எளிய மக்களின் சுகாதார உரிமையை பறிக்கக்கூடாது. ஏழை நோயாளிகளை வஞ்சிக்க கூடாது. புதுவை நோயாளிகளை புறக்கணிக்காதே என தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நிர்வாகிகள் தைரியநாதன், கல்யாணி கிருஷ்ணன், சண்.குமரவேல், பூ.மூர்த்தி, லோகையன், ஜெ.வி.எஸ். ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சக்திவேல், சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கார்த்திகேயன், வேலவன், சண்முகம், கோகுல், தர்மராஜன், ரவீந்திரன், செந்தில்வேலன், இளம் பரிதி, பழனி, பிரபாகரன், மாறன், கோபாலகிருஷ்ணன், கோபால், அமுதாகுமார், நர்கீஸ், சிறப்பு அழைப்பா ளர்கள் முகிலன், டாக்டர் நித்திஷ், தொகுதி செயலா ளர்கள், பல்வேறு அணிகளின் துணை அமைப்பாளர்கள், தொகுதி கழக நிர்வாகிகள், கிளைக் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித்தலைவர் சிவா உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 100-க்கும் மேற்பேட்டோரை போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.
    • பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சில ஆதாரங்களுடன் சி.பி.ஐ.க்கு புகார் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேரு வீதியில் உள்ள உதவி பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர். இதில் பத்திரப் பதிவாளர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு வீதியில் பத்திர பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு புதிய பத்திரப்பதிவுகள் மற்றும் பட்டா மாறுதல் செய்வதற்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சில ஆதாரங்களுடன் சி.பி.ஐ.க்கு புகார் அளித்துள்ளார். அதன்படி, நேற்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமை அலுவலக உதவி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வந்த 4 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் காரைக்கால் உதவி பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்தனர். அலுவலக கேட்டை மூடிவிடடு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அதேபோல் காரைக்கால் ராஜாத்தி நகர் அருகே உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டிலும் நான்கு பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை 3 மணி வரை என விடிய விடிய சோதனை நடைபெற்றது.     சோதனையில் முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். இதில் பத்திரப்பதிவாளர் சந்திர மோகன், உதவியாளர் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    • அமெரிக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
    • போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா புகாரை கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்ட குப்பம் அருகே உள்ள சின்ன முதலியார்சாவடி கடற்கரை பகுதியில் தங்கும் விடுதியுடன் மசாஜ் சென்டர் உள்ளது.

    இங்கு சுற்றுலாப் பயணிகள் அறை எடுத்து தங்குவது வழக்கம். இந்நிலையில் புதுவையை சுற்றி பார்க்க வந்த அமெரிக்காவைச் சேர்ந்த கசிஹெர்னாண்டஸ் (வயது35). என்பவர் மசாஜ் செய்வதற்காக சென்றார்.

    அப்போது மசாஜ் சென்டரில் பணியாற்றி வரும் ரெக்கீஸ் என்பவர் கசிஹெர்னாண்டஸ்க்கு மசாஜ் செய்தார். அப்போது அவர் அமெரிக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இது குறித்து கசிஹெர்ண்டஸ் கோட்ட குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் விசாரணை நடத்தினார். ஆனால் புகார் செய்த பெண் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதால் இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீநாதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா இந்த புகாரை கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்கு பதிவு செய்து மசாஜ் சென்டர் ஊழியர் ரெக்கிஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது
    • , சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்காபக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.


    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது.  இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்க ளும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இறுதியில்(டிசம்பர் மாதம்) இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற இருப்பதால், கடந்த வாரம் 16-ந் தேதி உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது.

    இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். வாரம் இரு நாட்கள் என 4 நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. முடிவில், ரூ.2 கோடியே 7 லட்சம் பணமும், 150 கிராம் தங்கம், 1.5 கிலோ வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, உண்டியலில் கிடைக்க ப்பெற்ற காணிக்கை மற்றும் பணம் உரிய பாதுகாப்புடன் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    ×