என் மலர்
இந்தியா
- சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
- தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
கோவை:
கோவை-மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள ஹவுசிங் யூனிட் உள்ளது. இங்கு 1,800 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.
இங்கு குடியிருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசு ஊழியர்கள் ஆவர். 14 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் நேற்று மர்மநபர்கள் நுழைந்தனர்.
அவர்கள் அங்கு குடியிருப்பில் பூட்டி இருந்த வீடுகளை குறி வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். முதலில் அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் உள்ள 13 வீடுகளில் கொள்ளை சம்பவத்தை மர்மநபர்கள் அரங்கேற்றியுள்ளனர். இதுவரை 13 வீடுகளில் இருந்து 56 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், வெள்ளி நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த கைரேகைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் சுட்டுபிடித்தனர். அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 35 முதல் 40 வயதுடையவர்கள் என்பதும் தெரியவந்தது. கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில் போலீசார் கொள்ளையர்களை பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- கனமழை காரணமாக நாகை நகராட்சிக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதிக்குள் மழைநீர் புகுந்தது.
- கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
"டிட்வா" புயல் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அவர்கள் 60 வகையான பாதுகாப்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து தரைக்காற்று வீசியது. அதைத்தொடர்ந்து வேதாரண்யம், தலைஞாயிறு, செம்போடை, ஆயக்காரன்புலம், வாய்மேடு, கரியாப்பட்டினம், கோடியக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
மேலும் இந்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் உடனடியாக அவர்களை அழைத்து வந்து நிவாரண முகங்களில் தங்க வைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. தொடர்ந்து இடைவிடாது பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கனமழை காரணமாக நாகை நகராட்சிக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. இப்பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகளை இப்பகுதி மக்கள் சந்தித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர். எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நாகையில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் 6-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதையடுத்து அவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் நாகை மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு(சென்டிமீட்டரில்):-
நாகப்பட்டினம்-6.12, திருப்பூண்டி-9.24 , வேளாங்கண்ணி-9.54 , திருக்குவளை-4.61, தலைஞாயிறு-8.76, வேதாரண்யம்-14.56, கோடியக்கரை-20.36.

வேதாரண்யத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்து வைத்துள்ள காட்சி.
இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பல்லவராயன் கட்டளை, புழுதிக்குடி, விக்கிரபாண்டியம், கோட்டூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 1,000 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஏக்கருக்கு ரூ.8,000 வரை செலவு செய்துள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் கிளை வாய்க்கால்கள் தூர்வாராமல் இருப்பதால் மழைநீர் வடியாமல் உள்ளது. எனவே கிளை வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொள்ளிடம், புத்தூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, பூம்புகார், பழையாறு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முதல் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் கடுமையான கடல் சீற்றம் உள்ளது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குருங்குளம், ஒரத்தநாடு, நெய்வாசல்தென்பாதி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டின், மதுக்கூர், பேராவூரணி என மாவட்டத்தின அனைத்து இடங்களிலும் இடைவிடாமல் விடிய விடிய மழை பெய்தது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்சம்பா,தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. அதிராம்பட்டினம் கடற்கரையில் புயலால் பலத்த காற்று வீசியப்படி கனமழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர் மழைக்கு 1 வீடு இடிந்துள்ளது. 3 கால்நடைகள் இறந்துள்ளன.
- டிட்வா புயலால் இதுவரை பெரிய பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ கிடையாது.
- புயல் எங்கு கரையை கடக்கும் என தற்போது வரை தெரியவில்லை.
சென்னை:
'டிட்வா' புயலானது சென்னையை நோக்கி நெருங்கிவருவதால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனையில் ஈடுபட்ட பின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
* நாகை மாவட்டம் தோப்புத்துறையில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
* சென்னையை ஒட்டி புயல் செல்லும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் கடற்கரையோரம் யாரும் செல்ல வேண்டாம்.
* டிட்வா புயலால் இதுவரை பெரிய பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ கிடையாது.
* மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களின் உதவியை நாடவும் அறிவுறுத்தி இருக்கிறோம்.
* காற்றோடு மழை பெய்யும் போது பாதிப்புகள் இருக்கக்கூடும்.
* படகு, பயிர்கள் சேதம் தொடர்பாக 30-ந்தேதிக்கு பிறகு கணக்கெடுத்து இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சரும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
* ஒரு கோடியே 24 லட்சம் பேருக்கு புயல் முன்னெச்சரிக்கை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
* கடலூர், விழுப்புரத்திற்கு பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
* புயல் எங்கு கரையை கடக்கும் என தற்போது வரை தெரியவில்லை என்றார்.
- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- மக்கள் தங்குவதற்கு தேவையான முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
சென்னை:
டிட்வா புயல் வட தமிழக கடலோர பகுதியை நெருங்கி வருவதால் தமிழகத்தில் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மாவட்ட கலெக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மாநில கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தேவையான அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்குவதற்கு தேவையான முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
- வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், மயிலாடுதுறை, மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
- பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை:
'டிட்வா' புயலானது சென்னையை நோக்கி நெருங்கிவருவதால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஆலோசனையில் ஈடுபட்டு வரும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், புயலின் தாக்கம், செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
டெல்டா மாவட்டங்களில் மழை நிலவரம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
- நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். பல்வேறு பணிகளுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, நடைபயிற்சி மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபயிற்சிக்கு வரும் மக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரையும் சந்தித்து பேசும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
அந்த வகையில், இன்று நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் சந்தித்து பேசினார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட பருவமழை அதிகமாக பெய்துள்ளது.
- ஏற்காட்டில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோவை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 3 தினங்களாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அத்துடன் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. வழக்கமாக காலை 7 மணிக்கெல்லாம் தெளிவான வானம் காணப்படும். ஆனால் 3 தினங்களாக காலை 10 மணி வரை பனிமூட்டமாகவே இருக்கிறது. 10 மணிக்கு பிறகு தான் தெளிவான வானம் தெரிகிறது. மேலும் மாலை 4 மணிக்கெல்லாம் இருள் சூழ தொடங்கி விடுகிறது.
மாநகர பகுதிகளான ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம், அவினாசி சாலை, பீளமேடு, சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. வானமும் மேகமூட்டமாகவே உள்ளது
பனிமூட்டத்தால் அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
அதிகாலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. பகல் நேரத்திலும் குளிர் காணப்படுகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் ஸ்வெட்டர் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு தான் வெளியில் வருகின்றனர்.
வால்பாறை பகுதி முழுவதும் அதிகாலை முதல் கடும் பனிமூட்டத்துடன் குளிரும் வாட்டி வதைத்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் கம்பளி ஆடைகளை அணிந்தபடி சென்றனர். கடும் குளிரால் மக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கினர்.
நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட பருவமழை அதிகமாக பெய்துள்ளது. இதனால் நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. கடந்த 3 தினங்களாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. பனிமூட்டத்தால் கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது.
கடும் குளிர், பனிமூட்டம் காணப்படுவதால் அதிகாலையில் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கம்பளி போர்த்திய ஆடைகள் அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வழக்கமாக 8 மணிக்கு வேலைக்கு செல்வர். தற்போது நிலவும் பனிமூட்டத்தால் 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு தான் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேயிலை மற்றும் மலைக்காய்கறிகள் விவசாயமும் பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் மக்கள் வெளியில் வருவதில்லை. வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் காலை, மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டமும் குறைந்து விட்டது.
ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் குளிர் காணப்படுகிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் தங்கள் வீடுகளில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றன. கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இன்றும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் காலை நேரங்களில் ஏற்காடு காபி தோட்டத்திற்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு மலைப் பாதையிலும் கடும் பனி மூட்டம் நிலவுவதால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து செல்கின்றன. ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் இன்றி ஏற்காட்டில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று வரை கடும் பனிமூட்டம் இருந்தது. இன்று காலை முதல் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையுடன் குளிரும் சேர்ந்து வாட்டி வதைக்கிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக மழை குறைந்து காணப்பட்டாலும், கடும் குளிர் நிலவுகிறது. அதிகாலை நேரத்தில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
- டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் உள்ளது.
- புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு - வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
டிட்வா புயல் கரையை நோக்கி நகரும் வேகம் சற்று அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு 400 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் உள்ளது.
டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி நகர்ந்து வரும் டிட்வா புயல், மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி வருகிறது. சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை வந்தடையும்.
டிட்வா புயல் நெருங்கி வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இரவு முதலே மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலை. மற்றும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு இன்று நடைபெற இருந்தது. 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத இருந்தனர். அவர்களில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 50 பேர் தேர்வு செய்யப்படுவர்.
இந்த தேர்வு வங்கக்கடலில் நிலவும் 'டிட்வா' புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி, அந்த தேர்வு வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.
- உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சென்னை:
தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழக அரசால் புதிய திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளார். தற்போதைய நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) மாதம் 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
அதில் முதலாவது கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம். கடந்த பட்ஜெட்டில், 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினினின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டப்பணிகள் நடப்பதால் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகின்றனர். தற்போது இந்த திட்டம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். இந்த லேப்டாப்களை தயாரிக்கும் பணி ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் இந்த லேப்டாப்களை தயார் செய்து வைத்திருக்கின்றனர். ஒரு லேப்டாப் ரூ.21 ஆயிரத்து 650 என்ற விலையில் வாங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.
இரண்டாவது மகளிர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம். தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இவர்களது வங்கி கணக்கிற்கு மாதம்தோறும் 15-ந் தேதி தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. எனவே இந்த திட்டத்தின்கீழ் விடுப்பட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 28 லட்சம் பெண்கள், இந்த திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.
இந்த மனுக்கள் பரிசீலனை தற்போது இறுதிகட்டத்தை எட்டி பட்டியல் தயாராகி வருகிறது. ஏற்கனவே அரசின் அறிவிப்புப்படி, இந்த திட்டத்தின்கீழ் உள்ள தகுதி வரையறை அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இவர்களுக்கு டிசம்பர் மாதம் 15-ந் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் போடப்படும். ஆனால் எத்தனை பெண்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை.
மூன்றாவது பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம். இந்த திட்டம், ஜனவரி மாதம் செயல்படுத்தப்படும் என்றாலும், இந்த திட்டப்பணிக்கான முடிவுகள் டிசம்பரிலேயே எடுக்கப்பட்டுவிடும். 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் தொகுப்புடன், ரொக்க தொகையும் வழங்கப்படும் என்ற பேச்சு பரவலாக எழுந்து உள்ளது. அதற்கு காரணம், ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதுதான். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், தேர்தல் காரணமாக நிச்சயம் அரசு சார்பில் ரொக்கத்தொகை கொடுப்பார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. தமிழக அரசுக்கு நிதி சுமை இருந்தாலும், இந்த பொங்கலுக்கு ரொக்கத்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று சிலர் உறுதியாக கூறுகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 2.27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் வழங்கினால் அரசுக்கு மொத்த செலவு ரூ.6 ஆயிரத்து 800 கோடி ஆகும் என்றும், ரூ.6 ஆயிரம் வழங்கினால் ரூ.13 ஆயிரத்து 620 கோடி தான் ஆகும். எனவே இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய சுமை கிடையாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இறுதி முடிவு எடுப்பார் என்று அதிகாரிகள் சொல்கின்றனர்.
எனவே டிசம்பர் மாதத்தில் லேப்டாப் வழங்கும் திட்டம், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க திட்டம் மற்றும் பொங்கல் தொகுப்பு ரொக்கத்தொகை திட்டம் ஆகிய 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
- தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
- விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் 'டிட்வா' புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் மதுரை, திருச்சி, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
புயல் மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும் ஏ.டி.ஆர். எனப்படும் சிறிய ரக விமானங்கள் அனைத்தும் இன்று காலையில் இருந்து இரவு வரையில் இயக்கங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகள் அனைவரும் தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல், தங்கள் பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.






