என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகள் பயப்படும் போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.
    பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும். இப்போது குழந்தைகளின் பயத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்ப்போமா!!!

    1. சிறு வயதில், அதாவது 1-2 வயது வரை குழந்தைகளை சாப்பிட வைக்க, பூச்சாண்டி காட்டி சாப்பிட வைப்பது, அடம் பிடிக்கும் போது அவர்களுக்கு பேய் வருகிறது என்று சொல்லும் கட்டுகதைகள் போன்றவற்றை அவர்கள் வளர வளர நாளடைவில் மாற்றி கொள்வது நல்லது. அதாவது அவர்கள் அடம் பிடிக்கும் பொழுது, ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லி அல்லது அவருக்கு பிடித்தமான ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்லி, அவர்களை திசை திருப்பலாம்.

    2. குழந்தைகள் அதிகமாக பயந்தால், அவர்களின் பயத்திற்கான காரணத்தை கண்டறிய, குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எதனால் பயப்படுகிறார்கள் என்பதை அவர்களையே விளக்க சொல்லி, பின்னர் அவர்களுக்கு புரியும் வகையில் அந்த பயத்தை போக்கும் வகையில் எடுத்து சொல்ல வேண்டும்.

    3. குழந்தைகளுக்கு சரியானதை பொறுமையாக சொல்லி கொடுக்கவும். அதைவிட்டு கோபமாக சொன்னால், எதுவும் நடக்காது. அன்போடு அமைதியாக சொன்னால், குழந்தைகள் எதையும் பெற்றோரிடம் பயமின்றி, மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வார்கள்.



    4. குழந்தை ஒரு குறிப்பிட்ட உறவினர், பராமரிப்பாளர்களிடம் பயம் கொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நிராகரிப்பது நல்லது அல்ல. அந்த நிலையில் குழந்தையை அவர்களிடம் இருக்குமாறு கட்டாயப்படுத்த கூடாது. அவர்களால் குழந்தைக்கு என்ன பிரச்சினை, அவர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்று குழந்தைகளிடம் கேட்டு, பின் அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு குழந்தையை கண்டிக்கக் கூடாது.

    5. குழந்தைகளை அவர்களின் பயம் குறித்து கிண்டல் செய்யக்கூடாது. ஏனெனில் குழந்தையை கேலி செய்தல் மூலம் அந்த பயமானது குறையாது. அதற்குப் பதிலாக, அது அவர்களது கவலையை அதிகரிக்கும். அதே நேரத்தில் அவர்களது தன்னம்பிக்கையையும் குறைக்கும். ஏனெனில் பெற்றோரே குழந்தையை கிண்டல் செய்வதன் மூலம், அவர்களது மனம் தளர்ந்து, பின் அவர்களுக்கு எப்போதும் எதிர்மறையான உணர்வுகள் மட்டுமே உருவாகும்.

    6. குழந்தைகள் பயந்து செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். அப்போது அவர்களின் பயத்தைப் புரிந்து கொண்டு, அவர்களின் அச்சத்தை நீக்க அவர்களுடன் அன்புடனும் ஆதரவுடனும் பேசி, பயத்தைப் போக்க முயற்சிக்க வேண்டும்.

    7. குழந்தைகள் வீட்டில் உள்ள அறைக்குச் செல்ல அஞ்சுகின்றனர் என்றால், அந்த பகுதிக்கு அவர்களுடன் சென்று, அனைத்து கதவுகளை திறந்து, ஒளியைப் பயன்படுத்தி படுக்கைக்குக் கீழ் எதுவும் இல்லை பார் என்று காட்டவும். மேலும் ஏதாவது சப்தம் அல்லது நிழல் கண்டு பயந்தால், அப்போது அவர்களிடம் அந்த சப்தம் மற்றும் நிழல் எதனால் வந்தது என்று விளக்கமாக சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், குழந்தைகளை பயத்திலிருந்து விடுவிக்க முடியும்.

    குழந்தைகள் பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போனில் வீடியோ கேம்ஸ் விளையாடுவதால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன.
    இன்றைய குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகிறார்கள். பெற்றோர்களும் அதனைப் பார்த்து பூரித்துப் போகிறார்கள். மேலும் மேலும் அதனைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறார்கள். ஆனால் மருத்துவத்துறை இதனை கடுமையாக கண்டிக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு எலும்பு சிகிச்சை நிபுணர்களிடமும் பிசியோதெரபி மையங்களுக்கும் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும், பெற்றோர்களை பூரிப்பில் ஆழ்த்தும் இந்த மொபைல்தான்.

    பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. மேலும் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். கடைசியில் உடல் பருமன் என்ற பாதிப்பில் சிக்கிக்கொள்கின்றன.

    சும்மா உட்கார்ந்தபடி தொடுதிரையை விரல்களால் தேய்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் விரல்களுக்கோ கைகளுக்கோ போதுமான பயிற்சியை தருவதில்லை. இயல்பாக குழந்தைகளின் விரல்கள் மற்றும் கைகள் அந்த வயதில் பெறவேண்டிய ஆற்றலைப் பெறுவதில்லை. அதனால் அவை திடமான வளர்ச்சி அடைவதில்லை. இப்படியே பழகும் குழந்தைகள் அதன்பின் பள்ளிகளில் சேரும்போது பிரச்சினை முளைக்கத் தொடங்குகிறது. அவர்கள் இரண்டு, மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத முடியாமல் திணறிப் போகிறார்கள். கைகள் எழுத ஒத்துழைப்பதில்லை.



    மேலும், குழந்தைகள் வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலைந்து உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதோடு உடலை வருத்தி எந்த விளையாட்டிலும் ஈடுபடாததால் உடல் பருமன் ஏற்படுகிறது. இது பிறகு சர்க்கரை நோயிலும் உயர் ரத்த அழுத்தத்திலும் கொண்டு வந்து விட்டு விடுகிறது.

    ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால், கண்களும் பாதிப்புக்கு ஆளாகின்றன. கண்கள் சிவக்கின்றன. விழிகள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. மிக இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. பொதுவாக பெற்றோர்களும் மற்றோர்களும் பேசிப்பேசித்தான் குழந்தைகளின் பேச்சுத்திறனும் மூளைத்திறனும் வளர்ச்சி பெறும். இந்த வளர்ச்சியை மொபைல் போன்ற பொருட்களின் திரைகளில் தோன்றும் மாயக்காட்சிகள் குழந்தைகளை வெறும் பார்வையாளர் என்ற நிலைக்கு அடிமை ஆக்கிவிடுகின்றன.

    இப்படி மொபைல்களுக்கு அடிமையான குழந்தைகள் யார் முகத்தையும் பார்த்துப் பேசுவதில்லை. கேட்கும் கேள்விகளுக்கு உடனே வார்த்தைகளை கோர்த்து பதில் சொல்லத் தெரிவதில்லை. மற்றவர்களோடு பழகவோ பிற குழந்தைகளோடு இணைந்து விளையாடவோ தெரியாமல் தனிமைப்பட்டு விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். 
    குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பார்க்கலாம்.
    குழந்தையின் காதுகள் மிகவும் மிருதுவானவை. எனவே குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் தனிகவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில் குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைக் குறித்து இப்போது பார்க்கலாம்.

    காதுகளைச் சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் குழந்தையின் காதுகளில் பட்ஸ், ஊக்கு போன்றவற்றை நுழைக்காதீர்கள். காதுகளைப் பராமரிக்க இயல்பாகவே சிபம் என்ற மெழுகு போன்ற திரவம் காதுகளில் சுரக்கும். அதனை அழுக்கு என்று தவறாக புரிந்துகொண்டு சுத்தப்படுத்தி விடாதீர்கள். காதுகளின் வெளிப்புறத்தைமட்டும் மாதம் ஒருமுறை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்துவது நல்லது.

    குழந்தையின் காதுகளில் ஏதேனும் சிறிய பூச்சி சென்றுவிட்டால், சுத்தமான எண்ணெயை அவர்களின் காதுகளில் ஊற்றி, முதலில் அந்தப் பூச்சியைச் செயலிழக்கச் செய்யுங்கள். அதன் பின்னர் காது-மூக்கு-தொண்டை சார்ந்த மருத்துவரை அணுகி, பூச்சியினை எடுத்துவிடுவது நல்லது. எக்காரணம் கொண்டும் சூடான எண்ணெய், தண்ணீரை காதில் ஊற்றாதீர்கள்.

    குழந்தைகள் காதில் பட்டாணி, காய்கறிகள் போன்று எளிதில் நீரில் ஊறக்கூடிய பொருளை நுழைத்துவிட்டால், எக்காரணம் கொண்டும் காதுகளில் தண்ணீர் ஊற்றாதீர்கள். அவை தண்ணீரில் ஊறி வெளியே எடுக்க முடியாத நிலைக்கு போய்விடலாம். எனவே உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. அதேபோல காதில் சீழ் வடிவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.



    குழந்தைகள் பாடல் கேட்க அல்லது போனில் பேச என இயர் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். தவிர்க்க முடியாத சூழலில்கூட இயர் போனுக்கு பதில் ஹெட் போன்களைப் பயன்படுத்தலாம்.

    குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஆசாரிகளிடம் இருக்கும் காது குத்தும் ஊசியை ஒரு முறை ஆண்ட்டி செப்டிக் மருந்தில் முக்கி எடுக்க வேண்டியது அவசியம். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜியை தடுக்கலாம்.

    பச்சிளம் குழந்தைகளின் காது தசைகள் மிகவும் மென்மையானவை எனவே அவர்கள் காதினைச் சுத்தம் செய்யும்போது மிதமான சூட்டில் இருக்கும் நீரில் சுத்தமான காட்டன் துணியை நனைத்து மெதுவாக வெளிப்புறம் மட்டும் துடைத்து எடுக்கலாம்.
    உங்கள் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப, செக்ஸ், மாதவிடாய், உடல் மீதான ஈர்ப்பு, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து கொஞ்சம், கொஞ்சமாக பேச ஆரம்பிக்க வேண்டும்.
    தற்கால குழந்தைகள் அதிக அறிவாற்றலுடன் திகழ்கின்றனர். அவர்களுக்கு செக்ஸ், மாதவிடாய், மனநிலை, மது, போதை உள்ளிட்டவை குறித்து தெளிவுபடுத்துவது அவசியம். ஒருவேளை நீங்கள் இதுகுறித்து குழந்தைகளுடன் பேசாவிட்டாலும், அவர்கள் இணையம் வாயிலாக அறிந்து கொள்ளத்தான் போகிறார்கள்.

    உங்கள் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப, செக்ஸ், மாதவிடாய், உடல் மீதான ஈர்ப்பு, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து கொஞ்சம், கொஞ்சமாக பேச ஆரம்பிக்க வேண்டும். இது குழந்தைகள் உடனான நட்புறவிற்கு மிகுந்த உதவியாக இருக்கும். இதன்மூலம் குழந்தைகளுக்கு உங்கள் மீது நம்பிக்கை பிறந்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை உருவாகும்.

    வயதிற்கேற்ப செக்ஸ் கல்வி அளிக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒரே தடவையில் கூற வேண்டாம். ஒவ்வொரு விஷயமாக கூறும் போது, அவர்கள் மெல்ல சிந்தித்து புரிந்து கொள்வார்கள். பருவமடைதலின் போது ஏற்படும் மாற்றத்தை, குழந்தைகளுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும். உடல் வளர்ச்சியின் ஒரு பகுதியே என்றும், இது ஒரு சராசரி நிகழ்வே என்றும் தெளிவாக விளக்க வேண்டும்.



    ஆல்கஹால், புகைப்பிடித்தல் ஆகியவற்றில் இருந்து குழந்தைகளை எவ்வளவு மறைத்து வைத்தாலும், ஒரு கட்டத்தில் தானாகவே அறிந்து கொள்வார்கள். இதனை தவறாக புரிந்து கொண்டு, தீய பழக்கங்கள் ஏற்படாமல் இருக்க, நண்பரைப் போல அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இவற்றையெல்லாம் டீன் - ஏஜ் பருவத்தில் எடுத்துரைப்பது சிறந்தது.

    உடல் சுரப்பிகளின் தூண்டுதலால், ஆர்வ மிகுதியால் எல்லாவற்றையும் முயற்சித்து பார்க்க தோன்றும். இதுபோன்ற சமயங்களில் தீய பழக்கங்களால் ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்து விளக்க வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு செய்திகள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு காண்பித்து, அறிவுரை வழங்க வேண்டும்.

    வாழ்க்கையில் தோன்றும் ஏற்ற, இறக்கங்கள் மற்றும் வெற்றி, தோல்விகள் ஆகியவற்றை பெற்றோர்களின் வளர்ப்பின் படியே, குழந்தைகள் கையாள்வார்கள். அதாவது, பள்ளி தேர்வில் குறைந்த மதிப்பெண்கள், நிராகரிப்பதால் ஏற்படும் மனச்சிதைவு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    தோல்வி என்பது, நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதைக் குறிக்காது. இது ஒரு அனுபவம். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, தேவையை நோக்கி நடைபோட வேண்டும் என்று புரிய வைக்க வேண்டும். தோல்வியடையும் சமயங்களில் குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் சரியான உதாரணங்களுடன் நம்பிக்கை ஊட்ட வேண்டும். 
    விளையாட்டுகளில் ஈடுபடுவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்து கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கின்றனர்.
    இன்றைய மாணவர்கள் செல்போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களிலேயே பொழுதை போக்குவதால் விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரியாமல் இருக்கிறார்கள். இது அவர்களது உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். விளையாடுவதால் ஏற்படும் நன்மைகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

    மாணவர்கள் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடும் போது அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு ஏற்படுகின்றது. குழு விளையாட்டில் ஈடுபடும் ஒரு மாணவர், தனது அதிகமான நேரத்தை விளையாட்டிற்கு செலவழித்து, பல செயற்பாடுகளை அதற்காக மேற்கொள்கிறார். அதன் காரணமாக தொடர்ச்சியான பயிற்சிகளுக்கு அவர் உள்வாங்கப்படுகின்றார். எனவே, அவர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும், முழுமையான ஆரோக்கியம் உள்ள நபராகவும் மாறுகிறார்.

    விளையாட்டு பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளின் போது ஒவ்வொரு மாணவரும், மற்ற மாணவர்களுடனும், பயிற்சியாளர்களுடனும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதுடன், அவர்கள் சமூகத்துடன் புதிய உறவுகளை வளர்த்துக்கொள்கிறார்கள். விளையாட்டுகளில் ஈடுபடுவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்து கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கின்றனர். அதுவே அவர்கள் கல்வியிலும் சிறந்தவர்களாக மாற காரணமாக இருக்கின்றது.

    விளையாட்டில் ஈடுபடும் போது வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் தோல்வியை தாங்கிக்கொள்ளும் தன்மை, வெற்றியை கொண்டாடும் முறைமை மற்றும் சந்தர்ப்பங்களின் போது தமது அணியின் ஏனைய வீரர்களின் நிலையை அறிந்துகொள்ளல் போன்றவற்றை அவர் கற்றுக்கொள்கிறார். இவை அனைத்தும் எதிர்காலத்தில் அவர் தனது இலக்குகளை வெற்றி கொள்வதற்கு அதிக பங்களிப்பை செலுத்துகின்றன.

    விளையாட்டில் ஈடுபடும் மாணவர் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் ஆகியோரை மதித்து நடக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. எனவே விளையாட்டில் உண்டாகும் இந்த ஏனையோரை மதிக்கும் பழக்கம், பின்னர் மாணவரது வாழ்க்கையிலும் தானாகவே நிலைத்து நிற்கின்றது. விளையாட்டில் ஈடுபடும் போதும், அதற்கான பயிற்சிகளின் போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகப்படுத்தும் போது அவர்கள் மீது மதிப்பு மரியாதை ஏற்படும். இவ்வாறு பல நன்மைகளை ஏற்படுத்துவதாக விளையாட்டும், அதற்கான பயிற்சியும் அமைந்துள்ளது. 
    குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும்.
    குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுது போக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது.

    குழந்தைகள் இன்டர்நெட்டை சரியான முறையில் உபயோகிப்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை :

    பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்டுக்கொள்வதே இல்லை இதனால் குழந்தைகள் வழி தவறும் போது பெற்றோருக்குத் தெரியாமலே போகிறது.

    குழந்தைகள் மனதில் எழும் சந்தேகங்களையும் குழப்பங்களையும் தீர்க்கவும், குழந்தைகளின் விருப்பங்களை அறியவும் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லவும் இது உதவும்.



    கம்ப்யூட்டரை குழந்தைகளின் அறையில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. தனிமையில் இருக்கும்போது தவறானவற்றை பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றும்.

    இவ்வளவு நேரம் தான் கம்ப்யூட்டரில் குழந்தைகள் செலவிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் நேரத்தில் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருக்க "பாஸ்வேர்ட்" உதவும்.

    வீட்டில் இன்டர்நெட்டுக்கு தடை விதித்தால் குழந்தைகள் "சைபர் கஃபே"களுக்கு செல்லலாம். அங்கு பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க முடியாமல் போகும். இதனால் தடுப்பதைவிட கண்காணிப்பது சிறந்தது.

    குழந்தைகளுக்கு நல்ல முறையில் புரியவைப்பது அவசியம். அதிகமான கண்டிப்பு தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம்.
    குழந்தைகளுக்கு நினைத்திறன் பயிற்சிகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றினால், நினைவுத்திறன் சிறப்பாக செயல்படும். இந்த பயிற்சியை பற்றி பார்க்கலாம்.
    பள்ளிகள் தொடங்கி பாடங்கள் வேகம்பிடிக்கத் தொடங்கிவிட்டன. பாடங்களை திட்டமிட்டபடி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் தங்கள் பணியில் கவனமாக இருப்பார்கள். ஆனால் அதே வேகத்தில் பாடங்களை எழுதுவதும், படிப்பதும் சில மாணவர்களுக்கு கடினமாக இருக்கலாம். நீங்களும் படித்த பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வழியிருக்கிறது. நினைவுத்திறனை பயிற்சியின் மூலம் அதிகரிக்க முடியும். அதற்கான சில எளிய வழிகளை அறிவோமா...

    முதலில் உங்கள் நினைவுத்திறனை சோதிக்கும் சிறு பயிற்சி...

    தமிழ்ப் பத்திரிகை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு நீண்ட செய்தியை எடுத்துக் கொண்டு அறிவைக் குறிக்கும் ‘அ’, ‘றி’, ‘வு’ என்ற எழுத்துக்கள் வருவதை வட்டமிட்டுக் குறியுங்கள். இப்போது மீண்டும் நீங்களாகவே அந்தச் செய்தியைப் படித்து எந்தெந்த இடங்களில் அந்த எழுத்துகளை வட்டமிடாமல் விட்டிருக்கிறோம் என்பதைக் கவனியுங்கள். மற்றொருவர் துணையுடனும் நீங்கள் சரியாக அனைத்தையும் வட்டமிட்டிருக்கிறீர்களா? என்று பரிசோதிக்கலாம். ஒரே முறையில் நீங்கள் அனைத்து அ, றி, வு என்ற எழுத்துகளை மறக்காமல் வட்டமிட்டிருந்தால் நீங்கள் நினைவுத்திறனில் கெட்டியாக இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

    நீங்கள் ஒரு சில எழுத்துகளை வட்டமிட மறந்திருக்கிறீர்களா, பரவாயில்லை ரகம். நிறைய எழுத்துகளை வட்டமிட தவறியிருந்தால் உங்கள் நினைவுத் திறனை கண்டிப்பாக கீழ்வரும் பயிற்சிகளை கடைப்பிடித்து மேம்படுத்த வேண்டும்.

    இதோ நினைவுத்திறனை வளர்க்கும் எளிமையான பயிற்சிகள்...

    ஞாபக சக்திக்கு காரணமாக இருப்பது மூளை. அந்த மூளையை சுறுசுறுப்பாக இயக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கி, எப்போதைய நிகழ்வையும் எளிதாக நினைவுக்கு கொண்டுவந்துவிடும். சரி... வாகனத்துக்கு பெட்ரோல் போல, மூளைக்கு பெட்ரோல் எது தெரியுமா? ஆக்சிஜனும், குளுக்கோசும்தான். மூளைக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்கும்போது, குளுக்கோஸை சக்தியாக மாற்றி நன்கு இயங்குகிறது.

    சரி மூளைக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? மூச்சுப் பயிற்சிதான் எளிய வழி. யோகா முறையில் இதை பிராணயாம பயிற்சி என்பார்கள். இந்த பயிற்சியை செய்வதும் எளிதுதான், முதலில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். இப்போது மூச்சை ஆழமாக இழுத்து நிதானமாக வெளியிடுங்கள். பத்து அல்லது இருபது முறை இப்படி செய்துவிட்டு, பிறகு ஒற்றை நாசித் துவாரத்தை மூடிக் கொண்டு மற்றொரு நாசியின் வழியே காற்றை உள்ளிழுத்து, மெதுவாக வெளியிடவும். இதுபோல சில முறைகள் செய்தபிறகு, அந்த துவாரத்தை மூடிக்கொண்டு பின்னர் மற்றொரு துவாரம் வழியே மூச்சுப் பயிற்சி செய்யவும்.

    மாணவர்கள் தினமும் காலையில் 20 நிமிடம், மாலையில் 20 நிமிடம் இந்தப் பயிற்சியை செய்தால் மூளைக்கு போதுமான அளவில் ஆக்சிஜன் கிடைத்து சுறுசுறுப்பாக செயல்படும். உடலும் புத்துணர்ச்சியுடன் இயங்குவதை காண்பீர்கள். தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்துவர மாற்றங்களை நீங்களே உணர முடியும்.

    பிராணயாமம் போலவே மற்றொரு விளையாட்டு பயிற்சியும் நினைவுத் திறனை வளர்க்கும். இந்தப் பயிற்சியை நீங்கள் பூச்சொல்லி விளையாடுதல் அல்லது வேறு பெயரில் நீங்கள் அறிந்திருக்கலாம். அதையே எண்களோடு சேர்த்து பயிற்சி செய்து நினைவுத் திறனை மேம்படுத்தும் பயிற்சி இது.



    ஒன்று முதல் 100 வரை உங்களுக்கு எண்ணத் தெரியும்அல்லவா? அது பயிற்சியல்ல. அதை 100 முதல் 99, 98, 97 என்று ஒன்றுவரை குறைத்துக் கொண்டே பயிற்சி எடுங்கள். பின்னர் இரண்டு இரண்டாக குறைத்து 100, 98, 96, 94 என்று 2 வரை பயிற்சி செய்யுங்கள். அடுத்து மூன்று மூன்றாகவும், பின்னர் நான்கு, நான்காகவும், இறுதியில் 9 வரை கழித்துக் கொண்டே எண்ணி பயிற்சி பெற்றால் நினைவுத்திறன் படுவேகமாக செயல்படுவதை உணரலாம். எப்போது கேள்வி கேட்டாலும் உங்களால் எந்த எண்ணிலிருந்தும் கழித்துக் கொண்டே எண்கள் விடுபடாமல் சொல்ல முடிந்தால் நீங்கள் நினைவுத்திறனில் படுசுட்டியாக மாறிவிட்டீர்கள் என்று பொருள்.

    7 வயது வரை உள்ள குழந்தைகள் 50 வரையும், 14 வயது வரை உள்ள குழந்தைகள் 100 வரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு வரிசைப்படி எண்களை குறைத்துச் சொல்லி நினைவுத்திறன் பயிற்சி மேற்கொள்ளலாம்.

    மேற்கண்ட பயிற்சிகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றினால், நினைவுத்திறன் சிறப்பாக செயல்படும். இனி படித்த பாடங்கள் மறக்கவே மறக்காது அல்லவா?!

    தினசரி பழக்கங்கள்

    ஞாபக சக்திக்காக தினசரி செய்ய வேண்டிய சில பழக்கங்கள்...

    வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு சரியான நேரத்திற்குத் தூங்கச் செல்வது மூளைக்கு போதிய ஓய்வைக் கொடுத்து நினைவுத்திறன் சிறப்பாக செயல்பட துணை செய்யும்.

    அதேபோல சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதும், மூளை சிறப்பாக செயல்பட துணை செய்யும். மூளைக்கு அவசியமான ஒமேகா-3, ஒமேகா-6 உள்ளிட்ட சத்துப் பொருட்கள் நிரம்பிய உணவுகளை உங்கள் விருப்ப உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    உடல் எடையை கட்டுக்குள் வைப்பதாக கருதி, உணவை குறைத்தால் அது மூளை இயக்கத்தை தடை செய்து ஞாபகசக்தி குறைவை ஏற்படுத்தலாம்.

    ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் என்றிருக்காமல் அவசியமான வேலைகளை நினைவுபடுத்தி மனதில் பதிய வைப்பது சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

    விளையாட்டுகள் மூளைக்கு சிறந்த பயிற்சியைத் தந்து நினைவுத்திறனை அதிகரிக்கும். 
    பிள்ளைகள் பசித்த வயிறும், அழுத கண்களுமாக பள்ளிக்கு செல்வதை மாற்றி, சத்தான சாப்பாடு, சிரித்த முகமாக அவர்கள் பள்ளி சென்று திரும்ப அக்கறை காட்டுங்கள்!
    95 சதவீத குழந்தைகள் சத்தான உணவை எடுத்துக் கொள்வதில்லை என்கிறது ஒரு புள்ளி விவரம். பாதி குழந்தைகள் காலை உணவில் கவனம் செலுத்துவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

    சத்தான காலை உணவே குழந்தைகளின் நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, மன ஒருமைப்பாடு, சாதுரிய மனப்பான்மைக்கு உதவியாக இருக்கும். நிம்மதியாக சாப்பிட்டு மனநிறைவுடன் பள்ளிக்கு கிளம்புபவர்கள் மகிழ்ச்சியான மனநிலையுடன் எதையும் எதிர்கொள்வார்கள்.

    அடிக்கடி காலை உணவை சாப்பிடாமல் கிளம்புபவர்களுக்கு வயிற்றில் சுரக்கும் ஜீரண திரவங்களால் வயிற்றில் புண் ஏற்பட்டு, ‘அல்சர்’ எனும் தீராத வயிற்றுவலி பிரச்சினையாக மாற வாய்ப்பு உண்டு.

    குழந்தைகள் சரியாக சாப்பிட்டு மகிழ்ச்சியாக பள்ளி செல்வது பெற்றோரின் கைகளில்தான் உள்ளது.

    சிறுகுழந்தைகள் பலர் சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களை சாப்பிட வைக்க, அவர்களின் சொந்த விருப்பத்தின்படி உணவுகளை தயார் செய்து கொடுக்க வேண்டும். கடைக்கு அழைத்துச் சென்று அவர்களையே காய்கறியைத் தேர்வு செய்யச் சொல்லுங்கள். ஒவ்வொரு காயிலும் என்ன சத்து இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள். காய்கறி குறித்து குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாராக இருங்கள். சமைக்கும்போது சின்னச் சின்ன வேலைகள் செய்ய குழந்தைகளை அனுமதியுங்கள். இது சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

    வழக்கமான இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுக்குப் பதிலாக, குழந்தைக்குப் பிடித்த உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இவற்றுக்குப் பதிலாக பால், காய்கறி, பழங்கள், கீரைகள், பருப்புகள், தேன், முந்திரி, பாதாம், திராட்சை, முட்டை சேர்த்து விதவிதமான உணவுகள் தயாரித்து கொடுக்கலாம்.

    சாப்பிடும்போது பெற்றோரும் இணைந்துகொண்டால் போட்டி போட்டு சாப்பிட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாம்.

    பள்ளிக்கான தயாரிப்புகளை இரவே முடித்து விடுங்கள். குழந்தைகளின் வேலையை அவர்களே செய்ய வாய்ப்பளியுங்கள்.

    தொலைக்காட்சி பார்க்கும், ஸ்மார்ட்போனில் விளையாடும் நேரத்தைக் குறைத்து, அவர்களுடன் பேசவும், விளையாடவும் நேரம் ஒதுக்குங்கள்.

    பசித்த வயிறும், அழுத கண்களுமாக பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை மாற்றி, சத்தான சாப்பாடு, சிரித்த முகமாக அவர்கள் பள்ளி சென்று திரும்ப அக்கறை காட்டுங்கள்! 
    குழந்தைகளுக்கு ஆறாவது ஏழாவது மாதத்தில் பால் பற்கள் முளைக்க ஆரம்பித்து விடும். அப்போதிலிருந்தே நாம் குழந்தைகளின் பற்களை பராமரிக்க தொடங்கி விட வேண்டும்.
    * குழந்தை தினமும் காலை எழுந்ததும், மெல்லிய மஸ்லின் அல்லது மல்துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்தல் வேண்டும். இரவு, படுக்கைக்குச் செல்லும் முன்னர் இவ்வாறு செய்தல் நல்லது. ஒரு வயது வரும் வரை இதை தொடருங்கள். பின்பு பிரஷ் கொண்டு பற்களை துலக்கலாம்.

    * பால் பற்கள் முளைக்கும் போது, ஈறுகள் நம நமவென்று இருக்கும், இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம். இது வழக்கம் தான். அதனால் குழப்பமின்றி மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

    * கேரட், ஆப்பிள்களை சிறிய துண்டுகளாக்கி கொடுப்பதால், பற்கள் வலுவுறும்.



    * குழந்தைக்கு 1 வயதாகும் போது, பிரஷ் கொண்டு பல் துலக்குங்கள். காலையிலும், இரவிலும் பல் துலக்குங்கள். இதனால் குழந்தை இதனை தனது அன்றாட செயலாக கருதுவர். நீங்கள் மறந்தாலும், அவர்கள் உங்களுக்கு நினைவூட்டுவர்.

    * அதிகளவு இனிப்பு பதார்த்தங்களை தவிருங்கள். பெரும்பாலும், சாக்லேட்டை தவிர்ப்பது நல்லது.

    * வருடம் ஒரு முறையாவது, குழந்தைகளை பல் மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள்.
    குழந்தைகள் சில சமயம் கோபமாகவும், எரிச்சலோடும் பேசுகிறார்களே? சிறு வயதிலேயே ஏன் இப்படி? என்பதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் முதல் பொறுப்பு பெற்றோர்கள்தான். ஏனென்றால் அவர்கள்தான் குழந்தைகளுக்கு முன்மாதிரி. இதுதான் உலக நியதியும்கூட. முதலில் அம்மாவும், அப்பாவும் தான். பிறகுதான் இந்த சமூகம் எல்லாம்.

    குழந்தைகள் இப்படி நடந்து கொள்வது பெற்றோர்களைப் பார்த்துத்தான். குழந்தைகள் முன்பாகவே பெற்றோர்கள் சண்டைபோட்டுக் கொண்டால் அது அவர்கள் மனதில் பதிந்துவிடும். சாப்பாட்டில் உப்பு குறைவு அல்லது அதிகம் என்பதற்காக அப்பா சாப்பாட்டுத் தட்டை தூக்கி எறிந்தால் குழந்தையும் ஒருநாள் இதையே செய்யும்.

    கூட்டுக் குடும்பங்கள் மறந்து தனிக் குடும்பங்கள் அதிகமாவதாலும், குழந்தைகளை கவனிப்பது, கண்டிப்பது, தட்டிக் கொடுப்பது போன்றவையும், அதிகமாக செல்லம் கொடுப்பது, எதை கேட்டாலும் வாங்கிக் கொடுப்பது போன்றவையும் தற்போது அதிகரித்துள்ளது.

    குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுப்பதும் தவறு, எதையுமே வாங்கிக் கொடுக்காமல் இருப்பதும் தவறு. அடம் பிடித்து அழுவதால் எல்லாம் நமக்கு கிடைத்துவிடும் என்ற சிந்தனை குழந்தைக்கு வந்துவிட்டால் அவ்வளவு தான். எது தேவையோ அதை வாங்கிக் கொடுங்கள். அடம் பிடித்து அழுது புரண்டால் ஒன்று புரியவையுங்கள் அல்லது புறக்கணியுங்கள்.
    வளரும் குழந்தைகளுக்கு தினமும் சத்தான உணவுகள் மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
    குழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

    1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பார்லி, மக்காச்சோளம், கம்பு, ஓட்ஸ், அரிசி, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகளில் 2 கப் அளவாவது தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 4 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் 4 கப் சேர்த்துக்கொள்வது நல்லது. இவற்றில் புரதம், கால்சியம், இரும்பு, பி-காம்ப்ளக்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் கேரட், பருப்பு, வெங்காயம், குடைமிளகாய, பீட்ரூட் போன்றவற்றிலும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

    பீன்ஸ், பட்டாணி, மொச்சை, கொண்டைக்கடலை, பயத்தம் பருப்பு போன்ற தானிய வகைகளிலும் நிறைய சத்துக்கள் உள்ளன. அவைகளில் குழந்தைகள் விரும்பும் சாண்ட்விச், கட்லெட் போன்ற பலகாரங்களை தயார் செய்து கொடுக்கலாம். மேற்கண்ட தானிய வகை உணவுகளில் ஒரு கப் அளவுக்காவது குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.



    1 முதல் 3 வயது குழந்தைகள் 2 கப் அளவும், 4-6 வயது குழந்தைகள் 4 கப் அளவும் காய்கறி வகைகளை தினமும் சாப்பிட வேண்டும். கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், ராகி, பட்டாணி போன்றவற்றை பயன்படுத்தி ரொட்டி, உப்புமா, சூப் வகைகள் தயார் செய்து கொடுக்கலாம். பச்சைக்காய்கறிகளுடன் முட்டை சேர்த்து சாண்ட்விச், காய்கறி புலவ் தயார் செய்து கொடுத்து ருசிக்கவைக்கலாம்.

    குழந்தைகள் தினமும் பழங்கள் சாப்பிட வேண்டும். நான்கைந்து பழ வகைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பவுலில் போட்டு சாப்பிட கொடுக்கலாம். அதனை குழந்தைகள் விரும்பாவிட்டால் ஜூசாகவோ, சாலட்டாகவோ, மில்க் ஷேக்காகவோ தயாரித்து கொடுக்கலாம்.

    தினமும் 500 மி.லி பால் பொருட்களை சாப்பிடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அவற்றுள் தரமான புரதம், கொழுப்பு சத்து உள்ளடங்கி இருக்கிறது. பழங்கள், உலர் தானியங்களை விட பால் பொருட்களில் ஊட்டச்சத்து அடர்த்தி அதிகம்.

    முட்டை, மீன், இறைச்சி வகைகளை 50 கிராம் அளவாவது அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எந்த உணவு வகைகளையும் பிரஷாக தயாரித்து சாப்பிட கொடுக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒருபோதும் சாப்பிட அனுமதிக்கக் கூடாது. அவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும். 
    அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில், தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக கல்வித்தரம் இருந்தால்தான் மாணவர்கள் அதிகளவில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறமுடியும்.
    ‘இன்றைய குழந்தைகளே, நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்’ என்றார் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அத்தகைய நம்பிக்கை நட்சத்திரங்களை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு பள்ளிக்கூடங்களுக்குத்தான் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் வழங்கும் கல்வித்தரத்தை பொறுத்துத்தான் மாணவர்கள் ஒளிவீசும் நட்சத்திரங்களாக மாறுவார்களா? அல்லது எரிநட்சத்திரங்களாக வீழ்ந்துவிடுவார்களா? என்பது அமையும்.

    அந்தவகையில், பிளஸ்-2 தேர்வுதான் அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வழிகாட்டியாக அமையும். நேற்று முன்தினம் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மருத்துவப்படிப்புக்கு ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும். பொறியியல் படிப்புக்கு பிளஸ்-2 தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

    மருத்துவக்கல்லூரிகளை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக்கல்லூரிகள், 11 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 3,328 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதுதவிர, 516 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. 720 மதிப்பெண்கள் கொண்ட ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதில் மிகவும் கவலையளிக்கத்தக்க ஒருநிலை என்னவென்றால், முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களில் யாரும் மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் மத்திய பாடத்திட்டத்தில் படித்தவர்கள். இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படித்தவர்களின் நிலைமை மனநிறைவு அளிக்கத்தக்க வகையில் இல்லை.

    1 முதல் 1000 வரையிலான தரவரிசை பட்டியலில் அரசு மற்றும் அரசு உதவிபெற்ற பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள் 4 பேர்தான் இடம் பெற்றுள்ளனர். 1001 முதல் 3000 வரையிலான தரவரிசை பட்டியலில் 8 பேரும், 3001 முதல் 5000 வரையிலான தரவரிசை பட்டியலில் 20 பேரும் மட்டுமே உள்ளனர். ஆக, ஏறத்தாழ 20 மாணவர்களுக்குத்தான் அரசு கோட்டாவில் மருத்துவப்படிப்புக்கு இடம்கிடைக்கும் என்ற நிலைமை உள்ளது.

    இந்த ஆண்டு கட்-ஆப் மார்க்கும் உயரும். பொது பட்டியலில் கடந்த ஆண்டு கட்-ஆப் மார்க் 384 என்ற நிலையிலிருந்து, இப்போது 415 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல ஒவ்வொரு பட்டியலிலும் கடந்த ஆண்டு கட்-ஆப் மார்க்கைவிட, 50 மதிப்பெண்கள் உயரும் நிலை உள்ளது. மொத்தத்தில், 200 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்ற யாருக்கும் மருத்துவப்படிப்பில் இடம்கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இந்த பட்டியலை பார்க்கும்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் நடத்திய ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. தேர்வுபெறும் மாணவர்களெல்லாம் பெரும்பாலும் தனியார் பள்ளிக்கூடங்களில் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். தனியார் பள்ளிக்கூடங்களை மாணவர்கள் நாடுவதற்கு இதுதான் காரணம்.

    இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில், தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக கல்வித்தரம் இருந்தால்தான் மாணவர்கள் அதிகளவில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறமுடியும். எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களை இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே ஆரம்பித்து, தனியார் பயிற்சி மையங்களுக்கு இணையான பயிற்சியை வழங்கவேண்டும். 
    ×