என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அருண் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மிஷன் சாப்டர் 1'.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த 'மிஷன் சாப்டர் -1' திரைப்படம் புதுவை பி.வி.ஆர். சினிமாவில் வெளியானது. புதுச்சேரி வந்த நடிகர் அருண்விஜய் 'மிஷன் சாப்டர் -1' திரைப்படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார். பின்னர் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்தனர்.



    நடிகர் அருண் விஜய் நிருபர்களிடம் கூறியதாவது:-

    'மிஷன் சாப்டர் -1' படத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை மிஷன் பொங்கலாக கொண்டாடி வருகிறோம். படம் வெளியாகி உள்ள தியேட்டர்களை அதிகப்படுத்த உள்ளோம். வரும் காலங்களில் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க உள்ளேன்.

    அடுத்து இயக்குனர் பாலாவின் 'வணங்கான்' என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த திரைப்படம் எனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும்.


    புதுவை மக்களுடன் அமர்ந்து படம் பார்த்தது ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் சூப்பராக இருக்கிறது என்று சொல்லும் போது ஏற்படும் சந்தோஷம் வேறு ஏதும் இல்லை.

    நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது நல்ல விஷயம். அது அவருக்கு மரியாதை செலுத்துவதாக இருக்கும். ஏனென்றால் சங்கத்தை மீட்டு கொடுத்தது விஜயகாந்த் தான் என்றார்.

    • ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் தங்கலான் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
    • விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

    ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் தங்கலான் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.

    விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தங்கலான் படம் வரும் 26-ம் தேதி ரிலீசாகும் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தங்கலான் படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. 

    அதன்படி, தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவுள்ளதாக பட நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • உலகம் முழுவதும் 400 திரையரங்குகளில் "நெரு" வெளியானது
    • திரைப்படம் வெளியாகி 25 நாட்களிலேயே இந்த சாதனையை புரிந்துள்ளது

    கடந்த 2023 டிசம்பர் 21 அன்று மலையாள திரையுலக முன்னணி நடிகரான மோகன்லால் கதாநாயகனாக நடித்த "நெரு" திரைப்படம் உலகெங்கும் வெளியானது.

    இந்தியாவில் 500 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 400 அரங்குகளிலும் வெளியானது.

    2013ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வெற்றிகரமாக ஓடிய "திரிஷ்யம்" திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், நெரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

    2021ல் இதே கூட்டணியின் "திரிஷ்யம்-2" வெளியாகி வெற்றி திரைப்படமாக அமைந்தது.

    வெளியாகி 25 நாட்களை நெருங்கும் நிலையில், திரைப்பட வெற்றிக்கு முக்கிய மைல்கல்லாக கருதப்படும் ரூ.100 கோடியை உலக வசூலில் தொட்டு விட்டதாக திரைப்பட குழு அறிவித்துள்ளது.

    வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ள மோகன்லால் திரைப்பட குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    ஐஎம்டிபி (IMDb) திரைப்பட மதிப்பீட்டு புள்ளிகளில் இத்திரைப்படம் 10க்கு 7.8 என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பார்வை இழந்த பெண்ணின் மீது தாக்குதல் நடத்தி, சட்டத்தை வளைத்து, தண்டனையில் இருந்து தப்பித்த ஒரு பணக்கார இளைஞனுக்கு, மீண்டும் சட்டத்தின் மூலமே தண்டனை பெற்று தரும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லால் சிறப்பாக நடித்திருப்பது உலகெங்கும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

    • ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.
    • பொங்கலை முன்னிட்டு வேட்டையன் படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய்பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.

    படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை – அனிருத். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர். தூத்துக்குடி மற்றும் சென்னையில் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பொங்கலை அன்றுபுதிய போஸ்டரை வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பொங்கலை முன்னிட்டு வேட்டையன் படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள படக்குழு, ரஜினி துப்பாக்கியுடன் ஸ்டைலாக நடந்து வரும் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் கூலர்ஸ் அணிந்துபடி செம்ம கெத்து காட்டியுள்ளார் தலைவர்.


    இதனையடுத்து வேட்டையன் ஸ்பெஷல் போஸ்டரை ரசிகர்கள் ஆவர்வத்துடன் பார்ப்பதுடன் சமூக வளைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், படத்தின் ரிலீஸ் தேதி எப்போது எனவும் கேட்டு வருகின்றனர். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய லால் சலாம், அடுத்த மாதம் ரிலீஸாகவிருப்பதால், விரைவில் வேட்டையன் ரிலீஸ் அப்டேட்டும் கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
    • படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் என விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் என விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், தி கோட் படத்தின் அப்டேட் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இது #தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் பொங்கலாக இருக்கும்.. அர்ச்சனகல்பாதி அவர்களே என்ன சொல்கிறீர்கள்.. என்று பதிவிட்டிருந்தார்.

    வெங்கட் பிரபுவின் இந்த பதிவு மறுபதிவு செய்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, " கண்டிப்பாக.. தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் தளபதி பொங்கலாக இருக்கபோகிறது.. " என்று பதிவிட்டிருந்தார்.

    இதன்மூலம், தி கோட் படம் தொடர்பான அப்டேட் நாளை வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

    • பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியது.
    • பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் பற்றிய தகவல் வெளியானது.

    பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 வெற்றியாளர் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

     


    இந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா பல கோடி மக்களின் ஆதரவுடன் டைட்டில் வின்னராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த சீசனில் மணி சந்திரா மற்றும் மாயா அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்ததாக தெரிகிறது.

    தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்ட் மூலம் வீட்டிற்குள் நுழைந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளர் அர்ச்சனா தான் என்றும் கூறப்படுகிறது.

    • ராதிகா ஆப்தே ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி- கத்ரீனா கைஃப் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இன்று காலை 8.30 மணிக்கு விமானத்தில் செல்ல இருந்தேன். ஆனால் தற்போது 10.15 மணியைக் கடந்தும் விமானம் இன்னும் புறப்படவில்லை. ஆனால், விமானம் புறப்பட்டுவிடும் என கூறி பயணிகள் அனைவரையும் ஏரோ பிரிட்ஜில் வைத்து பூட்டி விட்டனர்.

    பயணிகளில் பலர் குழந்தைகளை வைத்துள்ளனர். வயதானவர்களும் உள்ளனர். எல்லோரையும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஏரோ பிரிட்ஜில் அடைத்துவைத்துள்ளனர். பாதுகாவலர்கள் கதவை திறக்கவில்லை. ஊழியர்களுக்கும் என்ன நடக்கின்றது என தெரியவில்லை. நானும் உள்ளே பூட்டப்பட்டுள்ளேன். 12 மணி வரை உள்ளேயே இருக்க வேண்டியிருக்கும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.


    குடிக்க தண்ணீர் கூட இல்லை. வேடிக்கையான இந்தப் பயணத்துக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சியையும் அவர் பகிர்ந்துள்ளார். ஆனால், விமான நிலையம் தொடர்பான எந்த ஒரு விவரத்தையும் அவர் தனது பதிவில் குறிப்பிடவில்லை.


    • கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.



    இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது பின்னர் ஒரு சில காரணங்களால் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.


    லால் சலாம் போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லால் சலாம்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் 15-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • விஜய் ‘தி கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


    கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவளத்தில் பிரம்மாண்ட வீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு இந்த மாதம் இறுதி வரை கோவளத்தில் நடைபெறும் என்றும் அதன் பின்னர் ராஜஸ்தானில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்களை பார்த்த விஜய் வேன் ஒன்றின் மீது அவர்களை நோக்கி கையசைத்தார். இந்த பர்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பாளர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.


    • ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் நேற்று வெளியானது.
    • இப்படத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படம் நேற்று ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மேலும் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வெளியான முதல் நாளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இப்படத்திற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


    இதையடுத்து 'கேப்டன் மில்லர்' படக்குழுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், "ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து 'கேப்டன் மில்லர்' என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ்குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதரர் ஜி.வி.பிரகாஷ், சத்யஜோதி பிலிம்ஸ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நன்றி உதயநிதி ஸ்டாலின். நீங்கள் விரும்பும் கலையை பாராட்ட தவறுவதில்லை. "கர்ணன்" படத்திற்காக நீங்கள் பாராட்டிய காலத்தை நான் இன்னும் அன்புடன் நினைவில் கொள்கிறேன். இந்த பாராட்டு எனக்கும் எனது கேப்டன் மில்லர் குழுவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.


    • இந்த சீரிஸ் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது.
    • இந்த சீரிஸ் வீரப்பனின் முழு வாழ்க்கை கதையையும் விவரிக்கிறது.

    மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) என்கவுண்டரில் தனது முடிவை சந்தித்தார். இவரது வாழ்க்கை கதை 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸாக உருவாகியுள்ளது. இந்த சீரிஸை சரத் ஜோதி இயக்கியுள்ளார்.


    தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸை தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14- ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தியாவையே அதிரவைத்த வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கையை, அவரது வாக்குமூலத்துடன் அலசும் இந்த சீரிஸ் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது.

    ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் இந்த சீரிஸை கொண்டாடி வருகின்றனர். தமிழின் இதுவரையிலும் மிகச்சிறந்த டாக்குமெண்ட்ரி சீரிஸ் என அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில், அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. இந்த சீரிஸ் இதுவரை 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.


    கூச முனிசாமி வீரப்பன் போஸ்டர்

    'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸுக்கு கிடைத்திருக்கும் பார்வையாளர்களின் வரவேற்பைக் கொண்டாடும் வகையில் ஒரு வித்தியாசமான ஷோவை ஜீ5, மக்கள் கூடியிருக்கும் Urban Square இல் அரங்கேற்றியுள்ளது. மக்கள் கருத்தில் 'கூச முனிசாமி வீரப்பன்' நல்லவனா ? கெட்டவனா ? என்பதைத் தெரிவிக்கும் வகையில், அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கோடுகளால் வரையப்பட்ட வீரப்பனின் ஓவியத்திற்கு, தங்கள் கருத்தையொட்டிய வண்ணங்களைத் தீட்டலாம். இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.



    • ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
    • இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

    சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்நிறுவனம் திறமைசாலிகளை தேடிக் கண்டுபிடிக்கும் விதமாக (Talent Hunt Show Launch) 'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' என்ற நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள குளோப் நெக்சஸ் நிறுவனம், அவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிப்பதோடு, திரைப்பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து அங்கீகரிக்க உள்ளது.

    'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' போட்டியில் பங்கேற்க, இதற்கான இணையதளத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த வீடியோக்களில் சிறந்த திறமைசாலிகளை தேர்வு செய்ய திரை பிரபலங்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.


    ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்குவதோடு, அவர் திறமைக்கு ஏற்ப திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும். அதேபோல் இரண்டாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும், மூன்றாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.2 லட்சமும், நான்காவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா ஜனவரி 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், குளோப் நெக்சஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் மீனாட்சி அருண், நிகழ்ச்சி மேலாளர் பவித்ரா, பொது மேலாளர் தேவிபிரியா ஸ்டீபன், மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பிரபல பாடகரும், இசையமைப்பாளரும், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பவருமான அந்தோணி தாசன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.


    இதில் அந்தோணி தாசன் பேசியதாவது, "சிறுவயதில் நான் கூட்டத்துடன் கூட்டமாக திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன், ஒரு ரசிகனாக கொண்டாடியிருக்கிறேன். இன்று நாட்டுப்புற கலையில் இருந்து வளர்ந்து, மக்களோட ஆசீர்வாதம், தெய்வத்தின் அருள், உங்களைப் போன்ற பெரியவர்களின் ஊக்கத்தால் இன்று ஒரு இயக்குனராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் பயணிக்கும் பாதை சரியானது என்று நான் கருதுகிறேன். கூத்து கலைஞராக மக்களை நேரடியாக மகிழ்வித்து இருக்கிறேன். ஒரு பாடகனாகவும், இசையமைப்பாளராகவும் மக்களை மகிழ்வித்திருக்கிறேன். இப்போது நான் எடுத்திருக்கும் இயக்குனர் அவதாரத்தையும் சிறப்பாக செய்வேன் என்று நான் வணங்கும் கடவுள் அருளால் நம்புகிறேன்.

    குளோப் நெக்சஸின் 'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' நிகழ்ச்சி திறமைசாலிகளுக்கான மிகப்பெரிய வாய்ப்பு. விசில் சத்தம் மற்றும் கைதட்டல் தனக்கும் கிடைக்காதா என்று பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை போக்குகின்ற ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைய இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நான் இயக்கும் படத்தில் வாய்ப்பு வழங்குவது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் இயக்கும் படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் ஏப்ரல் 14 -ஆம் தேதி நடைபெறும் 'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' இறுதிப் போட்டியில் அறிவிக்கப்படும், நன்றி என்றார்.

    ×