என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கே.சி.பொகாடியா இயக்கத்தில் ஸ்ரீகாந்த் - எஸ்நயா நடிப்பில் உருவாகி இருக்கும் `ராக்கி' படத்தின் முன்னோட்டம். #RockyTheRevenge #Srikanth
    பி.எம்.பி. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சி.பொகாடியா தாயாரித்துள்ள படம் `ராக்கி'.

    ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் எஸ்நயா நாயகியாக நடித்திருக்கிறார். நாசர், பிரம்மானந்தம், ஷாயாஜி ஷிண்டே, ஓஏகே சுந்தர், கராத்தே ராஜா, ரமேஷ்.டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது.

    படத்தொகுப்பு - பி.லெனின், இசை - பாப்பி லாஹிரி, சரண் அர்ஜூன், ஒளிப்பதிவு - அஸ்மல் கான், பாடல்கள் - ஏ.ஆர்.பி. ஜெயராம், நடனம் - பாப்பி, தயாரிப்பு, எழுத்து, இயக்கம் - கே.சி.பொகாடியா.



    விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார் ஸ்ரீகாந்த். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். எம்.எல்.ஏ.வுடன் ஏற்படும் பிரச்சனையில், ஸ்ரீகாந்தை கொலை செய்து விடுகிறார்கள். ஆனால், ராக்கி ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

    படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #RockyTheRevenge #Srikanth #Eshanya

    ராக்கி டீசர்:

    சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமான சமீரா ரெட்டி சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. #SameeraReddy
    வாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி கடந்த 2 வருடத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் 2வது முறையாக கர்ப்பமாகியிருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் சமீரா. அவர் அணிந்து வந்த ஆடையால் சர்ச்சையில் சிக்கி யிருக்கிறார்.

    உள்ளாடை தெரியும் அளவிற்கான கண்ணாடி போன்று டிரான்ஸ்பரன்ட் ஆடை அணிந்து போஸ் கொடுத்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் வயிறும் நன்கு தெரியும்படியாக சமீராவின் உடை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது தான் அவரை சர்ச்சையில் சிக்க வைத்திருக்கிறது.



    வெறுமனே பார்த்தாலே கர்ப்பமாக இருப்பது தெரிந்துவிடும், அதற்காக கண்ணாடி ஆடை அணிந்து வயிற்றை காட்ட வேண்டுமா என்று ரசிகர்கள் அவரை வசைமாரி பொழிந்து கொண்டிருக்கின்றனர். #SameeraReddy

    கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் கிராமத்து கதையில் நடிக்க அருள்நிதி நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார். #ArulnidhiTamizharasu #SeenuRamasamy
    கிராம பின்னணியில் உருவான வம்சம் திரைப்படம் மூலம் அருள்நிதி கதாநாயகனாக அறிமுகமானாலும் அவருக்கு கவனம் பெற்றுத் தந்த படங்களான டிமான்டி காலனி, மெளனகுரு ஆகியவை திரில்லர் பாணியில் உருவாகி இருந்தன. வம்சம் போல மண் சார்ந்த கதை அவருக்கு அமையாமல் இருந்த நிலையில் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

    கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து சீனு ராமசாமியின் அடுத்த படத்தை டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் தான் அருள்நிதி நடிக்க இருக்கிறார்.



    யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் இணைந்துள்ளார். படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி, மற்ற நடிகர், நடிகைகள், இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருக்கிறது. #ArulnidhiTamizharasu #SeenuRamasamy

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்காக இரு இயக்குநர்கள் ரஜினியிடம் கதை கூறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Darbar
    ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார்.

    படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். பின்னர் ரஜினிகாந்த் போலீஸ் உடை அணிந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. கதை மற்றும் கதாபாத்திரங்களின் தோற்றங்கள் வெளியாவதை தடுக்க படப்பிடிப்புக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். ரசிகர்களுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்புக்கு ஆட்கள் நிறுத்தப்பட்டு இருந்தார்கள். 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பு நடக்கிறது.



    நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக வருகிற 17-ந் தேதி சென்னை வரும் அவர் தேர்தல் நாளான மறுநாள் வாக்கை பதிவு செய்துவிட்டு உடனடியாக மும்பை திரும்பி படப்பிடிப்பில் பங்கேற்கிறார். படத்தில் ரஜினிகாந்த் மகளாக நிவேதா தாமஸ் வருகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடித்தாலும் ரஜினிகாந்த் ஜோடியாக அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், எச்.வினோத் ஆகியோர் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே தர்பார் படத்தை முடித்துவிட்டு இவர்கள் படங்களில் அடுத்தடுத்து நடிப்பார் என்று தெரிகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று ஏற்கனவே கூறியுள்ளார். எனவே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தர்பார் படத்தை தவிர்த்து மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #Rajinikanth #Darbar #KSRaviKumar #HVinoth

    இந்திய சினிமாவில் முக்கிய பிரபலமமாக வலம் வரும் பிரபாஸ், தற்போது முக்கிய சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். #Prabhas
    தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வந்த பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய சினிமா ரசிகர்களால் அறியப்படும் முக்கிய நபராக விளங்குகிறார். அவர் தற்போது சுஜீத் இயக்கத்தில் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    பொதுவாக சமூக வலைதளங்களில் அதிக விருப்பமில்லாமல் இருக்கும் பிரபாசுக்கு பேஸ்புக்கில் மட்டுமே கணக்கு உள்ளது. அதில் அவரை ஒரு கோடியே 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.



    பேஸ்புக் தவிர்த்து வேறு எந்த விதமான சமூக வலைதளங்களிலும் இல்லாத பிரபாஸ் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்ஸ்டாகிராமில் ஒரு கணக்கை தொடங்கியிருக்கிறார்.

    பிரபாஸின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழிலை பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ரசிகர்களுடன் கொஞ்சம் நெருக்கமாக இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். #Prabhas #Saaho #PrabhasOnInstagram

    சூப்பர் ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் தமிழக மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார். #PowerstarSrinivasan
    தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் குடியுரிமை தேசிய கட்சி சார்பில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டியிடுகிறார். நேற்று அவர், சென்னை மாநகராட்சி அடையாறு மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வாகன பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்தார்.

    பின்னர் நிருபர்களிடம் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியதாவது,

    தேர்தலுக்காக மக்களை நேரடியாக சந்திக்கும் பிரசாரத்தை நாளை (இன்று) முதல் தொடங்க இருக்கிறேன். நான் மக்களையும், கடவுளையும் நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன். அதிகமான வாக்குகள் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். என்னை பிரசாரம் செய்யவிடாமல் யாரும் தடுக்கவில்லை. எங்கள் கட்சி தலைவர் வந்த பிறகு பிரசாரம் தொடங்கலாம் என்று இருந்தேன். நடிகர் ரஜினிகாந்த், பா.ஜனதா தேர்தல் அறிக்கையை பாராட்டி தனது சொந்த கருத்தை கூறியுள்ளார். 



    ஆதரவு கொடுப்பதும், கொடுக்காததும் அவரது விருப்பம். அரசியலுக்கு வர அவருக்கு பயம் இல்லை. நல்ல கருத்துகளை அவர் வெளிப்படுத்துகிறார். சொல்லாமலேயே நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன், ரஜினிகாந்தும் விரைவில் வருவார். தமிழக மக்களிடம் சூப்பர் ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் (எனக்கும்) எதிர்பார்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். #PowerstarSrinivasan

    எம்.ஜி.ஆர். - லதாவை உதாரணமாக வைத்து நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று கஸ்தூரி வருத்தம் தெரிவித்துள்ளார். #Kasthuri
    நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது கருத்துகள் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து பதிவு செய்திருந்தார். 

    இதற்கு நடிகை லதா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


    இந்த நிலையில், இதுகுறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “எம்.ஜி.ஆர். காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இதில் கண்ணியமும், பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.

    இருப்பினும், இதில் யார் மனமும் புண்பட்டிருந்தால், மனமார வருந்துகிறேன்.” என்று கூறியுள்ளார். #Kasthuri #MGR #Latha

    ரஜினிகாந்த் நடிக்கும் `தர்பார்' படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் ஆக்‌ஷன் படத்திற்கான கதையை எழுதுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Trisha #Saravanan
    ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சரவணன் தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த ‘சக்ரவியூகா’ படத்தை இயக்கினார். 

    இடையே விபத்து ஏற்பட்டதால் சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் இயக்குனர் பணிக்கு திரும்பி உள்ளார். முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்‌ஷன் படமொன்றை இயக்கவுள்ளார்.



    இதில் திரிஷா நாயகியாக நடிக்கிறார். தற்போது திரிஷாவுடன் நடிக்க உள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாக இருக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் கதையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுத, சரவணன் இயக்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சரவணன், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Trisha #Saravanan #ARMurugadoss

    எம்.ஜி.ஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து நடிகை லதா அறிக்கை வெளியிட்டுள்ளார். #Latha #Kasthuri
    நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து பதிவு செய்திருந்தார். இதற்கு பல கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், நடிகை லதா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 

    எம்.ஜி.ஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

    “நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?



    கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே.. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், எம்.ஜி.ஆர் நடிச்ச படத்தைச் சொல்லணும்.

    அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா.. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படுத்துற மாதிரி பேசலாமா..? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி.

    இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் குறித்து பேசியுள்ளார். #GVPrakash
    ஜிவி.பிரகாஷ் நடிப்பில் இந்த அண்டு, சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

    குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகி விட்ட ஜிவி.பிரகாஷின் குழந்தை ரசிகர்களை கவரும் வகையில் ’வாட்ச்மேன்’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் புருனோ என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. நாய் இடம்பெறும் சாகச காட்சிகளை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள் என்பதாலேயே கோடைக் கொண்டாட்டமாக வரும் 12-ம்தேதி ரிலீசாக இருக்கிறது. 

    இப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, வாட்ச்மேன் படம் காமெடியுடன் கூடிய திரில்லர். தண்ணீர் கேன் போடும் பையனான நான் இரவில் ஒரு வீட்டுக்குள் போகிறேன். அந்த பங்களாவில் இருப்பவர்கள், நடக்கும் சம்பவங்களை கொண்டு படம் நகரும். புருனோ என்ற நாய் படம் முழுக்க வரும். அது செய்யும் சாகசங்கள் பிரமிக்க வைக்கும். 



    நாய்க்கு பயப்படும் ஒருவன் நாயுடனே இரவு முழுக்க இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான். அந்த நாய் அவனை காப்பாற்ற தான் முயற்சி செய்கிறது. ஆனால் அவனோ அந்த நாயை பார்த்து மிரள்கிறான். இப்படித்தான் கதை போகும். என்னை காப்பாற்ற நாய் செய்யும் செயல்களை குழந்தைகள் கைதட்டி ரசிப்பார்கள். அந்த நாயுடன் சுமார் 40 நாட்கள் நடித்தேன். நாய் குழந்தைகள் போலத்தான். அவற்றை அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது. அவற்றின் போக்கில் சென்றுதான் படம் பிடிக்க வேண்டும். புருனோவை நண்பனாக்கி கொண்டேன். இருந்தாலும் சில சமயம் முறைக்கும். பயமாக இருக்கும்’ என்றார்.
    பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. #PariyerumPerumal
    இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் 
    பரியேறும் பெருமாள் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகும் வெளிநாடுகளில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.

    பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது.



    புதிய படங்கள் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே இந்த விழாவில் படங்கள் திரையிடுவது வழக்கம். ஆனால் பரியேறும் பெருமாள் படம் வெளியாகி பல மாதங்களுக்குப்பிறகு இவ்விழாவில் திரையிடப்படுவது மகிழ்ச்சியை தருகிறது என்கிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ்.
    இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி யார் என்பதை மாளிகை பட விழாவில் கூறியிருக்கிறார். #Maaligai #VijayAntony
    ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாளிகை’. "சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்" சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

    இதில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அதன்பின் பேசிய அவர், ‘நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது. 



    இந்தக்கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குனருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்" என்றார்.
    ×