என் மலர்
செய்திகள்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் அனுகூலம் ஏற்படும்.
ரிஷபம்
உடல் நலனில் கவனம் தேவைப்படும் நாள். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்.
மிதுனம்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே வரலாம். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர்.
கடகம்
யோகமான நாள். நாணயமாக நடந்து கொள்வீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயணத்தால் பலன் உண்டு.
சிம்மம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
கன்னி
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். ஆயினும் விரயங்களும் கூடுதலாக இருக்கும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் சில தடுமாற்றங்கள் ஏற்படலாம்.
துலாம்
தொட்ட காரியம் வெற்றி பெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்த உத்தியோக முயற்சியில் நல்ல தகவல் கிடைக்கும்.
விருச்சிகம்
நினைத்தது நிறைவேறும் நாள். நெஞ்சம் மகிழும் சம்பவம் நடைபெறும். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
தனுசு
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் சிலர் நாடி வந்து உதவிசெய்வர். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
மகரம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம்
நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோய் அகலும். தைரியத்தோடும். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
மீனம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக முடியும். பிள்ளைகளின் கல்வி நலனில் ஆர்வம் காட்டுவீர்கள்.
- பராகுவே-பிரேசிலை இணைக்கும் பாலம் 2022-ல் கட்டி முடிக்கப்பட்டது.
- இரு நாடுகளின் உறவில் நிலவிய சிக்கலால் இப்பாலம் திறக்கப்படவில்லை.
பிரேசிலியா:
தென் அமெரிக்க நாடுகளான பராகுவே மற்றும் பிரேசிலை இணைக்கும் விதமாக 2022-ம் ஆண்டு பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இரு நாடுகளின் உறவில் நிலவிய சிக்கல் காரணமாக இந்தப் பாலம் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா கலந்த்கொண்டு இந்தப் பாலத்தை தற்போது திறந்து வைத்தார்.
பரானா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் ஃபோஸ் டு லுகா மற்றும் பிரெசிடென்ட் பிரான்கோ நகரங்களை இணைக்கிறது.
பழைய பாலத்தின் நெரிசலில் இருந்து கனரக வாகனங்களை விடுவிக்க இந்தப் பாலம் உறுதுணையாக இருக்கும். மேலும், தென் அமெரிக்காவின் அட்லாண்டிக்-பசிபிக் வர்த்தகப் பாதைக்கு உதவுகிறது.
- பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்தது.
- இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மதுரை:
பொங்கல் பண்டிகை நாட்களில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் தேர்வு அட்டவணையை மாற்றி அறிவிக்குமாறு இந்தியப் பட்டய கணக்காளர் கழகத்திற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் (15, 16, 17 ஜனவரி 2026) நாட்களில் இந்திய பட்டய கணக்காளர் கழகம் இடையீட்டு தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது.
இது தேர்வர்களுக்கு கடும் சிரமங்களை உருவாக்கும் என என்னிடம் முறையீடுகள் வந்தன.
பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி அறிவிக்குமாறு இந்திய பட்டய கணக்காளர் கழக தலைவர் சரண் ஜோத் சிங் நந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
- வெனிசுலாவைச் சுற்றி அமெரிக்கா கடலில் தனது படைகளைக் குவித்துள்ளது.
- ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்கா-வெனிசுலா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதையடுத்து போதை பொருள் கடத்துவதாக கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. வெனிசுலாவைச் சுற்றி கடலில் அமெரிக்கா தனது படைகளைக் குவித்து உள்ளது.
இதற்கிடையே, வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்க ராணுவம் கடந்த வாரம் கைப்பற்றியது. அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர். அதன்பின், அந்தக் கப்பலை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இந்த எண்ணெய் கப்பல் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் வகையில் சட்டவிரோதமாக செயல்பட்டதால் தடை செய்யப்பட்டுள்ளது என அமெரிக்கா தெரிவித்தது. கப்பல் கைப்பற்றப்பட்ட தற்கு வெனிசுலா அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், வெனிசுலாவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்கக் கடலோரக் காவல்படையால் மீண்டும் ஒரு எண்ணெய் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
ஒரே வாரத்தில் பறிமுதல் செய்யப்படும் இது இரண்டாவது எண்ணெய் கப்பல் என்பதுடன், இரண்டு வாரங்களுக்குள் இது மூன்றாவது சம்பவம் என தெரிய வந்துள்ளது.
- தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில் புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.
- தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க இது உதவும்.
பெங்களூரு:
அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து நாளை மறுதினம் காலை 8:54 மணிக்கு LVM 3 ராக்கெட் வாயிலாக புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இம்மாதம் 15 மற்றும் 21-ம் தேதிகளில் புளூபேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, இஸ்ரோ நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்றைய கிட்டத்தட்ட ஆறு பில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் எதிர்கொள்ளும் டவர் பிரச்சினை நீக்குவதற்கும், பில்லியன் கணக்கானவர்களுக்கு பிராட்பேண்டைக் கொண்டுவருவதற்கும் நாங்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.
- இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா 4,000 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினம்:
இந்தியா, இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஸ்மிருதி மந்தனா 153 போட்டிகளில் விளையாடி 4,000 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன்மூலம், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற உலக சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் 2வது வீராங்கனை ஆவார். இதற்கு முன் நியூசிலாந்தைச் சேர்ந்த சுசி பேட்ஸ் மட்டுமே 4000 ரன்களைக் கடந்துள்ளார்.
மேலும், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் அடித்த முதல் ஆசிய வீராங்கனை என்ற வரலாற்றையும் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
- சிசிஐ வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ் தொடர் மும்பையில் நடைபெற்றது.
- இதில் பெண்கள் ஒற்றையரில் ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்றார்.
மும்பை:
சிஐஐ வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ் தொடர் மும்பையில் நடைபெற்றது.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, சன்யா வார்ஸ் உடன் மோதினார். இதில் ஜோஷ்னா 7-11, 11-8, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இதேபோல், ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் வீர் சோட்ரானி, சூரஜ் சந்த் உடன் மோதினார். இதில் வீர் சோட்ரானி 11-9, 11-9, 11-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி அநேக இடங்களில் முன்னிலை பெற்றன.
- அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 246 நகராட்சி, 42 நகர பஞ்சாயத்து ஆகிய 288 உள்ளாட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றன.
இதேபோல, அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மகாராஷ்டிரா மக்கள் வளர்ச்சியுடன் உறுதியாக நிற்கின்றனர். நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துத் தேர்தல்களில் பா.ஜ.க. மற்றும் மகாயுதி கூட்டணியை ஆசிர்வதித்த மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி. வளர்ச்சிக்கான எங்களின் தொலைநோக்குப் பார்வை மீதான மக்களின் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. மகாராஷ்டிரா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உறுதி பூண்டுள்ளோம். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த பா.ஜ.க. மற்றும் மகாயுதி தொண்டர்களுக்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல, அருணாச்சல பிரதேச உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அவர் விடுத்த பதிவில், நல்லாட்சி வழங்கிய அரசுக்கு அருணாச்சலப் பிரதேச மக்கள் அசைக்க முடியாத ஆதரவைக் கொடுத்துள்ளனர். இது மாநிலத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றும் எங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
- பெற்றால் மட்டும்தான் பிள்ளையா, நட்டாலும் அது தன் வாரிசு தானே என நினைத்தார்.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதில் உள்ள ஆலமரங்களை நடும் பணியை தேர்வு செய்தார்.
புதுடெல்லி:
"தென்னைய பெத்தா எளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு"
இது 'எங்க ஊரு ராஜா' என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள். எவ்வளவு தத்துவமான வரிகள்.
தந்தை பிள்ளையிடம் காட்டிய பாசத்தை விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்ற வரிகள்.
அப்படிப்பட்ட பிள்ளைப் பாசத்தை விட தாய்மைப் பேறு எவ்வளவு மகத்தானது.
அந்தத் தாய்மைப் பேறு தனக்கு இல்லை என்றாகிப் போனதும் இந்த பெண்மணி எடுத்த ஒரு முடிவு ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திருமணம் முடிந்து பிள்ளைப் பேறுக்காக கோவில் கோவிலாக சென்று அரச மரத்தையும் ஆல மரத்தையும் சுற்றியவர் சற்றே மாறுபட்டு சிந்தித்தார்.
பிள்ளைக்காக மரங்களைச் சுற்றுவதை விட்டு அந்த மரங்களையே தன் பிள்ளைகளாக உருவாக்கினால் என்ன என தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டார்.
பெற்றால் மட்டும்தான் பிள்ளையா, நட்டாலும் அது தன் வாரிசு தானே என நினைத்த அந்தப் பெண்மணி, மரங்களை நடும் முயற்சியை தொடங்கினார். அதுவும் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதில் உள்ள ஆல மரங்களை நடும் பணியைத் தேர்வு செய்தார்.

இப்படிப்பட்ட தைரியமான முடிவெடுத்த அந்தப் பெண்மணி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.
சாலுமரத திம்மக்கா என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது பிறந்த மண் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் கிராமம். 1911-ல் பிறந்த அவர், இளம் வயதிலேயே ஹூலிகல்லு ஊரைச் சேர்ந்த சிக்கையாவை மணமுடித்தார்.
திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை வரம் கிடைக்கவில்லை. கணவரின் ஆதரவு இவரின் பெரும் வரமானது.
இருவரும் ஆலமரக் கன்றுகளை உருவாக்கி சில ஆலமரக் கன்றுகளை நட்டனர். அடுத்த ஆண்டு, அதற்கடுத்த ஆண்டு என ஆலமரக்கன்றுகள் பெருகின.
மரங்களை நடுவதுடன், அவைகளைத் தொடர்ந்து பராமரித்து வந்தனர். கோடைகாலத் தேவைக்காக மழைக்கால நீர் சேமிப்பாக சிறு சிறு குளங்களை வெட்டினர். தீராத தண்ணீர் பஞ்சத்தின் போதும் தளராமல் தொலை தூரம் சென்று குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து ஆலமரங்களுக்கு உயிர் தந்தனர் இந்த தம்பதியினர்.
கணவர் மறைந்த பிறகும் தன் முயற்சியிலிருந்து பின்வாங்காமல் தனது வாழ்நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்தார்.
தேசிய குடிமகன் விருது (1995), இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷமித்ரா விருது (1997), ஹம்பி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட நாடோஜா விருது (2010), இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது (2019) உள்பட பல சிறப்புமிக்க விருதுகள் மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவை இவரை பெருமைப்படுத்தின.
கடந்த 2016-ம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசியின் அங்கீகாரத்தையும் பெற்றார்.
இப்படி பல்வேறு புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரதா திம்மக்கா, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி அன்று 114-வது வயதில் காலமானார்.

கன்னடத்தில் 'மரங்களின் வரிசை' என பொருள்படும் சாலுமரதா என அன்புடன் அழைக்கப்படும் திம்மக்காவின் வாழ்க்கைப் பணி பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.
சாலுமரதா திம்மக்காவின் மரணத்துக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
"மரம் மனிதனைவிட உயர்ந்தது. அதற்கு தெரிந்தது எல்லாம் பிறருக்கு நன்மை செய்வதே" என அடிக்கடி கூறுவது திம்மக்காவின் வழக்கம். இன்று அவர் இந்த உலகில் இல்லை. ஆனால் அவர் நட்ட ஆயிரக்கணக்கான மரங்களின் உருவிலும், அவை விடும் மூச்சுக் காற்றிலும் திம்மக்கா நம்முடன் என்றென்றும் நிலைத்திருப்பார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை கட்டுப்படுத்தினர்.
இதையடுத்து, 122 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 9 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 25 ரன்னும் எடுத்தனர்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய பெண்கள் அணி 14.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஜெமிமா 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவு உள்ள உண்மையான தொண்டர்கள் நாங்கள்.
- நாங்கள் ஆறறிவு கொண்ட மனிதர்கள்
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், தவெக நிர்வாகி அருண்ராஜ்க்கும் இடையே நீண்டநாட்களாக ஒரு வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய் திறக்காதது அண்ணாமலை கருத்துக்கூற, அதற்கு அவரை கிண்டலடிக்கும் விதமாக பதில் அளித்தார் அருண்ராஜ்.
மீண்டும் இதற்கு பதிலளித்த அண்ணாமலை, நான் நடிகருக்கு ஜால்ரா போடுகிறவன் அல்ல, மோடியின் விஷ்வாச நாய் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு மீண்டும் பதிலளித்துள்ள தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் அருண்ராஜ்,
"எனக்கு அவரைப்பற்றி தெரியாது. ஆனால் நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது. குறிப்பாக குரைக்கும் நாய்கள் கிடையாது. நாங்கள் ஆறறிவு கொண்ட மனிதர்கள்; தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவு உள்ள உண்மையான தொண்டர்கள் நாங்கள். தவெக தலைவர் கூறியவாறு தரம் தாழ்ந்து நாங்கள் பேசமாட்டோம். விஜய் இப்போது நடிகர் கிடையாது; அவர் முன்னாள் நடிகர்.
நடிப்பை முழுவதுமாக விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்கள் சேவை செய்யவேண்டும் என வந்திருக்கிறார். ஈரோட்டில் வந்தவர்கள் நடிகரை பார்க்க வரவில்லை. தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் சக்தியாக இருக்கக்கூடிய தவெக தலைவரை பார்க்க வந்தனர்" என தெரிவித்துள்ளார்.
- பிரசாந்த் வீர் என்ற ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.
- 19 வயதான கார்த்திக் சர்மாவை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் நடந்தது. இந்த ஏலத்தில் பிரசாந்த் வீர் என்ற (அன்கேப்ட் வீரர்) ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்த்து இந்த விலையை கொடுத்துள்ளது.
இதனையடுத்து ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரையும் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன 2 அன்கேப்ட் வீரர் வீரர்களையும் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது.
பிரபல சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹாரை ரூ. 5.20 கோடிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைனை ரூ. 2 கோடிக்கும் சி.எஸ்.கே. ஏலம் எடுத்தது. மேலும் சர்ஃபராஸ் கான் ரூ. 75 லட்சம், மேத்யூ ஷார்ட் ரூ. 1.50 கோடி மற்றும் மாட் ஹென்றி ரூ. 2 கோடிக்கும் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்சின் பிளேயிங் 11 இதுவாக தான் இருக்கும் என்று முன்னாள் சிஎஸ்கே அஸ்வின் கணித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அஸ்வினின் CSK பிளேயிங் 11
ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், பிரசாந்த் வீர், எம்.எஸ். தோனி, அகீல் ஹொசைன்/மாட் ஹென்றி, கலீல் அகமது, நாதன் எல்லிஸ், நூர் அகமது,
இம்பாக்ட் வீரர்கள் : அன்ஷுல் கம்போஜ் / கார்த்திக் சர்மா / ஷ்ரேயாஸ் கோபால் / சர்ஃப்ராஸ் கான் (சூழ்நிலையின் அடிப்படையில்)






