என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- ஜியோஃபைபர் ரூ. 999 சலுகையில் 150Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது.
- ஜியோஃபைபர் மேக்ஸ் சலுகையில் ஜியோசினிமா பிரீமியம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ஜியோ ஏர்ஃபைபர் சேவை 1Gbps வேகத்தில் இணைய வசதியை வழங்கி வருகிறது. இணைய வேகம் மட்டுமின்றி ஜியோஃபைபர் பலன்களும் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜியோஃபைபர் ரூ. 1199 விலை கொண்ட சலுகையில் தற்போது ஒ.டி.டி. தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
புதிய மாற்றத்தின் படி ஜியோஃபைபர் ரூ. 1199 சலுகையில் நெட்ஃப்ளிக்ஸ், ஜியோசினிமா பிரீமியம் மற்றும் அமேசான் பிரைம் மற்றும் 14 இதர ஒ.டி.டி. தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது. ஜியோஃபைபர் ரூ. 999 சலுகையில் 150Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜியோசினிமா பிரீமியம் சந்தா வழங்கப்படவில்லை.

ஜியோஃபைபர் மேக்ஸ் சலுகையில் ஜியோசினிமா பிரீமியம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளின் விலை ரூ. 1499, ரூ. 2 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 3 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் முறையே 300Mbps, 500Mbps மற்றும் 1000Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.
முன்னதாக ஜியோ நிறுவனம் தனது ஏர்ஃபைபர் இணைய சேவைகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் துவக்க விலை ரூ. 599 ஆகும்.
- ஐபோன் 14 வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 சீரிஸ் விலை குறைக்கப்பட்டது.
- ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைப்பு.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை சில தினங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்தது. புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 13 போன்ற மாடல்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஐபோன் 14 வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 சீரிஸ் விலை குறைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக குறைத்து இருக்கிறது. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பு ஐபோன்களின் 128 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மாடல்களுக்கு பொருந்தும்.

புதிய விலை விவரங்கள்:
ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 59 ஆயிரத்து 900
ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 69 ஆயிரத்து 900
ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 89 ஆயிரத்து 900
ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 69 ஆயிரத்து 900
ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 79 ஆயிரத்து 900
ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 99 ஆயிரத்து 900
ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 79 ஆயிரத்து 900
ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 89 ஆயிரத்து 900
ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 10 ஆயிரம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் ஆன்லைன் வலைதளத்துக்கானது ஆகும். எனினும், மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் ஐபோன் மாடல்களை இதைவிட குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதுதவிர ஆன்லைன் வலைத்தளங்களில் சிறப்பு விற்பனையின் போது கூடுதல் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன.
- ஐபோன் 12-இல் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பிரச்சினையை சரி செய்ய வலியுறுத்தல்.
- ஐபோன் 12 உள்பட மொத்தம் 141 செல்போன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
ஐபோன் 12 மாடலில் இருந்து அளவுக்கு அதிகமான மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுவதால், ஆப்பிள் நிறுவனம் இதன் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று பிரெஞ்சு அரசின் கீழ் இயங்கும் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ரேடியோ-எலெக்ட்ரிக் அதிர்வெண்கள் மற்றும் பொது வெளியில் பரவும் மின்காந்த கதிர்வீச்சை கவனித்து வரும் தேசிய ஃபிரீக்வன்சி நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பிய அறிக்கையில், ஐபோன் 12-இல் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பிரச்சினையை சரி செய்ய வலியுறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக ஆப்பிள் வெளியிடும் அப்டேட்களை அரசு நிறுவனம் கவனிக்கும் என்றும், ஒருவேளை இந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்த ஐபோன்களையும் திரும்ப பெற வேண்டியிருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ANFR என்று அறியப்படும் இந்த நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 உள்பட மொத்தம் 141 செல்போன்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் மனித உடலால் ஈர்க்கப்படக் கூடிய மின்காந்த கதிர்வீச்சு செல்போன்களில் இருந்து எந்த அளவுக்கு வெளிப்படுகிறது என்று சோதனை செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் ஐபோன் 12 மாடலில் இருந்து ஒரு கிலோகிராமிற்கு 5.74 வாட்ஸ் வரையிலான மின்காந்த கதிர்வீச்சு வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஐரோப்பிய யூனியன் அனுமதித்து இருக்கும் ஒரு கிலோகிராமிற்கு 4.0 வாட்ஸ் என்ற அளவை விட அதிகம் ஆகும்.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் அறிமுகம்.
- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 அறிமுகம்.
ஆப்பிள் நிறுவனத்தின் வொண்டர்லஸ்ட் (Wonderlust) நிகழ்வு நேற்றிரவு நேரலை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 15 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்தது.
அதன்படி நிகழ்ச்சி துவக்கத்திலேயே ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை அறிவித்து விட்டார். இவரது அறிவிப்பை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலும், இதைத் தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலும் அறிவிக்கப்பட்டன.

பிறகு ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் டைனமிக் ஐலேண்ட் ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஏ16 பயோனிக் சிப்செட், 48MP பிரைமரி கேமரா, நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இறுதியில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான அறிவிப்பு வெளியானது. புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் டைட்டானியம் டிசைன் கொண்டு அசத்தலாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் முற்றிலும் புதிய ஏ17 சிப்செட் உள்ளது. இந்த பிராசஸர் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இரண்டு புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்கள் மற்றும் ஐபோன் 15 சீரிஸ் பற்றிய அறிவிப்புகளுடன் ஆப்பிள் வொண்டர்லிஸ்ட் நிகழ்வு நிறைவுபெற்றது. சர்வதேச அறிமுகத்தை தொடர்ந்து புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மற்றும் ஐபோன் 15 சிரிஸ், ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் ஆப்பிள் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டன.
- ஆப்பிள் நிறுவனத்தின் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் புதிய ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்கள் அறிமுகம்.
- புதிய ஆப்பிள் சாதனங்கள் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிப்பு.
ஆப்பிள் நிறுவனம் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது. புதிய ஆப்பிள் சாதனங்களில் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலில் ஆப்பிள் எஸ்9 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள டபுள் டாப் அம்சம் கொண்டு அழைப்புகளை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலின் பல்வேறு அம்சங்களை டபுள் டேப் மூலம் இயக்கிவிட முடியும். புதிய சீரிஸ் 9 மாடலை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 இந்திய விலை:
புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அலுமினியம் மாடலின் இந்திய விலை ரூ. 41 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இதன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெர்ஷனின் இந்திய விலை ரூ. 70 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 இந்திய முன்பதிவு செப்டம்பர் 15-ம் தேதி துவங்க இருக்கிறது. விற்பனை செப்டம்பர் 22-ம் தேதி துவங்குகிறது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விற்பனையும் செப்டம்பர் 22-ம் தேதி துவங்குகிறது.

ஐபோன் 15 சீரிஸ் இந்திய விலை:
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் இந்திய விலை முறையே ரூ. 79 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 89 ஆயிரத்து 900 என்று துவங்குகின்றன. இந்த விலை இரு மாடல்களின் 128 ஜி.பி. மெமரி கொண்ட வெர்ஷனுக்கானது ஆகும்.
ஐபோன் 15 (256 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 (512 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 15 பிளஸ் (256 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 பிளஸ் (512 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் இந்திய விலை:
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் இந்திய விலை முறையே ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இந்த விலை இவற்றின் 128 ஜி.பி. மாடலுக்கானது ஆகும்.
ஐபோன் 15 ப்ரோ (256 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ (512 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ (1 டி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 84 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (256 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (512 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (1 டி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 15-ம் தேதி துவங்குகிறது. இவற்றின் விற்பனை செப்டம்பர் 22-ம் தேதி துவங்க இருக்கிறது.
- செயலியை மாற்றிக் கொள்வதற்கு வாட்ஸ்அப் செயலிக்கு ஆறு மாதம் கால அவகாசம்.
- இதன் மூலம் தகவல் தொடர்புக்கான இடைவெளி குறையும்.
வாட்ஸ்அப் செயலியில் புதிய ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஏற்ற வகையில், புதிய வசதிகளை வழங்கி வருகிறது. இது குறித்த புதிய தகவல் Wabetainfo வலைதளத்தில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான் வாட்ஸ்அப் செயலியில் மல்டி-அக்கவுண்ட் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஐரோப்பிய யூனியன் டிஜிட்டல் மார்கெட்ஸ் சட்டத்தை இயற்றி இருக்கிறது. இந்த சட்டம் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடுமையான விதிகளை பிறப்பித்து இருக்கிறது. இதில் பயனர்கள் இதர செயலிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை வழங்குவதும் இடம்பெற்று இருக்கிறது.

முன்னணி தொழில்நுட்ப தளம் என்ற அடிப்படையில், வாட்ஸ்அப் செயலியும் டிஜிட்டல் மார்கெட்ஸ் சட்டத்திற்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதன் காரணமாக புதிய விதிகளுக்கு ஏற்ப செயலியை மாற்றுவதற்கான பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான விதிகள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.19.8 அப்டேட்டில் இடம்பெற்று இருக்கிறது.
புதிய விதிகளுக்கு ஏற்ப செயலியை மாற்றிக் கொள்வதற்கு வாட்ஸ்அப் செயலிக்கு ஆறு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் கொண்டு வேறு குறுந்தகவல் செயலியை பயன்படுத்துவோரும், வாட்ஸ்அப் பயனர்களை தொடர்பு கொண்டு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதன் மூலம் தகவல் தொடர்புக்கான இடைவெளி குறைந்துவிடும், ஆனாலும் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பத்தில் சந்தேகத்தை எழுப்பும்.
இந்த அம்சம் எவ்வாறு இயங்கும், இது தொடர்பாக ஏற்பட்டு இருக்கும் தொழில்நுட்ப விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், வாட்ஸ்அப் நிறுவனம் மற்ற தளங்கள் இடையேயான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் சிஸ்டம்களில் முழுமையான என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். அல்லது பயனர்கள் 7-வது விதியின் கீழ் இந்த ஆப்ஷனில் இருந்து வெளியேறும் வசதியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.
மூன்றாம் தரப்பு செயலிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வசதி செயலியின் எதிர்கால வெர்ஷனில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
- வீடியோ காலிங் ஆப்ஷன் பற்றிய படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
- போலி அழைப்புகளை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.
எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் பயனர்கள் விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும் என்று அதன் உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். இந்த அம்சம் எக்ஸ் சேவையின் ஐ.ஒ.எஸ்., ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் விண்டோஸ் உள்ளிட்ட தளங்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இது தொடர்பான அறிவிப்பை எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அதில், வீடியோ மற்றும் ஆடியோ கால்கள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். அதன்படி பயனர்கள் மொபைல் போன் நம்பர்கள் இல்லாமல் தங்களின் யூசர்நேம் கொண்டே அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
முன்னதாக எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ இந்த அம்சம் வழங்கப்படுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதை தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தின் டிசைனரான ஆண்ட்ரியா கான்வே - புதிய வீடியோ காலிங் ஆப்ஷன் பற்றிய படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் எக்ஸ் தளத்தில் போலி அழைப்புகளை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. எனினும், இந்த வசதிகளை பிரீமியம் சந்தா இல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது என்றே தெரிகிறது. தற்போது எக்ஸ் தளத்தில் "ஸ்பேசஸ்" எனும் அம்சம் கொண்டு பயனர்கள் உரையாடல்களை மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், புதிய அழைப்புகளுக்கான வசதி கொண்டு எக்ஸ் தளம் புளூஸ்கை மற்றும் திரெட்ஸ் போன்ற சேவைகளில் இருந்து வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும். எலான் மஸ்க்-இன் எல்லாவற்றுக்குமான செயலியை உருவாக்கும் திட்டத்தின் அங்கமாக புதிய அழைப்புகளுக்கான வசதி பார்க்கப்படுகிறது.
- நிலவின் தென் துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா.
- விண்வெளி துறையில் இந்தியாவின் புதிய சாதனைக்கு உலக நாடுகள் வாழ்த்து.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது. இதனை கொண்டாடும் வகையில், கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு உள்ளது. சிறப்பு டூடுலில் சந்திரயான் 3 நிலவை சுற்றி வருவதும், தென் துருவத்தில் கால் பதித்ததும், இந்தியா சிரிப்பது போன்ற கார்டூன் வண்ணமயமான நிறங்ளில் அழகாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. டூடுலை கிளிக் செய்ததும், சந்திரயான் 3 பற்றிய தகவல்கள் மற்றும் செய்தி குறிப்புகள் அடங்கிய சிறப்பு பக்கம் திறக்கிறது.
கடந்த ஜூலை 14-ம் தேதி ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்கள் நெடிய பயணத்தை நிறைவு செய்யும் வகையில், சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர், நேற்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி வரலாறு படைத்தது.

இதுவரை அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா போன்ற நாடுகள் தான் நிலவில் தரையிறங்கி இருக்கும் நிலையில், நிலவில் கால்பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதுதவிர நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் புதிய மைல்கல் சாதனைக்கு, உலக நாடுகள் மற்றும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலதுறைகளை சேர்ந்தவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- எக்ஸ் பயனர்களுக்கு வருவாய் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கணிசமான தொகை வழங்கப்படுகிறது.
- இணைய முகவரிகள் மற்றும் புகைப்படங்கள் தளத்தில் இருந்து மாயமாகி இருக்கிறது.
எக்ஸ் (முன்பு டுவிட்டர்) மிகப்பெரிய ரிபரிாண்டிங்கை எதிர்கொண்டு வருகிறது. கடந்த பல மாதங்களில் எக்ஸ் தளத்தில் பெயர் மற்றும் லோகோ உள்பட ஏராளமான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்திய மாற்றத்தின் படி எக்ஸ் பயனர்களுக்கு உலகளவில் வருவாய் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கணிசமான தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பலர் எக்ஸ் தளத்தில் இருந்து வருவாய் கிடைப்பதை ஒட்டி மகிழ்ச்சி அடைந்து வரும் நிலையில், மேலும் பலர் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் 2014 மற்றும் அதற்கும் முன்பு பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் இணைய முகவரிகள் மாயமாகி வருவதாக பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, டுவிட்டர் தளத்தில் இருந்து வரும் பில்ட்-இன் யு.ஆர்.எல். ஷார்ட்னர் கொண்டு பகிரப்பட்ட இணைய முகவரிகள் மற்றும் புகைப்படங்கள் தளத்தில் இருந்து மாயமாகி இருக்கிறது. புகைப்படம் மற்றும் இணைய முகவரிக்கு மாற்றாக புகைப்படம் இல்லாமலும், ஹைப்பர்லின்க் நீக்கப்பட்டோ அல்லது இயக்க முடியாத வகையிலோ உள்ளது என்ற தகவல் இடம்பெற்று இருக்கிறது.
மேலும் எலென் டிஜெனரெஸ் டுவிட்டரில் பதிவேற்றம் செய்த உலக புகழ்பெற்ற ஆஸ்கர் செல்ஃபி தற்போது காணப்படவில்லை. இந்த செல்ஃபியில் பிரபல நடிகர்களான பிராட்லி கூப்பர், ஜெனிஃபர் லாரன்ஸ் மற்றும் மெரில் ஸ்டிரீப் உள்ளிட்டோர் இடம்பெற்று இருந்தனர். இந்த டுவீட் மட்டும் 2.8 மில்லியன் முறை ரி-போஸ்ட் செய்யப்பட்டு, சுமார் 2 மில்லியன் லைக்குகளை வாரிக் குவித்தது. இந்த டுவீட்-ஐ பார்க்கும் போது, அத்துடன் இணைக்கப்பட்ட புகைப்படம் இல்லாததை கண்டுபிடிக்க முடியும்.
இதே போன்று 2012-ம் ஆண்டு பராக் ஒபாமா பதிவிட்ட டுவிட்டர் பதிவில் புகைப்படம் காணப்படுகிறது. அந்த வகையில், இந்த புகைப்படம் நீக்கப்பட்டதா அல்லது மீண்டும் ரிஸ்டோர் செய்யப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய மாற்றம் குறித்து எலான் மஸ்க் மற்றும் எக்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- 5ஜி மொபைல் வைத்திருப்போர் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- ரூ. 199 விலையில் கிடைக்கும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகின்றன.
ஜியோ நிறுவனம் நெட்ஃப்ளிக்ஸ் உடன் இணைந்து புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 1099 மற்றும் ரூ. 1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு புதிய சலுகைகளும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவுடன் வழங்கப்படுகின்றன. இவற்றில் முறையே ரூ. 149 மற்றும் ரூ. 199 விலையில் கிடைக்கும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகின்றன.
இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 5ஜி டேட்டா மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ரூ. 1099 ஜியோ சலுகையுடன் நெட்ஃப்ளிக்ஸ் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் திரைப்படங்களை 480 பிக்சல் ரெசல்யூஷனில் பார்க்க முடியும்.

இந்த சலுகையில் வழங்கப்படும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா கொண்டு ஒற்றை மொபைல் சாதனம் அதாவது ஆண்ட்ராய்டு, ஐபோன் அல்லது டேப்லெட் உள்ளிட்டவைகளில் மட்டுமே தரவுகளை பார்க்க முடியும். மற்ற பலன்களை பொருத்தவரை 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எஸ்.எஸ்., அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இத்துடன் 5ஜி மொபைல் வைத்திருப்போர் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வசதி ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
ஜியோ ரூ. 1499 சலுகையிலும் நெட்ஃப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் விரும்பிய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை 720 பிக்சல் தரத்தில் கண்டுகளிக்க முடியும். முந்தைய பேசிக் திட்டத்தை போன்றே இந்த சந்தாவிலும் பயனர்கள் ஒரு சமயத்தில் ஒரே சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஆனால், இதில் மொபைல் போன், டேப்லெட்கள், லேப்டாப் மற்றும் டி.வி. போன்ற சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் மற்ற பலன்களை பொருத்தவரை 3 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.
- அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த அம்சம் உதவுகிறது.
- அதற்கு பதில் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம் என்று எலான் மஸ்க் அறிவிப்பு.
எலான் மஸ்க்-இன் எக்ஸ் (முன்னதாக டுவிட்டர்) சமூக வலைதளத்தில் பயனர்கள் மற்றவர்களை பிளாக் (Block) செய்வதற்கான வசதி விரைவில் நீக்கப்பட இருக்கிறது. எக்ஸ் தளத்தின் புதிய உரிமையாளர் இதுபற்றி தகவல் தெரிவித்து இருக்கிறார். ஒருவர் பிளாக் அல்லது அன்-மியூட் செய்வது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க் இந்த தகவலை தெரிவித்தார்.
"மெசேஜ்களில் வழங்கப்பட்டு இருப்பதை தவிர்த்து, தனி அம்சமாக இருக்கும் பிளாக் நீக்கப்பட இருக்கிறது. இந்த அம்சத்தில் எந்த அர்த்தமும் இல்லை," என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். டுவிட்டர் தளத்தில் மற்ற அக்கவுன்ட்களுடன் எப்படி உரையாடுகின்றீர்கள் என்பதை சிறப்பாக கட்டுப்படுத்த பிளாக் அம்சம் உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்த அம்சம் கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட அக்கவுன்ட்கள் தங்களை தொடர்பு கொள்வது, டுவீட்களை பார்ப்பது மற்றும் ஃபாளோ செய்வது உள்ளிட்டவைகளை தடுக்க செய்கிறது. தளத்தில் தங்களை யாரேனும் தவறாக தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது, அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த அம்சம் உதவுகிறது.
எக்ஸ் தளத்தில் பயனர்கள் பிளாக் செய்வதற்கு பதிலாக, மியூட் (mute) அம்சத்தை பயன்படுத்தலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். புதிய அறிவிப்பின் படி பயனர்கள் தொடர்ந்து அக்கவுன்ட்களை மியூட் செய்யவும், மெசேஜ்களில் பிளாக் செய்யவும் முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
- புதிய வசதியை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தார்.
- வீடியோக்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி விரைவில் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக வழங்கப்படும் நிலையில், இந்த அம்சம் அடுத்த சில வாரங்களில் அனைவருக்கும் கிடைத்துவிடும் என்று தெரிகிறது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலி மூலமாகவே அதிக தரமுள்ள புகைப்படங்களை அனுப்பிட முடியும்.
புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வசதியை வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களும் பயன்படுத்த முடியும். இதற்காக செயலியில் சிறியதாக "HD" என்ற ஐகான் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் வீடியோக்களையும் ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி விரைவில் வழங்கப்படும் என்று மெட்டா தெரிவித்து இருக்கிறது.

புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதியை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தார். ஃபேஸ்புக் பதிவின் மூலம் புதிய அம்சத்தை அறிவித்த மார்க் ஜூக்கர்பர்க் இத்துடன் புகைப்படம் ஒன்றையும் இணைத்து இருந்தார். அதில் HD ஐகான் தெளிவாக இடம்பெற்று இருந்தது.
முன்னதாக இந்த அம்சம் டெஸ்டிங்கில் இருந்து வந்த நிலையில், தற்போது அனைவருக்குமான அப்டேட்டில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் இருந்து புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதியை வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்து வந்தது. இந்த அம்சம் மூலம் புகைப்படங்களை அதிக தரத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு செய்யும் போது, அதிக டேட்டா மற்றும் சாதனத்தில் மெமரி அதிகளவில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






