search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன் மாணிக்கவேல்"

    • பொதுமக்களிடையே ஆன்மீகம் அதிகரித்தால் நாடு நன்றாக இருக்கும்.
    • வெளிநாட்டில் இருந்து சாமி சிலைகள் கொண்டு வரவேண்டும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- ஆன்மீகம் அதிகமானால் குற்றம் களையும். வீடுகளில் அமைதி ஏற்படும். தமிழகத்தில் உள்ள சைவ வைணவ கோவில்களின் பழங்கால சொத்துகள் மூலம் ரூ.28 கோடி வருமானம் வருகிறது. இதில் ஒரு கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை திருப்பி கோவிலுக்கு வழங்க வேண்டும்.

    12 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. 22 ஆயிரத்து 600 ஏக்கர் காலி இடத்தில் கடந்த 8 மாதத்தில் மட்டும் வாடகை பாக்கி ரூ.151 கோடி உள்ளது. பழமையான தொன்மையான 5 ஆயிரம் கோவில்களை புதுப்பிப்பதாக திருப்பணி செய்ததாக கூறுகின்றனர். இதில் கமிஷன் அடிக்கிறார்கள்.

    திருப்பணி என்ற பெயரில் பழமையான கல்வெட்டுகள் அழிந்து விட்டது. பழனியில் 16-ம் நூற்றாண்டிற்கு முன்பான கல்வெட்டுகளை அழிந்து விட்டது. திருப்பணி என்ற பெயரில் தொன்மையை அழித்துக்கொண்டு வருகின்றனர்.

    திருப்பணியை இந்து சமய அறநிலையத்துறை செய்ய தகுதி இல்லை. கோவில் புதுப்பிக்கும் பணியை மாநில ஆர்க்காலஜி துறை தான் செய்யவேண்டும். கோவில்களில் அனைத்தையும் செய்பவர்கள் அர்ச்சகர்கள். இவர்களை காப்பாற்றவில்லை என்றால் கோவில்கள் காலியாகிவிடும்.

    இன்னும் 15 வருடத்தில் 26 ஆயிரம் கோலில்களில் அர்ச்சகர்கள் இருக்க மாட்டார்கள். அர்ச்சகர்களை காப்பாற்ற சம்பளம் கொடுக்க வேண்டும். வசதி இல்லாத 1500 ஆண்டுகளுக்கு முன்பான 10 ஆயிரத்து 652 தொன்மையான கோவில்கள் அனைத்தும் கேட்பாரற்று இருக்கிறது.

    பொதுமக்களிடையே ஆன்மீகம் அதிகரித்தால் நாடு நன்றாக இருக்கும். இல்லையென்றால் சீரழியும். சைவ வைணவர்களின் ஒன்றுமை உடைந்து நொறுக்கி உள்ளது. 2012-ம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் இருந்து 2 ஆயிர்து 622 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் 2012-ம் ஆண்டு முன்பு ஏன் இந்தளவு சிலைகள் மீட்க முடியவில்லை. அமெரிக்க போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுடன் பேசி மீதமுள்ள சிலைகளை மீட்க வேண்டும்.

    உச்சக்கட்ட நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்த வேண்டிய துறையாக உள்ளது. ஆர்வம் குறைவான அதிகாரிகளை உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டதால் 2020 ல் இருந்து பல முக்கிய வேலைகளை செய்யவில்லை.

    கடந்த மாதம் கோவில்களில் இருந்து ரூ.28.49 கோடி எடுத்துள்ளனர். விளம்பரத்திற்கு நான் அடிமை கிடையாது. வெளிநாட்டில் இருந்து சாமி சிலைகள் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோர்ட்டு அமைந்துள்ள 55 ஏக்கர் இடம் கோவிலுக்கு சொந்தமானது தான்.
    • மு.க.ஸ்டாலின் முதுகெலும்பு உள்ளவராக இருந்தால் இந்து கோவில்களின் இடங்களை ஆக்கிரமிக்கும் அரசு மற்ற மதங்களின் இடங்களை ஏன் தொடுவதில்லை.

    திருப்பூர்:

    முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் இன்று திருப்பூர் அருகே உள்ள சுக்ரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகிறது. சூறையாடுவது வேறு ஆட்கள் கிடையாது, அரசு தான். குறிப்பாக திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோர்ட்டு அமைந்துள்ள 55 ஏக்கர் இடம் கோவிலுக்கு சொந்தமானது தான்.

    தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதாக பிரதமர் மோடி கூறியது 100 சதவீதம் உண்மை.

    திராவிட மாடல் அரசு என கூறிக்கொண்டு கோவில் சொத்துக்களை கொள்ளை அடித்து பழங்கால கோவில்களை புனரமைக்காமல் இருந்து வருகிறது. பிரதமர் மோடி கூறியது பொய் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிரூபிப்பாரானால் என்னுடன் விவாதத்திற்கு தயாரா. மு.க.ஸ்டாலின் சொல்வது 100 சதவீதம் பொய். நான் சொல்வது பொய் என்றால் இன்று இரவுக்குள் உயிர் இழந்து விடுவேன்.

    பணியில் இருக்கும்போது கடுமையாக உண்மையாக உழைத்தேன். இப்போதும் உழைத்து கொண்டிருக்கிறேன். கோவில் சொத்துக்களை பாதுகாப்பதற்காக என்னை யாராலும் தடுக்க முடியாது. நான் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவனும் இல்லை. அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் இல்லை.

    மு.க.ஸ்டாலின் முதுகெலும்பு உள்ளவராக இருந்தால் இந்து கோவில்களின் இடங்களை ஆக்கிரமிக்கும் அரசு மற்ற மதங்களின் இடங்களை ஏன் தொடுவதில்லை. இனியும் இதுபோன்று அமைதியாக இருக்க மாட்டோம். இதன் பின் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாமி சிலைகள் பாதுகாப்பாக இல்லாதது வேதனை அளிக்கிறது.
    • கோவில் பாதுகாப்பு பணியில் ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமிப்பது என்பது பயனற்றது.

    ராமநாதபுரம் :

    ராமநாதபுரத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று வந்துள்ளோம். இதில் நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சாமி செப்பு திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை.

    சாமி சிலைகள் பாதுகாப்பாக இல்லாதது வேதனை அளிக்கிறது. இதற்காக கோவில்களில் சிலைகள் வைப்பதற்கு உயர்தர பாதுகாப்பு அறை கட்ட வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை அதனை அரசு செய்யவில்லை.

    கோவில்களின் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள சிறப்பு படையினரால் எந்தவித பயனும் இல்லை. கோவில் பாதுகாப்பு பணியில் ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமிப்பது என்பது பயனற்றது. இதுவரை கோவில் சிலை பாதுகாப்பு தனிப்படையினர் எந்தவித கோவில் கொள்ளையையும் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் இல்லை.

    எனவே அந்த படையில் உடல்தகுதி மிக்க இளைஞர்களை நியமித்து கோவில் சிலைகள் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
    • பொன். மாணிக்கவேல் தரப்பு மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரைக்கும் சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து பொன். மாணிக்கவேல், தனக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணா முராரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. ஏற்கெனவே இந்த மனு கடந்த நவம்பர் 24-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பொன். மாணிக்கவேலுக்கு எதிரான குற்றச்சாட்டு  குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. மேலும், மேல்முறையீட்டு மனு தொடர்பாக 3 வாரத்திற்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு, சிபிஐ, எதிர் மனுதாரர் காதர் பாட்ஷாவுக்கு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கும் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

    அப்போது குறுக்கிட்ட பொன். மாணிக்கவேல் தரப்பு மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரைக்கும் சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

    • கோவிந்தவாடி கிராமத்தில் இந்த கோவில் இருந்துள்ளது.
    • திருமால்புரத்தில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் இன்றும் உள்ளது.

    காஞ்சீபுரம் :

    காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடி திருமால்புரத்தில் இருந்த 1,071 ஆண்டு தொன்மை வாய்ந்த நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவிலை காணவில்லை என்று பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் ஓய்வுபெற்ற சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

    இந்தியாவில் ஒரு போலீஸ் நிலையம் காணாமல் போய்விட்டது என்ற செய்தி ஊடகங்களில் வெளி வந்தால் எந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்துமோ அதேபோன்று ஒரு பெருமாள் கோவில் களவாடப்பட்டு அதன் விளைவாக நம் மண்ணில் இருந்து காணாமல் போய் விட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 1,071 ஆண்டு தொன்மையான நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவில் 40 ஆண்டுகளுக்கு முன் கோவிந்தவாடி கிராமத்தில் அன்றாடம் மக்கள் வழிபாட்டில் இருந்தது.

    அந்த கோவில் முற்றிலும் களவாடப்பட்டு அதன் விளைவாக நம் மண்ணில் இருந்து மறைந்த போன இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பக்தர்களுக்கு இன்று வரை தெரியாமலிருப்பது வருந்தத்தக்க நிகழ்வு.

    அந்த கோவில் சோழ தமிழ் பேரரசர் பராந்தக தேவர் காலத்தில் கட்டப்பட்டது என்பது இந்த கோவில் கல்வெட்டு சான்று ஆவணப்படி அறுதியிட்டு கூறமுடியும், காஞ்சீபுரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் திருமால்புரம் அருகே உள்ள கோவிந்தவாடி கிராமத்தில் இந்த கோவில் இருந்துள்ளது.

    இது சம்பந்தப்பட்ட கல்வெட்டு 1906-ம் ஆண்டு ஜரோப்பிய கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் 115 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சோழ பேரரசர் பராந்தக தேவரின் ஆட்சி கால கல்வெட்டுகள் இந்த கோவிலில் இருந்தன. இன்று இந்த வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான இந்த கல்வெட்டு நம்மிடம் இல்லாமல் நம் மண்ணில் இருந்து மறைந்து விட்டது. கோவிந்தவாடி கிராமம் 1,071 ஆண்டுகளுக்கு முன்னர் கோவிந்தபாடி என்றும் திருமால்புரம் திருமால்பேரு என்றும் இந்த கோவில் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.

    இந்த கோவிலில் இருந்த மணவாள பெருமாள் தெய்வ திருமேனியும்; களவாடபட்டு கோவிந்தவாடி கிராமத்தில் அடிச்சுவடு கூட தெரியாமல் மறைந்துள்ளது. கோவிந்தபாடி கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருமால்புரத்தில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் இன்றும் உள்ளது.

    சுமார் 30 முதல் 40 ஆண்டுகளில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் திருப்பணி செய்யப்பட்ட அதே காலத்தில் நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவிலிலும் திருப்பணி என்ற பெயரில் கோவிலில் உள்ள அனைத்து கல் மற்றும் செப்பு தெய்வ திருமேனிகளும் மற்றும் கல்வெட்டுகள் அடங்கிய கல்தூண்களும் கல் பலகைகளும் நலிவடைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாக கூறப்பட்டது என்றும் அதற்கு பிறகு திரும்பி வரவில்லை என்றும் கிராமத்தில் இருந்த 80 மற்றும் 90 வயதுள்ள முதியவர்களிடம் பேசியதில் இருந்து தெரிய வருகிறது.

    திருப்பணி என்ற பெயரில் களவாடபட்டு அதன் விளைவாக மறைந்து போன இந்த குற்றத்தகவலை அன்று முதல் தற்போது வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்காமல் மறைத்தது சட்டபடி தண்டனைக்குரிய குற்றம்.

    எனவே இதுகுறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. மற்றும் டி.ஜி.பி. அளவிலான அதிகாரிகள் இந்த வழக்கின் புலன் விசாரணை பொறுப்பை கையில் எடுத்து கொண்டு சம்பந்தபட்ட கோர்ட்டுக்கு தந்தால்தான் இந்த மிக பெரிய சிலை திருட்டு குற்றத்தில் உண்மையை கண்டறிய முடியும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

    பின்னர் அவர் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சோழ பேரரசர்களால் கட்டப்பட்டு வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான கோவில் வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான கல்வெட்டுக்களுடன் கூடிய நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோவில், விக்கிரகங்கள், மணவாள பெருமாள், அனுமன் சிலை உள்ளிட்டவை காணாமல் போனதை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

    மக்கள் வழிபாட்டில் இருந்த பெருமாள் கோவில் முற்றிலும் களவாடப்பட்டு மண்ணில் இருந்து மறைந்து போன நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தற்போது வரை தெரியாமல் இருப்பது உண்மையிலேயே வருந்தத்தக்க நிகழ்வு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான் மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய மரணத்துக்குள் சாமி சிலைகள் திருட்டுப்போகாமல் பாதுகாக்க வேண்டும்.
    • சேர, சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட 2 ஆயிரத்து 500 சாமி சிலைகள் நம் நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது வருத்தமாக உள்ளது.

    சென்னை:

    நெல்லை மாவட்டம் பழவூர் கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளைபோயின. அதில் 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டி விவசாய நிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன.

    அந்த சிலைகளை மீட்ட போலீஸ் அதிகாரிகளே சர்வதேச கும்பலுடன் கூட்டுச் சேர்ந்து அவற்றை வெளிநாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பது கடந்த 2017-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர் விசாரணை நடத்தி, டி.எஸ்.பி. காதர் பாட்ஷா உள்பட அதிகாரிகளை அதிரடியாக கைது செய்தார்.

    பின்னர் அவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் காதர் பாட்ஷா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பழவூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் அவருடன் சேர்ந்து தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். அவர் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொன் மாணிக்கவேல், காதர் பாட்ஷா ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். எனவே சிலை கடத்தல் தொடர்பான உண்மை வெளிவருவதற்கு இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதனடிப்படையில், டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். அதில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதிவு செய்த தகவல்கள் அப்படியே இடம்பெற்றன. இந்த நிலையில் இந்த வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி போலீஸ் வட்டாரத்தை பரபரப்பாக்கியது.

    இந்நிலையில் தன் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என்று முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெளியே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    என் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், டி.எஸ்.பி. அசோக் நடராஜன் பெயரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

    நான் கடந்த 2017-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி.யாக இருந்தபோது, பணியில் இருந்த 5 போலீசார் துப்பாக்கிமுனையில் சிலைகளை கொள்ளையடித்த வழக்கை பதிவு செய்தோம். இந்த வழக்கில் 47 பக்கத்தில் ஆரம்பநிலை அறிக்கையை டி.எஸ்.பி. நடராஜன் கொடுத்தார். அவர் நேர்மையான அதிகாரி. தற்போது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர். குற்றவாளிகள் பட்டியலில் எனது பெயரோ, அவரது பெயரோ தெய்வ சத்தியமாக இல்லை. அப்படி வந்த செய்தி தவறானது. ஒரு லட்சம் மடங்கு பொய்யானது.

    சுபாஷ் கபூர் என்ற அமெரிக்க குற்றவாளியை நான் விட்டுவிட்டேன் என்று காதர் பாட்ஷா கோர்ட்டில் மனு அளித்திருக்கிறார். தீனதயாளன் என்பவரையும் விட்டுவிட்டேன் என்று இன்னொரு குற்றச்சாட்டையும் கூறியிருக்கிறார்.

    தீனதயாளன் 1958-ம் ஆண்டில் இருந்து மும்பை வழியாக சாமி சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி வந்தார். அவரை சி.பி.ஐ., சி.பி.ஐ.டி.யோ, வெளிநாடு போலீசோ கைது செய்யவில்லை. நான்தான் அவரை கைது செய்தேன். அவரது வீட்டில் இருந்து 831 சாமி சிலைகளை மீட்டேன். அவரது வீட்டில் நான் 30 நாட்கள் விசாரணை நடத்தினேன். 90 நாட்கள் சிறையில் அடைத்தேன். நான் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும், இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தீனதயாளனை நான் விடுவித்துவிட்டேன் என்று சொல்வது நியாயமா?

    பழவூரில் நடந்த சிலை கடத்தல் வழக்கில் அவரை நான் அப்ரூவராக எடுத்தேன். அப்ரூவராக எடுத்ததால் குற்றவாளியை விடுவித்துவிட்டேன் என்று சொல்கிறார்கள். சட்டமே அப்படி விட வேண்டும் என்று சொல்கிறது. சிலை கடத்தல் வழக்கில் பிச்சைமணி என்பவரை நாங்கள் அப்ரூவராக எடுத்தோம். அவர் சொன்ன சாட்சியத்தின் அடிப்படையில்தான் சுபாஷ் கபூருக்கு தற்போது 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.

    இந்த வழக்கின் விசாரணை அதிகாரி அசோக் நடராஜனுக்கு அஸ்லேட்டரி பதவி உயர்வு கொடுத்திருக்க வேண்டும். அதாவது, அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்றாலும் எஸ்.பி.யாக கவுரவிக்க வேண்டும். அவர் எனக்கு தொலைபேசியிலாவது நன்றி சொல்லி இருக்கலாம். ஆனால் சொல்லவில்லை.

    நான் பணியில் இருந்து ஓய்வுபெறும் வரையில் தொடர்ந்து குற்றவாளிகளை விரட்டிவந்தேன். ஓய்வுபெற்றவுடன் எங்கேயும் செல்லவில்லை. கோவிலுக்குச் சென்று உழவாரப் பணிகளை செய்துவருகிறேன். சிவனடியார்களை சந்தித்துவருகிறேன். அவர்களை தனியார் போலீஸ் போன்று மாற்றி, சாமி சிலைகளை நன்றாக கவனித்து வாருங்கள், ஏதேனும் மாற்றம் தெரிந்தால் தகவல் சொல்லுங்கள் என்று சொல்லிவருகிறேன்.

    நான் மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய மரணத்துக்குள் சாமி சிலைகள் திருட்டுப்போகாமல் பாதுகாக்க வேண்டும். கோவில்களை காப்பாற்ற வேண்டும். அர்ச்சகர்களை பாதுகாக்க வேண்டும். 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகளை பதிவு செய்ய வேண்டும். இதுதான் எனது கடமை.

    கோவில்களை காப்பாற்ற வேண்டும். ஏனென்றால், கோவிலே திருடப்பட்டுள்ளது. அதை அடுத்த வாரம் ஆதாரத்துடன் சொல்கிறேன். சேர, சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட 2 ஆயிரத்து 500 சாமி சிலைகள் நம் நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது வருத்தமாக உள்ளது.

    சுபாஷ் கபூரை கைது செய்ததால் இந்திய-ஜெர்மன் நாட்டின் உறவில் உரசல் வந்தது உண்மைதான். அதற்கு நான்தான் காரணம். ஏனென்றால், ஜெர்மனியில் தங்கி இருந்த அவரை ஒரு வழக்குக்காக அழைத்துவந்தோம். ஆனால் அவர் மீது 4 வழக்குகளை பதிவு செய்தோம். தற்போது எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொன்.மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
    • டி.ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    சென்னை:

    திருவள்ளூர் டி.எஸ்.பி. காதர்பாஷா சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தன்னை பழிவாங்கும் நோக்கில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் பொய் வழக்கு பதிவு செய்ததாக சென்னை ஐகோர்ட்டில் காதர்பாஷா மனுத்தாக்கல் செய்தார்.

    சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காகவே தன்னை பொய் வழக்கில் கைது செய்ததாகவும், பொன்.மாணிக்கவேல் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்.மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டார். டி.ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் விமர்சனம்.
    சென்னையில் தொடர் படுகொலைகள் அதிகமாகி வருகிறது. நீதிபதி, மருத்துவர் என்று பிரபலமான நபர்கள் இதில் கொல்லப்படுகிறார்கள். சரியான சாட்சியம் கிடைக்காமல் காவல்துறை திணறுகிறது. இதனால் காவல்துறையிலிருந்து தண்டிக்கப்பட்ட நேர்மையான அதிகாரியான பிரபுதேவாவை மீண்டும் பணியில் சேர அழைக்கிறார்கள். 

    வேண்டா வெறுப்பாக பணியில் சேரும் பிரபுதேவா ஒரு கட்டத்தில் கொலைக்கான காரணத்தையும் அதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த கும்பலோடு நெருக்கமாகி மேலும் சிலரைக் கண்டுபிடிக்கிறார்.
    ஆனால் அதற்கு மேலும் ஒரு வில்லன் இருக்கிறார். அவர் யார் என்பது தெரிந்து திகைத்து நிற்கிறார் பிரபுதேவா. இறுதியில் அவரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    பிரபுதேவா மிடுக்காக வருகிறார். காவல்துறை மீது இருக்கும் வெறுப்பைக் காட்டுவதும், மனைவி நிவேதா பெத்துராஜ் மீது அன்பைப் பொழிவதுமாக இருக்கிறார். வில்லன் கும்பலோடு அமைதியாக மோதும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது.

    நிவேதா பெத்துராஜ் மனைவியாக வந்து முத்தங்களை நினைவாக வைத்துத் தேர்வு எழுதுகிறார். டூயட் பாடுகிறார். பிரபுதேவாவுக்காக வில்லன்களிடம் சண்டை போடுகிறார். மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.

    விமர்சனம்

    ஒரு நேர்மையான அதிகாரியான பிரபுதேவாவிற்குக் காவல் துறையில் நடக்கும் இக்கட்டான சூழலை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் முகில் செல்லப்பன். இந்த மாதிரி கதைகள் 90களில் அதிகம் வந்திருப்பதால் பெரியதாக இப்படம் கவரவில்லை. புதிய கற்பனையும் காட்சிகளும் இல்லாததால் மெதுவாக திரைக்கதை நகர்கிறது. நகைச்சுவைக்காக வரும் கான்ஸ்டபிள், ஏன் வருகிறார் என்றே தெரியவில்லை. சஸ்பென்ஸ் என்று நினைத்து கதையை மறைப்பதில் எந்தவித சுவாரஸ்யமும் வரவில்லை.

    டி,இமானின்  இசையில் பின்னணி இசை படம் முடிந்த பிறகும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு நிறைவு. 

    மொத்தத்தில் ‘பொன் மாணிக்கவேல்’ கம்பீரம் குறைவு.
    ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் முன்னோட்டம்.
    நேமிசந்த் ஜபக் பிலிம்ஸ் சார்பில் ஹித்தேஷ் ஜபக் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கி உள்ளார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    பிரபு தேவா
    பிரபுதேவா - நிவேதா பெத்துராஜ் 

    டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இப்படம் நவம்பர் 19 ஆம் தேதி நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
    கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோவிலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன 7 ஐம்பொன் சிலைகள் தொடர்பாக பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Ponmanickavel
    சென்னை:

    கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோவிலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக தற்போது சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கும்பகோணம் அருகே தன்டன்தோட்டம் என்ற கிராமத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான சோழர்காலத்தில் கட்டப்பட்ட நடனபுரிஷ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12-5-1971-ல் கோவில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ரூ.60 கோடி மதிப்பிலான 5 ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு போய்விட்டது.

    போலீசில் புகார் கொடுத்தும் கடந்த 47 வருடங்களாக உரிய வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதேபோல 1972-ல் அதேகோவிலில் ரூ.50 கோடி மதிப்புள்ள நடராஜர் ஐம்பொன் சிலையும், கொலு அம்மன் ஐம்பொன் சிலையும் திருடப்பட்டது.

    இதுதொடர்பாகவும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையிலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.



    இதுபற்றிய தகவல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்தது. உடனடியாக சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் போலீஸ் படையுடன் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருட்டு போன சிலைகளில் நடராஜர் சிலை இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றிற்கு விற்கப்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    7 சிலைகள் திருட்டு போன பிறகு இந்த கோவிலில் மீதமுள்ள 17 சிலைகள் தற்போது அதேபகுதியில் உப்பிலியப்பன் கோவிலில் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சிலைகளில் சில உண்மையான சிலைகள் திருடப்பட்டு அதற்கு பதில் போலியான சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளது.

    இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி விசாரணை நடத்தி தேடி வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Ponmanickavel
    பழனி சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் இன்று மலைக்கோவில் வந்ததையடுத்து முக்கிய பிரமுகர்கள் மீண்டும் பீதி அடைந்துள்ளனர். #PonManickavel

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் சன்னதியில் போகரால் வடிவமைக்கப்பட்ட நவப்பாசாண சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த சிலை சேதம் அடைந்ததாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன சிலை மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டது.

    ஒரே கருவறையில் 2 சிலைகள் வைக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை சில மாதங்களிலேயே உருமாறத் தொடங்கியது. இதனால் இந்த சிலை அமைத்ததில் முறைகேடு நடந்திருக்கலாம் என புகார்கள் எழுந்தன.

    இதனால் புதிதாக வைக்கப்பட்ட சிலை கருவறையில் இருந்து எடுத்து தனி அறையில் வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சிலை மோசடி குறித்து விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனி கோவில் சிலை குறித்தும் விசாரணையை தொடங்கினார்.

    அவரது விசாரணையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்சிலையில் மோசடி நடந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோவில் ஸ்தபதி முத்தையா, 2004-ம் ஆண்டு இணை ஆணையராக இருந்த ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


    மேலும் புதிதாக சிலை செய்யப்பட்ட காலத்தில் இருந்த அனைத்து அதிகாரிகளையும் தங்கள் விசாரணை வளையத்திற்குள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கொண்டு வந்தார். சிலை மோசடியில் ஈடுபட்ட ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் ராஜா, அறநிலையத்துறை ஆணையர் தனபால், உதவி ஆணையர் அசோக், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் அடுத்தடுத்து விசாரணை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர்.

    புதிதாக தயாரிக்கப்பட்ட ஐம்பொன்சிலை கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது. அடுத்தத்து பல்வேறு கோவில்களில் நடந்த சிலை கடத்தல் மற்றும் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இதனால் சிலை மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனிமேல் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு விடும் என நினைத்தனர். இதனிடையே பணி ஓய்வு பெற்ற ஐ.ஜி.பொன்மாணிக்க வேலை மீண்டும் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க அவர் ஓராண்டு பணியை தொடர தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இதனையடுத்து நிலுவையில் உள்ள சிலை மோசடி வழக்கை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இன்று காலை 5 மணிக்கு பழனி மலைக்கோவிலுக்கு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வந்தார். விஞ்ச் மூலம் கோவிலுக்கு வந்த அவர் விஸ்வரூப தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கினார். இதனால் பழனி சிலை மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் சிக்கியுள்ள முன்னாள் அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

    விரைவில் சிலை மோசடி குறித்த அடுத்த கட்ட விசாரணையை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #PonManickavel

    திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் கல்தூண்கள் காணாமல் போனது குறித்து தொழில் அதிபர் ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். #IdolSmuggling #PonManickavel
    திருவாருர்:

    திருவாருர் தியாகராஜர் கோவிலில் சிலைகள் பாதுகாப்பகத்தில் நடை பெறும் ஆய்வை பார்வையிட சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேற்று இரவு வந்தார்.

    சிலைகள் ஆய்வு பணிகள் விவரம் பற்றி தொல்லியல் துறையினர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 395 சிலைகளும் திருவாரூரில் 80 சிலைகளும் ஆய்வு செய்யபட்டுள்ளது. அனைத்து சிலைகளும் பரிசோதனை செய்யப்படும் வரை இந்த ஆய்வு தொடரும்.



    இதுவரை கடத்தபட்ட 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கபட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. ரூ.400 மதிப்புள்ள சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

    திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் கல்தூண்கள் காணாமல் போனது குறித்து தொழில் அதிபர் ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்படும். விரைவில் திருவாரூரில் கற் சிலைகளும் ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IdolSmuggling #PonManickavel
    ×