search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுகர்வோர் நீதிமன்றம்"

    • ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் எடை 76 கிராம் என்ற அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறது.
    • பாக்கெட்டுக்கு உள்ளே உள்ள பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்யவில்லை.

    சென்னை:

    சென்னை மணலி மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியைச் சேர்ந்தவர் டில்லி பாபு. இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தெரு நாய்களுக்காக ரெண்டு 'சன் பீஸ்ட் மேரி லைட்' பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அந்த பிஸ்கட் பாக்கெட் கவரில் உள்ளே 16 பிஸ்கட்டுகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் அதைத் திறந்து பார்த்தபோது 15 பிஸ்கட்கள் தான் இருந்தது. இதுகுறித்து அவர் கடைக்காரரிடமும் அந்த பிஸ்கட் நிறுவனமான ஐ.டி.சி., நிறுவனத்திடமும் முறையிட்ட போது சரியான பதில் இல்லை. இதையடுத்து அவர் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஐடிசி நிறுவனம் சுமார் 50 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்கிறது.

    ஒரு பிஸ்கட்டின் விலை 75 பைசா என்று கணக்கிடும் பொழுது, இதுபோல 15 பிஸ்கட்களை ஒரு பாக்கெட்டில் வைத்து நாள் ஒன்றுக்கு பொதுமக்களிடம் இந்த நிறுவனம் ரூ. 29 லட்சம் மோசடி செய்கிறது என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவுக்கு ஐடிசி நிறுவனம் தரப்பில் அளித்த விளக்கத்தில், ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் எடை 76 கிராம் என்ற அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட்டுக்கு உள்ளே உள்ள பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்யவில்லை. பொதுவாக வணிக சட்டத்தின்படி ஒரு பாக்கெட் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களில் 4.5 கிராம் வரை குறைவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

    இதை ஏற்க மறுத்த நுகர்வோர் நீதிமன்றம், "ஒரு உணவுப் பொருள் பாக்கெட் செய்யப்பட்ட பின்பு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது அல்லது காற்று, மழை போன்ற இயற்கை காரணங்களால் 4.6 கிராம் எடை குறையலாம் என்று வணிக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சலுகை பிஸ்கட்டுகளுக்கு கிடையாது. பிஸ்கட் பாக்கெட் இதுபோன்ற காரணங்களால் எடை குறைய வாய்ப்பில்லை.

    மேலும் பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்யவில்லை. எடையின் அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறும் காரணத்தையும் ஏற்க முடியாது. ஏனென்றால் பிஸ்கட் பாக்கெட் கவரில் 16 பிஸ்கட்டுகள் உள்ளே உள்ளன என்று தான் கூறப்பட்டுள்ளது.

    தவிர எடையை பற்றி கூறவில்லை. எனவே, நேர்மையற்ற முறையில் வியாபாரம் செய்ததற்காகவும், சேவை குறைபாட்டிற்காகவும் வழக்கு தொடர்ந்த டெல்லி பாபுவுக்கு ஐ.டி.சி., நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று தீர்ப்பு அளித்துள்ளது.

    • குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ஊராட்சி மன்றம் பெற்றுக் கொண்டவுடன் வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு நுகர்வோர் என்ற அந்தஸ்து ஏற்பட்டுவிட்டது.
    • வழக்கு தொடுத்துள்ளவர்கள் உட்பட 15 தனிநபர்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை இல்லை.

    அரியலூர் ;

    அரியலூர் அடுத்த தேளூர் கிராமத்தைச் சேர்ந்த பொய்யாமொழி (54), வேல்விழி(43), கோவிந்தராஜ்(52), முருகேசன்(53), பாரிவள்ளல்(55), அம்பிகா(48), அருட்செல்வம்(49) உள்ளிட்ட 15 பேர் தங்களது வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கோரி கடந்த 2016 ஆம் ஆண்டு கிராம ஊராட்சியில் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களிடமிருந்து ஊராட்சி நிர்வாகம், குடிநீர் இணைப்புக்கான வைப்புத் தொகையை பெற்றுள்ளது.ஆனால் இதுவரை அவர்களது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.

    இது குறித்து, அவர்கள் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்து வந்த நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

    அந்த தீர்ப்பில், வழக்கு தாக்கல் செய்து செய்துள்ளவர்கள் எவ்வித சேவை கட்டணத்தையும் ஊராட்சி மன்றத்தில் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் நுகர்வோர் அல்ல என்பதால் நுகர்வோர் ஆணையம் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்ற அரசின் வாதம் ஏற்புடையதல்ல.

    குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ஊராட்சி மன்றம் பெற்றுக் கொண்டவுடன் வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு நுகர்வோர் என்ற அந்தஸ்து ஏற்பட்டுவிட்டது. வறட்சியின் காரணமாக தனிநபர் குடிநீர் இணைப்புகளை வழங்க முடியாது என்று அரசு தரப்பில் கூறப்படும் நிலையில் அவ்வாறு இருக்க ஏன் தனி நபரிடம் வைப்புத் தொகையை பெற்றுள்ளீர்கள் என்பதற்கான பதில் ஊராட்சி மன்றத்தின் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை .

    வழக்கு தொடுத்துள்ளவர்கள் உட்பட 15 தனிநபர்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை இல்லை. எனவே குடிநீர் வழங்க வைப்புத் தொகை பெற்றுக் கொண்டு, ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த பின்பும் அதனை மதிக்காமல் குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ள ஊராட்சி மன்ற சேவை குறைபாடு புரிந்துள்ளது என்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

    எனவே வழக்கு தொடுத்துள்ள அனைவரது வீடுகளுக்கும் நான்கு வாரத்துக்குள் தேளூர் ஊராட்சி மன்றம் குடிநீர் வழங்க இணைப்பு வழங்க வேண்டும். இதனை அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்த தவறினால் வழக்கை தாக்கல் செய்துள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ×