search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலக்கரி"

    • சுரங்கத்தில் மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
    • 380 பேர் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்.

    மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் மாயமாகியுள்ளனர்.

    நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து நேற்று பிற்பகல் 2.55 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 

    விபத்து நடந்தபோது மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களில் 380 பேர் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.

    இன்னும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நிலக்கரி சுரங்கத்திற்கு பொறுப்பானவர்கள் பொது பாதுகாப்பு அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    சீனாவில் சுரங்க விபத்துகள் சகஜம் என்றாலும், சமீப ஆண்டுகளில் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

    • அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
    • ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர், நெல்லிக்குப்பம், காட்டு மன்னார் கோவில், சேத்தியா தோப்பு, புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

    புவனகிரி, சேத்தியா தோப்பு, காட்டு மன்னர் கோவில் பகுதிகளில் 14 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சுரங்கங்களில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி நிற்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை. ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    பண்ருட்டி, தொரப்பாடி, புதுப்பேட்டை காடாம் புலியூர், அண்ணாகிராமம், முத்தாண்டிக்குப்பம், கண்டரக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    பண்ருட்டியில் இன்று காலை 6 மணி வரை 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக மழை பெய்து வருகிறது.

    • விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாய உற்பத்தியை பெருக்கியுள்ளனர்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான டெல்டாகாரர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் எம்.பி.யும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் நேற்று நிருபர்களு க்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தினமும் செய்திகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஏதாவது சொல்லி வருகிறார்.

    டெல்டா பகுதியை சேர்ந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் 1½ லட்சம் விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாய உற்பத்தியை பெருக்கியுள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான டெல்டாகாரர். டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்தான பெருமை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தான் உண்டு என்பதை விவசாயிகளும், நாட்டு மக்களும் அறிந்துள்ளனர்.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செய்யாததை தமிழக அரசு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நகர்மன்ற தலைவர் மன்னை. சோழராஜன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கார்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், நகர செயலாளர் வீரா. கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • நாளொன்றுக்கு 24 ஆயிரம் டன் நிலக்கரி எரியூட்டப்பட்டு 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • நிலக்கரி எரிப்பதால் 7 ஆயிரம் டன் வரை சாம்பல் வெளியேறுகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அனல்மின் நிலையத்தில், 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 24 ஆயிரம் டன் நிலக்கரி எரியூட்டப்பட்டு 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நிலக்கரி எரிப்பதால் 7 ஆயிரம் டன் வரை சாம்பல் வெளியேறுகிறது. இவை உலர் சாம்பலாகவும், ஈர சாம்பலாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் சாம்பல் சிமெண்ட் ஆலைகளுக்கும், செங்கல் உற்பத்திக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மேட்டூர் அனல்மின் நிலையத்தை நேற்று பார்வையிட்டார். அப்போது ஈர சாம்பல் விநியோகம் முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டது.

    சாம்பல் அதிக அளவில் காற்றில் கலந்து பறப்பதால் லாரிகள், அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர்-எடப்பாடி சாலையிலும், மேட்டூர்-சேலம் சாலையிலும் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு, லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன. ஈர சாம்பல் விநியோகம் நிறுத்தப்பட்டதால், அனல்மின் நிலையத்திற்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    • நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
    • நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதன் துணைப்பொருட்கள் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.

    ஏற்கனவே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களில் இருந்து மீண்டு வந்த டெல்டா மாவட்டத்திற்கு தற்போது எமனாக நிலக்கரி எடுக்கும் திட்டம் வந்துள்ளது.

    அப்பகுதிகளில் நிலக்கரியை தோண்டி எடுப்பதற்கு விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் டெண்டரும் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29-ந்தேதி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டின் மூன்று இடங்களில் நிலக்கரி எடுக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

    அவை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி பழுப்பு நிலக்கரி திட்டம், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 2 பழுப்பு நிலக்கரி திட்டங்கள் ஆகும்.

    குறிப்பாக திருவாரூர் மாவட்டம் வடசேரி முதல் கடலூர் மாவட்டம் புவனகிரி வரை இந்த திட்டம் நிலுவையில் உள்ளது. ஜெயங்கொண்டத்தில் இருந்து புதுச்சேரி வரை விவசாய நிலங்கள் அதன் தன்மையை இழந்து மலட்டுத்தன்மைக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி, திருவாரூர் மாவட்டம் உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு டெண்டர் வெளியிட்டது.

    இந்த அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சிடைந்தனர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்கும் சூழ்நிலையில் எப்படி நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு டெண்டர் விடலாம் என விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.

    இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி நிலக்கரி படுகையில் பருக்கல் ஊராட்சியை சேர்ந்த பருக்கல், அழிசுகுடி, வாத்திகுடிகாடு ஆகிய கிராமங்களில் முதல் கட்டமாக 14.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலக்கரி எடுப்பதற்கு திட்டமிடப்பட்டு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் வட்டார பகுதிகள் டெல்டா பாசன பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இங்கு பிரதான விவசாயமாக நெல், கரும்பு, நிலக்கடலை, முருங்கை, மக்காச்சோளம், எள், உளுந்து, பருத்தி, பணப்பயிரான முந்திரி சாகுபடி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

    இவை தவிர மலர் சாகுபடி, காய்கறிகள் உற்பத்தி உள்ளிட்ட விவசாய மற்றும் தோட்டக்கலைத்துறை சாகுபடிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிலக்கரி எடுக்கும் திட்டம் குறித்த தகவல் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதனை எதிர்த்து போராடவும் விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். மேலும் இந்த நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து மைக்கேல் பட்டியை சேர்ந்த விவசாயி மத்தேயு கூறுகையில், அரியலூர் மாவட்டம் டெல்டா பாசன பகுதியாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. எனவே தீவிரமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் எங்கள் பகுதியில் மத்திய அரசு எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்யக்கூடாது.

    ஒருவேளை அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தீவிரம் காட்டினால் நாங்கள் இப்பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

    அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், மத்திய அரசு மின்சார தட்டுப்பாட்டை காரணம் காட்டி நிலக்கரி எடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெல்டாவை அழிக்கும் முயற்சியாகும்.

    வளம் கொழிக்கும் பூமியான டெல்டாவில் நிலக்கரி எடுத்தால் சுமார் 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் அழிந்துவிடும். அதனை நம்பி வாழ்வாதாரமாக கொண்ட கோடிக்கணக்கான மக்கள் சொந்த ஊரிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்படுவார்கள். அதுமட்டுமின்றி நிலக்கரி எடுக்கும் பகுதிகளை சுற்றிலும் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்கள் அதன் தன்மையை இழந்துவிடும். இந்த நிலக்கரி திட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டத்திற்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்றார்.

    காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறுகையில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் எந்தெந்த பகுதியில் என்னென்ன தரத்தில் நிலக்கரி இருக்கிறது என ஆய்வு செய்வது என்பதே நிலக்கரி எடுப்பதற்கான முன்னேற்பாடுதான்.

    நிலக்கரி திட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் டெல்டா மாவட்டங்களில் முற்றிலும் விவசாயம் அழிந்து விடும். வேளாண் பூமியான டெல்டா பகுதி கனிமவள சுரங்கங்களின் பாதாள பூமியாக மாறிவிடும். எனவே டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி தொடர்பாக ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

    இருந்தாலும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒருபோதும் டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

    • தொழிற்சாலையில் நிலக்கரி உபயோகத்திற்கு தடை விதிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    • கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர்

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் காரை ஆர்.சுப்ரமணியன், பெரம்பலூர் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் இயங்கும் தனியார் டயர் தொழிற்சாலையில் நிலக்கரி உபயோகத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மேலும் ஆலையில் கரும்புகை வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இவர் கடந்த வாரமும் இதே கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது."

    • லாரியை ஓட்டி வந்த மதுராந்தகம் பெரிய தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரிதிவிராஜ் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • காரைக்கால் துறைமுகத்திலிருந்து, டால்மியாபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு, நிலக்கரி ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள சிகார்பாளையம் சாலை வளைவில், காரைக்கால் துறைமுகத்திலிருந்து, டால்மியாபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு, நிலக்கரி ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

    இதில் நிலக்கரி முற்றிலுமாக சாலையோரத்தில் கீழே கொட்டியது. லாரியை ஓட்டி வந்த மதுராந்தகம் பெரிய தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரிதிவிராஜ் (வயது 25) லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி கட்டுப்பாட்டை இழந்து, ஒரு மின்கம்பியில் மோதி கவிழ்ந்ததில், உயிர் இழப்பு இல்லாமல் தப்பித்தது, அதிர்ஷ்டவசமாக நிகழ்வாகும். இவ்விபத்து குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×