search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக தொண்டர்கள்"

    • தொண்டர்களின் வாழ்த்துகளை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார்.
    • தொண்டர்கள், பிரமுகர்கள் ஒவ்வொருவரும் மாலைகள், புத்தகங்கள், பழக்கூடைகள் மற்றும் நினைவு பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 71-வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்ல அண்ணா அறிவாலயத்திலும் அவரது வீட்டு முன்பும் ஏராளமான தொண்டர்கள் காலையிலேயே குவிந்திருந்தனர்.

     முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் எழுந்ததும் வீட்டில் இருந்த கலைஞரின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு குடும்பத்தாருடன் 'கேக்' வெட்டினார்.

     அவருக்கு மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை மற்றும் குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரைக்கு சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

     இதைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மேளதாளம் முழங்க அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரிய சாமி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சக்கர பாணி, அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா, பரந்தாமன், புழல் நாராயணன், மதன் மோகன் மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் உடன் வந்திருந்தனர். கலைஞர் நினைவிடத்தில் அவரது உதவியாளர் கே.நித்யா நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன் மற்றும் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

     

    இதன் பிறகு தொண்டர்களின் வாழ்த்துகளை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துரை முருகன், காஜா உள்ளிட்டோர் வாசலில் நின்று வரவேற்றனர்.

    சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு ஏற்பாட்டில் 'கேக்' கொண்டு வரப்பட்டது. அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகள் மத்தியில் 'கேக்' வெட்டி வழங்கினார். அதன் பிறகு கலைஞர் அரங்கிற்கு சென்று தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன்,நடிகர் விஜய் ஆகியோரும் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தனர். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்தியவர்கள் வருமாறு:-

    அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, தியாகராய நகர் எம்.எல்.ஏ.ஜெ.கருணாநிதி, ஐட்ரீம் மூர்த்தி, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, எழும்பூர் பரந்தாமன் மற்றும் படப்பை மனோகரன், வி.எஸ்.ராஜ், ஐ.கென்னடி, மா.பா.அன்பு துரை, தாயகம் கவி எம்.எல்.ஏ, பாலவாக்கம் விசுவநாதன், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி மாவட்ட அமைப்பாளர் துபாய் வி.ஆர்.விஜய், முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா, துணைத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள், வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள், பிரமுகர்கள் ஒவ்வொருவரும் மாலைகள், புத்தகங்கள், பழக்கூடைகள் மற்றும் நினைவு பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாற்காலியில் அமர்ந்தபடி தொண்டர்களிடம் வாழ்த்துகளை பெற்றார். நீண்ட கியூ வரிசையில் நின்று தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    • நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இன்று இந்தியாவுக்கான முன்னோடித் திட்டங்களாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.
    • திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதமே உள்ள நிலையில் தி.மு.க.வில் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    வாக்குச்சாவடி வாரியாக பணியாற்ற கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது.

    தமிழ்நாடு முழுவதும் பாக முகவர்கள் கூட்டத்தை மண்டல அளவில் கூட்டி அவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வந்தார்.

    இதைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப அணியினர் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் இதை மிகப்பிரமாண்டமாக நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் அரங்கில் இளைஞரணி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி சுமார் 50 லட்சம் கையெழுத்து பெறப்பட்டுள்ள நிலையில் இதை மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க இருக்கிறார். இந்த கையெழுத்து பட்டியல் அதன் பிறகு மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.

    இந்த நிலையில் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலை தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தை பிறந்தாள் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கி உள்ளோம்.

    தமிழ்நாடெங்கும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியெனப் பொங்கட்டும். அது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கட்டும்.

    "நான்தான் எல்லாம்" என்ற சர்வாதிகாரப் போக்கு அகல, கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் ஆட்சி ஒன்றிய அளவில் அமைய வேண்டும். அதற்கு தி.மு.க. இளைஞர் அணியின் சேலம் மாநாட்டில் நாம் எழுப்பும் மாநில உரிமை மீட்பு முழக்கம் டெல்லி வரை அதிரட்டும்.

    கவனச் சிதறல்களுக்கு இடம் கொடுக்காமல் மாநாட்டின் மைய நோக்கத்தை முன்னெடுப்போம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    தொண்டர்களுக்கு பொங்கல்-தமிழர் திருநாள் வாழ்த்து கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு எதிர்கொண்ட மிச்சாங் மழை-வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது. கடும் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் டெல்லியில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் சென்று வலியுறுத்தியபோதும், அத்தகைய அறிவிப்போ, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நிதியோ வரவில்லையென்றாலும், நம் மக்களைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கியதுடன், வீடுகளை இழந்த குடும்பத்தினர், படகுகள் சேதமான மீனவர்கள், உயிரிழப்புகளை எதிர்கொண்டவர்களின் குடும்பத்தினர், பயிர்கள் பாதிக்கப்பட்ட உழவர்கள், தொழில் முடங்கிய வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான நிவாரணத் தொகையையும் உயர்த்தி அறிவித்து வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு.

    முதலமைச்சர் என்கிற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் இந்தப் பணிகளை மேற்கொண்ட வேளையில், தி.மு.க.வின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரவர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, அவர்களின் துயர் துடைக்கும் கைகளாகச் செயல்பட்டீர்கள்.

    பொருளாதாரப் பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்த தமிழ்நாட்டை இரண்டரை ஆண்டுகளில் மிகுந்த பாடு பட்டுச் சமதளத்திற்குக் கொண்டு வந்து, சிகரத்தை நோக்கிப் பயணிக்கச் செய்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி.

    மதவெறிக்கு இடந்தராத, மொழி ஆதிக்க சிந்தனையில்லாத, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அதற்கான உற்சாகத்தைத் தரும் தொடக்க விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.

    தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.

    எழுச்சிமிகுந்த இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வரத் தயாராகியுள்ள நிலையில், இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்துவதே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும்.

    திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும்.

    எப்போதும் பொங்கல் அன்று கழகத் தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொது மக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண் டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.

    அனைவரது இல்லங்களிலும் 'சமத்துவப் பொங்கல்' எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.
    • நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல் அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.

    மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் - நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன் என கூறியுள்ளார்.

    • இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்க நினைக்கின்ற மதவாத சக்திகளை நடுங்க வைக்கும் சொல்.
    • குமரி முதல் இமயம் வரை கலைஞர் என்ற பெயரைச் சொல்லுவோம்! இந்தியா முழுவதும் கலைஞரின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பா.ஜ.க. அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது.

    தி.மு.க இத்தகைய மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல.

    இந்தியாவின் தலைநகரிலும் பிற மாநிலங்களிலும் நம் தலைவர் கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள்.

    பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க. அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கலைஞரின் வார்ப்புகள் அப்படி.

    கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெற்ற காணொலி வாயிலான மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் என்னென்ன பொறுப்பு, அந்தப் பொறுப்பினை எந்த முறையில் நிறைவேற்றிட வேண்டும் என்று விரிவாகவும் தெளிவாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

    கழகத்தின் சார்பு அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பினை உணர்ந்து, மாவட்டக் கழகத்தின் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு அணியும் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகளை மாவட்ட ஒன்றிய நகர-பேரூர் கழக அமைப்புகள் நெறிப்படுத்திட வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் போற்றும் இந்த நிகழ்வுகளை முழுமையாக நிறைவேற்றிட வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

    கலைஞர் என்பது வெறும் பெயர்ச் சொல் அல்ல! தமிழ் இனம் மொழி-நிலம் காத்து நிற்கும் வினைச்சொல். நமக்கு உரிமையுள்ள உரிச்சொல். அரசியல் எதிரிகளை அடையாளம் காட்டி 'உரி'க்கின்ற சொல். எந்நாளும் நமக்கு ஊக்கத்தையும், இன எதிரிகளுக்கு அச்சத்தையும் தருகின்ற சொல். இந்தியா முழுமையும் உள்ள ஜனநாயக இயக்கங்களுக்கு உறுதுணையாக நிற்கும் சொல். இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்க நினைக்கின்ற மதவாத சக்திகளை நடுங்க வைக்கும் சொல். குமரி முதல் இமயம் வரை கலைஞர் என்ற பெயரைச் சொல்லுவோம்! இந்தியா முழுவதும் கலைஞரின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

    • பாராளுமன்றத் தேர்தலில், பாசிச சக்திகளை வீழ்த்தி, மகத்தான வெற்றி காணப் போகிற இந்தியா.
    • அடுத்தகட்டமாக, தென் மாவட்டங்களுக்கான பயிற்சிக் களம், இராமநாதபுரத்தில் அமையவிருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மலைக்கோட்டை மாநகரில் காவிரிதான் கரை மீறிப் புரள்கிறதோ, கடல்தான் தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் புகுந்துவிட்டதோ என்று மலைக்கின்ற அளவுக்கு தீரர் கோட்டமாம் திருச்சியில் நேற்று (ஜூலை 26) நடந்த டெல்டா மண்டலத்து வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தில், 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா (I.N.D.I.A)வின் வெற்றிக்குக் கட்டியம் கூறிடும் வகையில் கழகத்தினர் திரண்டிருந்தனர்.

    பயிற்சிக் கூட்டப் பந்தலில் மட்டுமா கூட்டம், திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கி, பயிற்சிக் கூட்டம் நடைபெற்ற ராம்ஜி நகர் வரை கழகத் தொண்டர்களும் பொதுமக்களும், காவிரியில் புதுவெள்ளம் பாய்ந்தது போன்ற உற்சாகத்துடன் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். அவர்களின் வாழ்த்தொலியில் உள்ளம் மகிழ்ந்தேன். பொன்னாடையும், புத்தகமும் வழங்கி அன்பை வெளிப்படுத்திய மக்களுக்கு நடுவே, கோரிக்கை மனுக்களுடன் இருந்தவர்களும் உண்டு. அவற்றை அக்கறையுடன் பெற்றுக்கொண்டேன்.

    திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சரைப் பயண வழியில்கூட, வாகனத்தை மறித்து சந்தித்து கோரிக்கை மனுவைத் தர முடியும் என்றும், உரிய வகையில் அது நிறைவேற்றப்படும் என்றும் தமிழ்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ள நம்பிக்கையை செல்லும் இடங்களில் எல்லாம் காண்கிறேன். திருச்சியிலும் அதனைக் கண்டேன். மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடவே அல்லும் பகலும் உழைத்து வருகிறேன்.

    ஒவ்வொரு நாளும் மக்களுக்காக உழைக்கின்ற ஆட்சியாக, ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்களை வழங்குகின்ற ஆட்சியாக, ஒவ்வொரு நாளும் அந்தத் திட்டங்கள் சரியான முறையில் போய்ச் சேர்கின்றனவா என்று கண்காணித்துச் செயல்படுத்தக் கூடிய ஆட்சியாக திராவிட மாடல் அரசின் ஆட்சி நிர்வாகம் கடந்த இரண்டாண்டுகளில் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் செயலாற்றி வருகிறது.

    ஆட்சியின் திட்டங்களால் பயன்பெற்றவர்கள் வழிநெடுக நின்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். கோரிக்கை வைத்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் மனுக்களை அளித்தார்கள். இவையெல்லாம், வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டத்தின் நோக்கம் என்ன என்பதை பொதுமக்களே நமக்குத் தெரிவிப்பது போல இருந்தது.

    கழகத்தின் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பலன் தந்து வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு திட்டமாவது அவர்களின் மாதச் செலவை மிச்சப்படுத்தும் வகையில் இருக்கிறது.

    பட்டா, சிட்டா, வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்காக நீண்ட காலமாக அல்லாடிக் கொண்டிருந்தவர்கள் இரண்டாண்டுகளில் ஒரே ஒரு மனுவை "முதல்வரின் முகவரி"க்கு அனுப்பிவிட்டு சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறார்கள்.

    தங்கள் கோரிக்கை விரைந்து நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருப்பவர்களும் உண்டு. பயன் அடைந்தவர்களிடம் கழக அரசின் திட்டங்களின் நன்மையை எடுத்துச் சொல்வதும், கோரிக்கை மனு வழங்கியவர்களுக்கு உரிய முறையில் அதனை நிறைவேற்றித் தருவதும் கழகத்தின் சார்பிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கும், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கும் உள்ள கடமையாகும். அதனை நினைவூட்டி, களப்பணியாற்றிட அவர்களை ஆயத்தமாக்கும் பயிற்சி அரங்கமாக தீரர் கோட்டமாம் திருச்சி அமைந்திருந்தது.

    கழகத்தின் முதன்மைச் செயலாளர் - உறுதிமிக்க உழைப்பாளர் கே.என்.நேருவின் முன்னெடுப்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராசன், வைரமணி ஆகியோரும், காவிரி டெல்டா மாவட்ட - ஒன்றிய - நகர - மாநகர - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து பயிற்சிக் கூட்டத்தை நேர்த்தியாகவும் வெற்றிகரமாகவும் நடத்திக் காட்டி, திருச்சியில் கழகம் எதைத் தொடங்கினாலும் வெற்றிதான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

    முதன்மைச் செயலாளர் நேருவுக்கு துணை நின்றவர்களுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    15 கழக மாவட்டங்களைச் சேர்ந்த, ஏறத்தாழ 12ஆயிரத்து 645 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்ற பயிற்சிக் கூட்டத்தில் கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் அண்ணன் துரைமுருகன் கழக அரசின் சாதனைகள் மக்களிடம் எந்தளவுக்குச் சென்று சேர்ந்து, நன்மை விளைவித்திருக்கிறது என்பதை எடுத்துக்கூறினார்.

    கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா. எம்.பி. அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் திராவிட மாடல் அரசின் செயல்பாட்டையும், அது இந்தியாவுக்கே முன்னோடியாக இருப்பதையும் எடுத்துரைத்தார்.

    அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் ஒவ்வொரு துறை சார்ந்த திட்டங்களையும் அதன் பயன்களையும் விரிவாகவும் விரைவாகவும் எடுத்துக் கூறினார்கள்.

    கழக சட்டத்துறைச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாக்குச்சாவடி முகவர்களும் பூத் கமிட்டி உறுப்பினர்களும் எப்படிச் செயல்பட வேண்டும், எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும், எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை பவர் பாயிண்ட் வாயிலாகத் திறம்பட விளக்கினார்.

    கழக மாணவரணித் தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி வாக்குச் சாவடி முகவர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக கழகப் பணிகளை எப்படி ஒருங்கிணைத்து செயல்பட்டு, ஒவ்வொரு வாக்காளரையும் அணுக வேண்டிய முறைகளை விளக்கினார்.

    கழகத் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் திராவிட மாடல் அரசின் திட்டங்கள், அவற்றின் பயன்கள் குறித்த கையேடு மின்னிதழாக ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவருக்கும் 'வாட்ஸ்அப்' வாயிலாகப் பகிரப்பட்டது. வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தால் தேர்தல் நேரத்தில் நேரடிக் களத்தில் செலுத்த வேண்டிய அக்கறையைப் போல, சமூக வலைத்தளத்திலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நம் அரசியல் எதிரிகள் பொய்களை மட்டுமே பரப்பக் கூடியவர்கள். அவர்களின் அவதூறுகளும் வதந்திகளும் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.

    பொய்கள் புற்றீசல் போன்றவை. அவை வேகமாகப் பரவினாலும் அவற்றுக்கு ஆயுள் குறைவு. உண்மைக்கு யானையின் பலம் உண்டு. அதற்குத் தனது தும்பிக்கையால் அமைதியாக ஆசீர்வதிக்கவும் தெரியும், ஆளையே வளைத்து தூக்கி வீசவும் தெரியும்.

    திராவிட இயக்கத்திடம் உண்மை வரலாறு இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பும் இருக்கிறது. அதனால் அமைதியான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் மக்களுக்கு நன்மைகளை வழங்கி வருகிறோம். சீண்ட நினைக்கும் அரசியல் எதிரிகளுக்கு யானை தன் பலம் என்ன என்பதைக் காட்டும்.

    மாநாட்டிற்கு இணையாகத் திருச்சியில் நடந்த பயிற்சிக் கூட்டத்திற்கு சென்னையில் இருந்து புறப்பட்ட போது, கழகத் தீர்மானக் குழுத் தலைவர் கவிஞர் தமிழ்தாசன் ஒரு குறிப்பினைத் தாளில் எழுதித் தந்தார். வரலாற்றுப் பெட்டகமாகத் திகழும் கவிஞர் தமிழ்தாசன், அவ்வப்போது என்னிடம் கழகம் குறித்த தகவல்களைத் தருவது வழக்கம். காரில் வரும்போது அவர் தந்த தாளினைப் படிக்கத் தொடங்கினேன்.

    "வணக்கம் அண்ணா.. நாளைய நாள் தலைவர் கலைஞர் அவர்கள் கழகத் தலைவராகப் பொறுப்பேற்ற நாள் (27-7-1969).

    என் வாழ்நாளில் நான் கண்டுபிடித்த - கடைப்பிடித்த ஒரே தலைவர் அவர்தான்.

    அறிவூட்டிய தந்தையாக, அரவணைத்துப் பாராட்டிய தாயாக, என் உயிரில் இன்று வரை, ஏன் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவரே.

    12 வயது சிறுவனான என்னை, ஒரு சின்னஞ்சிறிய கிராமத்திலிருந்து அழைத்து வந்த என் தந்தை, அண்ணா சாலையில் இருந்த முரசொலி அலுவலகத்தில் ஓர் இரவு நேரத்தில் அறிமுகப்படுத்திய அந்த நாளிலிருந்து என் இதயச் சிம்மாசனம் அந்த மாமனிதரைச் சுமந்து, சுமந்து சுகம் கண்டு கொண்டிருக்கிறது.

    மிகமிகச் சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து, தன் உழைப்பால் உயர்ந்து, உன்னதமான தன்னலமற்ற தொண்டால், பெரியார் - அண்ணா ஆகிய பெருமக்களை அடைந்து, தமது பல்வேறு பன்முகத்தன்மைத் திறமையால் இத்தமிழ் உலகத்தில் மட்டுமில்லாது, மனித குலத்திற்காகத் தம்மை ஆழமாக அர்ப்பணித்துக் கொண்ட திராவிட இயக்க ஆணிவேர்களில் ஒருவரான அவர் மாபெரும் தலைவரானார்.

    அவர் பெரியாரைப் போல வசதிக்காரர் அல்லர், அண்ணாவைப் போல் கல்லூரிப் படிக்கட்டுகள் ஏறியவரும் அல்லர், மேற்கண்ட அவர்களால் அடையாளம் காணப்பட்ட அரிய மனிதர். காரணம், அவரின் உழைப்பு, உறுதி, திறமை, தியாகம், தகுதி, தன்னறிவு என்பனவற்றால் உயர்ந்தவர். அவரால் இலட்சக்கணக்கான தொண்டர்கள் உருவாக்கப்பட்டு, பகுத்தறிவுப் பாசறை கூர்வாள் - வேல்களாக இருக்கிறார்கள். அதனால், அண்ணா அறிவாலயம் ஆலமரம் போல் தழைத்து, கிளைத்து நிற்கிறது.

    வேருக்கு விழுதாக - தலைமைக்கு வலுவாக பல்லாயிரக்கணக்கான கழகக் கிளைகளை உருவாக்கியவரும் அவரே. இந்திய அரசியலில் எந்நேரமும் இயங்கிய ஓர் எந்திர மனிதர்.

    இலக்கிய உலகத்தில் ஈடு, இணையில்லாத வகையில் தமிழ் மொழியையும், இனத்தையும் தலை நிமிர்த்திக் காட்டிய தண்டமிழ் ஆசான். அந்த மாபெரும் தலைவரைத் தலை தாழ்ந்து வணங்குகிறேன். வாழ்க தலைவர் கலைஞர் - வளர்க அவர் புகழ்"

    - என்று தன் உள்ளத்து உணர்வுகளை காகிதத்தில் காவியமாக்கி இருந்தார் கவிஞர் தமிழ்தாசன்.

    கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் உள்ளத்து உணர்வும் கவிஞரின் வரிகளில் வெளிப்பட்டிருந்தது.

    உடன்பிறப்புகளாம் உங்களில் ஒருவன்தானே நானும்! என் உள்ளத்திலும் எத்தனையோ உணர்வலைகள்!!

    பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய போது, கழகத்தில் தலைவர் பொறுப்பு கிடையாது. அண்ணா அவர்கள் பொதுச்செயலாளர் பொறுப்பினை ஏற்றார். "தான் கண்ட - கொண்ட ஒரே தலைவர் பெரியார்" என்பதால், தலைவர் நாற்காலியைப் பெரியாருக்காகவே விட்டு வைத்தவர் பேரறிஞர் அண்ணா. அந்த அன்புமிகு அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கழகத்தைச் சுமக்க வேண்டிய பொறுப்பு நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் தோளில் ஏறியபோது, தந்தை பெரியார் அவர்களே, முன்னேற்றக் கழகத்திற்குத் தலைமைப் பொறுப்பு வேண்டும் என்பதையும் அதைக் கலைஞர் ஏற்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் என்பது வரலாறு. பெரும்பாலான கழகத் தொண்டர்களின் விருப்பமும் அதுதான் என்பதால், கழகத்தின் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பொதுக்குழுவின் பேராதரவுடன் கழகத்தின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர் முத்தமிழறிஞர் கலைஞர். நாவலர் பொதுச்செயலாளர் பொறுப்பினை ஏற்றார். அந்த நாள்தான், இன்றைய நாள்.

    1969-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரிக்கும் வரை கழகத்தின் தலைவராக இருந்த பெருமைக்குரியவர். அரை நூற்றாண்டு காலம் கழகத்தைத் தன் நெஞ்சிலும் தோளிலும் சுமந்து, நெருக்கடி நெருப்பாறுகளைக் கடந்து, உயிரனைய உடன்பிறப்புகளைக் காத்து, இயக்கத்தை வளர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

    தன் ஆட்சிக்காலத்தில் நவீனத் தமிழ்நாட்டைக் கட்டியமைத்ததுடன், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடும் பணியில் மூத்த தலைவராக இருந்து வழிகாட்டினார். திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைக்க முடியாத சக்தியாக நிலைநிறுத்தினார். அவர் அளித்த பயிற்சிகளைப் பெற்று, உங்களில் ஒருவனான நான் கழகத்தின் தலைமைப் பொறுப்பைச் சுமந்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி வழங்க வேண்டிய பொறுப்பை கழகத்தினரும் பொதுமக்களும் என்னிடம் அளித்திருக்கிறார்கள்.

    ஒன்றியத்தை ஆளுகின்ற ஜனநாயக விரோத - மதவாத பா.ஜ.க. ஆட்சி நீடித்தால் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் தங்களின் உரிமையை இழந்துவிடக் கூடிய பேராபத்து இருக்கிறது என்பதை திருச்சியில் நடந்த கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.

    கழக அரசு செய்து வரும் சாதனைகள் தொடர வேண்டுமானால், மாநில உரிமைகள் மீட்கப்பட வேண்டுமானால், இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைந்துவிடாமல் காக்க வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் நம் பணி முழுமையாகவும் முனைப்புடனும் இருந்திட வேண்டும்.

    இந்தியாவைக் காத்திட இந்தியா (I.N.D.I.A) உருவாகியிருக்கிறது. இது உண்மையான - ஒன்றுபட்ட இந்தியா. பாராளுமன்றத் தேர்தலில், பாசிச சக்திகளை வீழ்த்தி, மகத்தான வெற்றி காணப் போகிற இந்தியா. இந்தியாவின் மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கக்கூடிய இந்தியா. இவற்றை மனதில்கொண்டு இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் வெற்றி பெற இணைந்திருக்கிறோம்.

    தமிழ்நாட்டில் இந்தியா முழுமையான வெற்றி பெற, கலைஞரை நெஞ்சில் ஏந்தும் ஒவ்வொரு உடன்பிறப்பும் ஓயாது உழைத்திட வேண்டும். அதற்குரிய முதற்கட்டப் பயிற்சி காவிரி டெல்டா மண்டலத்தில் நிறைவேறியுள்ளது.

    கழகப் படை வீரர்களாக உடன்பிறப்புகள் அணிவகுத்திருக்கிறார்கள். அடுத்தகட்டமாக, தென் மாவட்டங்களுக்கான பயிற்சிக் களம், இராமநாதபுரத்தில் அமையவிருக்கிறது.

    உடன்பிறப்புகளே உங்களோடு நான் இருக்கிறேன். என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள். வெற்றி நம்முடன் இருக்கும்.. என்றும் நிலைத்திருக்கும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அவை மிகச்சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெறுகின்றன.
    • அதன் நோக்கம், மக்களை சந்திப்பதுதான். மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தீர்த்திடுவோம்! ஓயாது உழைப்போம்! நல்ல பெயர் எடுத்து, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஓராண்டு காலத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ள கழக ஆட்சி, ஓய்வின்றித் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. இந்திய அளவில் முன்மாதிரியாகத் திகழ்கிறது நமது அரசு. அதன் பணிகளும், பயன்களும் தமிழ்நாட்டின் கடைக்கோடிவரை சென்று சேர்ந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான எனது நோக்கம். அதனை உறுதிசெய்வதற்காகத்தான் மாவட்டந்தோறும் பயணித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆய்வுப் பணிகளை மேற்கொண்டும் வருகிறேன்.

    திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்த்து 342.24 கோடி ரூபாய் மதிப்பிலான 69 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தேன். 68.74 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 61 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். மொத்தமாக, 1,18,346 பயனாளிகளுக்கு 731 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன்.

    ஜூலை 1-ம் நாள் அன்று மாலை திருச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து கரூருக்குச் சாலைவழிப் பயணத்தை மேற்கொண்டேன்.

    கரூர் நிகழ்வில் ஏறத்தாழ 80 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். கரூர் மாவட்ட நலத்திட்டப் பணிகள், அடிக்கல் நாட்டிய திட்டங்கள், தொடங்கி வைத்த திட்டங்களின் மதிப்பு ஆகியவற்றின் மொத்த மதிப்பு 1,100 கோடி ரூபாய்.

    சிறப்பான வரவேற்புடன் நாமக்கல்லுக்குச் சென்று, மதிய உணவுக்குப் பின் சிறிது ஓய்வெடுத்த நிலையில், என் மனதில் அருந்ததியின மக்களைப் பற்றிய நினைவாகவே இருந்தது. அதனால், எனது தனிச்செயலாளரிடம், "இங்கே அருந்ததியர் சமுதாயத்து மக்கள் வாழும் இடம் எது?" என்று கேட்டு தெரிவிக்கச்சொன்னேன். அவரும் விசாரித்து, சிலுவம்பட்டி என்ற பகுதியில் அருந்ததியர் சமூகத்தவர் அதிகம் வசிக்கிறார்கள் என்கிற விவரத்தை, தேநீர் நேரத்தில் என்னிடம் தெரிவித்தார்.

    வேறு யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி சிலுவம்பட்டிக்குச் சென்றேன்.

    சிலுவம்பட்டியில் வசிக்கின்ற ஓர் இளைஞர், "தலைவர் கலைஞரின் ஆட்சியில் வழங்கப்பட்ட 3 சதவீதம் உள்ஒதுக்கீட்டால் ஹோமியோபதி மருத்துவம் படித்தேன்" என்றார் நன்றியுணர்வுடன். அவர் வீட்டுக்குச் சென்றேன். "டீ சாப்பிடுறீங்களா?" என்று அவரும் அவரது துணைவியாரும் அன்புடன் கேட்டார்கள். அங்கே டீ சாப்பிட்டேன். அந்த இளைஞரின் துணைவியார் எம்.ஏ., பி.எட். படித்திருக்கிறார். அதே தெருவில் ஓர் இளைஞர் கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜில் எம்.பி..பி.எஸ் படிக்கிறார் என்று அறிந்தேன். கல்லூரியில் படிக்கும் இன்னும் இரண்டு மூன்று மாணவியரும் வந்தனர். எல்லோரும் ஆர்வத்துடன் வந்து, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டினால்தான் இந்த அளவிற்கு உயர்படிப்புகளைப் படிக்கும் தலைமுறையாகியிருக்கிறோம் என்பதைத் தலைநிமிர்ந்து சொல்லும் நிலையில் இருந்தனர்.

    அந்தப் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினை இருப்பதை மக்கள் தெரிவித்தனர். அதனையும் சாலை வசதியையும் உடனடியாக செய்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தேன். அதன்பின், நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநாடு நடக்கும் பந்தலுக்கு சென்றேன்.

    உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, 'மக்களோடு நில்-மக்களோடு வாழ்' என்ற தலைப்பில் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் சென்னையின் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் சிறப்பாக உரையாற்றினார். மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மக்களிடம் பழகி, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவற்றை அதிகாரிகளுடன் ஆலோசித்து நிறைவேற்றித் தருவது தொடர்பாக ஒரு வழிகாட்டு நெறிமுறை கையேடு வழங்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி மா.சு. விரிவாகவும் அனுபவ அறிவுடனும் எடுத்துரைத்தார்.

    தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு உரையாற்றும்போது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நகர்ப்புறத்தில் வாழ்கிற மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

    தி.மு.க. பொதுச்செயலாளர்-நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளாட்சி அமைப்பில் தனக்கு பெரிய அனுபவம் இல்லையென்றாலும், மக்கள் நலன் காக்கும் சேவகர்களாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைச் சுருக்கமாகவும் மனதில் பதியும் வகையிலும் எடுத்துரைத்தார்.

    அவரைத் தொடர்ந்து விழாத் தலைமையுரையாற்றிய உங்களில் ஒருவனான நான், மக்களாட்சியின் அடித்தளமான உள்ளாட்சி அமைப்பில் உள்ள பிரதிநிதிகளின் ஒரு கையெழுத்து எத்தகைய வலிமை வாய்ந்தது என்பதையும் விளக்கினேன்.

    ஆட்சிக்குப் பெருகி வரும் நல்ல பெயரைத் தக்க வைப்பது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கைகளில் தான் உள்ளது என்பதால், ஒழுங்கீனமும் முறைகேடும் தலைதூக்கினால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன் என்ற கண்டிப்பையும் நாமக்கல் மாநாட்டில் வெளிப்படுத்தினேன். கழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்னை சர்வாதிகாரியாக்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கையுடன்தான் அதனைத் தெரிவித்தேன்.

    தி.மு.க. அரசு வழங்கும் நல்லாட்சியின் அடையாளமாக உள்ளாட்சிகள் திகழட்டும். அந்த நம்பிக்கையுடன், முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றபின் பங்கேற்ற முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறிய மகிழ்வுடன் சேலத்திற்கு வந்து, சென்னைக்குத் திரும்பினேன். அடுத்த நாள், ஜூலை-4 அன்று முதலீட்டாளர்கள் மாநாடு.

    உலக முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் ஆடம்பரக் கூத்துகளை அரங்கேற்றிய முந்தைய ஆட்சியைப் போல இல்லாமல், மாநாட்டுக்கு அத்தியாவசியமான-நேர்த்தியான ஏற்பாடுகளுடன் கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடத்தப்பட்ட 6 முதலீட்டாளர் மாநாடுகளின் வாயிலாக 2 லட்சத்து 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வரப்பெற்றுள்ளன.

    ஒவ்வொரு செயல்பாடும் தமிழ்நாட்டை ஓர் அங்குலமேனும் உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதே எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் இலக்கு. அக்கப்போர் விமர்சனங்களைப் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான வகையில் மக்கள் பணியைத் தொடர்ந்திட வேண்டியது நமது கடமை.

    கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அவை மிகச்சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெறுகின்றன. அதன் நோக்கம், மக்களை சந்திப்பதுதான். மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தீர்த்திடுவோம்! ஓயாது உழைப்போம்! நல்ல பெயர் எடுத்து, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ×