search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஜி பொன் மாணிக்கவேல்"

    சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை தமிழக அரசு எதிர்த்தால் தனது கருத்தை அறிய வேண்டும் என வக்கீல் யானை ராஜேந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். #PonManickavel
    சென்னை:

    தமிழக கோவில்களில், புராதான சிலைகள் பலவற்றை கொள்ளை அடித்தது தொடர்பாக பதிவான வழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அவர் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் உயர் அதிகாரிகள், முக்கிய நபர்களை எல்லாம் கைது செய்ய தொடங்கினார்.

    இதையடுத்து, சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து, கடந்த நவம்பர் 30-ந்தேதி பிற்பகலில் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

    நவம்பர் 30-ந்தேதி ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஓய்வுப்பெற்றார். இதையடுத்து அன்று முதல் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.


    இதையடுத்து வக்கீல் யானை ராஜேந்திரன், சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டின் சிறப்பு அமர்வு, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேலை நியமித்துள்ளது.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால், என் தரப்பு கருத்தை கேட்காமல், ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை எதுவும் விதிக்க கூடாது’ என்று கூறியுள்ளார். #PonManickavel
    தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுவதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். #IGPonManickavel
    சென்னை:

    சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பங்கேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    ஓய்வு பெறுவதையொட்டி ரெயில்வே போலீசில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கும், குற்றவாளிகளை பிடித்துக் கொடுத்த பொதுமக்களுக்கும் பொன். மாணிக்கவேல் வெகுமதிகளை வழங்கினார். அப்போது அவர் போலீசார் மத்தியில் பேசியதாவது:-

    போலீஸ் துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணிச்சுமையுடனேயே பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 600 வழக்குகள் பதிவாகின்றன. இதனால் அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கு போலீசாருக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. கொலை வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கு 3 மாதங்களுக்கு மேல் ஆகும்.

    ஒரு வழக்கை பதிவு செய்யும் போது போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி சட்டநுணுக்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீதிமன்றங்களில் வழக்கை திறம்பட நடத்த முடியும். நீதிமன்றத்தை எப்போதும் மதித்து செயல்பட வேண்டும்


    ஒரு வழக்கை பதிவு செய்யும் அதிகாரி எக்காரணம் கொண்டும் குற்றவாளிகளை தப்ப விட்டு விடக் கூடாது. கோர்ட்டில் குற்றத்தை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் 2 அல்லது 3 மாதங்களில் குண்டர் சட்டத்தை உடைத்துக் கொண்டு குற்றவாளிகள் வெளியில் வந்து விடுகிறார்கள்.

    தமிழக அரசுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சில அதிகாரிகளால்தான் பிரச்சனை. முழுமன நிறைவோடு பணி ஓய்வு பெறுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #PonManickavel
    சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது அனுமதியின்றி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PonManickavel #MadrasHC
    சென்னை:

    தமிழக கோவில்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் துப்பு துலக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவித்தது. பொன்.மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் திருப்தி இல்லை என்றும் அரசு தெரிவித்தது. இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேலுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.


    இந்நிலையில், ஐஜி பொன் மாணிக்கவேல் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓய்வு பெறும் நிலையில் உள்ள தன் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஐஜி பொன் மாணிக்கவேல் முறையிட்டார்.

    அவரது மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட அந்த பிரிவில் உள்ள அதிகாரிகள் மீது அனுமதியின்றி எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PonManickavel
    நாறும்பூநாதர் கோவில் சிலை கொள்ளை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ளவர்களை பிடித்து விசாரணையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் கூறினார். #PonManickavel
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பழவூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட நாறும்பூநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சுப்பிரமணியர், சிவகாமி அம்பாள், வெயிலுகந்தம்மன், கிருஷ்ணன், அஷ்டதேவர், நடராஜர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், வள்ளி, தெய்வானை, விநாயகர் மற்றும் நாறும்பூநாதருடன் இணைந்த பிரியமுடையாள் ஆகிய ஐம்பொன்னால் ஆன 13 சிலைகள் இருந்தது. இதனை கடந்த 2005-ம் ஆண்டு மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கு சிலைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கொள்ளை போன 13 சிலைகளில் தெய்வானை, பெரும்பொதி விநாயகர், விநாயகர், நாறும் பூநாதருடன் இணைந்த பிரியமுடையாள் ஆகிய 4 சிலைகளை தவிர மற்ற 9 சிலைகளையும் கடந்த 2008-ம் ஆண்டு சிலைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி, சிலைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றமாக செயல்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

    இதன் பின்னர் நீதிமன்றத்தில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு பழவூர் கோவில் நிர்வாகத்திடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சிலை கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகளில் தீனதயாளன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட நடராஜர் சிலையில் கை துண்டிக்கப்பட்டு பின்பு இணைக்கப்பட்டுள்ள விவகாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு தெரியவந்தது. இதன் பேரில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேற்று தொல்லியல் துறை தொழில்நுட்ப பிரிவினருடன் பழவூர் நாறும்பூநாதர் கோவிலுக்கு வந்தார். அங்கு துண்டிக்கப்பட்ட நடராஜர் சிலையையும், துண்டிக்கப்பட்ட கையின் உலோக தன்மையின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

    பின்னர் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இக்கோவிலில் 4 சிலைகள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது விசாரணையை நிறுத்தி வைத்து மீண்டும் விசாரணை நடத்தி வருகிறோம். இதன்படி நடராஜர் சிலையின் வலது கை துண்டிக்கபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக தொல்லியல் துறையின் தொழில்நுட்ப பிரிவினர் இன்று (நேற்று) ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில், விஞ்ஞான ரீதி அறிக்கையில் உலோகத்தன்மையின் வேறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. நடராஜர் சிலையில் கைகள் துண்டிக்கப்பட்டு சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது. கைகள் இணைக்கப்பட்ட தொழில் நுட்பம் இந்தியாவில் கிடையாது. எனவே சர்வதேச தொழில்நுட்பத்தில் கைகள் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை தயாரித்து விசாரணையை ஓரிரு மாதங்களில் முடிப்போம்.

    இந்த வழக்கு தொடர்பாக அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடித்து விசாரணையை முடிவுக்கு கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonManickavel

    தஞ்சை பெரிய கோவிலில் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். #IdolWing #PonManickavel
    தஞ்சை:

    தமிழகம் முழுவதும் பழமையான கோவில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தல் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட பல்வேறு தகவல்கள், ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சர்வதேச கடத்தல் மன்னனான ஜெர்மனியைச் சேர்ந்த சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டதில், இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏராளமான சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 89 சிலைகள் மற்றும் தூண்கள் மீட்கப்பட்டன.

    இதற்கிடையே 50 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜ சோழன் சிலை, அவரது பட்டத்து அரசியான உலகமாதேவி சிலை ஆகியவை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது.



    கோயில் வளாகத்தில் உள்ள சிலை பாதுகாப்பு மண்டபத்தில் நடத்தப்பட்ட தொடர் ஆய்வில் மேலும் சில சிலைகள் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் இன்று ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோவிலுக்குள் இருந்த பக்தர்களை வெளியேற்றி கதவுகளை மூடிவிட்டு ஆய்வு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  #IdolWing #PonManickavel 
    சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சென்னையில் நேற்று தொழிலதிபர் வீட்டில் தனது குழுவினருடன் சோதனை செய்வதற்கு முன்பாக தன்னையே சோதனைக்கு உட்படுத்தியது வியப்பை ஏற்படுத்தியது. #IdolSmuggling #PonManickavel #StatueSmuggling
    சென்னை:

    ஒரு இடத்தில் போலீசார் சோதனையிட செல்லும் போது சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்கிற விதி உள்ளது.

    குறிப்பாக சோதனையிடச் செல்லும் போலீசாரை, வீட்டில் இருப்பவர்கள் சோதனை செய்துதான் உள்ளே அனுப்ப வேண்டும். இது பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதே இல்லை.

    நேற்று ரன்வீர்ஷாவின் வீட்டில் நடந்த சோதனையின் போது ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இதனை முழுமையாக கடை பிடித்தார்.

    சிலை தடுப்பு பிரிவு போலீஸ் படையுடன் ரன்வீர் ஷாவின் வீட்டுக்கு பொன்.மாணிக்கவேல் சென்றபோது, அங்கு வக்கீல்கள் இருந்தனர். ரன்வீர்ஷாவின் செயலாளராக பணியாற்றும் பெண் ஒருவரும், பணியாட்கள் சிலரும் வீட்டில் இருந்தனர்.


    அவர்களிடம் பொன்.மாணிக்கவேல், என்னையும், என்னோடு வந்துள்ள சக போலீசாரையும் நீங்கள் முதலில் சோதனை நடத்த வேண்டும். அதன் பின்னரே நாங்கள் உள்ளே செல்வோம் என்று கூறினார்.

    இதனை ஏற்று, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் முதலில் சோதனைக்குட்படுத்தப்பட்டார். பின்னர் அவருடன் சென்ற போலீசாரும் சோதனை செய்யப்பட்டனர். இதன் பிறகு ரன்வீர்ஷாவின் வீட்டில் சோதனை நடைபெற்றது.

    ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் எப்போதுமே வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளும் அதிகாரி ஆவார். நேற்று அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. #IodlSmuggling #PonManickavel #StatueSmuggling
    நெல்லை பழவூர் நாறும்பூநாதர் கோவில் சிலை கடத்தப்பட்ட வழக்கில் ஆஜராக மாதாவரம் இன்ஸ்பென்க்டர் ஜீவானந்தம், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி காசிப், சஸ்பெண்ட் ஆன டி.எஸ்.பி காதர் பாட்ஷா 19-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #IdolSmuggling #IGPonmanikavel
    சென்னை:

    நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த சிலைகளின் மதிப்பு ரூ.30 கோடியாகும்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை வழக்கு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளில் ஆடல் நடராஜன், சிவகாமி அம்மாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திரதேவர், வெயில் காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் என 9 சிலைகள் மீட்கப்பட்டன.

    மற்ற சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டதாக தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சிலர் தப்ப விடப்பட்டு இருப்பதாகவும், வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் வழக்கில் சேர்க்கப்படாமல் இருப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மனு செய்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட்டு மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிட்டது.

    அதோடு இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். அவர் விசாரணையை தொடங்கியதும் 13 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் பழவூர் கோவிலுக்கு வந்து பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சாமி சிலைகளை போட்டோ எடுத்தது தெரிய வந்தது. அவர் அவ்வாறு போட்டோ எடுத்து சென்றபிறகுதான் 13 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பதை பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்தார்.

    மேலும் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் சென்னை, டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிறகு மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளன என்பதும் தெரிய வந்தது. அதோடு 4 சிலைகளில் இருந்த தங்கத்தை பிரித்தெடுக்க அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் அமிலம் ஊற்றி அழித்து விட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து மேலும் 8 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே சுபாஷ்கபூர் போலீசாரிடம் சிக்கினார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வல்லப்பிரகாஷ், ஆதித்திய பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேர் ஏற்கனவே ஜெயிலில் உள்ளனர்.

    சிலை கடத்தலில் தொடர்புடைய மேலும் 6 பேர் வெளிநாடுகளில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்கிடையே பழவூர் சாமி சிலைகள் கடத்தப்பட்டது பற்றி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களை சம்மன் அனுப்பி வரவழைத்து அவர் விசாரித்து வருகிறார்.

    அந்த வகையில் இந்த வழக்கில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. காசிப் மற்றொரு டி.எஸ்.பி. காதர்பாட்சா, மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மூவரையும் விசாரணைக்கு வருமாறு தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இந்த 3 போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற உள்ளது. ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேரிடையாக இவர்களிடம் விசாரணை நடத்த உள்ளார்.

    சிலைகள் கடத்தப்பட்ட போது போலீஸ் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டது பற்றிய தகவல்களை உரிய முறையில் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதுபற்றி விசாரணை நடைபெற உள்ளது.

    இதுமட்டுமின்றி பழவூர் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகளை செய்து வைத்து பிரச்சனையை தீர்த்து விடலாம் என்று போலீஸ் அதிகாரிகள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றியும் 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜீவானந்த்திடம் அதிரடி விசாரணை நடத்த பொன்.மாணிக்கவேல் முடிவு செய்துள்ளார்.

    இந்த விசாரணைக்கு பிறகு பழவூர் கோவில் சாமி சிலைகள் கடத்தல் வழக்கில் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IdolSmuggling #IGPonmanikavel
    ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரித்து வந்த சிலை கடத்தல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதன் மூலம் திருடர்களை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது என்று விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார். #IdolSmuggling
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பல ஆண்டுகளாக கோவில் சிலைகளும், விலை உயர்ந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை விசாரிப்பதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சாமி சிலைகளையும், பொருட்களையும் மீட்டுள்ளனர். உதாரணமாக வெளிநாடுகளில் இருந்தும், குஜராத்திலிருந்தும் ராஜராஜசோழன் சிலையை மீட்டு கொண்டுவந்தார்கள்.

    இதை பாராட்டி தமிழக அமைச்சரே நேரடியாக சென்று வரவேற்றார். பல சாமி சிலைகள் திருடு போயிருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை செய்வதற்காக பக்தர்களிடம் இருந்து 100 கிலோ தங்கத்திற்கு மேலாக காணிக்கையாக பெறப்பட்டு, முழுமையாக திருடப்படிருப்பதை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


    இதைத் தொடர்ந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் அவர்களை கைதும் செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நேர்மையான அதிகாரிகளிடம் இருந்து, சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைக்க கொள்கை முடிவு எடுத்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது பெரும் கண்டனத்திற்குறியது.

    ஒரு துறையில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்றி, அதில் நடந்திருக்கும் குற்றங்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நிலையில், நேர்மையான அதிகாரிகளுக்கு தமிழக அரசு துணைநின்று ஊக்கப்படுத்தாமல், திருடர்களுக்கு சாதகமாக அரசு முடிவு எடுப்பது, திருடர்களை காப்பாற்ற முயற்சிக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சாமி சிலைகளையும், கோவில் சொத்துக்களையும் கொள்ளையடிப்பவர்களை சட்டத்தின் படி இரும்புக்கரம் கொண்டு தடுக்கவேண்டும்.

    மேலும் கோவில் சொத்துக்களை திருடுபவர்களையும், அவர்களை காப்பாற்ற நினைப்பவர்களையும் “அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்”.

    இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றாமல், தொடர்ந்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைகள் செயல்படுவதன் மூலம் தான் உண்மையான குற்றவாளிகள் கண்டரியப்படுவார்கள். பல ஆண்டுகளாக கடத்தப்பட்ட சிலைகள், சிற்பங்கள் மீட்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடத்திலே ஏற்பட்டுள்ளது. ஆகவே நேர்மையான அதிகாரிகள் பணியில் தொடரவேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #IdolSmuggling #Vijayakanth
    சிலைகள் கடத்தல் சம்பந்தமாக நடைபெற்று வரும் விசாரணையில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் பழம்பெரும் புகழ் மிக்க, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோயில்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நமது மாநிலத்தில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டதும், வெளி மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதும், சிலை கடத்தல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டிருப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிலைகள் கடத்தப்பட்டது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என்று புகார் தெரிவித்திருக்கிறார்.

    குறிப்பாக தமிழக அரசு சிலைகளை பாதுகாக்க பாதுகாப்பு அறைகளை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை, சிலைகளை மீட்டுக் கொண்டுவந்த அதிகாரியை பணியிட மாற்றம் செய்திருப்பது உட்பட சில குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்திருக்கிறது. எனவே இந்த குற்றச்சாட்டுகளால் தமிழக அரசு சந்தேகத்திற்கு இடம் கொடுத்திருக்கிறது.

    எனவே சிலைகள் கடத்தல் சம்பந்தமாக நடைபெற்று வரும் விசாரணையில் எவ்வித குறுக்கீடும், பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும். குறிப்பாக சிலை கடத்தல் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வரும் குழுவுக்கு தேவைப்படும் உதவிகளை முறையாக, நேர்மையாக செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். அதன் மூலம் விசாரணைக்கு தடங்கல் ஏதும் ஏற்படாமல் விரைந்து விசாரணை நடைபெற வேண்டும்.

    எனவே தமிழக அரசு சந்தேகத்திற்கு இடம் கொடுக்காத வகையில் சிலை கடத்தல் சம்பந்தமான வழக்கில், சிலை கடத்தல் தடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் 25-ந் தேதி ஆஜராகும்படி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சசிகலா உறவினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், போயஸ் கார்டன் இல்லத்தில் வேலை பார்த்த நிர்வாகிகள் என அனைத்து தரப்பினருக்கும் விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது. சம்மனை பெற்றுக்கொண்டவர்கள் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், டாக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் விசாரணை கமிஷனில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். 9-ந் தேதி அப்பல்லோ டாக்டர் சாந்தாராம் விசாரணையில் பங்கேற்றார். இடையில் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது வரும் 25-ந் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடங்க இருக்கிறது.

    அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சசிகலா உதவியாளர் கே.பி.கார்த்திகேயன், ஜெயலலிதா தோழியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதர்சயத் ஆகியோர் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் 25-ந் தேதி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை ஆணையத்திடம் தெரிவிக்க இருக்கின்றனர். ஜெயலலிதாவின் பள்ளி தோழி என்பதால் பதர்சயத் ஆணையத்திடம் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து தனக்கு தெரிந்த பரபரப்பு தகவல்களை வெளியிடுவார் என்று தெரிகிறது. இதில் சசிகலா உதவியாளர் கே.பி.கார்த்திகேயன் மறு விசாரணைக்காக ஆஜர் ஆகிறார்.

    அதேவேளையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருக்கும் பொன்.மாணிக்கவேலும் முதல் முறையாக விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி, விளக்கமளிக்கிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, கடந்த 2012-ம் ஆண்டு பொன்.மாணிக்கவேல் மாநில உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி உள்ளார். எனவே அவர் அந்த பதவியில் இருந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற விஷயங்கள் குறித்து அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்த இருக்கிறார். எந்தவொரு கருத்தையும் வெளிப்படையாக தெரிவித்து வரும் ஐ.ஜி. பொன்.மணிக்கவேல், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையிலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது.

    இதனை தொடர்ந்து 26-ந் தேதி சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்த இருக்கிறார். அப்போது ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கூடுதல் டி.எஸ்.பி. வீரபெருமாள், கவர்னர் மாளிகை உதவி பிரிவு அலுவலர் ஆர்.சீனிவாசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ஆகியோர் நேரில் ஆஜராகி, குறுக்கு விசாரணையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். இதற்கான சம்மன் அவர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
    ×