search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருதரப்பினர் மோதல்"

    • கோஷ்டி மோதலில் கல், உருட்டுகட்டை, கம்பி உள்ளிட்ட பொருட்களால் தாக்கி கொண்டதில் 12 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • இந்த தாக்குதலில் போலீசார் 8 பேரும் காயம் அடைந்தனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசை பகுதியில் உள்ள பராசக்தி கோவிலை 75 ஆண்டுகளுக்கு மேல் இரு சமூகத்தினர் பராமரித்து வந்தனர். இதில் ஒரு தரப்பினர் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கோவில் முன்பு இருந்த காலி இடத்தில் கான்கிரீட் போட்டு கம்பிவேலி அமைத்தனர்.

    ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் அந்த கம்பி வேலியை அவர்கள் அகற்றினர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இருதரப்பினரும் வாக்குவாதம் செய்து பின்னர் கல், உருட்டுகட்டை, கம்பி உள்ளிட்ட பொருட்களால் தாக்கி கொண்டனர்.

    இந்த தாக்குதலில் பெண்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் உத்தரவுப்படி ஏ.எஸ்.பி மதுக்குமாரி, சின்னமனுர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக செல்ல அறிவுறுத்தினர். இந்த தாக்குதலில் ஸ்ரீரங்கன், முருகன், தாமோதரன், தியாகராஜன், செந்தட்டி, செல்வக்குமார், செல்வி, முத்துக்குமார், அர்ச்சுணன், கலைவாணி, சீனியம்மாள், அழகுமலை, சிவா உள்பட 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் போலீசார் 8 பேரும் காயம் அடைந்தனர். இது குறித்து சின்னமனூர் போலீசார் பார்த்திபன், நவீன், சிவா, கண்ணன் உள்பட 11 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங்சாய் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே மேல்பாதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மே மாதம் திருவிழாவின்போது வழிபடுவதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேல்பாதியை சேர்ந்த ஒருவர் கோலியனூர் கூட்டுரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட வந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த 5 பேர் ஓட்டலுக்கு வந்தனர்.

    திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து ஒருதரப்பை சேர்ந்த பிரகாஷ், பிரபு உள்ளிட்ட சிலரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    இதனால் அந்த தரப்பை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நள்ளிரவு 11.30 மணியளவில் இந்த மறியல் நடந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ்களும், கும்பகோணத்தில் இருந்து சென்னை வரும் பஸ்களும் நீண்ட வரிசையில் நின்றன. தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங்சாய் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

    அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலை கைவிட்டனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

    ஏற்கனவே மேல்பாதியில் கோவிலில் வழிபடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் இருந்து வரும் நிலையில் தற்போது இருதரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேல்பாதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 

    • 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் அருகே உள்ள தாங்கல் அம் மன் நகர் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரம்.

    இவரது மகன் தாமோ தரன் (வயது 39). இவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் ராமு (28), ராஜேஷ் (28). தாமோதரன் வீட்டு கழிவுநீர் ராமு மற்றும் ராஜேஷ் வீட்டின் முன் பகுதியில் செல்கிறது. இது குறித்து ராமு, ராஜேஷ் ஆகிய இருவரும், தாமோதரனிடம் கேட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை கழிவு நீர் அதிகமாக இவர்கள் வீட்டு முன் சென்றதால் மீண்டும் இவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டு தாமோதரன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த சரவணன், மற்றும் ராமு, ராஜேஷ் ஆகி யோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதில் 4 பேரும் காயமடைந்தனர். தாமோதரன் மற்றும் ராமு ஆகிய 2 பேரும் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து 2 தரப்பினரும் பள்ளிகொண்டா போலீ சில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப் பதிவு செய்து சரவணன் மற்றும் ராமு ஆகிய 2 பேரை கைது செய்தார்.

    • கடந்த 10 நாட்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் ரோடு தாட்கோ காலனியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசந்தன காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. தினமும் கோவில் திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.

    இந்த கோவிலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். அத்துடன் இங்கு திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதில் அவர்கள் மோதிக் கொள்ளும் சூழலும் உருவானது. இதையடுத்து ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது கோவிலில் யாரும் எந்தவிதமான பிரச்சினையும் செய்யக்கூடாது, கோவிலுக்கு வழிபாடு நடத்த வருகை தருபவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் செய்யக்கூடாது என்று உறுதியேற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இதுதொடர்பாக தீர்மானமும் போட்டு அதில் பிரச்சினைக்கு காரணமான இருதரப்பினரும் கையெழுத்திட்டனர்.

    இந்தநிலையில் நேற்று காலை ஒரு சில நபர்கள் சந்தன காளியம்மன் கோவிலை கடப்பாறை, இரும்புக்கம்பிகள் உதவியுடன் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வடக்கு வெங்காநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் ஜனகன் ராஜா, அவரது உதவியாளர் மற்றும் சிலர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது கோவிலை இடித்துக்கொண்டிருந்த நபர்களை தடுத்து எச்சரித்ததோடு கண்டித்தும் அனுப்பினார். ஆனால் அவர்கள் கோவிலின் பெரும்பாலான பகுதியை இடித்துவிட்டனர். பின்னர் இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பிரச்சினையில் கோவில் இடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
    • தேடப்பட்டு வந்தவர்களில் 12 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரில் 108 திவ்ய தேசயங்களில் ஒன்றான காளமேக பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் மாலையில் சுவாமி-அம்பாள சட்டத்தேரில் பவனிவந்தனர். அதனை தொடர்ந்து கோவிலின் முன்புள்ள கலையரங்கில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது இருதரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இருதரப்பினரையும் எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இந்த நிலையில் மோதல் சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் வசிக்கும் பகுதிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

    அதனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்தனர். அவர்களில் செந்தில்குமார், செல்வகுமார் உள்ளிட்ட 2 பேரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். மேலும் பலருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    ஒரு தரப்பினர் நடத்திய இந்த தாக்குதலால் திருமோகூரில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு கார் சேதமானது. தாக்குதலில் காயம் அடைந்த 3 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன், ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் ஏராளமானோர் வலியுறுத்தினர். அவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். தாக்குதல் சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிந்தனர்.

    மனோஜ்பிரபாகரன், பிரபு, முகேஷ், ஆகாஷ், நேரு, மாதேஷ், சூரிய பிரகாஷ், அருண், ஸ்ரீகாந்த், வைரபிரகாஷ், அர்ஜூன், சாந்தகுமார், சிவா, ராேஜந்திரபாண்டியன், சந்துரு உள்ளிட்ட 24 பேர் மீது 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவர்கள் அனைவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்தவர்களில் 12 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஒரு தரப்புக்கு தெரியாமல் ஒரு தரப்பினர் விழா எதுவும் கொண்டாடக்கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.
    • கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பட்டுக்கோட்டை, அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் பழமை வாய்ந்த பட்டவையா மற்றும் கொம்புக்கார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற்றது.

    அப்போது முதலே கோவிலில் வழிபாடு மற்றும் திருவிழா நடத்துவதில் கோவில் உரிமைக்காரர்களான ஒரே சமூகத்தைச்சேர்ந்த தானான், சின்னத்தானான் வகையறாக்களுக்கும் சிவந்தான், ஏகான் வகையறாக்களுக்கும் பிரச்சினை நிலவி வந்தது.

    பின்னர் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சமாதான கூட்டத்தில் இனிமேல் அக்கோவிலின் திருவிழாவை இருதரப்பினரும் சேர்ந்து நடத்த வேண்டும் எனவும், ஒரு தரப்புக்கு தெரியாமல் ஒரு தரப்பினர் விழா எதுவும் கொண்டாடக்கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    இதனிடையே இன்று ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கோவிலில் பால்குடம் மற்றும் அன்னதான விழா நடத்த திட்டமிட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் நேற்று நள்ளிரவு முதல் அங்கு ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒருதரப்பினர் மட்டும் பால் குடம் எடுப்பு திருவிழா நடத்த முடியாத என்று கூறி அனுமதி மறுத்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த எதிர்தரப்பை சேர்ந்தவர் இன்று கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பட்டுக்கோட்டை, அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இன்று அன்னதானத்திற்காக வெட்டி வைத்திருந்த காய்கறிகள், பால்குடம் எடுப்பதற்காக கொண்டு வந்த பால் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் போலீசார் ஈடுபட்டும் ஏற்காததால் சாலையில் மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து கீரமங்கலம் பட்டவையா கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×