search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை ஒத்தக்கடை கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதலில் 12 பேர் கைது
    X

    மதுரை ஒத்தக்கடை கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதலில் 12 பேர் கைது

    • வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
    • தேடப்பட்டு வந்தவர்களில் 12 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரில் 108 திவ்ய தேசயங்களில் ஒன்றான காளமேக பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் மாலையில் சுவாமி-அம்பாள சட்டத்தேரில் பவனிவந்தனர். அதனை தொடர்ந்து கோவிலின் முன்புள்ள கலையரங்கில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது இருதரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இருதரப்பினரையும் எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இந்த நிலையில் மோதல் சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் வசிக்கும் பகுதிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

    அதனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்தனர். அவர்களில் செந்தில்குமார், செல்வகுமார் உள்ளிட்ட 2 பேரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். மேலும் பலருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    ஒரு தரப்பினர் நடத்திய இந்த தாக்குதலால் திருமோகூரில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு கார் சேதமானது. தாக்குதலில் காயம் அடைந்த 3 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன், ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் ஏராளமானோர் வலியுறுத்தினர். அவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். தாக்குதல் சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிந்தனர்.

    மனோஜ்பிரபாகரன், பிரபு, முகேஷ், ஆகாஷ், நேரு, மாதேஷ், சூரிய பிரகாஷ், அருண், ஸ்ரீகாந்த், வைரபிரகாஷ், அர்ஜூன், சாந்தகுமார், சிவா, ராேஜந்திரபாண்டியன், சந்துரு உள்ளிட்ட 24 பேர் மீது 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவர்கள் அனைவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்தவர்களில் 12 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×