search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய கடற்படை"

    • சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கடற்கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.
    • கடற்கொள்ளையர்களிடம் இருந்து 23 பாகிஸ்தானியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஏடன்:

    ஏமன் நாட்டின் சோகோட்ரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த ஈரான் நாட்டுக்குச் சொந்தமான அல் கம்பார் 786 என்ற மீன்பிடிக்கப்பலை நேற்று முன்தினம் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரையும் பணய கைதிகளாகப் பிடித்தனர்.

    கப்பல் கடத்தப்பட்டது குறித்த தகவல் கிடைத்ததும் அரபிக்கடலில் ரோந்து பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் உடனடியாக அங்கு விரைந்தன. கடத்தப்பட்ட ஈரான் கப்பலை இந்திய கடற்படையின் கப்பல் நேற்று சுற்றிவளைத்தன. ஈரான் கப்பலில் பயங்கர ஆயுதங்களுடன் 9 கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்தும் கப்பலையும், பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள மாலுமிகளையும் மீட்கும் முயற்சியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டது. சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கடற்கொள்ளையர்கள் சரண் அடைந்தனர். கப்பலில் இருந்த 23 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள்.

    இதுதொடர்பாக இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகையில், கப்பல் கடத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அதிரடி நடவடிக்கை எடுத்து 23 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

    • கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்டவர்கள் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா போர் கப்பல்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

    செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு மற்றும் மீன்பிடி கப்பல்களை அந்த நாட்டின் கடற்கொள்ளையர்கள் கடத்தி செல்வது தொடர்கதையாகி உள்ளது. இப்படி தாக்குதலுக்கு மற்றும் கடத்தலுக்கு உள்ளாகும் கப்பல்களை மீட்க இந்திய கடற்படை பெரிதும் உதவி வருகிறது.

    இந்நிலையில் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தப்பட்ட வங்காளதேச நாட்டுக்கு சொந்தமான 'எம்.வி.ருயென்' என்ற சரக்கு கப்பல் கடந்த 14-ந் தேதி சோமாலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பயணித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அந்த கப்பலின் நடவடிக்கைகளை இந்திய போர்க்கப்பல் கண்காணித்தது. இதில் அந்த கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் பிற கப்பல்களை கடத்துவதற்கு கொள்ளையர்கள் அந்த கப்பலை பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.

    இதனையடுத்து, 15-ந் தேதி 'எம்.வி.ருயென்' சரக்கு கப்பல் இந்திய போர்க்கப்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் அதில் இருந்த கொள்ளையர்களை சரணடையுமாறு இந்திய கடற்படையினர் எச்சரித்தனர். அவர்கள் கேட்காமல் சரக்கு கப்பலில் இருந்து இந்திய போர்க்கப்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து, சர்வதேச சட்டத்தின்படி தற்காப்புக்காகவும், கடற்கொள்ளையர்களை எதிர்ப்பதற்கும் இந்திய கடற்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்திய விமானப்படையினரும் தாக்குதலில் கடற்படையினருக்கு உதவி செய்தனர். சுமாா் 40 மணி நேர சண்டைக்கு பிறகு சரக்கு கப்பலில் இருந்த 35 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். கப்பலில் பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்த 17 சிப்பந்திகளும் மீட்கப்பட்டனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா போர் கப்பல்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கடற்கொள்ளையர்கள் மும்பை அழைத்து வரப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதுகுறித்து கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஐ.என்.எஸ். கொல்கத்தா போர் கப்பல், 35 கடற்கொள்ளையர்களுடன் மார்ச் 23-ந் தேதி (நேற்று) மும்பை வந்தது. அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் உள்ளூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

    • செங்கடலில் பயணிக்கும் சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
    • கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களின் சதியை இந்திய கடற்படை முறியடித்தது.

    புதுடெல்லி:

    அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வந்து அந்த கப்பல்களை கடத்தி அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கொள்ளையர்களை ஒடுக்க இந்திய கடற்படை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் மால்டா நாட்டில் கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். அந்தக் கப்பலை அவர்கள் தங்களது கடத்தல் முயற்சிக்கு பயன்படுத்தி வந்தனர்.

    இதற்கிடையே இந்திய கடற்கரையிலிருந்து 2,800 கிலோமீட்டர் தொலைவில் கடற்கொள்ளையர் கடத்திய எம்.வி.ரூயென் கப்பல் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. உடனே இந்திய கடற்படை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

    கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை மீட்கும் முயற்சியில் கடல் ரோந்து விமானம் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா கப்பல்களை சி-17 விமானம், ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டன.

    சரக்கு கப்பலை சுற்றிவளைத்து கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது இந்திய ஹெலிகாப்டர் மீது கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். கப்பலை மீட்கும் பணி சுமார் 40 மணி நேரம் நிகழ்ந்தது. சரணடையாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கடற்படை எச்சரிக்கை விடுத்தது. சுற்றி வளைக்கப்பட்டதால் கடற்கொள்ளையர்கள், இந்திய கடற்படையில் சரணடைந்தனர். கப்பலில் இருந்த 35 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

    கப்பல் ஊழியர்கள் 17 பேரை மீட்டனர். இவர்கள் 100-நாட்களுக்கும் மேலாக கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர். எம்.வி.ரூயென் கப்பல் தற்போது முழுமையாக இந்திய கடற்படை வசம் உள்ளது.

    இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டோ விவேக் மத்லால் கூறுகையில், கடந்த 40 மணி நேரத்தில் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் உள்ளிட்டவைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் 35 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட னர். 17 ஊழியர்கள் எந்த வித காயமுமின்றி மீட்கப்பட்ட னர். கப்பலில் இருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.

    • குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதுதொடர்பாக பாகிஸ்தானியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அகமதாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடல் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், குஜராத் எல்லையில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    போர்பந்தர் அருகே நடத்தப்பட்ட சோதனையில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அங்கிருந்த 6 பாகிஸ்தானியர்களை கைதுசெய்தனர்.

    இந்த ஆண்டு இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

    • பிப்ரவரி 27லிருந்து ஸாஹில், அவர் பணியாற்றி கொண்டிருந்த கப்பலிலிருந்து காணாமல் போனார்
    • கப்பல்கள் மற்றும் விமானங்களின் துணையுடன் அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடக்கிறது

    இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பலிலிருந்து கடற்படை வீரர் ஒருவர் காணாமல் போனார்.

    கடந்த மாதம் 27லிருந்து காணாமல் போனதாக கூறப்படும் "ஸாஹில் வர்மா" (Sahil Verma) எனும் அந்த கடற்படை வீரரை தேட, உயர்-மட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள இந்திய கடற்படையின் மேற்கு மண்டல ஆணைய (Western Naval Command) தலைமையகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து இந்திய கடற்படை தனது அதிகாரபூர்வ எக்ஸ் (X) வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

    கடற்படையின் இரண்டாம் நிலை வீரராக (Seaman II) பணிபுரிந்த ஸாஹில் வர்மா, 2024 பிப்ரவரி 27 அன்றிலிருந்து தான் பணியாற்றி வந்த இந்திய கடற்படை கப்பலிலிருந்து துரதிர்ஷ்டவசமாக காணவில்லை.


    தகவல் அறிந்ததும் உடனடியாக இந்திய கடற்படை, கப்பல்கள் மற்றும் விமானங்களின் துணையுடன் அவரை தேடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

    இச்சம்பவம் குறித்த விசாரணையை, கடற்படை வாரியம் தொடங்கியுள்ளது.

    இவ்வாறு கடற்படை தெரிவித்துள்ளது.

    தற்போது வரை கடற்படை வீரர் ஸாஹில் சர்மா, காணாமல் போன பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • போதைப்பொருட்களின் உறைகளில் "பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்டது” என எழுதப்பட்டிருந்தது
    • படகை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் இருந்த அனைவரையும் கைது செய்தனர்

    குஜராத் கடற்பகுதியில் இரண்டு நாட்கள் கடலில் இருந்த இந்திய கடற்படையின் (Indian Navy) கப்பல் ஒன்றில் இருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு சிறிய கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்று போது தடுத்து நிறுத்தினர்.

    இந்திய கடற்படை அதிகாரிகளுடன் இருந்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக (Narcotics Control Bureau) அதிகாரிகள், அதில் இருந்த "பாகிஸ்தானியர்கள்" என சந்தேகிக்கப்படும் சிலரிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறிய கப்பலில், 3,300 கிலோ போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் உறைகளில் "பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்டது" (Produce of Pakistan) என எழுதப்பட்டிருந்தது.

    இதில் 3,089 கிலோ கஞ்சா, 158 கிலோ, மெத்தாம்ஃபிடமைன் (methamphetamine) மற்றும் 25 கிலோ மார்ஃபைன் (morphine) ஆகியவை இருந்தது.

    சர்வதேச சந்தையில், தற்போது கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு ரூ.2,000 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    படகை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் இருந்த அனைவரையும் கைது செய்தனர். அவர்கள் குஜராத் மாநில போர்பந்தர் (Porbandar) நகருக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்திய கடற்படையுடன் குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்பு படை (Anti-Terrorism Squad) இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இந்திய துணைக்கண்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட மிக பெரிய போதை பொருள் பறிமுதல் இதுதான் என கூறப்படுகிறது.

    இந்த போதை பொருள் கடத்தல் முயற்சியை கண்டுபிடித்து தடுத்து நிறுத்திய அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டினார்.


    • பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • போதைப்பொருள் இல்லாத நாடு என்ற நம்முடைய அரசின் உறுதிப்பாட்டிற்கு இந்த சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு- அமித் ஷா.

    பாகிஸ்தான் நாட்டில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    கடவழியாக போதைப்பொருட்கள் கடத்துவதை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. குஜராத் எல்லையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இந்திய கடற்படை, இந்திய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிறிய வகை கப்பல் ஒன்று குஜராத் எல்லையில் செல்வதை கடற்படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த சிறிய வகை கப்பலை சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.

    அப்போது சுமார் 3,300 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கப்பலில் இருந்த ஐந்து பேர் இருந்தனர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. அவர்களையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

    சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான சம்பவம் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த வாரம் புனே, டெல்லியில் நடைபெற்ற மிகப்பெரிய சோதனையில் 2500 கோடி ரூபாய் அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஒரு வாரத்திற்குள் தற்போது மிகப்பெரிய அளவில் பொதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    "போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்குவதில் உறுதிப்பூண்டுள்ள நம்முடைய அரசின் உறுதிப்பாட்டிற்கு இந்த சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நேரத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை, கடற்படை, குஜராத் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பை வழங்குவதற்காக நிறுத்தப்பட்டு வருகின்றன.
    • கடந்த 24 மணி நேரத்தில் இந்திய கடற்படையின் 2-வது கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கை இதுவாகும்.

    புதுடெல்லி:

    இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி சோமாலியா கடற்கொள்ளையர்களும் கப்பல்களைக் கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பை வழங்குவதற்காக நிறுத்தப்பட்டு வருகின்றன.

    ஈரானை சேர்ந்த 17 பேர் கிழக்கு சோமாலியாவின் ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சோமாலியா கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலை சிறைபிடித்தனர். அங்கு ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் சுமித்ரா விரைந்து சென்று மீன்பிடி கப்பலில் இருந்த 17 ஈரானியர்களை பத்திரமாக மீட்டனர்.

    இந்நிலையில், இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா கொச்சி கடற்கரையில் இருந்து 800 மைல் தொலைவில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களுடன் கடத்தப்பட்ட ஈரான் கொடியுடன் பறந்த அல் நமீமி என்ற கப்பலை மீட்டது. இந்திய கடற்படையின் மரைன் கமாண்டோக்கள் படகிலிருந்த 19 ஊழியர்களை பத்திரமாக மீட்டனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்திய கடற்படையின் இரண்டாவது வெற்றிகரமான கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கை இதுவாகும்.

    • எண்ணெய் கப்பலில் இருந்தவர்கள் இந்திய கடற்படை கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர்.
    • இந்திய கடற்படை கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்புக்குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஏடன் வளைகுடா பகுதியில் இங்கிலாந்தின் மார்லின் லுவாண்டா எண்ணெய் கப்பலை இன்று ஹவுதி அமைப்பினர் தாக்கினர். ஏவுகணை மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எண்ணெய் கப்பலில் தீப்பற்றியது. அந்த எண்ணெய்க் கப்பலில் 22 இந்தியர்கள், வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என 23 பேர் உள்ளனர்.

    இதையடுத்து எண்ணெய் கப்பலில் இருந்தவர்கள் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர்.

    தொடர்ந்து, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்புக்குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர்.

    அரபிக்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய கடற்படை தனது போர்க் கப்பல்களை தயார்நிலையில் நிறுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் வணிக கப்பல் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
    • கப்பலை விட்டு கொள்ளையர்கள் வெளியேற ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படை எச்சரிக்கை விடுத்தது.

    புதுடெல்லி:

    ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் கடற்பகுதியில் லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்தக் கப்பலில் 15 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.

    இதையடுத்து, இந்திய கடற்படையினர் அதிரடியாக களத்தில் இறங்கி கப்பலில் சிக்கியுள்ளவர்களை கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சென்னை கப்பல் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை நெருங்கியது. கப்பலை விட்டு கொள்ளையர்கள் வெளியேற ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், இந்திய கடற்படை கமாண்டோக்கள் கடத்தப்பட்ட கப்பலுக்குள் நுழைந்து கடத்தப்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டனர். கொள்ளையர்கள் தப்பியோடினர். கப்பலில் இருந்த 15 இந்தியர்கள், 6 பிலிப்பைன்ச் நாட்டைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    முழுமையான சோதனைக்குப் பிறகு கப்பல் தற்போது புறப்பட்டது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

    • சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் வணிக கப்பல் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
    • கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

    மொகடிஷு:

    ஆப்பிரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் வணிக கப்பல் (எம்.வி. லிலா நார்போல்க்) கடத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.

    இது குறித்து தகவலறிந்த இந்திய கடற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கப்பலில் லைபீரியாவின் கொடி இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை, கடத்தப்பட்ட கப்பலை நோக்கி நிலைமையை சமாளிக்க நகர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    மேலும், இந்தியக் கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம் கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. அப்பகுதியில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த நிலைமையும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. நட்பு நாடுகளுடன் இணைந்து இப்பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • விடுவிக்கப்பட்ட மாலுமியை இந்திய போர்க்கப்பல் மீட்டு, சிகிச்சைக்காக ஓமனுக்கு அனுப்பி வைத்தது.
    • கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்கிறது என்றும் கடற்படை தெரிவித்தது.

    அரேபியன் கடல் பகுதியில் மால்டா நாட்டு கொடியுடன் சென்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். இதற்கிடையே கடத்தப்பட்ட கப்பலில் மாலுமி ஒருவர் காயம் அடைந்தார். அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டது. இதையடுத்து அந்த மாலுமியை கடற்கொள்ளையர்கள் விடுவித்தனர்.

    இதற்கு இந்திய கடற்படை போர்க்கப்பல் உதவியது. விடுவிக்கப்பட்ட மாலுமியை இந்திய போர்க்கப்பல் மீட்டு, சிகிச்சைக்காக ஓமனுக்கு அனுப்பி வைத்தது. கடத்தப்பட்ட கப்பல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அந்த கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்கிறது என்றும் கடற்படை தெரிவித்தது.

    ×