search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sambavarvadakarai"

    • விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கும் விழா சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரகட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார்.

    சாம்பவர் வடகரை:

    தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா, பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கும் விழா சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரகட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார். சுப்ரமணியன், ஹரிஹர செல்வன், பந்தல் சேர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஆனந்த் காசிராஜன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மதுரை தமிழ் இலக்கிய மன்ற தலைவர் அவனி மாடசாமி சிறப்புரை ஆற்றினார். தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார், வேலன் காபி காமராஜ், ஜெயச்சந்திரன், திருமலைசாமி, சேவியர் ராஜன், அம்மையப்பன் மற்றும் தேவைப்பட்டணம், ராயகிரி, கொட்டாக்குளம், குத்துக்கல்வலசை, பால மார்த்தாண்டபுரம், அய்யாபுரம், சுரண்டை, சிவகிரி, தெற்குசத்திரம், கடையநல்லூர், விந்தங்கோட்டை ஆகிய நாடார் உறவின்முறைகள் நிர்வாகிகள் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    முடிவில் தமிழ்நாடு நாடார் உறவின் உறவினர்கள் கூட்டமைப்பின் தலைவர் லூர்து நாடார் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முருகேசன், மோகன், மாரியப்பன், பரமசிவன், விஜயன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • மேலப்பாட்டாக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் கனகராஜ் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார்
    • கடையநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அருகே உள்ள மேலப்பாட்டாக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் அழகு(வயது 45). இவரது மகன் கனகராஜ்(22). இவர் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார்.

    நேற்று இரவு கனகராஜ் கடையநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கம்புளி சாலையில் வந்து கொண்டிந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் வயலுக்கு போடப்பட்டு இருந்த வேலிக்கான கல்லில் மோதியது.

    இந்த விபத்தில் கனகராஜின் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த சாம்பவர் வடகரை போலீசார் அங்கு விரைந்து சென்று உயிரிழந்த கனகராஜ் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் கருவி மற்றும் ரத்த அளவு பார்க்கும் கருவிகள் பேரூராட்சி தலைவி சீதாலட்சுமி முத்து வழங்கினார்.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்காக கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர் வடகரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் கருவி மற்றும் ரத்த அளவு பார்க்கும் கருவிகளை தனது சொந்த செலவில் பேரூராட்சி தலைவி சீதாலட்சுமி முத்து வழங்கினார்.

    அவர் கூறும் போது, முதல்-அமைச்சரின் மகத்தான திட்டங்களில் ஒன்றான மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வயதான முதியவர்கள் மற்றும் நீரழிவு நோயாளிகள் பயன்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிப் பெண்களின் தேவையற்ற அலைச்சலை குறைக்கும் பொருட்டு சாம்பவர் வடகரை பேரூராட்சி பொதுமக்களின் கோரிக்கையான அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தப் பரிசோதனை நிலையம் அமைக்கவும், கர்ப்பிணிப் பெண்களுக்காக கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியின் போது சாம்பவர் வடகரை பேரூர் செயலாளர் முத்து மற்றும் மருத்துவர் முத்து பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாம்பவர் வடகரை நகர நாம் தமிழர் கட்சி தலைவர் பத்ரகாளி பெருமாள் தலைமையில் ஒரு மனு கொடுக்கப்பட்டது.
    • சாம்பவர் வடகரை மேலரத வீதி 4-வது வார்டில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பள்ளி வகுப்பு மழை நீரில் மிதக்கிறது.

    சாம்பவர் வடகரை:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாம்பவர் வடகரை நகர நாம் தமிழர் கட்சி தலைவர் பத்ரகாளி பெருமாள் தலைமையில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    சாம்பவர்வடகரை மேலரத வீதி 4-வது வார்டில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பள்ளி வகுப்பு மழை நீரில் மிதக்கிறது. மேற்கூரை மழை நீரால் ஒழுகி வகுப்புகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். அதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள தரம் அற்ற பள்ளிகளை இடிக்க உத்தரவிட்டிருந்தனர். இப்பள்ளியில் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. அதுவும் இதுவரை கட்டித் தரப்படவில்லை.

    தற்போது உள்ள பள்ளியும் மழையால் நனைந்து மாணவர்களின் படிப்பு தடைப்படுகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் இடநெருக்கத்தாலும் அவதிப்படுகின்றனர். அதிக இட வசதியும் இல்லை.

    எனவே இப்பகுதி பள்ளி குழந்தைகளில் உயிர் சேதம் ஏதேனும் ஏற்படுவதற்கு முன்பு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேரூராட்சி கீழூரில், வடக்கே எம்.ஜி.ஆர். காலனியில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்காலணியில் வீட்டு கழிவுநீர் சாக்கடை செல்ல வாறுகால் வசதிகளை செய்து கொடுக்கவில்லை. அதனை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகவேல், துணைத்தலைவர் சுப்ரமணியன், பொய்கை மாரியப்பன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் வைத்தியநாதன் வரவேற்றார்.

    • சாம்பவர் வடகரை அருகே உள்ள தட்டான்குளம் மந்தை தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சுப்புலட்சுமி(வயது 60).
    • கடந்த சில நாட்களாக சுப்புலட்சுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர் வடகரை அருகே உள்ள தட்டான்குளம் மந்தை தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சுப்புலட்சுமி(வயது 60).

    சமீபத்தில் ராமகிருஷ்ணன் இறந்துவிட்டார். கடந்த சில நாட்களாக சுப்புலட்சுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பார்த்தும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் நேற்றிரவு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சாம்பவர் வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




    • இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
    • சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 29), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி சத்தியசெல்வி.

    அவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் இருப்பதால் மது குடித்துவிட்டு வந்து வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து எடுத்து குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

    உடனே சாம்பவர் வடகரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஸ்ரீ ராமசாமி கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது.
    • கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராமசாமி கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி பூஜை, கொடிபட்டம் அழைத்தல், கொடியேற்றுதல், தேர்கால் நாட்டுதல் நடைபெற்றது.

    10-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி 21 வகையான அபிஷேகம், வெள்ளி கவசம் சாத்தி அலங்கார பூஜைகள் நடந்தன. மதியம் 1.30 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு புறப்பட்டு 3 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடந்தது. இதையடுத்து 11-ம் திருவிழாவான இன்று (13-ந்தேதி) இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    இரவு 8 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூங்காவன சப்பரத்தில் சுவாமி உலா வருதல் நடக்கிறது. இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரியும், இரவு 1.30 மணிக்கு திருவிழா நிறைவு பூஜையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை கமிட்டியினர் செய்திருந்தனர்.

    சாம்பவர்வடகரையில் கிணற்றில் விழுந்த மயில் மீட்கப்பட்டது.
    சாம்பவர்வடகரை:

    கடையநல்லூர் தாலுகா சாம்பவர்வடகரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சாம்பவர்வடகரை துணை மின் நிலையம் கீழ்புறம் உள்ள விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து தத்தளித்தது.

    இதுகுறித்து சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன் சுரண்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    அங்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வம், நிலைய போக்குவரத்து அலுவலர் பாலச்சந்தர், சிறப்பு நிலை அலுவலர் ரவீந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சாமி, நான்முக ராஜன், சமுத்திர பாண்டி ஆகியோர் கிணற்றில் தவறி விழுந்த மயிலை உயிருடன் மீட்டு அருகில் உள்ள காட்டில் விட்டனர்.
    சாம்பவர் வடகரையில் நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள் படுத்து தூங்கிய 2 பெண்களிடம் நகையை பறித்து சென்றனர்.
    சுரண்டை:

    சுரண்டை அருகேயுள்ள சாம்பவர்வடகரை தேரடி தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது50). விவசாயி. இவரது மகள் ராமலட்சுமியை, அப்பகுதி லட்சுமிபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். இந்த நிலையில் ராமலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் கருப்பசாமி அவருக்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கு அழைத்து வந்திருந்தார். 

    இரவில் ராமலட்சுமி வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கினார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் திடீரென ராமலட்சுமி படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான். பின்னர் ராமலட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டான். சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த ராமலட்சுமி திருடன் திருடன் என கத்தினார். அதற்குள் மர்ம நபர் தப்பி சென்றுவிட்டான். 

    இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் அதே பகுதி புளியம்பட்டி தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி களஞ்சியம்(55) என்பவரது வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்தார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த களஞ்சியம் கழுத்தில் கிடந்த 25 கிராம் நகையை பறித்தான். திடுக்கிட்டு விழித்த களஞ்சியம் கொள்ளையனிடம்  நகை சிக்காமல் இருக்க போராடினார். 
    இதில் நகை அறுந்து பாதி நகை கொள்ளையனிடம் சிக்கியது. அந்த நகையுடன் மர்ம நபர் ஓட்டம் பிடித்தார். 

    அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் சாம்பவர் வடகரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்வெட்டை பயன்படுத்தி மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். இதுதொடர்பாக சாம்பவர் வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×