search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arumugasamy Commission"

    • நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந் தேதி சமர்ப்பித்தார்.
    • ‘ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவரது சாவில் மர்மம் உள்ளது என்று பலர் குற்றச்சாட்டு சுமத்தினர். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவருக்கு வழங்கப்பட்ட 75 நாட்கள் சிகிச்சைகளுக்கும், அவரது மரணம் குறித்த சந்தேகங்களுக்கும் விடைகாணும் வகையில் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அரசு 2017-ம் ஆண்டு அமைத்தது.

    அதன்படி, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந் தேதி சமர்ப்பித்தார்.

    அதில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக வி.கே.சசிகலா, டாக்டர் சிவக்குமார், சுகாதாரத்துறை முன்னாள் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வேலூர், திருச்சி தினமலர் பதிப்பாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், 'ஆணையம் அறிக்கை தாக்கல் செய்து பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நடவடிக்கை எடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளுக்கும், சி.பி.ஐ.க்கும் மனு கொடுத்தேன். இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.

    இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ ரீதியாக குற்றச்சாட்டுகள் உள்ளதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை ஆலோசித்து வருகிறது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு எந்த ஒப்புதலும் இதுவரை அரசு வழங்கவில்லை என்று கூறினார்.

    அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 'ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை சி.பி.ஐ., சட்டத்தின் அடிப்படையில் பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

    • ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதை எல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.
    • என்மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன் என்றார் சசிகலா.

    சென்னை:

    சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.

    என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது.

    புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள்.

    இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் புரட்சித்தலைவி அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள்.

    அக்கா உடல்நிலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை அப்பல்லோ மருத்துவமனையில் செய்து இருந்தோம். இதன் காரணமாகத்தான் அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அம்மா அவர்களை சிகிச்சை அளிக்க அங்கு கொண்டு சென்றோம் வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை.

    ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

    நம் அம்மா அவர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள் அவர்களின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை யாரும் இனிமேல் ஆதரிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

    • 2012 பொதுக்கூட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை தொடர்பு கொள்ள வேண்டாம் என கட்சி உறுப்பினர்களை ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
    • உறுதிமொழி கடிதத்தில் அடிப்படையில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

    * 2012 பொதுக்கூட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை தொடர்பு கொள்ள வேண்டாம் என கட்சி உறுப்பினர்களை ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

    * உறுதிமொழி கடிதத்தின் அடிப்படையில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

    * சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியாவின் சாட்சியத்தின்படி சசிகலாவிற்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே நல்லுறவு இல்லை.

    * சாட்சியங்கள் அளித்த தகவலின்படி, ஜெயலலிதா 4.12.2016 அன்று மாலை 3 மணியில் இருந்து 3.50 மணிக்குள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    * 5.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லை.
    • ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், ஜெயலலிதாவை வீட்டில் இருந்து மருத்துவமனையில் அனுமதித்த நபர்களிடம் அசாதாரணமான செயல் எதுவும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அறிக்கையில், சசிகலா, கே.எஸ்.சிவக்குமார், ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்பட்டு உள்ளது.

    ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் சசிகலா குற்றம் செய்தவராக முடிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.




    அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் ஸ்டூவர்ட் ரசல், ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ஒருவேளை அது நடந்திருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றியிருக்கலாம்.

    2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை, ஜெ-வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றுள்ளனர்.

    அதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதா இறந்த நாள் இறந்த நேரத்தில் முரண்பாடு உள்ளது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள்.

    2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிச. 4ம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
    • ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 14 முறை அவகாசம் கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 157 பேரிடம் விசாரணை நடத்தியது. ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.

    இதையடுத்து, இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியில் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை ஆவணங்களை ஆய்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது.

    அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணைம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது.

    இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், 5 ஆண்டு விசாரணைக்கு பின் அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறது.

    சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார்.

    3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் 14 முறை ஆணையத்திற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவ குழு அமைத்து விசாரணை.
    • கூடுதல் அவகாசம் கேட்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்தது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், சசிகலா உள்ளிட்ட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும்இன்னும் விசாரணை முடிவுக்கு வரவில்லை. இதனால் ஆணையத்தின் விசாரணை காலத்தை ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தர விட்டது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது.

    இந்தநிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவ குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த குழுவினர் பலரிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    இதன் இறுதி அறிக்கை இந்த வாரத்தில் தாக்கல் செய்ய எய்ம்ஸ் மருத்துவ குழு ஆணையத்திடம் தகவல் தெரிவித்து இருந்தது. இதையடுத்து கூடுதல் அவகாசம் கேட்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து முடிக்க மேலும் 3 வார காலம் அவகாசம் வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    இதனால் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியாவதில் தாமதமாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்கும் அப்போலோ தரப்பு வாதத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்கும் அப்போலோ தரப்பு வாதத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. 

    சுப்ரீம் கோர்ட்

    ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்ப்பது தற்போதைய ஆணையத்தின் செயல்பாடுகளை பாதிக்கும் எனக்கூறிய நீதிபதிகள்,  ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் மருத்துவக்குழு ஒன்றை நியமிக்க ஆட்சேபணை இல்லை எனவும் தெரிவித்தனர். 


    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #ArumugasamyCommission #opanneerselvam
    சென்னை:

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம்  சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வரும் 27-ஆம் தேதி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஏழு பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி அளித்துள்ளது.

    ஜெ.மரணம் குறித்து விசாரிக்க மேலும் 4 மாதம் அவகாசம் தந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. #ArumugasamyCommission #opanneerselvam
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்கள் என முதலில் நிர்ணயிக்கப்பட்டது. 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.



    அதன்படி கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.

    ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் ஆணையத்தின் காலம் முதலில் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் இரண்டு முறை தலா 4 மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி 2019, பிப்ரவரி 24ம் தேதிக்குள் விசாரணையை முடித்திருக்க வேண்டும். ஆனால், இந்த காலத்திற்குள் விசாரணை நிறைவடையவில்லை. எனவே, ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று, ஆணையத்தின் காலத்தை மேலும் 4 மாதத்திற்கு நீட்டித்து அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த அவகாசத்திற்குள் ஆணையம் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.  இதன்மூலம் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 4-வது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission
    ஜெயலலிதா சிகிச்சை பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்று ஐகோர்ட்டில் ஆணையத்தின் செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். #ArumugasamyCommission #Jayalalithaa
    சென்னை:

    அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் கடந்த வாரம் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கான சூழ்நிலை, வழங்கப்பட்ட சிகிச்சை, மரணத்திற்கான காரணம் ஆகியவற்றை கண்டறிவதற்காக ஆணையம் அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதா, போதுமானதா என்பது தொடர்பாக ஆணையம் விசாரிப்பதாகவும், அதற்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

    21 துறைகளை சார்ந்த மருத்துவ குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு தடை விதிக்கவும் அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை வைத்துள்ளது.

    இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் வழக்கு குறித்து ஆறுமுகசாமி ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

    இந்த வழக்கில் இன்று ஆணையத்தின் செயலாளர் கோமளா பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், முடியும் தருவாயில் உள்ள விசாரணை தொடர்வதை தடுக்கவே அப்பல்லோ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா மரணத்துக்கான காரணம் மட்டுமல்ல, கடைசி நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் சிகிச்சை, மரணத்திற்கான காரணம் என அனைத்தையும் விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும், மரணத்தில் சந்தேகம் தெரிவித்து தமிழகம் முழுக்க 302 புகார்கள் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 30 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதையும் விசாரணை ஆணைய செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

    ஆணையத்தை எதிர்த்த ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்குகளை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஆணையம், 147 சாட்சிகள், 56 மருத்துவர்கள், 22 துணை மருத்துவ துறையினர் இதுவரை சாட்சியமளித்துள்ளதையும் பதிலில் குறிப்பிட்டுள்ளனர்.

    அப்பல்லோ மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரிக்கும்போது நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், ஆணையத்தில் மருத்துவர்களால் கூறிய வார்த்தைகள் தவறாக குறிப்பிட்டுள்ளதாக கூறுவது தவறு என்றும், அவை தட்டச்சு தவறுகள் தான் என்றும் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

    ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவிற்கு, பதிலளிக்க அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து விசாரணை பிப்ரவரி 22-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. #ArumugasamyCommission #Jayalalithaa
    ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் உண்மையை மட்டுமே சொல்லப்போவதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPanneerselvam #ADMK #JayalalithaaDeath #Sasikala
    சென்னை:

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலா அவருக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்தார். எனக்கு தெரியாமல் அம்மாவுக்கு பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டது. இப்போதுதான் எனது கவனத்துக்கு வந்தது. எனவே மன்னிக்க வேண்டும் என்று அம்மாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    அம்மாவும் மன்னித்து சசிகலாவை மட்டும் தான் உதவியாளராக நியமித்திருக்கிறேன். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னால் நீக்கப்பட்ட மீதமுள்ள 15 பேரையும் நீக்கியது நீக்கியதுதான் என்று அம்மா அதற்கு பின்னால் அந்த கடிதம் பற்றி பொதுக்குழுவிலேயே வெளிப்படையாக பேசினார். இன்றுவரை அந்த நிலைதான் நீடிக்கிறது.

    நான் தர்மயுத்தம் ஆரம்பித்ததற்கு பின்னால் இந்த இயக்கத்தை, கட்சியையும், ஆட்சியையும் தினகரன் குடும்பம் தனது இரும்புப்பிடிக்குள் கொண்டுசென்று கபளீகரம் செய்த சூழல் ஏற்பட்டது.

    எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாகத்தான் ஆரம்பித்தார். அம்மாவும் இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக தொண்டர்கள் இயக்கமாகத்தான் வளர்த்தார். அம்மாவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் உள்பட ஒரு தனிப்பட்ட குடும்பம் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்தபோதுதான் நான் தர்மயுத்தம் தொடங்கினேன்.

    கேள்வி:- ஆறுமுகசாமி கமி‌ஷனில் சம்மன் அனுப்பி இருக்கிறார்களே? எப்போது ஆஜராக போகிறீர்கள்?

    பதில்:- ஜனவரி 23-ந்தேதி சம்மன் அனுப்பினார்கள். அன்று உலக முதலீட்டாளர்கள் தினம் இருந்ததால் நானே கடிதம் கொடுத்து மறுதேதியில் விசாரணை கமி‌ஷன் குறிப்பிடுகின்ற தேதியில் நான் ஆஜராகிறேன் என்று சொல்லி இருக்கிறேன். அவர்களும் சரி என்று சொல்லி இருக்கிறார்கள். எனக்கும் அதுதொடர்பாக தகவல் சொன்னார்கள்.



    அதற்கு பிறகும் 2, 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. அதற்கான காரணம் எனக்கு தெரியாது. தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்ற செய்திதான் எனக்கு வந்தது. விசாரணை கமி‌ஷன் மூலமாக எனக்கு தகவல் வந்து என்னை அழைத்தால் நான் சென்று உண்மை நிலையை நான் எடுத்துகொண்ட நிலையை அங்கே விரிவாக பேசுவேன். இப்போது பத்திரிகைகளில் வருகின்ற செய்திகளுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. அங்கே உண்மை நிலை தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை அண்ணா நகரில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam #ADMK #JayalalithaaDeath #Sasikala #TTVDinakaran
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala
    சென்னை :

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என இதுவரை 140-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. அவர்களின் வாக்குமூலத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது.

    சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வக்கீல் மூலம் தாக்கல் செய்துள்ளார். இதுவரை வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நடத்தி முடித்துள்ளார்.

    தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடித்துக்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையம் தரப்பு வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு சசிகலா தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பு வலியுறுத்தி உள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக பொதுக்கூட்டத்திலும், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியிலும் இவர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க தங்கள் தரப்புக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்த சசிகலா தரப்பு உறுதியாக உள்ளது.

    ஆணையம் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்காத பட்சத்தில் தங்கள் தரப்பில் அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்தை வலியுறுத்த உள்ளதாக சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறியதாவது:-



    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே சரியான முடிவு எடுக்கவில்லை என சிலர் அளித்த வாக்குமூலத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? என்பதை ரிச்சர்டு பீலே மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும். எனவே, ரிச்சர்டு பீலே கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டும்.

    கடந்த 9-ந் தேதி மதியம் 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் ரிச்சர்டு பீலேவிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்திருந்தது. ஆனால், திடீரென்று அவரிடம் விசாரணை நடத்தும் முடிவை ஆணையம் கைவிட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடித்துக்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையத்தின் வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளோம்.

    ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக கூறினார். ஆனால், இதை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தவில்லை. அப்படி இருக்கும்போது எந்த சூழ்நிலையில், எந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார் என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

    இதற்காக எடப்பாடி பழனிசாமியிடம் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் எங்கள் தரப்பில் அவரிடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சசிகலாவை பொறுத்தமட்டில் அவர் தரப்பு விளக்கங்களை அவ்வப்போது அவரது வக்கீல்கள் ஆணையத்துக்கு அளித்து வருவதால் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்த தேவையில்லை என்ற முடிவுக்கு ஆணையம் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையம் தாக்கல் செய்திருக்கும் மனுவின் மூலம் சசிலாவிடம் நேரடியாக விசாரணை நடத்தும் முடிவையும் ஆணையம் கைவிட்டுள்ளது தெரிகிறது.

    அதேவேளையில் அப்பல்லோ நிர்வாகமும், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்காமல் ஆணையம் தனது விசாரணையை முடிக்கக்கூடாது என்று மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால், பிப்ரவரி 24-ந் தேதிக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala 
    ×