என் மலர்
நீங்கள் தேடியது "Abhinandan"
- பாகிஸ்தான் ராணுவ மேஜர் அப்பாஸ் ஷா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- இவர் இந்திய ராணுவ வீரர் அபினந்தனை சிறை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத்:
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமாவில் 2019-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை விரட்டிச் சென்றபோது ராணுவ வீரர் அபினந்தன் வர்தமான் சென்ற மிக்-21 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது பாராசூட் மூலம் வெளியே குதித்த அபினந்தன், பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கினார். இதையடுத்து அவர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.
மத்திய அரசின் கடும் எச்சரிக்கை மற்றும் அழுத்தத்தினால் சிறைபிடிக்கப்பட்ட 58 மணிநேரத்தில் அபினந்தன் விடுவிக்கப்பட்டார். அவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அடாரி-வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பினார்.
அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கியபோது அவரை சிறைபிடித்தவர் பாகிஸ்தான் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா என்பவர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடமேற்கு பாகிஸ்தான் பகுதியான கைபர் பக்துன்கவா மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிபான்கள் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படையின் போர் விமானியான சென்னை வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் கடந்த பிப்ரவரி 27-ந் தேதி தனது விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுடப்பட்டதால் விமானத்தில் இருந்து வெளியேறி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் அவரை பாகிஸ்தான் கடந்த 1-ந் தேதி இந்தியாவிடம் ஒப்படைத்தது.
அவர் நாடு திரும்பியதும் டெல்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவ சோதனைகள், ராணுவ விளக்க நடவடிக்கைகளுக்கு பின்னர் 12 நாட்களுக்கு முன்பு 4 வாரங்கள் விடுமுறையில் வீட்டுக்கு செல்லும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. சென்னையில் உள்ள வீட்டுக்கு திரும்பிய அவருக்கு மருத்துவ குழு உடல் தகுதி பரிசோதனை நடத்தியது. பின்னர் தனது விடுமுறை முடியும் முன்பே ஸ்ரீநகரில் உள்ள தனது விமானப்படைத் தளத்துக்கு அவர் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.
இதில் பயங்கரவாதிகளின் மூன்று பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் இந்த தாக்குதலால் கடும் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் மறுநாள் (பிப்ரவரி 27) காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்றது. உடனே பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டி அடித்தது. அப்போது பாகிஸ்தான் எப்-16 வகை போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த சண்டையின் போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானம் பழுதடைந்தது. இதனால் அபிநந்தன் பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினார். காற்றின் வேகம் காரணமாக அவரது பாராசூட் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டது. இதை பயன்படுத்தி அவரை போர் கைதியாக பாகிஸ்தான் சிறை பிடித்தது.
அபிநந்தனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா எச்சரித்தது. அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளும் பாகிஸ்தானை எச்சரித்தன. இந்த அழுத்தம் காரணமாக மார்ச் 1-ந்தேதி அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அபிநந்தனுக்கு 1 மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பாக அவர் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே விரைவில் அபிநந்தனிடம் மருத்துவ தகுதி சோதனைகள் நடைபெற உள்ளது.
அவர் முழு தகுதியுடன் இருப்பதாக டாக்டர்கள் சான்றிதழ் அளிக்க வேண்டும். அதன் பிறகே அபிநந்தனை மீண்டும் போர் விமானியாக பணியில் இணைத்துக் கொள்வார்கள்.
இந்திய விமானப்படை பிரிவில் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளத்தில் விங் கமாண்டராக அபிநந்தன் பணியாற்றி வந்தார். மிக்-21 ரக விமானங்களை அவர் இயக்கி மீண்டும் அதே போர் விமானப்படை பிரிவில் அபிநந்தன் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. #Abhinandan
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அபினந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் பாகிஸ்தான் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அபினந்தன் விவகாரம் பற்றி ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய பிரதமரிடம் தொலைபேசியில் பேச தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே, அபினந்தன் விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Abhinandan #BringBackAbhinandan #GenevaConvention #PakForeignMinistry
பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தனின் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அபினந்தன் மீட்கப்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் பொது மக்களும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அபினந்தனின் தந்தை வர்த்தமானை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். வர்த்தமானும் முன்னாள் ராணுவ வீரர் தான். அவரிடம் கமல் கூறியதாவது:-
‘ஏற்கனவே மனோபலம் உள்ள உங்களை போன்ற போர் வீரர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை. இந்த நாடே உங்களுடன் இந்த இக்கட்டான சூழலில் துணை நிற்கிறது. உங்கள் மகன் இந்த நாட்டிற்கு செய்திருக்கும் இந்த பணி உன்னதமானது. உங்களைப்போல போர் தர்மம் அறிந்த, புரிந்த வீரர்கள் அங்கும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனவே அபினந்தன் நலமாக நாட்டிற்கும் வீட்டிற்கும் திரும்புவார்.
இது குறித்து நான் டுவிட்டரில் எதுவும் வெளியிடவில்லை. ஏனெனில் இது விவாதப் பொருளோ அதற்கான நேரமோ இல்லை. இது விவேகத்திற்கான நேரம். எனவே தான் நான் உங்களிடம் நேரடியாக பேசுவது முக்கியம் என்று நினைத்து உங்களை அழைத்தேன். எனது அழைப்பினை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. நாங்கள் அனைவரும் நிம்மதியாக தூங்குவதற்கு காரணமே நீங்கள் தான்.
ஆனால் இன்று இரவு நீங்கள் நிம்மதியாக தூங்க இயலாது என்பது வருந்தத்தக்க செய்தி. அபினந்தன் மீண்டும் பாதுகாப்பாகவும் நலமுடனும் நாடு திரும்பி வருவார் என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.’
இவ்வாறு கமல் ஆறுதல் கூறினார்.
தனக்கு ஆறுதல் கூறியதற்காக கமல்ஹாசனுக்கு வர்த்தமான் நன்றி தெரிவித்துள்ளார். #Abhinandan #KamalHaasan
இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடித்தபோது இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. இதில் ஒரு விமானம் பாகிஸ்தானுக்குள் விழுந்தது.
அதில் இருந்த தமிழகத்தை சேர்ந்த பைலட் அபினந்தன் பாகிஸ்தான் பிடியில் உள்ளார். நேற்று காலை 8.45 மணியளவில் இந்த விமானம் சுடப்பட்டது.
இந்திய எல்லையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிம்பர் மாவட்டம் ஹரோன் என்ற கிராமத்தில் விமானம் கீழே விழுந்தது. பைலட் அபினந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தார்.

எனவே அந்த இளைஞர்களிடம் இது பாகிஸ்தானா இந்தியாவா என்று கேட்டார். இது பாகிஸ்தான் என்று கூறிய அவர்கள் அபினந்தனை தாக்குவதற்கு முயன்றனர். எதிரிகள் மத்தியில் நின்றாலும் நெஞ்சுறுதியுடன் அவர் செயல்பட்டார்.
விமான பைலட்டுகள் எப்போதும் கைத்துப்பாக்கி வைத்திருப்பது வழக்கம். எனவே அந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். அதையும் மீறி இளைஞர்கள் கற்களால் அவரை தாக்கினார்கள். இருந்தபோதும் வீரத்தை கைவிடாத அபினந்தன் துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டி எச்சரித்தார்.
பின்னர் அங்கிருந்து பின்னோக்கி சென்ற அபினந்தன் தன்னிடம் இருந்த ஆவணங்களை அருகில் இருந்த குட்டையில் வீசி அழித்தார். இதற்குள் ஏராளமான இளைஞர்கள் அங்கு திரண்டு விட்டனர். அவர்கள் அபினந்தனை பிடித்துக் கொண்டார்கள்.
பின்னர் அவரை அங்கிருந்து அழைத்து சென்று ஹாலில்சவுத் என்ற இடத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு ராணுவ வீரர்களிடம் ஒப்படைத்தனர். #Abhinandan
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபினந்தன் சென்னையை சேர்ந்தவர். சேலையூர் அருகே மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர் பகுதியில் அவரது தந்தை ஓய்வுபெற்ற விமானப்படை ஏர்மார்ஷல் வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
அபினந்தனின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் டெல்லியில் உள்ளனர். அபினந்தனுக்கு ஒரு சகோதரி உள்ளார். அபினந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் பரவியதால் மாடம்பாக்கம் பகுதியே சோகத்தில் மூழ்கியது.
அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் அங்கு வரத்தொடங்கினர். முக்கியமானவர்களை தவிர பொதுமக்கள், செய்தியாளர்கள் என யாரையும் அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை.
அபினந்தனின் பெற்றோரை சந்திக்க வந்த அவரது உறவினர் குந்தநாதன் கூறியதாவது:-
வரதமான் என்னுடைய மாமா. அவரது மகன் தான் அபினந்தன். இவர்களது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், திருப்பணாமுர். தற்போது மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். அபினந்தனுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
அபினந்தன் குடும்பத்துடன் டெல்லியில் தான் வசித்து வந்தார். அவரை மத்திய அரசு பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே கோரிக்கையையே மற்ற உறவினர்களும் வலியுறுத்தினர்.
பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா ஆகியோர் அபினந்தன் பெற்றோரை சந்தித்து பேசினர். மேலும் இந்திய விமானப்படை அதிகாரிகள் அபினந்தன் வீட்டிற்கு வந்து அவரது பெற்றோரை சந்தித்து விட்டு சென்றனர். மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனும் அவர்களை சந்தித்தார்.
அபினந்தனின் பெற்றோர் டெல்லி புறப்பட்டு செல்வார்கள் என கூறப்படுகிறது. இந்தநிலையில் அபினந்தன் பெற்றோர் வசிக்கும் குடியிருப்பில் கதவுகள் மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Abhinandan
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில் இந்திய விமானப் படை நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது.
பலாகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் இருந்த 3 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் தாக்குதலால் கடும் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று காலை 10 மணி அளவில் இந்தியா மீது திடீர் வான் தாக்குதலில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் போர் விமானங்கள் காஷ்மீரில் உள்ள ரஜோரி, பூஞ்ச் பகுதிகளில் ஊடுருவியது. மொத்தம் 3 பாகிஸ்தான் போர் விமானங்கள் எல்லை தாண்டி வந்தன.
இந்திய ராணுவ நிலைகள் மீது குறிப்பாக ரஜோரியில் உள்ள ராணுவ தளத்தை தகர்க்க பாகிஸ்தான் போர் விமானங்கள் திட்டமிட்டன. ஆனால் இந்திய விமானப்படை பாகிஸ்தான் விமானங்களை வானில் வழிமறித்து தாக்குதல் நடத்தியது. இதனால் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த முடியாமல் பாகிஸ்தான் போர் விமானங்கள் திரும்பி சென்றன.
போகும்போது வெட்ட வெளியில் 4 இடங்களில் குண்டுகளை போட்டுவிட்டு தப்பி சென்றன.
அந்த விமானங்களை இந்திய போர் விமானங்கள் துரத்தி சென்று தாக்குதல் நடத்தின. அதில் பாகிஸ்தான் விமானப்படையின் எப்.16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானும் பதிலடி தாக்குதல் நடத்தியதில் இந்தியாவின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தானுக்குள் தரையில் விழுந்தது.
அந்த விமானத்தில் இருந்த விமானியின் கதி என்ன ஆயிற்று என்பது முதலில் தெரியாமல் இருந்தது. பிறகு அந்த விமானியை கைது செய்து இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்தது. இதனால் பரபரப்பு நிலவியது.
நேற்று மதியம் அந்த விமானியின் வீடியோ காட்சிகளை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. அப்போது அந்த விமானி அபினந்தன் என்று தெரிய வந்தது. இவர் இந்திய விமானப் படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார்.
அபினந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள வெம்பாக்கத்தை அடுத்த திருப்பனமூர் அவரது பூர்வீகம் ஆகும்.
சென்னையில் பிறந்து வளர்ந்த அபினந்தன் தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சி பெற்று இந்திய விமானப்படையில் சேர்ந்தார். இவரது பெற்றோர் மாடம்பாக்கத்தில் உள்ள விமானப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.
அபினந்தன் தனது மனைவியுடன் டெல்லி விமானப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல பணிக்கு சென்ற அவர் பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவியதும் எதிர் தாக்குதலுக்கு தயாரானார்.

முதலில் அபினந்தன் தாக்கப்பட்டு முகத்தில் ரத்தக் கறையுடன் அழைத்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியானது. இதற்கு இந்திய அரசு தரப்பில் இருந்து கடும் எச்சரிக்கை விடப்பட்டது. போர் கைதியாக பிடிக்கப்படுபவர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று வெளியுறவுத்துறை மற்றும் தூதரகங்கள் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து நேற்று பிற்பகல் அபினந்தன் டீ குடித்தபடி பாகிஸ்தான் ராணுவ அதிகாரியுடன் பேசும் வீடியோ ஒன்றை பாகிஸ்தான் அரசு வெளியிட்டது. இதன்மூலம் அபினந்தனை பாகிஸ்தான் கவுரவமாக நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் அபினந்தனை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு நேற்று மதியமே தொடங்கி விட்டது. தூதரக அளவில் முதல் கட்டமாக பேசப்பட்டது. புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் மத்திய அரசு சார்பில் பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டன.
மேலும் பயங்கரவாதிகளை ஒழிக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது என்ற விவரமும் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றை ஏற்றுக்கொண்டு அபினந்தனை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
அபினந்தனை உடனே விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் எத்தகைய முடிவு எடுக்கும் என்பதில் கேள்விக்குறிகள் எழுந்துள்ளன. அபினந்தன் விஷயத்தில் ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்து இருப்பதால் இனி பாகிஸ்தான் நிதானமாக நடந்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து அபினந்தனை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா வலியுறுத்தி உள்ளது. மேலும் அபினந்தனுக்கு எந்த விதத்திலும் சிறு துன்புறுத்தல் கூட கொடுக்கக் கூடாது என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ வீரர் நச்சிகேட்டா கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது பாகிஸ்தானிடம் சிக்கினார். அவர் 8 நாட்களுக்கு பிறகு பத்திரமாக இந்தியாவுக்கு மீட்கப்பட்டார். அவரை போல அபினந்தனையும் மீட்க மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி அபினந்தன் விஷயத்தில் இந்தியா 2 விதமான நிலைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
1. ஜெனீவா ஒப்பந்தம் மற்றும் சர்வதேவ மனிதாபிமான சட்ட விதிகளை சுட்டிக்காட்டி அபினந்தனை விடுவிக்க சொல்வது. இந்த அடிப்படையில்தான் பாகிஸ்தானிடம் இந்தியா சில தகவல்களை அளித்துள்ளது.
அந்த தகவல்கள் அடிப்படையில் பாகிஸ்தான் என்ன செய்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்த்து அதன் பிறகு நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்யலாம்.
2. பேச்சுவார்த்தை மற்றும் சட்ட விதிகளை கடைபிடிக்காமல் மீண்டும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா கடுமையாக தாக்கி அதன் மூலம் அச்சுறுத்தி பாகிஸ்தானை பணிய வைக்கலாம்.
இந்த 2 விதமான நிலைப்பாடுகளில் இந்தியா முதல் நிலையை கடைபிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
அபினந்தனை எவ்வளவு விரைவில் மீட்க முடியுமோ அவ்வளவு விரைவில் மீட்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இதை கருத்தில் கொண்டு இன்று காலை பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேரில் சென்று மனு கொடுத்தார்.
அதோடு வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் போர் விமானி அபினந்தனை உடனே விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். ஆனால் பாகிஸ்தான் உடனடியாக அபினந்தனை விடுவிக்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
அபினந்தனை பிணை கைதி போல வைத்துக் கொண்டு இந்தியாவை சமரசம் செய்யவோ அல்லது பேச்சுவார்த்தைக்கு அழைக்கவோ பாகிஸ்தான் முயற்சி செய்யும் என்று கூறப்படுகிறது. எனவே தங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் வரை அபினந்தனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பாகிஸ்தான் விரும்பும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இத்தகைய சூழ்நிலை உருவாகும்பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனீவா ஒப்பந்தத்தில் போர் கைதிகளாக பிடிக்கப்படும் ராணுவ வீரர்களை எத்தனை நாட்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற உட்பிரிவுகள் எதுவும் இல்லை.
என்றாலும் இந்தியா- பாகிஸ்தான் இடையே இதுவரை போர் கைதிகள் அனைவரும் அதிக நாட்கள் இல்லாமல் மிக குறுகிய காலத்துக்குள் திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். அந்த அடிப்படையில் அபினந்தனும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசு அபினந்தன் விஷயத்தில் அனைத்து வழிகளிலும் தீவிர அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் 10 நாட்களுக்குள் அபினந்தனை மீட்டு விட முடியும் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் தற்போதைய போர் பதட்டம் காரணமாக அபினந்தனை விடுவிப்பதில் பாகிஸ்தான் சற்று காலதாமதம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அபினந்தன் பாகிஸ்தானில் பிடிபட்ட பிறகு நடந்து வரும் நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேச்சு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதற்கேற்ப அபினந்தனை மீட்க முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்” என்றார்.
எனவே அபினந்தன் விரைவில் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. #Abhinandan #BringBackAbhinandan #GenevaConvention

பாகிஸ்தான் எல்லையில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பிடித்து வைத்திருப்பதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று வெளியிட்ட தன்னுடைய டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு மனஉறுதி மற்றும் தைரியத்தை வழங்கவும் கடவுளிடம் நான் வேண்டி கொள்கிறேன். இந்த நாடும், நாட்டு மக்களும் அவருக்கு எப்போதும் துணை நிற்பார்கள் என்று கூறியுள்ளார்.







