search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aavin milk"

    • தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி அச்சிட்டு வெளியிடப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.
    • பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்து செய்திகளை அச்சிட்டு வினியோகித்து வருகிறது.

    சென்னை:

    ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி அச்சிட்டு வெளியிடப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்து செய்திகளை அச்சிட்டு வினியோகித்து வருகிறது. இந்த முறையானது பல்வேறு ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்விழாக்கள் அனைத்தும் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளவையாகும். தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்து செய்தி இதுவரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டதில்லை. எனவே இந்த வருடமும் அச்சிடப்படவில்லை என்பதை ஆவின் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆவின் பால் நிறுவனமும், தமிழக அரசும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி அளித்துவிட்டு, அதனை ஈடுகட்ட ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக்கூடாது.
    • பால் விற்பனை விலையை மீண்டும் உயர்த்தினால் பால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    சென்னை :

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆவின் பால் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி இருக்கிறது. இதனால் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.

    ஆவின் பால் நிறுவனமும், தமிழக அரசும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி அளித்துவிட்டு, அதனை ஈடுகட்ட ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக்கூடாது. ஏற்கனவே ஆவின் பால் நிறுவனம் பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆகவே பால் விற்பனை விலையை மீண்டும் உயர்த்தினால் பால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    ஆவின் நிறுவனம் மற்ற மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்வதை கைவிட்டு, நமது மாநில பால் உற்பத்தியாளர்களிடமே பால் கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கும் பயன் கிடைக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் கொள்முதல் அளவும் உயர்ந்து, நுகர்வோரின் பால் தட்டுப்பாடும் விலகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44ல் இருந்து ரூ.47-ஆக உயர்வு.
    • கொள்முதல் விலை உயர்வு மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    * ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வானது வருகிற 18-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    * பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து ரூ.38-ஆக உயர்வு.

    * எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44ல் இருந்து ரூ.47-ஆக உயர்வு.

    * கொள்முதல் விலை உயர்வு மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அத்தியாவசிய தேவையான பாலை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஆவின் பால் அதிக விலைக்கு விற்பது குறித்த புகாரை தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை:

    'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடியாத நிலையில், பல இடங்களில் போக்குவரத்து முடங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை யில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெரும் இன்னலை சந்தித்தனர். சென்னையில் வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் பகுதி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, அம்பத்தூர், மயிலாப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டது.

    சென்னையில் ஆவின் பாலை பொருத்தவரை 14.75 லட்சம் லிட்டர் பால் தினசரி வினியோகம் செய்யப்படுவது வழக்கம்.

    ஆனால் தொடர் மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று காலையில் வினியோகம் மிகக் குறைவாகவே இருந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே பால் வினியோகம் செய்யப்பட்டது. இந்த பாலை வாங்க பொதுமக்கள் நெடுந்தொலைவு வரை வரிசையில் காத்திருந்தனர். ஆவின் பால் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட் வினியோகமும் பாதிக்கப்பட்டது.

    இது குறித்து சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறும்போது, "ஆவின் பால் மட்டுமின்றி தனியார் பால் பாக்கெட்டும் கிடைக்கவில்லை. சில இடங்களில் அரை லிட்டர் பால் 100 ரூபாய்க்கு விற்றனர். மக்களின் தேவையை தெரிந்து கொண்டு 4 மடங்கு விலையை உயர்த்தி விற்றனர்.

    எனவே, அத்தியாவசிய தேவையான பாலை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

    ஆவின் பால் வினியோகம் செய்யக்கூடிய லாரி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகனங்களை நேற்று இயக்கவில்லை. இதனால் மாநகர பஸ்கள் மூலம் ஆவின் பால் மாதவரம் பகுதியில் வினியோகம் செய்யப்பட்டது.

    ஆவின் பால் இன்றும் பல இடங்களில் தாமதமாக சப்ளை செய்யப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் பால் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்து நின்றனர்.

    இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறும்போது, "அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் மழைநீர் பாதிப்பு ஏற்பட்டது. இது தவிர மழையால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால் பால் விநியோகம் பாதித்தது. இன்று ஆவின் வினியோகம் சீராகி விடும்" என்றனர்.

    ஆவின் பால் அதிக விலைக்கு விற்பது குறித்த புகாரை தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    • தி.மு.க. அரசின் இந்தச் செயல் ஏழை எளிய மக்களை ஏமாற்றும் செயல்.
    • பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை ரத்து என்ற முடிவினை கைவிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டை விட ஒரு சதவீதம் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட ஊதா நிற பால் பாக்கெட்டின் விலையினை பச்சை நிற பால் பாக்கெட் விலைக்கு இணையாக விற்பனை செய்வது என்பது மறைமுகமாக பாலின் விலையை உயர்த்துவதற்குச் சமம்.

    இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்ட வாக்குறுதியை பறிக்கும் நடவடிக்கை. தி.மு.க. அரசின் இந்தச் செயல் ஏழை எளிய மக்களை ஏமாற்றும் செயல். கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்குமானால், பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை ரத்து என்ற முடிவினை கைவிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆவின் நிறுவனத்தில் 4 வகையான பால் விற்பனையில் உள்ளது.
    • சந்தையில் உள்ள மற்ற பால் நிறுவனங்களின் விலையை விட குறைவாகவே ஆவின் விற்பனை செய்கிறது.

    சென்னை:

    பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    ஆவின் நிறுவனம் மூன்றடுக்கு நிருவாக அமைப்பு முறையை கொண்டு விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலை நியாயமான மற்றும் நிலையான விலை கொடுத்து வாங்குவதையும், வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மற்றும் பால்

    பொருட்களை குறைந்த விலையில் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனத்தில் 4 வகையான பால் விற்பனையில் உள்ளது.

    1. இந்திய நாட்டின் பசு மாடுகளின் பாலில் சராசரியாக 3.3% முதல் 4.3% கொழுப்பு சத்தும் 8.0% முதல் 8.5% இதர சத்துக்கள் அடங்கியிருக்கும். வாடிக்கையாளர்களுக்கு தரமான பசும்பாலின் தரத்தில் வழங்கும் நோக்கத்தோடு 3.5% கொழுப்பு மற்றும் 8.5%

    இதர சத்துக்கள் அடங்கிய பாலுடன் வைட்டமின் ஏ மற்றும் டி தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு செறிவூட்டி ஊதா நிற பாக்கெட்டுகளில் ஆவின் டிலைட் என்ற பெயரில் லிட்டர் ஒன்றை 44 ரூபாய்க்கு வழங்கி வருகிறோம். சந்தை மதிப்பை

    ஒப்பிட்டால் பல நிறுவனங்கள் இப்பாலை விற்கும் விலையை விட இது மிக மிக குறைந்த விலையாகும். இந்த பால் பசும்பாலின் முழுமையான தரத்தில் வழங்கப்படுவதால் கொழுப்பு கூடுதலாக சேர்த்த பச்சை நிற பாலைவிட சராசரி மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. எனவே இந்த வகை பாலை முன்னிலைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    2. சில வாடிக்கையாளர்கள், குறிப்பாக மருத்துவர்களின் ஆலோசனை பெற்றவர்கள், தீவிர உடற்பயிற்சி செய்கின்றவர்கள் கொழுப்பு சத்து குறைந்த பாலை விரும்புவார்கள். அதற்காக கொழுப்புச்சத்து குறைக்கப்பட்ட சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்று 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இது ஒப்பீட்டளவில் சந்தையில் உள்ள மற்ற பால் நிறுவனங்களின் விலையை விட 16 ரூபாய்க்கும் குறைவாக ஆவின் விற்பனை செய்கிறது.

    3. வளரும் குழந்தைகள், குறிப்பாக கொழுப்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் அதிக கொழுப்பு உள்ள பாலை விரும்பினால் அவர்களுக்காக நிறை கொழுப்பு பால் 6% கொழுப்பு மற்றும் 9.0 % இதர சத்துக்கள் அடங்கிய பால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் லிட்டர் ஒன்று 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒப்பீட்டளவில் சந்தையில் உள்ள மற்ற பால் நிறுவனங்களின் விலையை விட 14 ரூபாய்க்கும் குறைவாக ஆவின் விற்பனை செய்கிறது.

     

    4. ஆவின் நீண்ட காலமாக வழங்கி வரும் பச்சை நிற நிலைப்படுத்தப்பட்ட பாலை பொருத்தவரை பசும்பாலில் கூடுதலாக 1% கொழுப்பு சேர்த்து பதப்படுத்தி விற்கப்பட்டு வருகிறது. இந்த கொழுப்பு இன்றைய வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேவையற்ற ஒன்றாகும். அதிலும் பல வாடிக்கையாளர்கள் கூடுதலாக கொழுப்பு அல்லது புரதம் உள்ளிட்ட

    திடப்பொருட்கள் சேர்ப்பதை விரும்பவில்லை எனவேதான் Aavin for Healthy TN என்ற அடிப்படையில் அதன் விற்பனையை மேலும் ஊக்குவிக்காமல், அதற்கு பதிலாக ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம்.

    இந்த நடவடிக்கைகள் எதுவும் இலாப நோக்கிலோ அல்லது வியாபார உத்தியாகவோ கையாளப்படவில்லை, இன்றைய சூழலில் பசும்பாலின் தரம் எந்த விதத்திலும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படாமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் மக்களின் ஆரோக்கியத்தை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு வரும் முயற்சியாகும் என தெரிவித்துள்ளார்.

    • முறைகேடாக, பாலை ஏற்றிச் செல்ல வந்த போது பிடிப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
    • முறைகேட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த பால் மொத்த வினியோகஸ்தரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் ஆவின் பால் 15 லட்சம் லிட்டர் தினமும் வினியோகம் செய்யப்படுகிறது. மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் முறைகேடாக பால் வாகனம் ஒன்று பாலை ஏற்றிச் செல்ல வந்தபோது அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் வேறு எண் கொண்ட வாகனத்தை கொண்டு வந்ததையொட்டி பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது.

    அந்த பால் வாகனம் மூலம் தினமும் அண்ணா நகர், அயனாவரம் உள்ளிட்ட சில பகுதிகளில் பால் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. முறைகேடாக, பாலை ஏற்றிச் செல்ல வந்த போது பிடிப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் இன்று ஆவின் பால் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. காலை 6 மணிக்கு முன் பால் வினியோகிக்கப் பட வேண்டிய இடங்களில் வாகனம் வரவில்லை. பால் முகவர்கள், மளிகை, பெட்டிக் கடைக்காரர்கள் பால் கிடைக்காமல் அவதிப்பட்டனர். காலையில் பால் கிடைக்காமல் பொது மக்களும் சிரமப்பட்டனர்.

    பின்னர் தாமதமாக பால் வினியோகம் செய்யப்பட்டது. அதன்பிறகு முகவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு பால் பாக்கெட்டுகளை கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    அம்பத்தூரில் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் பால் வினியோகம் இன்று பாதிக்கப்பட்டது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த பால் மொத்த வினியோகஸ்தரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல சமயங்களில் பால் சப்ளை செய்யும் வாகனங்களை திருப்பி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பால் வாங்க வரும் பொதுமக்கள் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு தனியார் பால் வாங்கி சென்று விடுகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் ஆவின் பால் விநியோகம் தாமதமாவது தொடர்கதையாகி வருகிறது. அண்ணாநகர் பகுதியில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் காலை 2 மணி முதல் 3 மணிக்குள் பால் சப்ளையாகிவிடும்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆவின் பால் தாமதமாக வருவதாக முகவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். பல சமயங்களில் பால் சப்ளை செய்யும் வாகனங்களை திருப்பி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மதுரை சாத்தமங்கலம் பகுதியில் இன்று காலை 7 மணி வரை ஆவின் பால் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த முகவர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 7 மணி வரை பால் வாகனம் வரவில்லை. அடிக்கடி தாமதமாக வருகிறது. பால் வாங்க வரும் பொதுமக்கள் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு தனியார் பால் வாங்கி சென்று விடுகின்றனர். இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

    இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டால், ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அனைத்து பகுதிகளும் தனியார் பால் மட்டும் வந்து விடுகிறது. பிற மாவட்டங்களில் இருந்து வரும் தனியார் பால்கள் கூட சரியான நேரத்தில் மதுரைக்குள் சப்ளை செய்யப்படுகிறது.

    ஆனால் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஆவின் பாலை சப்ளை செய்வதில் தாமதம் ஏற்படுவது ஏன்? என தெரியவில்லை. நிர்வாகத்திடம் பல முறை கூறியும், முழு அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து ஆவின் பால் சரியான நேரத்தில் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துடன் ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பாக்கெட் நிறுத்தப்பட்டு புதிய நிற பாக்கெட் வினியோகிக்கப்படுவதாக பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் குற்றம் சாட்டினார்.

    சென்னை:

    ஆவின் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டத்தால் செறிவூட்டப்பட்ட கொழுப்பு சத்து நிறைந்த பால் வகைகளை மாற்றி வேறு பெயரில் வினியோகம் செய்து வருகிறது.

    ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துடன் ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை ஒரு சதவீத கொழுப்பு சத்தை நீக்கி 3.5 சதவீதமாக ஆவின் டிலைட் (ஊதா நிறம்) என்ற பெயரில் விற்பனை செய்கிறது.

    இதே போல ஆரஞ்சு பால் பாக்கெட்டில் 6 சதவீதமாக இருந்த கொழுப்பு சத்தை 5 சதவீதமாக குறைத்து மஞ்சள் நிற பாக்கெட்டில் ஆவின் கோல்டு என வினியோகிக்கப்படுகிறது.

    தற்போது வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பாக்கெட் நிறுத்தப்பட்டு புதிய நிற பாக்கெட் வினியோகிக்கப்படுவதாக பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி குற்றம் சாட்டினார்.

    பால் பாக்கெட் விலையை உயர்த்துவதற்கு பதிலாக மறைமுகமாக அதன் கொழுப்பு சத்து அளவை குறைத்து நஷ்டத்தை ஈடு செய்வதாக அவர் கூறினார். சென்னையில் பச்சை பாக்கெட் 50 சதவீதம் குறைக்கப்பட்டு ஊதா நிற பாக்கெட் வினியோகிக்கப்படுவதாகவும் அடுத்த மாதம் முழுமையாக நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும் கார்டுதாரர்களுக்கு அடுத்த மாதம் முதல் பச்சை பாக்கெட்டிற்கு பதிலாக ஊதா வழங்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

    • மாதவரம், கொடுங்கையூர், மூலக்கடை பகுதியில் வினியோகம் செய்யப்பட்ட பாலில் அளவு குறைவாக இருப்பதாக பால் முகவர்கள் கண்டுபிடித்தனர்.
    • அரை லிட்டர் பாக்கெட்டில் 130 கிராம் எடை குறைவுடன் இருந்தது.

    சென்னை:

    சென்னையில் ஒரு சில பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்ட ஆவின் 'டிலைட்' ஊதா நிற பாக்கெட்டுகளில் 100 கிராம் எடை குறைவாக இருந்து உள்ளது. 520 கிராம் இருக்க வேண்டிய பால் பாக்கெட்டின் எடை 415 கிராம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    மாதவரம், கொடுங்கையூர், மூலக்கடை பகுதியில் வினியோகம் செய்யப்பட்ட பாலில் அளவு குறைவாக இருப்பதாக பால் முகவர்கள் கண்டுபிடித்தனர்.

    அரை லிட்டர் பாக்கெட்டில் 130 கிராம் எடை குறைவுடன் இருந்தது. பால் அளவை குறைப்பதற்கான காரணம் என்ன? எந்த ஒரு பொருளையும் அதில் குறிப்பிட்ட அளவில்தான் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் ஆவின் பால் பாக்கெட்டில் எதற்காக பால் அளவை குறைக்கிறார்கள். இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அதனை விற்பனை செய்யும் மளிகைக்கடை, பெட்டிக்கடைகளில் தகராறு செய்கின்றனர். ஆவின் விற்பனை மையங்களிலும் எடை குறைந்த பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க மாநில தலைவர் பொன்னுசாமி கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை, கோவை, வேலூர் மாவட்டங்களில் எடை அளவு குறைவான ஆவின் பால், தயிர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்று ஊதா நிற பால் பாக்கெட்டுகளில் பால் அளவு குறைக்கப்பட்டு வினியோகம் செய்து உள்ளதாக புகார் வந்துள்ளது. எடை அளவை குறைத்து மோசடி செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

    • ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள விலைக்குத்தான் விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும்.
    • கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வருகை தந்தார். தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது ஆவின் நிர்வாகம் எந்த ஒளிவு மறைவின்றி வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை தொடர்ந்து சரி செய்து வருகிறோம். குறிப்பாக மார்க்கெட்டிங் பிரச்சனைகளை சீர் செய்ததன் காரணமாக தற்போது 8 சதவீத விற்பனை அதிகரித்து உள்ளது.

    இந்த மாதம் கணக்கிட்டு பார்த்தால் மேலும் கூடுதலாக வாய்ப்பு உள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள விலைக்குத்தான் விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி விற்பனையாளர்கள் விற்பனை செய்தால் பொதுமக்கள் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.

    தமிழகத்தை பொறுத்தவரை ஆவின் மூலம் கையாளப்படுகின்ற பால் மற்றும் பால் பொருட்கள் கையாளுகின்ற அளவினை பெருக்குவதற்காக பல்வேறு பகுதிகளில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    எனவே ஆவின் கொள்முதலை கையாள்வதற்கான திட்டங்கள் தொலைநோக்கு பார்வையோடு மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களுக்கு பல லட்சக்கணக்கான கறவை மாடுகள் புதிதாக வாங்குவதற்கு குறைந்த வட்டியில் வங்கி கடனுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களுடைய தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

    தற்பொழுது பட்டர், ஐஸ்கிரீம், பால்கோவா போன்ற பல்வேறு பொருட்கள் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாயிகளுக்கு தேவையான கடன் உதவி மானியங்களில் வங்கி மூலம் குறைந்த வட்டிக்கு கடனும் பெற்றுத் தந்து வருகிறோம். நாட்டு இன மாடுகள் அழிந்து கொண்டு இருக்கிறது.

    இதனையடுத்து நாட்டு இன மாடுகளை விவசாயிகளுக்கு கண்டறிந்து கொடுக்க வேண்டி உள்ளது. இது எல்லாம் எங்கள் திட்டங்களில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசிடம் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
    • ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    சென்னை:

    பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து தமிழக அரசிடம் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இதன்படி அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை அளிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×