search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் அடிக்கடி தாமதமாக சப்ளை ஆவதால் ஆவின் பால் விற்பனை பாதிப்பு
    X

    மதுரையில் அடிக்கடி தாமதமாக சப்ளை ஆவதால் ஆவின் பால் விற்பனை பாதிப்பு

    • தினமும் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 392 லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மதுரை மக்களுக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது
    • ஆவின் தரப்பில் விசாரித்தபோது அங்கு பால் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், வாகனங்களில் அனுப்பி வைக்கவும் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    மதுரை:

    மதுரையில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக மதுரையில் 47 ஆவின் பாலகங்கள், 390 டெப்போக்கள் மூலம் இந்த ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படு கின்றன.

    இதற்காக மதுரை கே.கே. நகரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால் பாக்கெட்டுகளை வாகனங்களில் ஏற்றி சம்பந்தப்பட்ட பால் பூத்துகள் மற்றும் ஆவின் பாலகங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

    ஆனால் கடந்த சில வாரங்களாக ஆவின் பால் விநியோகத்தில் அடிக்கடி காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பால் விநியோக முகவர்கள் ஆவின் நிறுவனத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

    பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் முற்றுகையிட்டு தாமதம் இன்றி பால் விநியோகத்தை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

    இன்று காலை வழக்கம் போல 5 மணிக்கு சப்ளை செய்ய வேண்டிய ஆவின் பால் பாக்கெட் சுமார் 2 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு மேல் பால் பூத்துகளுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட முகவர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்க தயக்கம் காட்டினர். காரணம் 7 மணிக்கு மேல் பால் பாக்கெட் விற்பனை வழக்கம் போல இருக்காது என்பதால் முகவர்கள் ஆவின் ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    தினமும் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 392 லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மதுரை மக்களுக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காலதாமதம் காரணமாக இந்த விற்பனை பெருமளவில் சரிவை சந்தித்துள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஆவின் தரப்பில் விசாரித்தபோது அங்கு பால் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், வாகனங்களில் அனுப்பி வைக்கவும் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்த ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வராதாலும், பலர் விடுமுறையில் இருப்பதாலும் பால் பாக்கெட் குறிப்பிட்ட நேரத்தில் விநியோகம் செய்வதில் பிரச்சனை எழுந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக ஆவின் அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை செய்து காலதாமதம் இன்றி பால் பாக்கெட்டுகளை விநியோகத்திற்கு அனுப்பினால் தான் மதுரை ஆவின் தனது விற்பனை இலக்கை தொடர்ந்து சரி கட்ட முடியும் என்று பாதிக்கப்பட்ட முகவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×