என் மலர்
நீங்கள் தேடியது "உயர் நீதிமன்ற மதுரைக்கிளை"
- அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது.
- டி.எஸ்.பி. விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை கடந்த 2025 ஜூன் 27-ந் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28-ந் தேதி அவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில், அஜித் குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர். அதற்கு சி.பி.ஐ. தரப்பில், அது உண்மை இல்லை. அறிக்கையே தயாராகி வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா? என கேள்வி எழுப்பினார். முன்விரோதம் எதுவும் இல்லை. டி.எஸ்.பி. விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, "யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனது பதறுகிறது. ஒன்றுமில்லா விசயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள்" என குறிப்பிட்டு வழக்கை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழை பயன்படுத்த வேண்டும்
- தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்திற்கு அருகே உட்கார வைக்க வேண்டும்
தமிழ்நாடு அரசு மற்றும் நீதிமன்றங்கள் கோயில் வழிபாடுகளில் தமிழைப் பயன்படுத்துவதை உறுதி செய்யப் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறை மூலம் அன்னைத் தமிழில் அர்ச்சனைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2021-இல் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் முதன்முதலாகத் இத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது 47-க்கும் மேற்பட்ட முக்கிய பெரிய கோயில்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
அதுபோல முறையான பயிற்சிப் பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் 2008 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில், ஆகம விதிகள் எங்கும் தமிழில் மந்திரங்கள் ஓதுவதைத் தடை செய்யவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கரூர் கல்யாண வெங்கடரமண சாமி கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் பாசுரங்களை ஓத வேண்டும்; தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்திற்கு அருகே உட்கார வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் உத்தரவு பின்பற்றப்படுகிறதா என குடமுழுக்கு முடிந்தபின் கோயில் செயல் அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
- ஒரு தீர்ப்பு இரண்டு அம்சங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்
- நிர்வாகத் திறமையின்மையுடன் நீதித்துறையின் சோம்பல்-ஆணவம் மற்றும் கள யதார்த்தங்களைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமை ஆகியவை இணைகின்றன.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ஜனவரி 6 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது. இந்த உத்தரவுக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு அளித்தநிலையில், தமிழ்நாடு அரசு மீண்டும் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால், ஒரு தீர்ப்பு இரண்டு அம்சங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்; உண்மைகளை மதிப்பிடுதல் மற்றும் சட்டத்தை விளக்குதல்.
இதில் ஒன்று தவறினால், அது அபத்தமாகிவிடும்!
இரண்டுமே தவறினால், அது சங்கடமாகிவிடும்!
நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் கூறுவார், "நிர்வாகத் திறமையின்மையுடன் நீதித்துறையின் சோம்பல்-ஆணவம் மற்றும் கள யதார்த்தங்களைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமை ஆகியவை இணைகின்றன. அதன் விளைவு எப்படி இருக்கும்?" முருகனுக்கு அரோகரா" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று 5-வது நாளாக தொடர்ந்து நடந்தது.
- எழுத்துபூர்வமான வாதங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில், உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று 5-வது நாளாக தொடர்ந்து நடந்தது.
நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதனையடுத்து தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் அடுத்தமாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து எழுத்துபூர்வமான வாதங்களை நாளைக்கும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்புக்கான தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.
- எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை
- உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டுவது என்னமாதிரியான போக்கு?
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சைகள் கிளம்பி, தற்போது அவர்மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கையும் தொடரப்பட்டுள்ளது.
இதனிடையே நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதனையும் அவரே விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் டிசம்பர் 17-ந் தேதி ( இன்று) தமிழ்நாடு தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் காணொலி மூலம் மதுரை ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகலில் வந்தது. அப்போது தலைமை செயலாளர் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக ஆஜராகினர்.
தலைமை செயலாளர் கூறுகையில், எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஏற்கனவே உள்ள உத்தரவுகளின் படிதான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் போன்றவற்றை கருத்தில்கொண்டே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. தீபமேற்ற உத்தரவிட்டபிறகு 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்? நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு அதிகாரிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும். உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டுவது என்னமாதிரியான போக்கு? உரிய பதிலை விரிவான மனுவாக தாக்கல் செய்ய அவகாசம் தருகிறேன் எனக்கூறினார்.
மேலும், நான் தேர்தலில் போட்டியிடபோவதாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஷ் சிங் வாதம் செய்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- தாக்கல் செய்த மனுக்கள் கார்த்திகை தீபம் தொடர்புடையவை அல்ல
- 3 நாட்களுக்கு முன் தனி நீதிபதி உத்தரவிட்டு, உடனே நடைமுறைப்படுத்தக் கூறினால் எப்படி?
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில், மலைமீது உள்ள தூணில்தான் விளக்கேற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதேபோன்று தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், எதிர்மனுதாரர்களுக்கு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, மேல்முறையீட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காலையில் விசாரணை நடைபெற்ற நிலையில், பிற்பகலும் தொடர்ந்தது.
அப்போது அரசுத்தரப்பில், "மலையில் தேவஸ்தானமே விளக்கேற்ற வேண்டும். தனி நபர் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 73 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தீபமேற்றும் இடத்தை மாற்றுவது குறித்து கோயில் நிர்வாகம் முடிவெடுக்க வேண்டுமென ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 1970, 2014ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளும் தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தன. மேலும் 3 நாட்களுக்கு முன் தனி நீதிபதி உத்தரவிட்டு, உடனே நடைமுறைப்படுத்தக் கூறினால் எப்படி?" என வாதம் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து கோயில் நிர்வாக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் கார்த்திகை தீபம் தொடர்புடையவை அல்ல" என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலை தொடர்புடையதுதானே என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து மனுதாரர் குறிப்பிட்டுள்ள தூண் கோயிலுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது. திருப்பரங்குன்றம் மலைக்கு இரு உச்சிகள் உள்ளன. ஒன்றில் தர்கா, மற்றொன்றில் கோயில் அமைந்துள்ளது. அங்கு கிரானைட்டால் ஆன தூண்தான் உள்ளது. தீபத்தூண்தான் என நிரூபிக்க எந்த ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு (15.12.2025) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
- வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று தீபம் ஏற்றப்பட்டது.
- தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார்.
கார்த்திகை தீபத் திருவிழாவில் மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று தீபம் ஏற்றப்பட்டது.
ஆனால் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஆனால் உத்தரவுப்படி தக்ரா அருகே ஏற்றாமல் எப்போதும்போல உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.
இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் போலீசார் மலை ஏற அனுமதி மறுக்கவே சிஐஎஸ்எஃப் வீரர்கள் திரும்பிச் சென்றனர்.
இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலையேற முயற்சித்து போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளுமுள்ளலில் ஈடுபட்டனர். மேலும் தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார்.
144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழலில் மலையேற அனுமதி வழங்காததால் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டக்காரர்கள் மலைக்குச் செல்லும் வழியில் சூடமேற்றி வணங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், நாளை முதல் வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேல்முறையீடு செய்திருப்பதாலும், 144 தடை உத்தரவாலும் மலை ஏற அனுமதி இல்லை என மதுரை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
- மேல்முறையீடு வழக்கை நாளை முதல் வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்
- CISF படையினருடன் இந்து அமைப்பினர் மலை ஏற அனுமதி மறுப்பு
திருவண்ணாமலை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன், முருகன் மற்றும் விஷ்ணு கோயில்களில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை கார்த்திகை தீபம். இன்று கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது. அதுபோல மதுரை திருப்பரங்குன்றத்திலும் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஆண்டாண்டு காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும் ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது என்றும் கூறி இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் அளித்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை மீறி எப்போதும்போல உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.
இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைமீறியும் போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளு முள்ளலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார். இந்நிலையில் மலைமீது ஏற சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், நாளை முதல் வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேல்முறையீடு செய்திருப்பதாலும், 144 தடை உத்தரவாலும் மலை ஏற அனுமதி இல்லை என மதுரை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
- இருவர் சம்மதத்துடன் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு தகராறு என்றவுடன் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்துவதா?.
- தனிப்பட்ட முரண்பாட்டை தவறான நடத்தை என்று சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை.
பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டபின் திருமணம் செய்ய மறுப்பதாக திண்டுக்கல்லை சேர்ந்த பெண் அளித்த புகாரில் இளைஞர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து அந்த இளைஞர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி "தனிப்பட்ட உறவு தகராறுகளில் குற்றவியல் சட்டம் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்துள்ளதை சரிபார்க்க வேண்டும். இருவர் உறவு சம்மதத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்டு உறவு முறிந்த பின் தகராறு எழுந்தால் குற்றவியல் வழக்கு தொடக்க இயலாது.
தனிப்பட்ட அல்லது உணர்ச்சி ரீதியான தகராறுகளை தீர்க்க குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது. சமகாலத்தில் சமூகத்தில் தனிப்பட்ட உறவுகளின் மாறிவரும் வரையறையை ஒப்புக்கொள்வதற்காக கருத்து முன்வைக்கப்படுகிறது.
தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ, தனிப்பட்ட ஏமாற்றத்தை குற்றவியல் செயல்முறை வழக்காகவோ மாற்ற முடியாது. வற்புறுத்தல், ஏமாற்றுதல், இயலாமையால் சம்மதம் பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது.
இருவர் சம்மதத்துடன் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு தகராறு என்றவுடன் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்துவதா?. தனிப்பட்ட முரண்பாட்டை தவறான நடத்தை என்று சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை. உணர்ச்சி ரீதியான தகராறுகளை தீர்க்க தனிமனிதருக்கு எதிராக வழக்கு தொடர்வது சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம்." என கருத்து தெரிவித்தார்.
மேலும், பல ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்தது இணைய உரையாடல்கள் மூலம் தெளிவாகி உள்ளதால் இளைஞர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்றார்.
- தமிழ்நாட்டில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளனர்.
- தமிழ்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினர் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் மற்றும் ஆப்பிரிக்க நாட்டினர் உள்ளிட்ட வெளிநாட்டு நபர்களை நாடு கடத்தக்கோரி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ரமேஷ் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் "தமிழ்நாட்டில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளனர். இதில் 16 பேர் நீண்ட கால விசா பெற்றுள்ளனர். 24 பேர் நீண்ட கால விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் மத்திய அரசின் செல்லுபடியாகும் விசா அடிப்படையின் கீழ் தமிழகத்தில் தங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினர் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்" தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் "சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடுகடத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது".
இதனைத்தொடர்ந்து மத்திய அரசு அறிக்கையை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 3 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.
- காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும்.
- காவல்துறை மனுவை பரிசீலனை செய்யும் வரை முன்னேற்பாடுகள் செய்யலாம். பூஜை செய்யக் கூடாது
இந்து முன்னணி சார்பில் வருகிற 22ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு முன்னதாக சில நாட்கள் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும். காவல்துறை மனுவை பரிசீலனை செய்யும் வரை முன்னேற்பாடுகள் செய்யலாம். பூஜை செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், காவல்துறை சார்பில் அரசியலமைப்பு மற்றும் சட்டப்படி உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின்போது பெங்களூரு ஸ்டேடியம் நிலச்சரிவு போன்ற அசம்பாவிதம் நடைபெற்றால் என்ன செய்வது என காவல்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
தமிழக இந்து முன்னணி மாநிலச் செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோவில்கள் அமைக்கப்படுகின்றன.
அவற்றில் வரும் 10 முதல் 22-ம் தேதி வரை காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலையில் 5 முதல் 7 மணி வரையும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், 22-ம் தேதி ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அம்மா திடல் தனியார் பட்டா நிலம். அங்கு மாநாடு நடத்த சம்பந்தப்பட்டவரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு கட்சியினருக்கு மாநாடு மற்றும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கியை பயன்படுத்தவும் அனுமதி கோரி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், அறுபடை வீடுகள் மாதிரி அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும் அனுமதி மறுத்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து, முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் முத்துக்குமார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
- சூர்யா சிவா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
- “இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது"
பாஜகவில் ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக உள்ள சூர்யா சிவா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
பொதுமக்கள் சேவைக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென சூர்யா சிவா மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சூர்யா சிவா மீது குற்ற வழக்குகள் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி தண்டபாணி, "இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது" என கூறி சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
திருச்சி சூர்யா சிவா மீது பல்வேறு கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளி இடத்தை ஆக்கிரமித்து, வாடகை தராமல் ஏமாற்றி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் மீது பெண் ஒருவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஆம்னி பேருந்தை கடத்திய வழக்கில் சூர்யா சிவா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவின் மகனான சூர்யா சிவா கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
பாஜகவில் இணைந்த சூர்யா சிவாவிற்கு ஓபிசி அணியில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் சூர்யா சிவா, பாஜகவின் சிறுபான்மை அணியைச் சேர்ந்த டெய்சியை ஆபாசமாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.madurai highcourt dismisses trichy surya siva plea
இதையடுத்து இருவரும் சமரசம் செய்து கொண்டாலும், சூர்யா சிவா தற்காலிகமாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்தார். கடந்த நவம்பர் மாதம் மீண்டும் சூர்யா சிவா பாஜகவில் சேர்க்கப்பட்டு, முன்பு அவர் வகித்து வந்த ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளராக தொடர்வார் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






