என் மலர்tooltip icon

    வழிபாடு

    • பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
    • வருகிற 4-ந் தேதி ஆடி அமாவாசை.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் மாதத்தில் 8 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில் ஆடி அமாவாசை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள். மேலும் சுவாமிக்கு பல்வேறு வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும்.

    இதையொட்டி சதுரகிரி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தயார் செய்துள்ளனர்.

    இதற்கிடையே சுந்தரமகாலிங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இதய நோயாளிகள், சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்த நோயாளிகள், அல்சர் நோயாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், கால் ஊனமுற்றோர்கள், அதிக வயதானவர்கள், ரத்த சோகை உள்ளவர்கள் யாரும் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம்.
    • காசிவிஸ்வநாதர் கோவிலில் மச்ச முனியின் ஜீவசமாதி உள்ளது.

    எத்தனையோ சித்தர்கள் வாழ்ந்த பூமியிது. அதில் ஒரு சித்தர்தான் மச்சமுனி. அவர் பாடல் இது;

    "செபித்திட காலம் செப்புவேன் மக்களே

    குவித்தெழுந்தையும் கூறும் பஞ்சாட்சரம்

    அவித்திடும் இரவி அனலும் மேலும்

    தவித்திடும் சிந்தை தளராது திண்ணமே''

    பொருள்:

    ஜபம் செய்ய ஏற்ற காலம் பற்றி சொல்கிறேன் மக்களே! காலையில் எழுந்ததும் திருவைந்தெழுத்தாகிய பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவாய) ஓதவும். காலையில் இதை ஜெபித்திட சூரியக் கதிர்கள் உடலில் பரவும். இதனால் மனம் உறுதியடையும்.

    ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மலையில் மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மலைமீது இருக்கும் காசிவிஸ்வநாதர் கோயிலில்தான் மச்ச முனியின் ஜீவசமாதி அமைந்துள்ளது.

    காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்பக்கம் இருக்கும் சுனை நீரில் மச்சேந்திரர் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம். ஆடி மாதம் ரோகிணியில் அவதரித்து, 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்த இந்த சித்தரின் குருபூஜை இன்று நடைபெறுகிறது.

    திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்புறம் ஒரு சுனை உள்ளது. அங்கே பக்தர்கள் தயிரை வாங்கி சுனை நீரில் விடுகிறார்கள். அப்பொழுது மச்ச முனி சித்தர் மீன் வடிவில் வந்து அந்த தயிரை ஏற்றுக் கொண்டு நமக்கு நல்லருள் புரிகிறார் என்பது நம்பிக்கை.

    • ஆடிப் பதினெட்டு காவேரி பூப்பெய்திய நாள் என்பது ஐதீகம்.
    • காவிரியின் கதையைப் படிப்பது சிறப்பு.

    ஆடிப் பதினெட்டு காவேரி பூப்பெய்திய நாள் என்று ஐதீகம் இருப்பதால் வளையல், காதோலை, கருகமணி, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை நதிக்கரையில் பூஜை செய்து பின் காவிரியில் விடுவதை தமிழர்கள் காலம், காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.

    புதிதாக திருமணம் செய்தவர்கள் 'தாலிப் பிரித்து போடுதல்' என்று தங்கள் தாலியை வேறு கயிற்றில் அல்லது சங்கிலியில் மாற்றிக் கொள்வர். ஆடிப்பெருக்கென்று நீர் பெருகி வருவது போன்று தங்கள் இல்லற வாழ்வும் பெருக வேண்டும் என வேண்டிக் கொள்வார்கள்.

    அன்று மாலை பலவித சித்ரான்னங்கள் படைத்து உண்பதும் சிறுவர்கள் சப்ரம் (சிறிய தேர்) கட்டி இழுப்பதம் கிராமப்புற ஆறுகள் பக்கம் இன்றும் நடைபெறுகிறது.

    கும்பகோணத்தில் நவ கன்னியர்களில் ஒருவராக இருக்கும் காவிரியை வழிபட ஆடிப்பெருக்கு விழாவுக்கு 10 நாட்கள் முன்னதாகவே ஒரு தட்டில் நவதானியங்களைத் தூவி முளைப்பாலிகளை முளைக்கச் செய்வர்.

    அவற்றை கும்மிப் பாடல்கள், குரவைப் பாடல்களால் போற்றியபடி காவிரிக்கு எடுத்துச் செல்வர். முதலில் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொண்டு வாழை இலையில் மண்ணிலிருந்து ஒன்பது உண்டைகள் பிடித்து வைத்து பூஜிப்பார்கள்.

    கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ள திருச்சேறை சாரநாதர் ஆலயத்தில் உள்ள புஷ்கரணியின் தென் மேற்குக் கரையில், காவிரி அன்னைக்கு ஒரு கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு ஆடிப்பெருக்கன்று விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.

    தஞ்சை -திருவையாறு சாலையில் உள்ள திருவையாற்றில் ஐயாரப்பன் புஷ்ப மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆடி பதினெட்டில் நடைபெற்று வருகிறது.

    கொடுமுடி - மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவிலில் ஆடிப் பதினெட்டு தினத்தன்று மும்மூர்த்திகள் காவிரிக் கரைக்கு எழுந்தருளுவர். அன்றைய தினம் பச்சை மண்ணில் பானை செய்து அதில் மாவிளக்கு, கருகமணி, காதோலை, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை வைத்து நடு ஆற்றில் மிதக்க விட்டு விட்டு வருவர். அம்மனுக்கும் மகாலட்சுமிக்கும் சந்தனக் காப்பு ஆராதனை நடைபெறும்.

    ஈரோடு பவானி - கூடுதுறையில் அதிகாலையில் நீராடி விட்டு அம்மனுக்குத் தேங்காய், பழம், கருகமணி, காதோலை முதலியவற்றைப் படைத்து ஆராதனை செய்வர்.

    ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கன்று காவிரியில் சித்தப் புருஷர்களும், யோகிக்களும் நீராடி தங்கள் தவ வலிமையை மக்களுக்குப் பகிர்ந்தளித்துச் செல்வதாக கருதப்படுகிறது. எனவே அன்று நீராடிவிட்டு தாமரை இலையில் விளக்கேற்றி நீரில் மிதக்க விட்டு அன்னையைப் பூஜித்து தான தர்மங்களைச் செய்தால் பதினெட்டு சித்தர்களின் ஆசியையும் பெறலாம்.

    நீர் நிலைகள் தங்கள் வீட்டிற்கு அருகில் இல்லையென்றால் முறைப்படி வீட்டில் வைத்தே காவிரித் தாயைப் பூஜித்து சமர்ப்பணப் பொருட்களை அருகில் உள்ள கிணறுகளில் போடலாம்.

    ஆடிப் பதினெட்டாம் நாளன்று காவிரியின் கதையைப் படிப்பது சிறப்பு தரும்.

    • ஆடி மாதம் என்பது கடக மாதம்.
    • ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு.

    சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேஷமானது.

    ஆடிப்பெருக்கு அன்று பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

    ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார்.

    அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.

    பூக்கள் நிரப்பும் விழா

    சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது.

    இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப்படுகிறது.

    • ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள்.
    • வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.

    ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள். தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்.

    இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும்.

    அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.

    இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் விளைந்தது. இந்த சிறப்பான தினம் வருகிற சனிக்கிழமை (3-ந்தேதி) வருகிறது. மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கை கண்டுகளிப்பர். கோவில்களுக்கு சென்று வழிபடவும் செய்வர்.

    ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர்வளம் பெருகியதுபோல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள்.

    அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பலவிதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

    காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும்.

    ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

    நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவது வழக்கம்.

     நதிக்கரையில் உள்ள கன்னி தெய்வங்களை கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். கன்னி தெய்வங்களை சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்து வழிபாட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். அன்று சப்த கன்னிகளை வழிபட்டால் திருமணத் தடை அகலும்.

    நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் ஆடிப்பெருக்கு பூஜையை நதிக்கரை மட்டுமில்லாமல் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். நிறை குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு சேர்த்தால் போதும். வழிபாட்டுக்குரிய தீர்த்தம் தயாராகி விடும். திருவிளக்கேற்றி அந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைக்க வேண்டும்.

    ஒரு அம்மன் படத்துக்கு உதிரிப் பூக்கள் தூவி தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட புண்ணிய நதிகள், அகத்தியர் ஆகியோரை மனதார நினைத்து வணங்க வேண்டும். சர்க்கரை பொங்கல் படைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    செம்பில் உள்ள நீரை கால் மிதி படாத இடத்திலோ அல்லது செடி, கொடியிலோ ஊற்றி விட வேண்டும். இந்த பூஜையால் வீட்டில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

    ஜனன கால ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள், சந்திர தசை புக்தி நடப்பவர்கள், சந்திரனுக்கு சனி, ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும். தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். வீடு வாகன யோகம் சித்திக்கும்.

    • திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-15 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி இரவு 6.10 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: ரோகிணி நண்பகல் 1.01 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி புறப்பாடு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்திர பிரபையிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் தெப்பம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அன்பு

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-இரக்கம்

    கடகம்-மேன்மை

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-பொறுமை

    துலாம்- செலவு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- நற்செயல்

    மகரம்-போட்டி

    கும்பம்-ஆக்கம்

    மீனம்-பண்பு

    • கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாக தேவதை அம்மன் சிலை உள்ளது.
    • கிராம மக்கள் திரண்டு வந்து சாமி சிலை மீது பாம்பு ஆடுவதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.

    ஆந்திர மாநிலம், பெத்த பள்ளி அடுத்த ஒடேலாவில் சம்பு லிங்கேஸ்வரர், ஆபத் சகாயஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாக தேவதை அம்மன் சிலை உள்ளது. கோவில் பூசாரி நாக தேவதை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது திடீரென நல்ல பாம்பு ஒன்று வந்து நாக தேவதை அம்மன் சிலையின் மீது அமர்ந்தது. பின்னர் சாமி சிலையின் மீது படம் எடுத்து ஆடியது. இந்த செய்தி ஊர் முழுவதும் காட்டு தீ போல் பரவியது. ஏராளமான கிராம மக்கள் திரண்டு வந்து சாமி சிலை மீது பாம்பு ஆடுவதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர். சாமியை வணங்கி சென்றனர்.

    இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் உள்ள வனபத்ர காளியம்மன் கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 23-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து லட்சார்ச்சனை, கிராம சாந்தி, கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.


    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு அம்மன், சிம்ம வாகனத்தில் கோவிலை வலம் வந்து குண்டம் அமைக்கப்பட்ட இடத்தில் எழுந்தருளினார்.

    காலை 5.30 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை பூசாரி ஹரி நடத்திய சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் குண்டத்தில் பூப்பந்து உருட்டப்பட்டு முதலில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மற்றும் போலீசார், உள்ளூர் பிரமுகர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் கைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டே குண்டம் இறங்கினர்.


    தேக்கம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் கரகம் எடுத்து வந்தும், பால்குடம் எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம், பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • முருகப்பெருனை `குகன்’ என்றும் அழைப்பார்கள்.
    • சிவலிங்கம் 5½ அடி உயரம் கொண்டது.

    கோவில் தோற்றம்

    கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகிலேயே இருக்கிறது இந்த குகநாதீஸ்வரர் கோவில். முருகப்பெருமானை `குகன்' என்றும் அழைப்பார்கள். அந்த குகன் வழிபட்ட சிவபெருமான் அருளும் ஆலயம் என்பதால், இது 'குகநாதீஸ்வரர் கோவில்' என்று அழைக்கப்படுகிறது.

    இவ்வாலயத்தில் இருக்கும் இறைவனுக்கு, `கோனாண்டேஸ்வரன்', `குகனாண்டேஸ்வரன்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவ்வாலயத்தின் கருவறை குகை போன்று காணப்படுவதாலும், பிரகாரம் குறுகி இருப்பதாலும் இவ்வாலய இறைவன் `குகநாதீஸ்வரர்' என்று அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

    இந்த கோவில் கருவறை, அர்த்த மண்டபம், முக மண்டபம், உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்னும் அமைப்பைக்கொண்டது. கோவிலின் முன்பு சிறிய தோட்டம் இருக்கிறது. இவ்வாலய மூலவர் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சிவாலயங்களிலேயே, இந்த ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கம்தான் மிகப்பெரியது என்று சொல்கிறார்கள். இவ்வாலய சிவலிங்கம் 5½ அடி உயரம் கொண்டது. இங்கு அருள்பாலிக்கும் அன்னையின் திருநாமம், 'பார்வதி' என்பதாகும்.

    ஆலய தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது. இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், கஜலட்சுமி, வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான், துர்க்கை, நவக்கிரகங்கள், காலபைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக அருள்கின்றனர்.

    இங்குள்ள கல்வெட்டு ஒன்று, இவ்வாலய இறைவனை, `ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு புறத்தாயநாட்டு அழிக்குடி ராஜராஜேஸ்வர முடையார்' என்று நீண்ட அடைமொழியோடு குறிப்பிடுகிறது.

    இந்த கல்வெட்டு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பிற்காலச் சோழர்களின் ஆட்சி கன்னியாகுமரியில் நிலவியபோது, இந்த குகநாதீஸ்வரர் கோவிலுக்கு, அவர்கள் திருப்பணி செய்ததும் இந்த கல்வெட்டில் காணப்படுகிறது.

    10-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த ஆலயத்தில் வழிபாடு நடந்திருக்கலாம் என்கிறார்கள், ஆய்வாளர்கள். இவ்வாலயத்தில் முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன் ஆகிய மன்னர்கள் கால கல்வெட்டுகளும் உள்ளன.

    கோடை வெயில் அதிகரிக்கும் காலத்தில் இத்தல இறைவனுக்கு 1008 இளநீர் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேக இளநீர், பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் 1008 சங்காபிஷேகம் நடைபெறும். அன்று கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், கோமாதா பூஜை, சங்கு பூஜையும் நடக்கும்.

    ஐப்பசி மாத பவுர்ணமியில் இத்தல இறைவனை வழிபட்டால் குடும்ப பிரச்சனை நீங்கும் என்கிறார்கள். கார்த்திகை சோம வாரத்தில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    இவ்வாலயத்தில் காரைக்கால் அம்மையாருக்கு தனிச்சன்னிதி உள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியில் காரைக்கால் அம்மையாருக்கு இத்தலத்தில் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது.

    மனமுருகி வேண்டும் எல்லா பிரார்த்தனைகளையும், இத்தல இறைவன் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திருமணத் தடை நீக்கும் ஆலயமாகவும் இத்தலம் உள்ளது.

    தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் இவ்வாலயம் திறந்திருக்கும்.

    • பித்ருக்கள் என்பவர்கள் நமது முன்னோர்கள்.
    • கர்மாவை கட்டாயம் செய்ய வேண்டும்.

    பித்ருக்கள் என்பவர்கள் நமது முன்னோர்கள். தர்ப்பணம் என்பது அவர்களை திருப்தி செய்வதற்காக செய்யும் ஒரு நிகழ்ச்சியாகும். பித்ருக்கள் என்பவர்கள் இறந்துபோன நமது அப்பா மற்றும் அம்மாவை சேர்ந்தவர்களை குறிக்கும்.

    நம் குலம் நன்றாக விளங்கவும், வம்ச விருத்திக்காகவும், தோஷங்கள் இல்லாமல் இருக்கவும் நம் முன்னோர்களை நினைத்து இந்த கர்மாவை கட்டாயம் செய்ய வேண்டும். தகப்பனார் இல்லாதவர்கள் மட்டுமே தில தர்ப்பணம், பித்ருக்களுக்கான தர்ப்பணம் செய்ய வேண்டிய கர்த்தாக்கள் (எஜமானர்கள்) ஆவார்கள். (தேவதர்ப்பணம், ருஷி தர்ப்பணம் போன்றவை அனைவரும் செய்யலாம்).

    பித்ருக்கள் தர்ப்பணம், தகப்பனார் வழியில் ஆறு பேர், தாய் வழி பாட்டனார் ((மாதா மகர்) வழியில் ஆறு பேர் ஆக 12 பேருக்கு செய்ய வேண்டும். மாதா மகர் (தாய் வழி பாட்டனார்) உயிருடன் இருந்தால், அந்த வர்க்கத்திற்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியதில்லை. அவருக்கு பதிலாக முன்னோர் ஒருவரை சேர்த்துக் கொள்ளலாம்.

    • ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
    • பித்ரு கடனை அடைக்காவிட்டால் பித்ரு தோஷம் உண்டாகும்.

    ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதிலும் சூரியனும், சந்திரனும் ஒன்று சேரக்கூடிய `அமாவாசை திதி' மிக முக்கியமானதாகும். சூரிய பகவான் `பித்ரு காரகன்' என்றும், சந்திர பகவான் `மாத்ரு காரகன்' என்றும் போற்றப்படுகின்றனர்.

    இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கக்கூடிய அமாவாசை நாளில் மரணம் அடைந்த பெற்றோருக்கு தர்ப்பணம் செய்வது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. அதிலும் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை கூடுதல் சிறப்புக்குரியவை. மனிதராக பிறந்த ஒவ்வொருவரும், தேவ கடன், பித்ரு கடன் ஆகியவற்றை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

    பித்ரு கடனை அடைக்காவிட்டால் `பித்ரு தோஷம்' உண்டாகும். நம்மில் பலரும் `எனக்கு தர்ப்பணம் செய்ய நேரம் இல்லை. அதனால் அன்னதானம் செய்கிறேன்' என்று சொல்வார்கள். அன்னதானம் செய்வதும் பெரிய புண்ணியம்தான். ஆனால் தர்ப்பணத்தை விட்டு விட்டு செய்யும் அன்னதானத்திற்கு எந்த பலனும் கிடைக்காது. எனவே கட்டாயமாக தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    எள்ளு சேர்த்த நீரை, பித்ருக்களுக்காக விட வேண்டும். அப்போதுதான் அவர்களின் ஆன்மா சாந்தி அடையும். அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். பித்ரு லோகத்தில் உள்ள தேவர்களின் ஆசியும் சேர்த்து கிடைக்கும்.

    ஒரு சமயம் சிவபெருமானின் திருவடியை கண்டடைவதற்காக வராக (பன்றி) அவதாரம் எடுத்தார், விஷ்ணு பகவான். அவர் வராக தோற்றத்தில் பூமியை குடைந்து சென்றபோது, அவரது உடம்பில் இருந்து வியர்வை துளிகள் அரும்பியது. அந்த வியர்வை துளிகள் பூமியில் விழுந்ததும், கருப்பு எள்ளாக மாறியதாக புராணங்கள் சொல்கின்றன.

    தாய்-தந்தையருக்கு அளிக்கும் தர்ப்பணத்தில் இந்த கருப்பு எள்ளை சேர்த்துக் கொள்வது மிகவும் புண்ணியம் தரக்கூடியது.

    ஒரு மனிதன் இறந்த பின்பு, அவனது ஆன்மாவானது, ஐந்து வகை உடல்களை எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது. பார்த்திவம், ஜலியம், ஆக்னேயம், வாயவ்யம், தைஜசம் என்பவை அந்த ஐந்து வகை உடல்கள். இவற்றில் உத்தமம், அதம், மத்திமம் என்று உண்டு.

    இப்படி பிரிவதில் 15 விதமான உடல்கள் இருக்கும். இதில் இறந்த நம் முன்னோர்கள், 'ஜலியம்' என்ற சரீரத்தை எடுத்துக்கொள்கின்றனர். நம் முன்னோர்கள் ஜலிய சரீரம் எடுத்துக் கொள்வதால், அவர்களுக்கு அளிக்கும் உணவானது, ஜல (நீர்) சம்பந்தமாக இருப்பது சிறப்பானதாக சொல்கிறார்கள்.

    எனவே தான், நாம் நம்முடைய பித்ருக்களுக்கு, கங்கை, காவிரி, கோதாவரி, யமுனை உள்ளிட்ட பல புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று, நீர் கொண்டு தர்ப்பணம் செய்வது விசேஷமானதாக கருதப்படுகிறது.

    இங்கே பலருக்கும் ஏற்படக்கூடிய ஒரு சந்தேகம் உண்டு. 'நம் முன்னோர்களில் தாயோ, தந்தையோ அல்லது பாட்டியோ, பாட்டனோ மறுபடியும் பிறவி எடுத்திருந்தால், அவர்களது திருப்திக்காக நாம் செய்யக்கூடிய தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றால் என்ன பலன்?' என்ற கேள்வி எழும்.

    இறந்தவர்கள் பித்ரு லோகத்தில் இருந்தால், நாம் தர்ப்பணம் கொடுப்பதில் பலன் உண்டு. நாம் செய்யக்கூடிய தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றை பித்ரு தேவதைகள் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) சேர்க்கின்றனர்.

    அதே சமயம் அவர்கள் அவரவர் செய்த கர்ம வினைப்படி மனிதராகவோ அல்லது பறவையாகவோ, மிருகங்களாகவோ பிறந்திருந்தால், பித்ரு தேவதைகள் அவர்களுக்கு அடுத்த ஜென்மாவிலும் பசி இல்லாமல் இருக்க அந்தந்த சிரார்த்தத்திற்கு ஏற்ப உணவை வழங்குகின்றனர். அந்த வகையில் பித்ரு தேவதைகளின் ஆசி எப்போதும் நமக்கு கிடைக்கப்பெறும்.

    ஆயு: புத்ராந் யஸ: ஸ்வர்கம் கீர்த்திம் புஷ்டிம் பலம் ஸ்ரியம்

    பாந் ஸுகம் த நம் தா'ன்யம் ப்ராப்நுயாத் பித்ரு பூஜநாத்

    என்ற வாக்கியபடி பித்துருக்களுக்கு முறையாக தர்ப்பணம், சிராத்தம் செய்பவர்களுக்கு, நீண்ட ஆயுளும், குழந்தை செல்வமும், புகழும், சுகமும் உண்டாகும்.

    அமாவாசை தினத்தன்று செய்யும் தர்ப்பணத்திற்கு `தர்ச சிரார்த்தம்' என்று பெயர். தந்தை இல்லாதவர்கள் மட்டுமே தில தர்ப்பணம் செய்ய வேண்டும். தலைமுறையில் யாராவது உயிருடன் இருந்தால் (தாத்தா), அவர்களை விட்டுவிட்டு மற்ற மூன்று தலைமுறைகளுக்கு திலதர்ப்பணம் செய்ய வேண்டும்.

    தர்ப்பணம் செய்யும் நாளில் தர்ப்பணம் செய்பவர்கள் கட்டாயம் நீராட வேண்டும். பின்னர் ஏற்கனவே துவைத்து வைத்திருந்த வஸ்திரங்களை அணிந்து கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கட்டாயம் கருப்பு எள், தர்ப்பை அவசியம்.

    தெற்கு திசை எமனுக்கு உரியதாக கருதப்படுவதால், முன்னோர்கள் சம்பந்தமான கர்மாக்களை தெற்கு திசையை நோக்கிதான் செய்ய வேண்டும். தர்ப்பையின் நுனியும் தெற்கு நோக்கி இருத்தல் வேண்டும்.

    பொதுவாக ஏதாவது ஒரு ஆசனத்தில், மனையில் அமர்ந்து கொண்டு இதனை செய்ய வேண்டும். கோவில் குளக்கரை போன்ற இடங்களுக்கு செல்லும் பொழுது, ஏதாவது துண்டு விரித்து அதன் மீது அமரலாம்.

    சுப காரியங்களுக்கு இரட்டை படையிலும், பித்ரு காரியங்களுக்கு ஒற்றைப் படையிலும் கையில் அணியும் பவித்திரம் செய்வார்கள். இந்த பவித்திரமானது, பெரும்பாலும் தற்போது கடைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

    அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் அனைவரும், அன்றைய தினம் மட்டுமாவது கட்டாயம் பூணூல் அணிய வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள், குறைந்த பட்சம் ஆடி அமாவாசை மற்றும் அதற்கு முன் தினம், பின்தினம் என்று மூன்று நாட்களாவது அசைவத்தை தவிர்க்க வேண்டும்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பிரம்மோற்சவம் ஆரம்பம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமாள் தெப்பத் திருவிழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-14 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி இரவு 7.30 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: கார்த்திகை நண்பகல் 1.40 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பிரம்மோற்சவம் ஆரம்பம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமாள் தெப்பத் திருவிழா. சேலம் செவ்வாய்ப் பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-செலவு

    கடகம்-பயணம்

    சிம்மம்-நன்மை

    கன்னி-வரவு

    துலாம்- தேர்ச்சி

    விருச்சிகம்-மாற்றம்

    தனுசு- ஆக்கம்

    மகரம்-ஆதாயம்

    கும்பம்-பரிவு

    மீனம்-சாந்தம்

    ×