என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
    • இறுதியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்தார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா். அதில் குட் லக் டீம் இந்தியா என குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

    • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது.
    • அடுத்து பேட் செய்த பெங்களூரு அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    லக்னோ:

    3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களுரு பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜார்ஜியா வால் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கிரண் நவ்கிரே 46 ரன்களும் , கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களும் எடுத்தனர்.

    இதையடுத்து, 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. மேகனா 12 பந்தில் 27 ரன்னும், எல்லீஸ் பெரி 28 ரன்னும், ராக்வி பிஸ்ட் 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ரிச்சா கோஷ் ஆரம்பம் முதலே சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 25 பந்தில் அரை சதம் கடந்தார். அவர் 33 பந்தில் 69 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஸ்னே ரானா 6 பந்தில் 26 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இறுதியில், பெங்களூரு அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் உ.பி.வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது உ.பி.வாரியர்ஸ் பெற்ற 3வது வெற்றி ஆகும்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி கேள்விக்குறியாக உள்ளது.
    • சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றால் கேப்டனாக நீடிப்பாரா? என்பதும் உறுதியாக தெரியவில்லை.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஷிப்ஸ் தொடருக்கு பின் கேப்டனாக தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்ததிலிருந்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு பிறகு, இந்திய அணியின் எதிர்கால திட்டத்தை முன்வைத்து அவரை கேப்டன் பதிலிருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்ததாக உறுதியான தகவல் வெளியாகி இருந்தன.

    தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. நாளை நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.

    ஒருவேளை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது. மேலும் ஓய்வு குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

    நாளைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றால், ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து புதிதாக ஆலோசனை நடத்தப்படும்.

    இந்த நிலையில் ரோகித் சர்மா ஓய்வு குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் இது தொடர்பாக கூறியதாவது:-

    தற்போது வரை நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றது குறித்தும், சாம்பியன் டிராபியில் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளளோபம். ரோகித் சர்மா என்னிடமோ அல்லது அணியிடமோ அவருடைய ஓய்வு குறித்து ஏதும் பேசவில்லை. ரோகித் சர்மா அப்படி ஒரு நினைப்பில் இருப்பதுபோல் எனக்குத் தோன்றவில்லை.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    கேப்டன் பதவி இல்லை என்றாலும் இன்னும் கொஞ்சம் காலத்திற்கு ரோகித் சர்மா விளையாட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீங்கள் வரும்போது, அது உங்களுக்கு கல்வி நிறுவனம் போன்றது.
    • நீங்கள் வருவீர்கள். கற்றுக் கொள்வீர்கள். வளர்ச்சி அடைவீர்கள்.

    ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 10 அணிகளில் இதில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் மும்பை இந்தியன்ஸ் முன்னணி அணிகளில் ஒன்று. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அந்த அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.

    10 அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில் "மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீங்கள் வரும்போது, அது உங்களுக்கு கல்வி நிறுவனம் போன்றது. நீங்கள் வருவீர்கள். கற்றுக் கொள்வீர்கள். வளர்ச்சி அடைவீர்கள். இந்திய அணியில் விளையாடுவதற்காக செல்வீர்கள்" என்றார்.

    சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணி கேப்டனாக உள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி தனி தொடக்க போட்டியில் வருகிற 23-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்திருந்தார்.
    • 2022-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மாற்று வீரரான ஒப்பந்தம் செய்திருந்தது.

    ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லிசாட் வில்லியம்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றொரு தென்ஆப்பிரிக்கா வீரரான கார்பின் போஸ்ச்-ஐ மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது.

    கார்பின் போஸ்ச் தென்ஆப்பிரிக்கா அணிக்காக ஒரேயொரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், 86 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் அன்ரிச் நோர்ஜே இடம் பிடித்திருந்தார். இவர் காயம் காரணமாக விலகியதால் போஸ்ச் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான ராயல்ஸ் அணிக்கு நெட் பவுலராக செயல்பட்டிருந்தார். பின்னர் 2022-ஆம் சீசனில் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நைல் காயத்தால் விலகியபோது அந்த அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ஆடும் லெவன் அணியில் விளையாடவில்லை.

    • விராட் கோலிக்கு பந்து வீச வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு துபாயில் நனவானது.
    • கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், "இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசினாய் என்று விராட் கோலி என்னை பாராட்டியது என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம்" என்று பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது மனம் திறந்து பேசியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அப்ரார் அகமது, "விராட் கோலிக்கு பந்து வீச வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு துபாயில் நனவானது. அது ஒரு பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய பந்தில் முடிந்தால் சிக்ஸ் அடியுங்கள் என்று நான் அவரை சீண்டினேன். ஆனால் அவர் ஒருபோதும் கோவப்படவில்லை. கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட. போட்டிக்குப் பிறகு அவர் என்னிடம் நீ நன்றாக பந்துவீசினாய் என்று தெரிவித்தார். அவருடைய பாராட்டு என்னை மகிழ்ச்சியடைய செய்தது" என்று தெரிவித்தார்.

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாளை மோதுகின்றன.
    • இரு அணிகளும் நாளை மோதுவது 120-வது ஒருநாள் போட்டியாகும்.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன. இதையொட்டி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலமுறை மோதியிருக்கின்றன.

    1975-ம் ஆண்டு முதல் நடந்து வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 10 முறை கோதாவில் குதித்துள்ளன. இதில் இரு அணியும் தலா 5-ல் வெற்றி கண்டு இருக்கின்றன. இவற்றில் இரண்டு நாக்-அவுட் ஆட்டங்களும் அடங்கும்.

    2019-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த அரைஇறுதியில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்கள் இலக்கை கூட எடுக்க முடியாமல் இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களில் ஆல்-அவுட் ஆகி தோற்றது. முன்னாள் கேப்டன் தோனி அரைசதம் (50 ரன்) அடித்தார். இது தான் தோனியின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.

    இதற்கு 2023-ம் ஆண்டு உலகக்கோப்பையில் மும்பை வான்கடேயில் நடந்த அரையிறுதியில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 397 ரன்கள் குவித்தது. உலகக் கோப்பை 'நாக்-அவுட்' சுற்றில் ஒரு அணி எடுத்த மெகா ஸ்கோர் இது தான். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 327 ரன்னில் அடங்கியது.

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இரண்டு முறை சந்தித்து இருக்கின்றன. 2000-ம் ஆண்டு நைரோபியில் நடந்த இறுதி சுற்றில் முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுக்கு 264 ரன்கள் சேர்த்தது. கேப்டன் சவுரவ் கங்குலி சதமும் (117 ரன்), சச்சின் டெண்டுல்கர் அரைசதமும் (69 ரன்) அடித்தனர்.

    பின்னர் ஆடிய நியூசிலாந்து 132 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிய போது, ஆபத்பாந்தவனாக வந்த ஆல்-ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ் சதம் (102 ரன்) விளாசி தங்கள் அணிக்கு கோப்பையை வென்றுத் தந்தார். நியூசிலாந்து 49.4 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நாள் வரைக்கும் 50 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வென்ற ஒரே ஐ.சி.சி. கோப்பை இதுதான்.

    2-வது முறையாக தற்போதைய சாம்பியன்ஸ் கோப்பை லீக்கில் எதிர்கொண்டது. இதில் நியூசிலாந்தை இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது. சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி அட்டகாசப்படுத்தினார்.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளில் மோதியதில் 6-ல் நியூசிலாந்தும், ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு டெஸ்ட் 'டிரா' ஆனது.

    இதில் 2021-ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் கோப்பையை பறிகொடுத்ததும் அடங்கும்.

    குறுகிய வடிவிலான உலகக்கோப்பை போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் 3 முறை பலப்பரீட்சை நடத்தி இருக்கின்றன. மூன்றிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    2007-ம் ஆண்டு சூப்பர்8 சுற்றில் இந்தியா 10 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. என்றாலும் அந்த உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றி வரலாறு படைத்தது.

    2016-ம் ஆண்டில் சூப்பர் 10 சுற்றில் இந்தியா 79 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. 2021-ம் ஆண்டில் துபாயில் நடந்த சூப்பர்12 சுற்றில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்ததுடன் அரைஇறுதி வாய்ப்பையும் இழந்தது.

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாளை மோதுகின்றன. 2000-ம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 120-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 119 ஆட்டங்களில் இந்தியா 61-ல் நியூசிலாந்து 50-ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி 'டை'யில் முடிந்தது. 7 ஆட்டம் முடிவு இல்லை.

    • இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
    • இந்த பிட்சில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் (பிட்ச்) விவரம் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 23-ந்தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

    இந்த பிட்சில் இந்திய அணி பாகிஸ்தாைன 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இறுதிப் போட்டியில் கள நடுவர்களாக பால் ரீபெல் (ஆஸ்திரேலியா), ரிச்சர்டு இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) செயல்படுவார்கள்.

    ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்) 3-வது நடுவராகவும், தர்மசேனா (இலங்கை) 4-வது நடுவராகவும் இருப்பார்கள். மேட்ச் நடுவராக ரஞ்சன் மதுகல்லே செயல்படுவார்.

    • நாங்கள் பயிற்சி மேற்கொள்ளும் ஆடுகளங்கள், போட்டியின் போது விளையாடும் ஆடுகளங்கள் வேறுபட்டவை.
    • அனைத்துப் போட்டிகளையும் இங்கு விளையாடுகிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு விஷயமும் பெரிதாக இல்லை.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து விட்டது. இதனால் இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டது.

    ஒரே மைதானத்தில் (துபாய்) விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமானது என்று கடுமையான விமர்சனம் எழுந்தது. இந்த விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள், மைக் ஆதர்டன், நாசர் உசேன் கூறி இருந்தனர். இதேபோல ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சும் ஒரே மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு உகந்தது என்று தெரிவித்து இருந்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி போட்டி முடிவில் இந்த விமர்சனங்களுக்கு பயிற்சியாளர் காம்பீர் பதிலடி கொடுத்து இருந்தார். அதே நேரத்தில் ஒரே மைதானத்தில் ஆடுவது உதவிகரமாக இருப்பதாக வேகப்பந்து வீரர் முகமது சமி தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் துபாயில் மட்டும் விளையாடுவதால் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை என்று பேட்டிங் பயிற்சியாளர் சீதான்ஷீ கோடக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியா போட்டிகளில் வெற்றி பெறுவதை பார்த்த பிறகு, ஆடுகளம் எங்களுக்கு சாதகமாக இருப்பதாக பலரும் உணர்கிறார்கள். அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. போட்டியில் வெற்றி பெறுவதற்கு அன்றைய நாளில் அணிகள் நன்றாக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். நன்றாக விளையாடி வெற்றி பெற்றால், சாதகமாக இருக்கிறதா? இல்லையா? என்று பேச வேண்டிய அவசியமே இருக்காது.

    துபாயில் தங்கி பயிற்சி மேற்கொள்வதாலோ அல்லது அனைத்துப் போட்டிகளையும் இங்கு விளையாடுவதாலோ எங்களுக்கு ஆதாயம் இருப்பதாக நினைக்கவில்லை. நாங்கள் பயிற்சி மேற்கொள்ளும் ஆடுகளங்கள் வித்தியாசமானவை, போட்டியின் போது விளையாடும் ஆடுகளங்கள் வேறுபட்டவை. அது அனைவருக்கும் தெரியும். அதனால் எங்களது அனைத்துப் போட்டிகளையும் இங்கு விளையாடுகிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு விஷயமும் பெரிதாக இல்லை.

    இவ்வாறு கோடக் கூறினார்.

    • சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணி நேற்று மோதினர்.
    • இதில் ஆஸ்திரேலியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வதோதரா:

    சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஜாக் காலிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய தொடக்கம் முதலே அதிரடியில் பட்டையை கிளப்பியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது.

    பின்னர் 268 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 17 ஓவர்களில் 123 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணியில் அம்லா 30 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா தரப்பில் பென் லாப்லின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இந்த போட்டியில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது வாட்சன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அந்த வகையில் ஷபலாலா வீசிய பந்தை லாங் ஆப் திசையில் அடித்தார். அந்த திசையில் இருந்த பீல்டிங் ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் பறந்து வந்து அந்த பந்தை தடுத்தார். 55 வயதில் இவர் இப்படி பீல்டிங் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    தென் ஆப்பிரிக்கா அணிக்காக 1992-ம் ஆண்டு ஜான்டி ரோட்ஸ் அறிமுகமானார். இவரது சிறந்த பீல்டிங்கால் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். அந்தரத்தில் பறந்த கேட்ச் மற்றும் ரன் அவுட் அடிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். இவரது பீல்டிங்கால் உலகின் சிறந்த பீல்டர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆனார்.

    அதன் பிறகு யாரு சிறந்த பீல்டிங் செய்தாலும் ஜான்டி ரோட்ஸ் மாதிரி பீல்டிங் செய்வதாக கூறப்பட்டு வந்தது. அந்த அளவுக்கு அவரது பீல்டிங் பேசப்பட்டது.

    • மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால் 'ரிசர்வ் டே'-வுக்கு (மறுநாள்) ஒத்திவைக்கப்படும்.
    • ஒருவேளை ஆட்டம் சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும்.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். போட்டி நடைபெறும் நாளில் அங்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.

    இருப்பினும் இயற்கையை யாராலும் துல்லியமாக கணித்து விட முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவேளை இறுதிப்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்? ஐ.சி.சி. விதிமுறை கூறுவது என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்..!

    போட்டி நடைபெறும் நாளன்று (9-ம் தேதி) மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால் 'ரிசர்வ் டே'-வுக்கு (மறுநாள்) ஒத்திவைக்கப்படும். ரிசர்வ் டே நாளன்றும் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

    ஒருவேளை ஆட்டம் சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உ.பி.வாரியர்ஸ் அணியுடனான போட்டியின் போது ஹர்மன்பிரீத் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • அவருக்கு ஆதரவாக சக வீராங்கனை அமெலியா கெர்ரும் நடுவரிடம் ஏதோ கூறினார்.

    லக்னோ:

    மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி.வாரியர்சை தோற்கடித்து 4-வது வெற்றியை தனதாக்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பந்து வீசிய மும்பை அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.

    இதனால் உ.பி.வாரியர்ஸ் அணி பேட்டிங்கின் போது கடைசி ஓவரில் உள்வட்டத்துக்கு வெளியே 3 பீல்டர்களை மட்டுமே நிறுத்த வேண்டும் என்று நடுவர் அஜிதேஷ் அர்கால் மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் அறிவுறுத்தினார்.

    இந்த முடிவால் அதிருப்தி அடைந்த ஹர்மன்பிரீத் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக சக வீராங்கனை அமெலியா கெர்ரும் நடுவரிடம் ஏதோ கூறினார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த உ.பி.வாரியர்ஸ் வீராங்கனை சோபி எக்லெஸ்டோனிடமும் கையை நீட்டி கோபமாக விவாதித்தார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர், ஹர்மன்பிரீத் கவுருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதத்தை அபராதமாக விதித்தார்.

    ×