என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக விளையாடுவேன் என தமிழக சுழற்பந்து வீரர் வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.
    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் மோசமான நிலையில் தவித்த இந்திய அணியை அரைசதம் (62 ரன்) அடித்து நிமிர வைத்தார். 2-வது இன்னிங்சிலும் கடைசி கட்டத்தில் 22 ரன்கள் விளாசி வெற்றிக்கு துணைநின்றார். அத்துடன் இந்த டெஸ்டில் மொத்தம் 4 விக்கெட் கைப்பற்றியும் அசத்தினார். சென்னை திரும்பியுள்ள 21 வயதான வாஷிங்டன் சுந்தர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாக நினைத்துக் கொள்வேன். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தனது காலத்தில் செய்தது போன்று நானும் சவாலை ஏற்றுக்கொள்வேன். ரவிசாஸ்திரி தான் விளையாடிய கால அனுபவத்தை எங்களிடம் சொல்லி இருக்கிறார். அவரது கதை உத்வேகம் அளிக்கக்கூடிய ஒன்றாகும். நியூசிலாந்துக்கு எதிரான அறிமுக டெஸ்டில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக இறங்கி 4 விக்கெட் வீழ்த்தியதோடு 10-வது வரிசையில் பேட்டிங் செய்தார். அங்கிருந்து எப்படி தொடக்க வீரர் அந்தஸ்தை எட்டினார், உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை எப்படி எதிர்கொண்டு விளையாடினார் போன்ற அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அவரை போன்று நானும் தொடக்க ஆட்டக்காரராக ஆட விரும்புகிறேன்.

    ஒரு இளம் வீரராக உந்துசக்தி அளிக்கவும், ஊக்கப்படுத்துவதற்கும் வீரர்களின் ஓய்வறையிலேயே நிறைய முன்மாதிரிகளை பார்க்கிறேன். விராட் கோலி, ரஹானே, ரோகித் சர்மா, அஸ்வின் போன்றவர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். இந்த வீரர்களை நீங்கள் கேட்டாலே போதும். எப்போதும் ஆலோசனை வழங்கவும், வழிநடத்தவும் தயாராக இருப்பார்கள்.

    பிரிஸ்பேன் டெஸ்டில் ஆடுகளம் முதல் நாளில் சுழற்பந்து வீச்சுக்கு பெரிய அளவில் சாதகமாக இல்லை. ஆனாலும் ஸ்டீவன் சுமித்தின் விக்கெட்டை வீழ்த்தியது கனவு போல் இருந்தது.

    இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறினார்.
    டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
    பாங்காக்:

    டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் அரைஇறுதியை தாண்டவில்லை. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின்(ஸ்பெயின்) 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) தோற்கடித்து பட்டத்தை தட்டிச் சென்றார். கடந்த வாரம் நடந்த யோனெக்ஸ் தாய்லாந்து ஓபனிலும் இதே தாய் ஜூ யிங்கை வீழ்த்தி தான் கரோலினா மகுடம் சூடியது நினைவு கூரத்தக்கது. அவருக்கு தங்கப்பதக்கத்துடன் ரூ.51 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது. ‘நான் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளேன். இரண்டு வாரங்களில் 2 சாம்பியன் பட்டம் வென்று இந்த ஆண்டை வியப்புக்குரிய வகையில் தொடங்கி இருக்கிறேன்’ என்று கரோலினா குறிப்பிட்டார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-11, 21-7 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் ஹான்ஸ் கிறிஸ்டியன் சோல்பெர்க்கை பந்தாடி மீண்டும் பட்டத்தை சொந்தமாக்கினார். அடுத்ததாக உலக டூர் இறுதி சுற்று போட்டி இதே பாங்காக்கில் நாளை மறுதினம் தொடங்குகிறது.
    ஜோ ரூட்டின் சிறப்பான சதத்தால் காலே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
    காலே:

    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. திரிமானே 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தினேஷ் சண்டிமால் அரை சதமடித்து 52 ரன்னில் வெளியேறினார். 

    மேத்யூஸ் பொறுப்புடன் விளையாடி சதமடித்து 110 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்னில் டிக்வெல்லா ஆட்டமிழந்தார். தில்ருவான் 67 ரன்கள் அடித்து வெளியேறினார்.

    இறுதியில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 139.3 ஓவரில் 381 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன்6 விக்கெட்டும், மார்க் வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது. பேர்ஸ்டோவ் 24 ரன்னுடனும், ஜோ ரூட் 67 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பேர்ஸ்டோவ் 26 ரன்னில் வெளியேறினார். டேனியல் லாரன்ஸ் 3 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜோஸ் பட்லர் அரை சதமடித்து 55 ரன்னில் வெளியேறினார்.

    முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜோ ரூட் இந்த போட்டியிலும் அபாரமாக விளையாடினார்.

    சாம் கரன் 12 ரன்னிலும், டொம்னிக் பெஸ் 32 ரன்னிலும், மார்க் வுட் 1 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசியில் நிதானமாக ஆடிய ஜோ ரூட் 186 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.

    இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்டெனியா 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    அபு தாபியில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வதுது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அபு தாபியில் நடைபெற்றது. அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஸ்டிர்லிங் (128) சதம் அடிக்க அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டும், முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. ரஹ்மத் ஷா ஆட்டமிழக்காமல் 103 ரன்களும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி 82 ரன்களும் அடிக்க ஆப்கானிஸ்தான் 45.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால், இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.
    இந்திய அணிக்காக ஆஸ்திரேலியா மண்ணில் அறிமுகமாவேன் என எதிர்பார்க்கவில்லை, முதல் போட்டியில் நெருக்கடியில் விளையாடினேன் என டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
    தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜன் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் மூன்ற வடிவிலான இந்திய அணியிலும் அறிமுகம் ஆனார்.

    முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்து தொடரை இழந்தது. இவர் அறிமுகமான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பின் தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் அறிமுகமான அவர் 3 விக்கெட் சாய்த்தார்.

    வெற்றி சந்தோசத்தில் சொந்த ஊர் திரும்பிய டி நடராஜன், இன்று சேலம் சின்னப்பட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ‘‘என்னுடைய பணியை செய்வதில் கவனம் செலுத்தினே். ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. என்னிடம் அறிமுகம் குறித்து கூறியபோது, நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தேன். வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்பினே். விளையாடியதும், விக்கெட் வீழ்த்தியதும் கனவுபோல் இருந்தது.

    இந்தியாவுக்காக விளையாடிய மகிழ்ச்சியை வார்த்தையால் வெளிப்படுத்த முடியாது. அது ஒரு கனவு போன்றது. நான் பயிற்சியாளர்களிடம், வீரர்களிடம் இருந்து அதிகமான ஆதரவை பெற்றேன். அவர்கள் ஆதரவு தந்து என்னை உத்வேகப்படுத்தினர். அவர்கள் எனக்கு பின்னால் இருந்ததால், சிறப்பாக செயல்பட முடிந்தது.

    விராட் கோலி, ரஹானே ஆகியோர் என்னை சிறப்பாக கையாண்டனர். என்னிடம் நேர்மையான விசயங்களை கூறினர். இருவருக்கும் கீழ் மகிழ்ச்சியாக விளையாடினேன்’’ என்றார்.
    இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பேர்ஸ்டோவ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் கெவின் பீட்டர்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டி 5-ந்தேதியும், 2-வது போட்டி 13-ந்தேதியும் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், மார்க் வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா ஏற்கனவே சொந்த மண்ணில் பலமான அணி. தற்போது ஆஸ்திரேலியாவையும் வென்றுள்ளதால் மிகப்பெரிய பலமாக திகழ்கிறது இந்தியா.

    பலமான அணியால்தான் இந்தியாவை வெல்ல முடியும். இந்த நேரத்தில் சுழற்பந்து வீச்சு சிறப்பாக எதிர்கொள்ளும் பேர்ஸ்டோவுக்கு ஓய்வு, ஆல்-ரவுண்டர்களான சாம் கர்ரன், மார்க் வுட் ஆகியோருக்கு ஓய்வு, ஜோஸ் பட்லர் முதல் போட்டியில் மட்டுமே விளையாடுமே விளையாடுவார் என்பது மகிழ்ச்சி அளிக்கவில்லை என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து சிறந்த அணியை தேர்வு செய்துள்ளதாக என்பது குறித்து மிகப்பெரிய விவாதம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றால் எவ்வளவு மகிழ்ச்சியான உணர்வு இருக்குமோ?. அதே உணர்வு இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றால் இருக்கும்.

    சிறந்த அணி விளையாடாதது இங்கிலாந்து ரசிகர்களுக்கும், பிசிசிஐ-க்கும் அவமரியாதைக்குரியதாகும். பேர்ஸ்டோவ் விளையாட வேண்டும். பிராட், ஆண்டர்சனும் விளையாட வேண்டும்’’ என்றார்.

    இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் விளையாடிய பின்னர், ஐபிஎல் தொடரில் விளையாடிய பின்னர், பணம் சம்பாதித்த பின் ஓய்வு கொடுக்கலாம் என்றார்.
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் காலேயில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசியுள்ளார்.
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகளும் காலே மைதானத்தில்தான் நடக்கிறது.

    ஜனவரி 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 228 ரன்கள் விளாசினார்.

    இந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி நேற்றுமுன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை மேத்யூஸ் (110), டிக்வெல்லா (92), தில்ருவான் பெரேரா (67) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 381 ரன்கள் குவித்தது.

    பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (5), டொமினிக்  சிப்லி (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பேர்ஸ்டோவும் 28 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    ஆனால் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜோ ரூட் இந்த போட்டியிலும் அபாரமாக விளையாடினார்.

    இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஜோ ரூட் 143 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான தொடரை விளையாட உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் 27-ம் தேதி பல்வேறு நகரங்களில் இருந்து தனித்தனியாக சென்னை வந்தடைகிறார்கள்.

    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதன் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. ஒருநாள் தொடரை மட்டும் 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    இந்திய அணி அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரை விளையாடுகிறது. 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன.

    முதல் 2 டெஸ்ட் போட்டியும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும், 2-வது டெஸ்ட் பிப்ரவரி 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.

    3-வது மற்றும் 4-வது டெஸ்ட் அகமதாபாத்தில் நடக்கிறது. பிப்ரவரி 24 முதல் 28-ந் தேதி வரையும், மார்ச் 4 முதல் 8-ந் தேதி வரையும் நடைபெறுகிறது. இதில் 3-வது டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது.

    20 ஓவர் போட்டிகள் மார்ச் 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அகமதாபாத்திலும், ஒருநாள் போட்டிகள் மார்ச் 23-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை புனேயிலும் நடக்கிறது.

    முதல் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் வருகிற 27-ந் தேதி சென்னை வருகிறார்கள். வீரர்கள் பல்வேறு நகரங்களில் இருந்து தனித்தனியாக சென்னை வந்தடைகிறார்கள்.

    அவர்கள் சென்னை வந்தவுடன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். ஒரு வாரம் வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு வீரர்கள் பயிற்சியை தொடங்குவார்கள்.

    இதேபோல இங்கிலாந்து அணியும் அதே தினத்தில் இலங்கையில் இருந்து சென்னை வருகிறது. இங்கிலாந்து வீரர்களும் கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் வருவார்கள்.

    இலங்கை பயணத்தில் ஆடாத ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர், தொடக்க வீரர் ராய் பர்னஸ் ஆகியோர் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக சென்னை வருகிறார்கள்.

    இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்படுகிறார்கள். போட்டி அமைப்பாளர்களும் அங்கேயே தங்குகிறார்கள்.

    சென்னை டெஸ்டில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் வருமாறு:-

    விராட் கோலி (கேப்டன்), ரகானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், சுப்மன்கில், புஜாரா, கே.எல்.ராகுல், ஹர்த்திக் பாண்ட்யா, ரி‌ஷப் பண்ட், விருத்திமான் சகா, அஸ்வின், பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், இஷாந்த் சர்மா, ‌ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்.

    டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட் எடுத்த 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்தார்.

    காலே:

    இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் 381 ரன் குவித்தது. மேத்யூஸ் 110 ரன்னும், டிக்வெலா 92 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து வேகப்பந்து வீரர் 40 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். மார்க்வுட்டுக்கு 3 விக்கெட் கிடைத்தது.

    157-வது டெஸ்டில் விளையாடும் ஆண்டர்சன் 30-வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.

    இதன் மூலம் டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட் எடுத்த 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்தார்.

    அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்ராத்தை முந்தினார். மெக்ராத் 29 முறை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார். நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ரிச்சர்டு ஹேட்லி 36 முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    ஒட்டுமொத்தத்தில் டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த 6-வது வீரர் ஆண்டர்சன் ஆவார். ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த டாப் 6 வீரர்கள் வருமாறு:-

    1.முரளீதரன் (இலங்கை) -67 முறை (132 டெஸ்ட்).

    2.வார்னே (ஆஸ்தி ரேலியா)- 37 (145).

    3.ரிச்சர்டு ஹேட்லி (நியூசிலாந்து)- 36 (86).

    4. கும்ப்ளே (இந்தியா) 35- (132).

    5. ஹெராத் (இலங்கை)-34 (93).

    6. ஆண்டர்சன் (இங்கிலாந்து)- 30 (157).

    சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த பிறகும் விளையாட தயாராக இருந்ததாக ஜடேஜா கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை படைத்தது. ரகானே தலைமையிலான அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இதற்கு மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது.

    சிட்னியில் நடந்த 3-வது டெஸ்டில் இந்தியா தோல்வியில் இருந்து தப்பி டிரா செய்தது. பிரிஸ்பேனில் நடந்த 4-வது டெஸ்டில் வெற்றிபெற்றது. பிரிஸ்பேனில் முதல் முறையாக வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்தது.

    ஆஸ்திரேலிய டெஸ்ட தொடர் குறித்து ஆல்ரவுண்டர் ஜடேஜா கூறியதாவது:-

    அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு மோசமாக தோற்றதால் எங்களுக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டது. எப்படி அதிலிருந்து மீள்வது என்பது குறித்து வீரர்களின் அறையில் விவாதித்தோம்.

    ஆஸ்திரேலிய பந்துவீச்சு மிகவும் பலம் வாய்ந்தது. இதுபற்றி நாங்கள் விவாதித்தோம். இந்த ஆலோசனை அனைத்து வீரர்களுக்கும் மிகுந்த பலனை அளித்தது.

    மெல்போர்ன் டெஸ்டில் என்னால் ரகானே ரன் அவுட் ஆனார். இது துரதிர்ஷ்டவசமானது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிந்துணர்வால் இது நிகழ்ந்துவிட்டது. நானும், அவரும் இணைந்து மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தோம். ரகானே ரன் அவுட்டுக்கு பிறகும் நாங்கள் முன்னிலை பெற முடிந்தது.

    சிட்னி டெஸ்டில் விகாரி யும், அஸ்வினும் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை டிரா செய்தனர்.

    இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் எனக்கு பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 2-வது இன்னிங்சில் எனது பங்களிப்பு தேவைப்படும் என்ற கருதி தயாராக இருந்தேன். காயத்தில் இருந்தாலும் அதற்கு மருந்து செலுத்திவிட்டு எல்லாவகையிலும் நான் களம் இறங்க தயாராக இருந்தேன்.

    இவ்வாறு ஜடேஜா கூறியுள்ளார். 

    டெஸ்ட் அணி தேர்வு குறித்து இங்கிலாந்து தேர்வு குழு மீது முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் குற்றம் சாட்டியுள்ளார்.
    லண்டன்:

    இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அணித் தேர்வு சரியில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். 

    இது குறித்து, ‘தற்போது இலங்கையில் நடக்கும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் டாப்-3 வீரர்களில் ஒருவர் மட்டுமே அங்குள்ள சூழலை சமாளித்து நன்றாக விளையாடி வருகிறார். ஆனால் அந்த வீரருக்கு மட்டும் (பேர்ஸ்டோ), உள்ளூரில் வலுவான அணியாக திகழும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டுக்கு தேர்வு குழுவினர் ஓய்வு அளித்திருக்கிறார்கள். இது முட்டாள்தனமான முடிவு’ என்று வாகன் குறிப்பிட்டுள்ளார்.

    சிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஒரே மாதிரி பேட்டிங் செய்த விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் சிறிது நேரம் குழம்பி போனார்கள் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கி மகத்தான சாதனை படைத்தது. இதில் சிட்னியில் நடந்த 3-வது டெஸ்டில் இந்திய அணி கடுமையாக போராடி ‘டிரா’ செய்ததும், பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்டில் 328 ரன் இலக்கை இந்தியா விரட்டிப்பிடித்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும் கவனத்தை ஈர்த்தது.

    சிட்னி டெஸ்டில் 407 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 272 ரன்களுடன் திணறிய போது 6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த தமிழகத்தை சேர்ந்த ஹனுமா விஹாரியும், அஸ்வினும் காயத்தையும் பொருட்படுத்தாமல் 258 பந்துகளை சமாளித்து புதிய அத்தியாயம் படைத்ததுடன் போட்டியையும் டிரா செய்ய வைத்தனர். விஹாரி 23 ரன்னுடனும் (161 பந்து), அஸ்வின் 39 ரன்னுடனும் (128 பந்து) அவுட் ஆகாமல் இருந்தனர்.

    இந்த டெஸ்ட் குறித்து அஸ்வின் தனது அனுபவத்தை யுடியுப் சேனலில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதருடன் கலகலப்பாக கலந்துரையாடினார். அப்போது அஸ்வின் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்சின் பந்து வீச்சில் அடிவாங்காமல் விளையாடவே முடியாது. அவரது பவுன்சர் பந்துகள் வேறு விதமாக இருக்கும். நான் விஹாரியிடம், ‘கம்மின்ஸ் பந்து வீச்சில் உடலில் எல்லா இடத்திலும் அடி வாங்கி விட்டோம். இனி எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம். தடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்து போதும், உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அடி வாங்கிக் கொள், பந்தை ஸ்டம்புக்குள் மட்டும் விட்டுவிடாதே’ என்று கூறினேன்.

    நாங்கள் ஒன்றிரண்டு ரன் வீதம் எடுத்து பேட்டிங் முனையை மாற்றாமல் தொடர்ந்து ஒரே மாதிரி பேட்டிங் செய்வதை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள், இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ரொம்ப நேரம் அறியாமல் குழம்பி போனார்கள். காயத்தால் நாங்கள் பந்தை அடிக்கவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், ஒருவரால் முன்னே சென்று விளையாட முடியாது. இன்னொருவருக்கு உடலில் அடிபடுகிறது. அதனால் கொஞ்ச நேரம் இப்படியே முனையை மாற்றாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபடலாம் என்று நினைத்து ஆடினோம்.

    நான் கடுமையான முகுதுவலியால் அவதிப்பட்டேன். என்னால் நகரக்கூட முடியவில்லை. ஆஸ்திரேலிய பவுலர்கள் தொடக்கத்திலேயே சற்று எழும்பி வரும் வகையில் பந்து வீசியிருந்தால் பேட்டின் விளிம்பில் பட்டு கேட்ச்சாக மாறியிருக்கும். விக்கெட்டை இழந்திருப்பேன். ஆனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் அவ்வாறு செய்யாமல் தவறு செய்து விட்டனர். அவர்கள் உடலில் தாக்குதலை கொடுத்து அச்சுறுத்தி விக்கெட்டை பறித்து விடலாம் என்று நினைத்தனர். ஆனால் எனக்கும், விஹாரிக்கும் உடலில் அடி விழும் போது இன்னும் துணிச்சலாக எதிர்த்து நின்று மல்லுகட்டினோம். இதே போல் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் என்னை வார்த்தைகளால் சீண்டினார். அவர்கள் கடைசிகட்ட யுக்தியை கையாள்கிறார்கள் என்று பேசிக்கொண்டோம். அதனால், உங்களால் என்ன முடியுேமா செய்து பாருங்கள் என்று கூறிவிட்டு விட்டோம்.

    வெளியில் இருந்து (கேப்டன் மற்றும் பயிற்சியாளர்) நிறைய தகவல்கள் அனுப்பப்படும் என்று தெரியும். குளிர்பான இடைவெளியின் போது ஷர்துல் தாகூர் தகவல் சொல்ல வேகமாக ஓடி வந்தார். வந்தவர், வீரர்களின் அறையில் நிறைய விஷயங்கள் சொல்கிறார்கள். ஆனால் உங்களிடம் எதுவும் சொல்லமாட்டேன். நீங்கள் நன்றாக ஆடுகிறீர்கள். அதையே தொடர்ந்து செய்யுங்கள் என்று கூறி விட்டு திரும்பினார். ஆனால் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, நான் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு எதிராக நன்றாக ஆடியதால் என்னை ஒரு முனையில் அவரது பந்து வீச்சை எதிர்கொள்ளும்படியும், இன்னொரு முனையில் வேகப்பந்து வீச்சை விஹாரியை தொடர்ந்து சந்திக்கும்படியும் கூறி தகவல் அனுப்பியதை ஆட்டம் முடிந்த பிறகு தாகூர் என்னிடம் சொன்னார்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    இந்த சந்திப்பின் போது பந்து வீச்சு பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறுகையில், ‘ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக துபாயில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சமயத்தில், வீரர்கள் குடும்பத்தினரை உடன் அழைத்து செல்ல அனுமதி இல்லை என்று திடீரென அறிவிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதாக கூறினார்கள். ஏற்கனவே 7 வீரர்கள் தங்களது குடும்பத்தினரை துபாய்க்கு வரவழைத்திருந்தனர். அவர்களிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்வது என்று திகைத்து நின்றோம். இந்த தகவல் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் காதுக்கு சென்றது. உடனே அவர் துபாய் ஓட்டலில் தனித்தனி அறையில் இருந்த எங்களிடம் ஆன்லைன் மூலம் பேசினார். வீரர்களுடன் குடும்பத்தினர் வருவதற்கு அனுமதிக்காவிட்டால் நாங்கள் யாரும் ஆஸ்திரேலியாவுக்கு செல்லப்போவதில்லை, உங்களால் என்ன முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்று அதிரடியாக கூறினார்.

    உங்களை விட ஆஸ்திரேலியாவை பற்றி நான் அதிகம் அறிந்தவன். 40 ஆண்டுகளாக அங்கு சென்று வருகிறேன். அவர்களிடம் எப்படி பழக வேண்டும், எவ்வாறு பேரம் பேச வேண்டும் என்பதை அறிவேன் என்றும் சொன்னார். ரவிசாஸ்திரி கூறியதை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கவனமுடன் கேட்டுக் கொண்டனர். அதன் பிறகு ஆஸ்திரேலிய அரசிடம் பேசி அந்த வார இறுதிக்குள் அனைத்து வீரர்களின் குடும்பத்தினரும் ஆஸ்திரேலியா செல்ல ஒப்புதல் பெறப்பட்டது’ என்றார்.
    ×