என் மலர்
விளையாட்டு


மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றது.
மும்பையில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது.
ரெய்னா 36 பந்தில் 54 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), மொய்ன் அலி 24 பந்தில் 36 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), சாம் கரண் 15 பந்தில் 34 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். கிறிஸ்வோக்ஸ், அவேஷ்கான் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 8 பந்து எஞ்சி இருந்த நிலையில் 189 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர்களான ஷிகர் தவான் 54 பந்தில் 85 ரன்னும் ( 10 பவுண்டரி, 2 சிக்சர்), பிரித்வி ஷா 38 பந்தில் 72 ரன்னும் (9 பவுண்டரி 3 சிக்சர்) எடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 13.3 ஓவர்களில் 138 ரன் குவித்தனர். ஷர்துல்தாகூர் 2 விக்கெட் கைப்பற்றினார்.
தொடக்க ஆட்டத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதால் சி.எஸ்.கே.ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். போட்டியை இரவு 7.30 மணிக்கு தொடங்கியதால் முதலில் பேட்டிங் செய்த அணிக்கு பாதிப்பு இருந்ததாக சி.எஸ்.கே. கேப்டன் டோனி தெரிவித்துள்ளார். தோல்வி குறித்து அவர் கூறும்போது இதை தெரிவித்தார்.
ஐ.பி.எல்.போட்டிகள் இந்தியாவில் இரவு 8 மணிக்குதான் தொடங்கும். தற்போது 7.30 மணிக்கே தொடங்கி உள்ளது. இது முதலில் பந்து வீசும் அணிக்கு சாதகமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த அணிக்கு பாதிப்பாக இருந்தது.
30 நிமிடத்துக்கு முன்னதாக போட்டியை தொடங்கியதால் பனியின் பாதிப்பு இருந்தது. இது 2-வதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாகவே அமைந்தது.
எங்களது பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பாக விளையாடி 188 ரன்னை எடுத்தனர். தொடக்கத்தில் நாங்கள் தடுமாறினோம். இதற்கு பனி காரணமாக இருந்தது. பின்னர் நாங்கள் அபாரமாக ஆடினோம். நேரம் செல்ல செல்ல பனித்துளியால் பேட்டிங் செய்ய எளிதாக இருந்தது.
அதேநேரத்தில் டெல்லி அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. தொடக்கத்தில் தங்களுக்கு சாதகமாக இருந்ததை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.
இவ்வாறு டோனி கூறி உள்ளார்.
வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறும்போது, ‘‘எங்களது பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டனர். ‘டாசை’ நாங்கள் வென்றது சிறப்பானது.
டோனியிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். தவானும், பிரித்விஷாவும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பவர்பிளேயில் அவர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்’’ என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வருகிற 16-ந் தேதி மும்பையில் நடக்கிறது.
டெல்லி அணி அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 15-ந் தேதி (மும்பை) சந்திக்கிறது.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் தவான்.இந்திய அணிக்கு தொடக்க வீரராக விளையாடும் அவர் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணியில் ஆடுகிறார்.
சி.எஸ்.கே. அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தவானின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 54 பந்தில் 85 ரன் எடுத்தார். இதில் 10 பவுண்டரியும், 2 சிக்சரும் அடங்கும்.
ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே. அணிக்கு எதிராக இதுவரை தவான் 24 ஆட்டத்தில் 862 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். இதில் ஒரு சதமும், 7 அரைசதமும் அடங்கும் சராசரி 43.10 ஆகும்.
ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருப்பவர் வீராட் கோலி. அவர் 25 இன்னிங்சில் 887 ரன் எடுத்துள்ளார்.
சென்னை:
ஐ.பி.எல். போட்டியில் 3-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
வெற்றியுடன் கணக்கை தொடங்கப்போவது கொல்கத்தாவா? ஐதராபாத்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் மோதிய ஐ.பி.எல். ஆட்டங்களில் கொல்கத்தா 11-ல், ஐதராபாத் 7-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.
மும்பை:
ஐ.பி.எல். கோப்பையை டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 3 முறை கைப்பற்றி உள்ளது.
14-வது சீசனில் சென்னை அணி நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோற்றது. 188 ரன் குவித்தும் சி.எஸ்.கே. அணியால் வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவுக்கு அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருந்தது.
இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மெதுவாக பந்துவீசினார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் பந்துவீசாமல் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டனர்.
இதற்காக ஐ.பி.எல். விதிமுறைப்படி சி.எஸ்.கே.அணி கேப்டன் டோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். விளையாட்டு விதிப்படி 20 ஓவரை 90 நிமிடங்களில் (டைம் அவுட்டையும் சேர்த்து) வீச வேண்டும். அதாவது ஒரு மணி நேரத்தில் 14.1 ஓவரை வீசி முடிக்க வேண்டும்.
சி.எஸ்.கே.அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்து கொண்டதால் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் சிறந்த வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை.
இந்த ஐ.பி.எல்.சீசனில் ரெய்னாவின் தொடக்கமே அதிரடியாக இருந்தது. டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடி 36 பந்தில் 54 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி, 4 சிக்சரும் அடங்கும்.
194-வது ஆட்டத்தில் 190-வது இன்னிங்சில் விளையாடிய ரெய்னாவுக்கு இது 39-வது அரைசதமாகும்.
இதன்மூலம் ரெய்னா ஐ.பி.எல். போட்டியில் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் 3-வது இடத்தில் இருந்த விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை சமன் செய்தார். விராட் கோலி 185 இன்னிங்சிலும், ரோகித் சர்மா 196 இன்னிங்சிலும் தலா 39 அரைசதம் அடித்துள்ளனர்.
ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரெய்னா தற்போது 2-ம் இடத்தில் உள்ளார். அவர் விராட் கோலிக்கு அடுத்தபடியாக 5,422 ரன் எடுத்துள்ளார். விராட் கோலி 5,911 ரன்னுடன் முதல் இடத்தில் உள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் 38 அரைசதத்துக்கு மேல் அடித்த வீரர்கள் வருமாறு:-
1.வார்னர்- 48 (142 இன்னிங்ஸ்)
2.தவான்- 42 (176)
3.விராட் கோலி- 39 (185)
4.ரெய்னா- 39 (190)
5.ரோகித்சர்மா- 39 (196)
6.டிவில்லியர்ஸ்- 38 (157)
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 4 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது.
இரு அணிகளிடையேயான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக மாலன் மற்றும் மார்க்ரம் ஆகியோர் களமிறங்கினர். இரு வீரர்களும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.
மாலன் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய வுஹன் லூபி 4 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அவருக்கு அடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் கிளாசன், மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதிரடியாக ஆடிய மார்கரம் 51 ரன்னும், 28 பந்துகளில் 4 சிக்சர் உள்பட 50 ரன்கள் எடுத்திருந்த கிளாசனும் வெளியேறினர்.
இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர்.
பாபர் அசாம் 14 ரன்னில் வெளியேறினார். பகர் சமான் 27 ரன்னிலும், முகமது ஹபீஸ் 13 ரன்னிலும், ஹைதர் அலி 14 ரன்னிலும், முகமது நவாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய முகமது ரிஸ்வான் அரை சதம் கடந்தார்.
அவருடன் ஜோடி சேர்ந்த பஹூம் அஷ்ரப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் எதிரணி பந்து வீச்சை சிதறடித்தனர். 14 பந்துகளை சந்தித்த பஹூம் அஷ்டப் 30 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி இலக்கான 189 ரன்களை எட்டியது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது.
50 பந்துகளில் 74 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆட்டநாயகன் விருது ரிஸ்வானுக்கு அளிக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்கா சார்பில் ஹெண்ட்ரிகஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனான ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்கள் குவித்தார். மொயீன் அலி 36 ரன்கள், அம்பதி ராயுடு 23 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் (நாட் அவுட்) அடித்தனர். அதிரடியாக ஆடிய சாம் கர்ரன் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 34 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆடினர்.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். இதனால் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் குறையாமல் எடுத்தனர்.
முதலில் பிரித்வி ஷா அரை சதமடித்தார். அவரை தொடர்ந்து ஷிகர் தவானும் அரை சதமடித்தார்.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் 138 ரன்கள் சேர்த்தனர், பிரித்வி ஷா 38 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். டெல்லி அணியின் எண்ணிக்கை 167 ஆக இருக்கும்போது தவான் அவுட்டானார். அவர் 54 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய ஸ்டாய்னிஸ் 14 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
சென்னை சார்பில் ஷர்துல் தாக்குர் 2 விக்கெட் வீழ்த்தினார்.


சென்னை:
ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் அணி நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தியது.
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. மே மாதம் 30-ந் தேதி வரை இந்த போட்டி 6 நகரங்களில் நடத்தப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது.
இதில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது. ஆட்டத்தின் கடைசி பந்தில் அந்த அணிக்கு வெற்றி கிடைத்தது.
பெங்களூர் அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீரர் ஹர்ஷல் படேல், பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் காரணமாக இருந்தனர்.
முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கிறிஸ்லின் அதிகபட்சமாக 35 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். ஹர்ஷல் படேல் 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிவில்லியர்ஸ் 27 பந்தில் 48 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), மேக்ஸ்வெல் 28 பந்தில் 39 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 29 பந்தில் 33 ரன்னும் எடுத்தனர். பும்ரா, ஜேன்சன் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. 4-வது வீரர் வரிசைக்கு மேக்ஸ்வெல் பொறுத்தமானவர். அவர் ஆட்டத்தின் வேகத்தையும், தன்மையையும் மாற்றக் கூடியவர். அவர் உத்வேகம் அளிக்கக்கூடிய பேட்ஸ்மேன் ஆவார்.
முதல் போட்டியிலேயே வெற்றிபெற்றது முக்கியமானது. ஏனென்றால் மும்பை அணி மிகவும் வலுவான அணியாகும். டிவில்லியர்ஸ் எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவதைவிட கோப்பையை வெல்வதுதான் முக்கியமானது. நாங்கள் கடுமையாக போராடிதான் தோற்றோம். 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.
நாங்கள் சில தவறுகளை செய்தோம். டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூர் அணி 2-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 14-ந் தேதி எதிர்கொள்கிறது. மும்பை அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 13-ந் தேதி சந்திக்கிறது. இந்த 2 ஆட்டங்களும் சென்னையில் நடக்கிறது.






